எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 13 ஆகஸ்ட், 2013

என் வீட்டுத் தோட்டத்தில்..

என் வீட்டுத் தோட்டத்தில்..

வீட்டைச் சுற்றி இருந்த சின்னஞ்சிறு தோட்டத்தில் 15 வகைப் பூ, 6 வகை மரங்களும், 25 வகையான செடிகளும் இன்ன பிற கொடிகளும்.. வளர்த்தேன். சுவற்றிலிருந்து காம்பவுண்டு சுவர்  எட்டடி இடம் இருக்கும். முன்பக்கம் பன்னிரெண்டு அடி இருக்கும்.

செடிகள் வாடினாலோ, மழையில் காற்றில் விழுந்தாலோ யாரும் கிளையை வெட்டி விட்டாலோ தாங்காது எனக்கு. தினமும் கூட்டி, புல் , களை எடுத்து பாத்தி கட்டி இத்தனை செடியா வளர்த்திருந்தேன் எனத் திகைப்பாய் இருக்கிறது இப்போது ஃப்ளாட்டுகளில் இருக்கும் போது.


முன்பு குடியிருந்தவர் பலா, கொய்யா வைத்திருந்தார். கொய்யா காய்த்ததும்  ஊரோடு கொடுத்தோம். இப்போது மரமே இல்லை. காம்பவுண்டை அசைக்குதுன்னு அடுத்துக் குடியிருந்தவர் வெட்டி விட்டுட்டார்.


பலாக்காய் கூட்டு, மசால் செய்வேன். பலாப்பழம் அவ்வளவு இனிப்பு.. குடி இருப்பவரை காலி செய்யச் சொன்னால் வீட்டை விட்டுக் கூடப் போவார் போலிருக்கிறது, பலாமரத்தைவிட்டுப் போக மாட்டாராம். முடிந்தால் மரத்தையும் தூக்கிக் கொண்டு காலி செய்வார் என்று தோன்றுகிறது. காயும் பழமும் அவ்வளவு ருசியாம்.. 

நான் இருந்தபோது  மாதுளை, பப்பாளி வைத்தேன். பப்பாளிக்காயில் கூட்டு வைப்பேன். பொதுவாக பப்பாளிப் பழமாகவேதான் பறிப்பது. வீட்டில் பழுக்க வைப்பதால் செக்கச் செவேலென்று பதமாகப் பழுக்கும். மாதுளையின் பூக்கள் அபிராமி அந்தாதிப் பாடலை நினைவுபடுத்தும். பழம் ரொம்பப் பெரிசில்லாவிட்டாலும் நல்ல சிவப்பு முத்துக்கள் கொண்ட மாதுளை.

முள்ளு முருங்கை ஒரு கம்பு ஊன்றி வைத்தது பெரிசாக மரமாக வளர்ந்து விட்டது. அந்தக் கீரையோடு அரிசியை ஊறவைத்துத் தோசை செய்தால் தொண்டை சம்பந்தமான பிரச்சனை நீங்கும். முருங்கை மரத்தில் காய் அதிகமிருக்காது. ஆனால் வாரம் ஒரு முறை இலையைப்  பறித்து பொறியல், சாம்பார் செய்வதுண்டு.

கற்பூரவல்லி/தேன்கதலி என்னும் வாழைப்பழ மரம் இருந்தது. பத்துப் பதினைந்து மரங்கள் குலை தள்ளி இருக்கும். ஒவ்வொரு சீப்பாக ஒவ்வொரு உறவினருக்கும், தெருக்காரர்களுக்கும் கொடுப்பது வழக்கம். அவ்வளவு இனிப்பு. 4 மரங்களைத் தார் போட்டவுடன் விலைக்கும் கொடுத்தேன். அதிகமில்லை ஜெண்டில் மேன் அண்ட் விமன். ஒரு தார் 75 ரூபாய். உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குக் கூட மிஞ்சாது என்பது உண்மைதான்.

வாழை மரம் கானாடு காத்தானிலிருந்து கொண்டு வந்து வைத்தது. கரெக்டாக 10ம் மாதத்தில் குலைதள்ளியது. நாங்கள் வேறு ஊர் செல்ல வேண்டும். எனவே ஒரே ஒரு சீப்பு மட்டும் எடுத்துக் கொண்டு மிச்சத்தைக் குடியிருந்தவரிடமே கொடுத்தோம். நல்ல கிழங்கான காய்.

