எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 16 அக்டோபர், 2012

இரட்டைக் குதிரையில் சவாரி செய்யும் பெண்கள்..

பெண்கள் தினம் கொண்டாடப்படுவதே உழைக்கும் மகளிரைக் கொண்டாடத்தான். என் உறவுக்காரப் பெண் ஒருவருக்கு திருமணம் நிச்சயமானது. மாப்பிள்ளை அமெரிக்காவில் சாஃப்ட்வேர் இஞ்சினியர். பெண்ணும் இங்கே சாஃப்ட்வேர் இஞ்சினியர். பெண்ணுக்கு இங்கே நல்ல சம்பளத்தில் காம்பஸ் இண்டர்வியூவில் கிடைத்த வேலை. அவருக்கு அந்த வேலையைத் துறந்துவிட்டு திருமணம் செய்து அமெரிக்கா செல்ல யோசனை. கைநிறைய சம்பாதித்து செலவு செய்தது போக எல்லாவற்றுக்கும் கணவரின் கையை எதிர்பார்க்கவேண்டுமே என்ற அச்சம். தன்னுடைய தனித்துவம் , பொருளாதார சுதந்திரம் போய்விடுமோ என்ற கவலை.

ஒரு நாள் இரவு முழுவதும் பேசிக் கொண்டிருந்தேன் அவரோடு. அங்கே சென்றபின்னும் அதேபோல வேலை கிடைக்கும் . எனவே திருமணத்துக்கு சம்மதிக்கும்படி சொன்னேன்.இன்று அங்கே சென்று ஒரு நல்ல வேலையில் இருக்கிறார். காரியர் என்பது இந்தக் காலத்தில் அவ்வளவு முக்கியமானதாக இருக்கிறது., திருமணம் செய்து கொள்ளக் கூட யோசிக்கும் அளவு.


பொதுவாக திருமண சந்தையில் வேலைக்குச் செல்லும் பெண்ணுக்கு மவுசு அதிகம். இதே 20 வருடத்துக்கு முன் பெண்களை வேலைக்கு அனுப்பத் தயங்கிய குடும்பங்கள் கூட இன்று படிக்க வைக்கும்போதே பையனோ, பெண்ணோ., வீட்டு வேலை தெரியாவிட்டாலும் பரவாயில்லை. ஒரு நல்ல வேலையில் அமர தகுதி உடைய அளவு மார்க் வாங்க வேண்டும் என பெற்றோரே நினைக்கிறார்கள். நல்ல மாற்றம்தான். ஆனால் இதனால் பெண்களுக்குத்தான் பளு அதிகம்..

இதை இரட்டைக் குதிரையில் சவாரி செய்தல் எனலாம். ஒரே நேரத்தில் வீட்டையும் கவனித்துக் கொண்டு அதேநேரம் வேலையையும் சிறப்பாகச் செய்ய வேண்டும். இரண்டின் கடிவாளமும் கையில் சரியாக இருப்பது முக்கியம். ஒன்றை லூசா விட்டுவிட்டோமோ அது நம்மை குப்புறத் தள்ளிவிடும்.பணிக்குச் செல்லும் ஆணை விட கட்டாயமாக பணிக்குச் செல்லும் பெண்ணுக்கு எல்லா இடங்களிலும் பொறுப்புகளும் வேலைகளும் அதிகம்தான். ஆணை விட பெண் பொறுப்பாகப் பணியாற்றுவார் என்பது உண்மை.

ஒரு ஆண் வீட்டைக் கவனித்து குழந்தைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டால் அவனைத் தாயுமானவன் என போற்றும் இந்த சமூகம் ஒரு பெண் வீட்டையும் நிர்வகித்து அலுவலுக்கும் சென்று கை நிறைய சம்பாதித்து தன் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்தால் தந்தையுமானவள் என கொண்டாடுவதில்லை. கூட்டுக் குடும்பமாக இருந்தால் மாமன் மாமியின் மனம் கோணாமலும் நடந்து கொள்ள வேண்டும்.

குடும்பத்தலைவிகளாக இருப்பதிலும் கூடுதல் பொறுப்புகளை பணி சுமத்துகிறது. வேலை செய்யும் பெண்களுக்கு திட்டமிடல் முக்கியம். பணி இடத்துக்கு சரியான நேரத்துக்கு செல்ல வேண்டும். பணியை செவ்வனே செய்ய வேண்டும். இதில் பின்னடைவுகள்., உயர்வுகள் இருக்கும். அனைத்தையும் சமப்படுத்திச் செல்லவேண்டும். அம்மா வீட்டில் இருக்கும் வரை ஆண்பிள்ளைகள் போல வேலைக்குச் செல்லும் பெண்ணுக்கும் சரிசமமான உபசரிப்பு கிடைக்கும் புகுந்த வீட்டில் வேலை செய்யும் பெண் என்பதற்காக வீட்டில் இருக்கும் யாரும் தங்கத்தட்டில் தாங்கப் போவதில்லை. அவர்கள் வருமானம் ஒரு உபரி இன்கம். அவ்வளவே.

வீடு கட்ட., பிள்ளைகள் உயர்படிப்புக்கு., பெண்ணின் திருமணத்துக்கு., சுற்றுலாக்களுக்கு என பல விதத்திலும் பெண்ணின் சம்பாத்தியம் உதவி செய்தாலும் வீட்டில் இருக்கும் அனைவரும் அதற்காக தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவித்துக் கொண்டிருப்பதில்லை. சில வீடுகளில் மட்டுமே ஆண்கள் மனைவிகளின் பளுவை உணர்ந்து வேலைகளைப் பங்கிட்டுக் கொள்கிறார்கள். மற்ற வீடுகளில் வீட்டுப் பணியை முடித்துவிட்டு பெண் பணியிடங்களிலும் செவ்வனே பணியாற்ற வேண்டியதிருக்கிறது.

வீட்டில் சரியாக செய்யாவிட்டாலும் மனக்குறைகள் எதிர்கொள்ள வேண்டிவரும். பணியிடங்களில் சரியாக செய்ய முடியாவிட்டாலும் காரியரில் பின்னடைவு ஏற்படும். ப்ரமோஷன்., ஊதிய உயர்வு போன்ற ஏற்றத்தாழ்வுகள் நன்கு வேலை செய்யும் பெண்ணின் மனதில் சிக்கல்களை ஏற்படுத்துகின்றன. திருமணம் ., குழந்தைப் பேறு. ஆகியவற்றின் காரணமாக அதிக விடுமுறை எடுக்கும்போது பணி உயர்வு தடைபடுகிறது. குழந்தைகள் உடல் நலமில்லாமல் போனால் கவனித்துக் கொள்தல் என எல்லாவற்றுக்கும் தாயே விடுப்பெடுத்து கவனிக்க வேண்டியதிருக்கிறது. குழந்தைகள் உடல் நலத்தோடு இருக்கும்வரை பிரச்சனையில்லை. ஆனால் உடல் நலம் குன்றினால் தாயின் நினைப்பு பூரா குழந்தை மேல்தான். குழந்தையைக் கூடக் கவனித்துக் கொள்ளாமல் பணிக்குச் செல்ல வேண்டியிருக்கிறதே என்ற மனக்கிலேசத்தோடு இருக்க வேண்டியுள்ளது. இரவு நேர பி பி ஓ அல்லது கே பி ஓ பணியில் இருக்கும் பெண்ணின் பாடு மிக சிரமம்.

காரியர் டெவலெப்மெண்ட் தடைபடுவதுபோல ஒரு பெண்ணுக்கு ஏற்படும் இன்னொரு தடை செக்சுவல் ஹரேஸ்மெண்ட். இது முற்றிலும் களையப்படவேண்டிய ஒன்று. தன்னைப் பற்றிய சரியான சுய மதிப்பீடு உள்ள பெண்ணின் தன்மானத்தை இந்த மாதிரியான செயல்கள் பாதிக்கும்.