காரைக்குடிப் பக்கம்தான் கத்திரிக்காயும் வாழைக்காயும் முளைக்கீரையும் அவ்வளவு ருசிக்கும். மண்ணின் மணம். வாழைப்பூவில் வடையும் கோளாவும் செய்வது வழக்கம். வாழைத்தண்டுக் கூட்டும் சூப்பர் டேஸ்டாக இருக்கும். எந்த விசேஷத்துக்கும் வாழை இலை விலைக்கு வாங்கியதே இல்லை.

சுண்டைக்காய் செடியைப் பற்றிச் சொன்னால் என் சின்னப் பையனுக்குக் கோவம் வரும். பின்ன ஸ்கூல் போற பையனுக்கு வாரத்தில் ஏழுநாளும் ( அட இரண்டு நாள்தாங்க ) சுண்டைக்காய் பச்சடியும் தயிர்சாதமும் கொடுத்துவிட்டா.. வெறியாகாம என்ன செய்வான். இந்த சுண்டைக்காயையும் படிக்கணக்கில் காய்த்ததால் ஊரு உறவு, சாதி சனம் அத்தனைக்கும் கொடுத்தனுப்புறது.

இதே போலத்தான் மணத்தக்காளிச் செடியும் மண்டிக் கிடக்கும். தினப்படி 10 மணிக்குக் காலையில் இப்பவெல்லாம் ஃபேஸ்புக் , ப்லாகில் சுத்துற மாதிரி அப்போவெல்லாம் தோட்டத்துல சுத்துறது. ஒரே அறுவடைதான். சுண்டைக்காய், மணத்தக்காளிக்காய்னு. மணத்தக்காளிக் கீரையில் தேங்காய்ப்பால் ஊத்தி மண்டி வச்சா நல்லா இருக்கும்.

இது மட்டுமில்ல முளைக்கீரை, வெந்தயக் கீரை ( வெந்தயத்தைப் போட்டா ஒரு வாரத்துல வந்திரும் .) பசலைக்கீரை, கொடிப்பசலைக்கீரை, புதினா, (ஊனி வச்சாலே வந்திரும் .) கொத்துமல்லி ( மல்லி விதையை ரெண்டா நகட்டிட்டுப் போடணும். ), கருவேப்பிலை, வல்லாரை ( இது காடு மாதிரி மண்டிருச்சு), பொன்னாங்கண்ணிக் கீரை, குறிச்சாக் கீரை எல்லாம் வளர்த்தேன். அப்போ அப்போ இதெல்லாம் சமைக்கிறது. சமயத்துல ஓணான் போன்ற ப்ராணி எல்லாம் வந்து முளை விடுற கீரைகளைக் கடிச்சுத் தண்டை மட்டும் விட்டுட்டுப் போகும் பாருங்க அப்பத்தான் கோவமா வரும்.

இன்னும் மாசிப் பச்சை, மணி ப்ளாண்ட், 3 வகை க்ரோட்டன்,  கற்றாழை, ஓமவல்லி, துளசி, மஞ்சள், தூதுவளை போன்ற மூலிகைகளும் அழகுச் செடிகளும் இருந்துச்சு.

வெற்றிலை அம்மா கொண்டு வந்து வச்சாங்க. பொடிப் பொடியாத் துளிர் வெற்றிலையைப் பார்த்தாலே பறிச்சுத் தின்னனும் போல இருக்கும். வாசல்ல ஒரு மருதாணிச் செடி இருந்துச்சு. அடிக்கடி மருதாணி வச்சுக்கிறது. எண்ணெயில் போட்டுக் காய்ச்சுறது. நல்ல அழகழகா பூப்பூக்கும். இந்தப் பூவைத் தலகாணில வச்சுத் தூங்கினா நல்ல தூக்கம் வரும்னு சொல்வாங்க.

சந்தையிலிருந்து வாங்கி வந்த விதை போட்டு முள்ளங்கி, வெண்டிக்காய், கத்திரிக்காய், பரங்கிக்காய், எள், ( வீட்டில் உபயோகப்படுத்திய தக்காளி, பச்சை மிளகாயைப் போட்டு ) தக்காளி, பச்சைமிளகாய் இதெல்லாம் வந்துச்சு. இதுல கத்திரிக்காய் 3 , 4 காய்க்கும். அதப் போட்டுக் குழம்பு வைக்கிறது. அது போல வெண்டைக்காய் 5, 6 காய்க்கும் அதையும் குழம்பு வைக்கிறது.