தாய் வழி சார் சமூகத்தில் தந்தை விடுப்பெடுக்காவிட்டாலும் கவனிக்காவிட்டாலும் கூட யாரும்குறை சொல்லப்போவதில்லை. இதே ஒரு தாய் விடுப்பெடுத்துக் கவனிக்க முடியாவிட்டால் மற்றவர்களின் வாய்க்கு இந்த விஷயம் அவலாகிறது. வேலைக்குச் செல்வது என்பதை நன்கு உடை உடுத்திக் கொண்டு ஊர் சுற்றச் செல்வது போல நினைத்துக் கொள்வார்கள். மத்திய அரசில் மிகப் பெரும் பொறுப்பில் இருக்கும் என் தோழி ஒருவர் சொல்வார் ., அவர் கணவருக்கு லேட்டாக வந்தால் பிடிக்காதாம். பணிச்சுமை அதிகம் உள்ள பணியில் என்ன செய்ய முடியும். பணமும் வேண்டும். பெண் அந்தக்காலம் போல இந்த நேரத்துக்குள் வீட்டுக்குள் இருக்கவேண்டும் என்றால் எப்படி?இத்தனைக்கு அவர் வண்டி வைத்திருக்கிறார். அதிலேயே எல்லா இடமும் சென்று திரும்புவார். இத்தனைக்கும் அவர் பெண்கள் சங்கத் தலைவி வேறு. இருந்தும் வீட்டில் கணவருக்கு அதிருப்தி ஏற்படக்கூடாது என பார்த்துப் பார்த்துச் செய்வார். இல்லை நீ என்ன சம்பாதித்துக் கொடுத்தாலும் நான் அனுபவித்துக் கொண்டு அதிருப்தியும் அடைவேன் என்றால் எப்படி..? உங்களுக்காக.,உங்கள் குடும்பத்துக்காக உழைக்கும் பெண்களுக்கு உரிய மரியாதையைக் கொடுங்கள்.

இன்றைய தனியார் வங்கிகளிலும்., சாஃப்ட்வேர் நிறுவனங்களிலும் மிக அதிக சம்பளத்தில் பணிபுரியும் பெண்கள் இருக்கிறார்கள். பணத்தின் பூரிப்பு இருந்தாலும் நல்ல ஓய்வு இல்லாத முகம் காட்டிக் கொடுத்துவிடும் அவர் எத்தகைய மனச்சுமையில் இருக்கிறார் என. காலை 8 மணிக்குத் தொடங்கி மாலை 8 மணி வரை அலுவலகம் இருக்கும். பின்னே சம்பளத்தைக் கொட்டிக் கொடுக்கிறார்களே. கணக்கு டாலி ஆகா விட்டால் அதன் பின் இருந்தும் முடித்துக் கொடுக்க வேண்டும். சில சமயம் ஆடிட்டிங்க் எல்லாம் வரும்போது ஞாயிற்றுக் கிழமைகளிலும் பணிக்கு வரவேண்டும். ஒரு உத்யோகப் பெண் ஆணைத் திருமணம் செய்து கொண்டது போல வேலையையும் திருமணம் செய்து கொண்டதாகத்தான் கருத வேண்டும்.

அநேக இடங்களில் GLASS CEILING எனப்படும் தடை இருக்கிறது. ஒரே கல்வித் தகுதி உடைய ஆண் பெண் இருவருக்கும் சம்பள ஏற்றத்தாழ்வுதான் அது. உழைப்பைக் கருதாமல் ஆணை விட பெண்ணுக்கு சம்பளம் குறைவாக வழங்கப்படுகிறது. இது சாஃப்ட்வேர் ., வங்கி போன்றவற்றை விட தனியார் கம்பெனி மற்றும் கீழ் நிலை வேலைகளில் மிக அதிகம்.

இது மட்டுமல்ல. ஒரு ப்ராஜக்டை ஒரு பெண் சிறப்பாக செய்திருப்பார். அவரை அது சம்பந்தமாக வெளிநாடு அனுப்பாமல் இன்னொருவரிடம் இவர் உழைப்பு கையளிக்கப்பட்டு அவர் இவர் அனுபவிக்க வேண்டிய பலாபலன்களை அனுபவித்துக் கொண்டிருப்பார். இவருக்குப் பதிலாக அந்த ப்ராஜெக்ட் அட்மினாக அவர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வார். இது எவ்வளவு கொடுமை.. உழைப்புச் சுரண்டல். வீட்டிலும் அலுவலகத்திலும் பெண்ணிடம் மட்டும் எப்போதும் உழைப்புச் சுரண்டல் நடந்துகொண்டே இருக்கிறது. WE ARE A TEAM என ஒரு வேலை மேற்கொள்ளப்படும்போதே உணருங்கள் நீங்கள் எவ்வளவு வேலை செய்தாலும் அது அவர்கள் கணக்கில் சேர்ந்துவிடும் என்று.

நகரங்களில் தனிக்குடித்தனம் இருக்கும் குடும்பத்துக்கு அக்கம் பக்கத்தாரோடு அவ்வளவு பழக்கம் இருப்பதில்லை.. எனவே கைக்குழந்தையிலிருந்து பிள்ளைகள் குழந்தைகள் காப்பகத்தில் விடப்படுகிறார்கள். கொஞ்சம் வளர்ந்த பிறகு லீவு நாட்களில் இசை., நடனம் அல்லது கிரிக்கெட் கற்றுக் கொள்ள வகுப்புகளில் சேர்க்கப்படுகிறார்கள். இந்த வகுப்புகளில் எல்லாம் சேர்க்கவும் அதிக பணம் தேவை.

இன்றைய பள்ளி, கல்லூரி படிப்புக்களுக்காகவும் மருத்துவத்துக்காகவும்., அது சம்பந்தப் பட்ட இன்சூரன்ஸுகளுக்காகவுமே அதிகம் சம்பாதிக்க வேண்டியதிருக்கிறது. பணம் எவ்வளவு வந்தாலும் தேவை அதிகமாய் இருக்கிறது. அது ஒரு பெண்ணின் தன்மானத்தையும் சுய கௌரவத்தையும் நிலை நாட்ட உதவுவதால் வேலை இன்றியமையாததாகிறது.

மகளாய்., மனைவியாய்., தாயாய் அவதாரமெடுத்த பெண்ணின் இன்னொரு பிறப்புத்தான் உத்யோகப் பெண்கள். இந்த உத்யோகப் பெண்கள் தம் பணிச்சுமையை செம்மைப் படுத்திக் கொள்ள சில வழிமுறைகளைக் கையாளலாம்.

பணி இடத்துக்கு பணி நேரத்துக்கு சரியாக இருக்கும்படி புறப்பட வேண்டும். இதற்கு எல்லாவற்றையும் முதல்நாளே திட்டமிட வேண்டும். அப்போதுதான் செல்லும் இடத்துக்கு வண்டியில் பதற்றமாகப் பறக்காமல் செல்லமுடியும்.

பணி செல்லும் பெண்கள் சரியான காலை உணவு அருந்துவதில்லை. சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். எனவே காலை உணவைத் தவிர்க்கக்கூடாது.

மற்றவர்களின் உடல் நலத்தை அக்கறையோடு பேணிப்பாதுகாக்கும் இவர்கள் தன் உடல் நலத்தையும் பார்த்துக் கொள்ள வேண்டும். சரியான ஹெல்த் செக்கப்புக்களை மேற்கொள்ள வேண்டும். கண் பவர்., பிரஷர்., சுகர் போன்றவை.