தக்காளி குட்டி பல்ப் போல அழகா வளரும். எள் ஒரு ரெண்டு ஆழாக்கு வந்திருக்கும். முள்ளங்கி அந்தப் பாறை மண்ணிலும் கஷ்டப்பட்டு நெளிந்து வளைந்து மண்ணுக்குள் காய்த்திருக்கும். பச்சைமிளகாயைப் போட்டுத் தேங்காய்ச் சட்னி வைப்பேன். குழந்தை மிளகாய் போல காரம் கம்மியா இருக்கும்.

பரங்கிக்காய் மினி பரங்கிக்காய். நல்லா செக்கச் செவேல்னு ஒரு குட்டி புட்பால் சைஸ்ல இருக்கும். சமயத்துல செவப்பு கிர்ணிப் பழம் மாதிரி இருக்கும்.

கனகாம்பரம், பிங்க் கோழிக் கொண்டை, சிவப்புக் கோழிக் கொண்டை, சந்தன முல்லை, பிங்க் அந்தி மந்தாரை, மஞ்சள் அந்தி மந்தாரை, ( EVENING GLORY),  வெள்ளைச் சங்குப்பூ ( வேலியில் கொடியில் வரும். ) நீலச் சங்குப் பூ, ரெட் ரோஸ், யெல்லோ ரோஸ், பிங்க் ரோஸ், வாடாமல்லி, வெள்ளைச் சாமந்திப் பூ, ரெட் செம்பருத்தி, மல்லிகை, ஜாதிப்பூ  இத்தனை பூக்களும் கொடிகளும் சூழ வாசத்துடன் குடி இருந்த இடம் எங்கள் வீடு. இப்ப புல்லடைஞ்ச காடா இருக்கு.

ஹ்ம்ம் ..என்ன செய்வது .. ஆர்வம் இருக்கும் நாம் இங்கே இருக்கிறோம்.
நம்மைப் போலக் குடி இருப்பவர்களுக்கும் இண்ட்ரஸ்ட் இருந்தால்தான் செடிகள் தழைக்கும்.




10 கருத்துகள்:

  1. லினக்க்ஸில் தமிழ் பிச்சி பிச்சி தெரியுது ஆனால் படம் பார்த்து மகிழ்ந்தேன். நன்றாக உள்ளது.

    பதிலளிநீக்கு
  2. அமைதிச்சாரல் அவர்களின் கமெண்ட்டை கன்னாபின்னான்னு ரிப்பீட்டிக்கறேன்.

    பதிலளிநீக்கு
  3. சின்னத் தோட்டத்துக்குள் எவ்வளவு செடிகள். உங்கள் ஆர்வத்துக்குப் பாராட்டுகள் தோழி. எத்தகைய சோர்வையும் நீக்கிவிடும் நாம் வளர்க்கும் செடிகொடிகளும் அவற்றில் விளையும் பூக்களும் காய்களும் கனிகளும். முறையான கவனிப்பின்றிக் களையிழந்துகிடக்கும் தோட்டத்தை நினைத்தாலே பரிதாபமாய் உள்ளது.

    பதிலளிநீக்கு
  4. ஒரு நந்தவனத்தை அருமையாக அறிமுகம் செய்திருக்கிறீர்கள் படங்களுடன்... அழகு...

    பதிலளிநீக்கு
  5. தேனம்மை, தோட்டம் அழுகு.

    //குடி இருப்பவர்களுக்கும் இண்ட்ரஸ்ட் இருந்தால்தான் செடிகள் தழைக்கும். //
    சரியாகசொன்னீர்கள்.
    அவர்கள் தோட்டத்தை நன்கு பார்த்துக் கொள்ள வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. நன்றி சாரல்

    நன்றி குமார்

    நன்றி கற்பகம்

    நன்றி தென்றல்

    நன்றி கீதமஞ்சரி

    நன்ரி குமார்

    நன்றி கோமதி மேடம்.

    பதிலளிநீக்கு
  7. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  8. அருமை!. மிகவும் ஊக்கமளிப்பதாக உள்ளது. நிலத்தில் விதைத்து வரும் அழகே அழகு. விளைச்சலும் கணிசமாக வரும். என் தோட்டம் மாடியில்.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...