நாம் என்பது நம் புற அழகை வைத்தல்ல நம் திறமையை வைத்தே மதிப்பிடப்படுகிறோம். எனவே நம் புற அழகு தாண்டிய நம் திறமையைப் பற்றிய பெருமிதமும் முக்கியம். கண்ணியமான உடை என்பதும் முக்கியம். நம்மைப் பற்றிப் புறணி பேச நாமே காரணியாகக் கூடாது. நீங்கள் ஒல்லியோ., குண்டோ., கறுப்போ ., சிவப்போ உங்களுக்கு பாந்தமானதை செய்துகொள்ளுங்கள்.

திருமணம் ., குழந்தைப் பேறு காரணமாக ப்ரமோஷன் தள்ளிப் போகலாம். வாழ்வில் சிலவற்றைக் கடந்தே ஆகவேண்டும் என முடிவெடுத்துக் கொள்ளுங்கள். உங்களால் ஏற்பட்ட இடைவெளியில் உங்களை விடத் திறமையற்றவர் உங்களுக்கு முன்னே சென்றிருக்கலாம். அல்லது பணியிட அரசியலால் உங்கள் உயர்வு மறுக்கப்பட்டிருக்கலாம். ரொம்பவும் மனச்சிக்கலில் ஆழ்த்தும் பணி வேறுபாடு., ஊதிய வேறுபாடு கண்டால் தயங்காமல் அடுத்த கம்பெனிக்கு அப்ளை செய்து இதிலிருந்து வெளியேறுங்கள்.

பணியிட பாலியல் தொந்தரவுகள். இது இனம் சார்ந்தும் அதிகமாக இருக்கிறது என என் தோழி ஒருவர் சொன்னார். அதனால் உங்களை யாராவது பாலியல் ரீதியாக கட்டாயப்படுத்தினால்., அல்லது பாலியல் வார்த்தைகள் சொல்லி பேசினாலோ கேவலப்படுத்தினாலோ அதை பெண்கள் சங்கம் வரை கொண்டு செல்லும் தைரியம் வேண்டும். தவறான ஒரு நடவடிக்கைக்கு தண்டனை கிடைத்தால்தான் இதற்கு முடிவு ஏற்படும். மௌனம் காக்காதீர்கள்.

உங்களால் ஒரு பணியை சிறப்பாக செய்ய முடியும் என்றால் மட்டும் ஏற்றுக் கொள்ளுங்கள். செய்ய முடியாத இடைஞ்சல்களில் மாட்டி அவதியுறாதீர்கள். சிலசமயம் முடிக்க முடியாது எனத் தோன்றினால் உங்களை நீங்களே தன்னம்பிக்கையூட்டிக் கொள்ளுங்கள் நான் இதை சிறப்பாக செய்து முடிப்பேன் என்று. தன்னம்பிக்கையை விட சிறந்த டானிக் கிடையாது.

வேலை செய்யுமிடத்திலும் வீட்டிலும் அனைவரையும் நண்பராக நடத்துங்கள். அவர்களிடம் உங்கள் பணிச்சுமையில் வெடித்தால் அவர்கள் பலமடங்கு வெடிப்பார்கள். அதிருப்தி எல்லாம் எங்கும் இருப்பதுதானே. அதிருப்தி ஏற்பட்டாலும் அதை நயமாகக் களைவது எப்படி அல்லது அதைப் பெரிது படுத்தாமல் செல்வது எப்படி எனவும் கற்கவேண்டும். இதுவே அடுத்தடுத்து ஏற்படப்போகும் சிக்கல்களைத் தீர்க்கும்.

வீட்டில் இருப்போரையும் சின்னச் சின்ன வேலைகளுக்குப் பழக்குங்கள். பொதுவாக வேலைக்குச் செல்லும் தாயின் பிள்ளைகள் உலகை அதிகம் அறிந்தவர்களாக இருக்கிறார்கள். சீக்கிரம் கற்றுக் கொள்ளுகிறார்கள். தாய் வேலைக்குக் செல்லும் குழந்தைகளுக்கு தன்னம்பிக்கை. , பணத்தைக் கையாளும் திறன் அதிகமாகவே இருக்கிறது. உங்கள் சிரமங்கள் மற்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டுமானால் முதலில் நீங்கள் சிரமப்படுகிறீர்கள் என்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள். அவர்களே உதவி செய்வார்கள். எல்லாவற்றையும் நீங்களே செய்ய நினைக்காதீர்கள். நீங்கள்தான் பெர்ஃபெக்ட் என நினைத்து வேலைப்பளுவை அதிகரித்துக் கொள்ளாதீர்கள். பகிர்ந்தளிப்பதன் மூலம் சிறப்பாகவும்., சீக்கிரமாகவும் செய்ய முடியும்.

IM THE BEST . YOU ARE NOT என்பது நிறைய பேரிடம் காணப்படுறது. நீங்கள் தன்னம்பிக்கையாளராக இருங்கள்., தலைக்கனம் பிடித்தவராக அல்ல. WE CAN DO என உங்களுடன் வேலை செய்பவர்களிடமும் கூட்டாக வேலை செய்து வெற்றியை அடைய நினையுங்கள். வேலை வாங்கும் அதே நேரம் மனிதநேயத்துடனும் நடந்து கொள்ளுங்கள்.

அலுவலகத்தில் தரப்படும் ட்ரெயினிங்குகள்., மீட்டிங்குகள்., கான்ஃப்ரன்ஸ்களை தவறாமல் அட்டெண்ட் செய்யுங்கள். வளர்ந்திருக்கும் தொழில் நுட்பத்துக்கு ஏற்ப உங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ளுங்கள். அதற்கென வகுப்புகள் இருந்தால் சேர்ந்து கற்றுக்கொண்டு அப்டேட்டடாக இருங்கள். வேலைக்குத் தேவையான ப்ர்மோஷன் டெஸ்ட்டுகளை தவறவே விடாதீர்கள். ரிட்டயர்மெண்ட் ஆவதற்குள் நான் இந்த பொசிஷனில் இருப்பேன் என நீங்க முடிவு செய்தால் அதை நிறைவேற்றக் கூடிய மனச்சக்தி உங்களிடம் பெருகும்.

கொஞ்சம் புன்னகையும்., கண்டிப்பும்., செயலாற்றும் திறனும்., திட்டமிடலும் இருந்தால் எந்தப் பணியையும் பெண்கள் சிறப்பித்து விடுவார்கள் என்பது உண்மைதானே

 

12 கருத்துகள்:



  1. நீங்கள் சொல்லும் பிரச்னைகள் எல்லாமே வீட்டுக்கு வீடு இருக்கிறது.
    வேலைக்கு போகும் அதுவும் ஐ.டி. போன்ற காலம் நேரம் கருதாது கம்பூய்டர் முன்னாலேயே
    உட்காரவைக்கும் வெளி நாட்டு நிறுவனங்கள்
    நமது கலாசாரங்கள், குடும்பத்தில் கணவன் மனைவி குழந்தைகளிடையே இருக்கும் உறவுகள்
    அவர்களது அன்றாட பொறுப்புகள் பற்றி ஏதும் கவனத்தில் கொள்வதில்லை.

    நம் நாட்டு நிறுவனங்களில் முக்கியமாக பொதுத்துறை நிறுவனங்களில் பணி புரியும் மதிப்பும்
    கௌரவமும் வெளி நாடுகளில் வேலை பார்க்கும் பெண்களுக்கு கிடைப்பதில்லை என்பது
    நிதர்சனமான உண்மை. அங்கெல்லாம் மனித நேயம் என்ற துறையே வேலைக்கு தகுதி உள்ள‌
    நபர்களைச் சேர்ப்பது, அவர்களுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு, இட மாற்றம் பற்றி மட்டும் தான்.
    அவர்களது குடும்ப சூழ் நிலையில் ஏற்படும் பிரச்னைகள், நிர்ப்பந்தங்கள் பற்றி சிறிதளவும் கவலைப்படுவதில்லை.

    ஒரு பொது நிறுவனத்தில் மனித நேய மேம்பாட்டுத்துறையில் ஒரு உயர் அதிகாரியாகவும் பின்னர் எங்கள் பயிற்சி கல்லூரியில் துணை
    முதல்வராயிருந்த காலத்திலும் நான் இதுபோன்ற நூற்றுக்கணக்கான பெண்களின், சிறப்பாக ஒன்றிரண்டு சிறிய குழந்தைகளுடனும்
    அலுவலக பொறுப்புகளுடனும் பணியாற்றி வந்திருக்கிறேன்.
    அந்த நேரத்தில் சீனியர் விமன் எக்சிக்யூடிவ்ஸ் க்கே ஒரு தனியான பயிற்சி வகுப்பும் அந்த வகுப்புகளில் வீட்டுப்பணியுடன்
    அலுவலகப்பணிகளையும் மேற்கொள்ளும் பொழுது ஏற்படும் ப்ரச்னைகளை சமாளிப்பதற்கு கௌன்சலிங் தனித்தனியே
    ஏற்பாடு செய்திருக்கிறோம்.
    இன்றைய குடும்பப் பொறுப்புடனும் அலுவலகத்திலும் உயர் நிலைப் பொறுப்புகள் வகிக்கும் நூற்றுக் கணக்கான
    பெண்மணிகள் ஒரு மன உளைச்சலுடனே தான் இருக்கின்றனர். நமது பண்பாடு, குடும்பச் சூழ் நிலையில் அவர்களது
    தாய் என்ற பொறுப்பினை சரிவர நிகழ்த்த இயலவில்லையே என்ற வருத்தம், கணவன் அதுவும் புரிந்து கொள்ளாத கணவன்,
    இவற்றையெல்லாம் தாண்டி பெண்கள் தாம் பார்க்கும் வேலைத் தளங்களில் வெற்றி பெறுகிறார்கள் என்றால்
    அவர்களது உள்ளத்தில் குடி கொண்டிருக்கும்
    அச்சமில்லை, அச்சமில்லை அச்சமில்லை என்னும் உணர்வே.

    மாறி வரும் உலகாயத சூழ் நிலைக்குத் தகுந்தவாறு நமது தமிழ் பண்புகளும் சற்று சிதைந்து போகின்றன என்று சொல்லாவிட்டாலும் வீட்டுப் பெரியவர்கள் புரிந்துகொள்ள முடியாதவாறு,
    ஒப்புக்கொள்ள இயலாத அளவிற்கு மாறி வருகின்றன என்பது உண்மை.

    வாட் இஸ் டு டேஸ் ப்ரையாரிட்டி என்ற கேள்வி தான் இன்றைய பெண்கள் முன்னே இருக்கிறது. இதற்கான பதில் ஒவ்வொரு பெண்மணிக்கு தனித்தனி. இதில் ஒரு காமன் டினாமினேடர் அனேகமாக இருப்பதில்லை.

    அதை அவர்கள் அறிவு பூர்வமாக அல்லது உணர்வு பூர்வமாக அணுகிறார்களா என்பது யுனீக் என்றே சொல்லவேண்டும்.

    கடைசியில் ஒன்று. பெண்களின் வாழ்வின் வெற்றி ஒன்றே சமூகத்தின் வெற்றியாகும்.அடுத்த தலை முறைக்கு தகுந்த வித்தாகும்.மற்ற தெல்லாமே கானல் நீர். பேச்சுக்கு உதவலாம். அவ்வளவு தான்.

    சுப்பு ரத்தினம்.





    பதிலளிநீக்கு
  2. பெண்களின் நிலையை மிக மிக அழகாக சொல்லியதற்கு என் மனமார்ந்த நன்றி...

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    பதிலளிநீக்கு
  3. டெலிகேட்டான நெறைய விசயங்கள அழகா சொல்லி இருக்கீங்க அக்கா. பாரின்ல இருக்கறப்ப வேலைக்கும் போயிட்டு வீட்டுலயும் செய்யறது பெரிய விஷயம்னு தோணல. இந்தியால அது நிச்சியமா சேலஞ் தான், ஏன்னா இங்க நெறய மாறி இருந்தாலும் பொண்ணுன்னா பொறுப்புனு ஒரு முத்திரை நெறைய வீடுகள்ல இன்னும் இருக்கு. அதை தப்புன்னு சொல்லல, நம்ம சமூக அமைப்பு அப்படினு சொல்றேன். நன்றி நல்ல ஒரு பதிவுக்கு

    பதிலளிநீக்கு
  4. இதற்கு தீர்வு.இப்போ இருக்கும் பெற்றோர்கள் ஆண்,பெண் என்று பாரபட்சம் பார்க்காமல் இருபாலரையும் வீட்டு வேலைக்கு பழக்குவது தான் நல்லது. எனக்கு இரண்டும் ஆண் குழந்தைகள் நான் அப்படி தான் பழக்கி வருகிறேன். ஆனால், என் சொந்தக்காரர்கள், ஃப்ரெண்ட்ஸ் சர்க்கிளில் நிறைய பேர் பெண் குழந்தைகளை வேலை செய்ய விடாமல் வளர்க்கிறார்கள்.நாம் பட்ட கஷ்டம் நம் குழந்தைகள் பட கூடாது என்றும் படிப்பு கெட கூடாது என்றும் நினைக்கிறார்கள். எனவே, இன்னும் 20 வருடங்களில் பெண்கள் வீட்டு வேலை பார்க்க என்ன செய்யலாம் என்று ஒரு கட்டுரை எழுதும் நிலை வரலாம்.

    பதிலளிநீக்கு
  5. வேலைக்குப் போகும் பெண்கள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய பதிவு!மிகவும் தெளிவாக எழுதி யுள்ளீர்! அருமை!

    பதிலளிநீக்கு
  6. ***இரட்டைக் குதிரையில் சவாரி செய்யும் பெண்கள்.. ***

    பொதுவா ஒரு குதிரைனா பிரச்சினை கம்மி. இப்போ 3 பேர் (குதிரை ரெண்டு, அம்மணி ஒண்னு) சேர்ந்து டீம் வொர்க் பண்ணினால்தான் முன் நோக்கி நகரமுடியும்!

    பொதுவாக பெண்கள் இந்த சவாரியில் அனுபவமில்லாதவர்கள் என்பதால் ரொம்ப சொதப்பாமல் இருக்கனும்!

    அனுபவமில்லாமையால் சரியாக ரெட்ட்டைக் குதிரை சவாரி செய்யத்தெரியலைனா, "என் ஆம்படையாந்தான் எல்லாத்துக்கும் காரணம்"னு நொண்டிச் சாக்கு சொல்லாதவரைக்கும் பரவாயில்லை!

    என் கவலையெல்லாம் பாவம் அந்தக் குதிரைகள்! எதுக்கு பெண்னையோ ஆணையோ அது தூக்கித் திரியனும்? :)

    பதிலளிநீக்கு
  7. வேலைக்குச் செல்லும் பெண்களின் நிலை பற்றி தெளிவாகப் பகிர்ந்துள்ளீர்கள்.

    குழந்தைகள் உட்பட வீட்டிலுள்ள அனைவரும் வேலையைப் பகிர்ந்துகொள்வதுதான் சிறந்தவழி.

    பதிலளிநீக்கு
  8. மிக விரிவான பின்னூட்டத்துக்கு நன்றி சுப்பு சார்

    நன்றி மலர்

    நன்றி தங்கமணி

    நன்றி அமுதா கிருஷ்ணா

    நன்றி ராமாநுசம் சார்

    நன்றி வருண்

    நன்றி மாதேவி

    பதிலளிநீக்கு
  9. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  10. வணக்கம்
    இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட முகவரி இதோ.
    http://blogintamil.blogspot.com/2014/09/blog-post_17.html?showComment=1410913974598#c5092225308690744254

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  11. வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  12. அறிவித்தமைக்கு நன்றி ரூபன் சார்

    நன்றி ராஜி :)

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...