வெள்ளி, 31 ஜூலை, 2009

அபியும் நானும்

பிறந்தபோதும், அமர்ந்தபோதும்,
அனுப்பிய புகைப்படத்தில்,
அபிக்கான அறிமுகம் எனக்கு....

ரேஸ்கோர்ஸ் வீட்டில்தான்
அவள் என்னுடன் நெருக்கமானாள்,
ஒரு பூந்தோட்ட வண்ணத்துப்பூச்சி போல....

உரையாடல்களால் வாழ்ந்தோம்.
தொடர்பு கொள்ள மட்டுமல்ல,
உணர்வதற்காகவும் அது நிகழ்ந்தது,

பைனாப்பிள் ஜாம் என்றும்,
பீநட் பட்டர் என்றும்,
பாஸ்டா, நூடுல்ஸ்,சீஸ் என்றுமவள் சொன்னதில்
சிலது மட்டுமே கொடுக்க முடிந்தது. ....

சிப்பி போல இமையும்,
சொப்பு போல வாயும் கொண்டு,
அவள் பேசுவதே ஒரு இசையாயிருக்கும்.
காண்டீஸூம் பன் வோர்ல்டும் அவளுக்குப் பிடித்தவை.....

பயணத்தைக் கூடப் பதிவு செய்வதும்,
பஸ் பிரயாணத்தில் காபினில் அமர்பவர்களுக்கு
ஸேப்டி இல்லையே என அவள் வருத்தப்பட்டதும்,
எனக்கு உலக மகா ஆச்சர்யங்கள் !!!!!

கரப்பானுக்கான பயம் அவள் கண்ணில் நிழலாடும்.
குளித்தவுடன் பூசும் பாடி லோஷன்
அவள் குழந்தைத்தன்மையை அதிகப்படுத்தும்.....

கரிய கூந்தல் கொண்ட பார்பி டாலாய்
தன் கரிய கண்களால் அவள் பார்க்கும் போது,
சேர்த்தணைத்து முத்தமிட்டால்,
பெரிய மனுஷிபோல முகம் காட்டுவாள்........

பெண் இல்லையே என்ற குறை தீர
என்னுடன் வாழவந்த பேரரசி!!!!!!

வளர் சிதை மாற்றத்தால் , இட மாற்றத்தால்
அவள் எனை மறந்தாலும்,
அவளுக்கான ஒரு இடம் என் மனதில் என்றென்றும்......!!!!

விடுதலை

பேரன்பே பெருநெருப்பாம்
மானிடர்க்கு

அன்பு கூட வலைதான்
பறக்க இயலாதபோது

சொடுக்கும் வார்த்தைகளால்
இளம் பறவைகள்
தாய்ப்பறவையைச் சீறும்

மூச்சடைக்க வைப்பதுபோல்
அன்பால் அழுத்தாமல்
சிறிது சுயம் தேடிச் செல்லட்டும்,
அதன் வானில் பறக்கட்டும் என
நாம் விட்டு விடுதலை ஆகிடல் வேண்டும்

நாம் சுமந்த பறவைகள்
நம்மை மனதில் சுமந்தபடி ,
நீள்வானில் ஆனந்தமாய்

வியாழன், 30 ஜூலை, 2009

சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி

ஈழப்போரையும்
ஈராக் யுத்தத்தையும்.
நாமென்ன விமர்சிப்பது

நம்மிடமே உண்டு
குத்தீட்டீக் கண்களும்
கொடு வாளாய் நாக்கும்

அஹிம்ஸா தேவதை அவதாரம்
உடல் மொழியாலே உதறித் தள்ளுவோம்
ஒருவரை அறியாமலே.

வெறுப்பெனும் கறுப்பணிந்து கடுப்பேற்றுவோம்
விரும்பியே கூட இருந்தாலும் வெட்டிச்சாய்க்க
விதவிதமான போர்வாள்கள்
நம்மிடம்.....

இழிந்த பார்வை,
நெளிந்த புன்னகை என
உயிர்க்கொல்லிகள் எக்கச்சக்கம்...


தெரியாமலே வீசப்பட்ட
பெருநெருப்பும் எரிஅமிலமும்
எதிராளியைப் பொசுக்கும்போது
நம்மையும் சேர்ந்து அழிக்கிறது

நட்போ காதலோ உறவோ
வார்த்தைகளில் மட்டுமல்ல
பார்வைகளில் மட்டுமல்ல
உடல் மொழியால் கூடக்
காயம் படாமல் காப்போம்

புதன், 29 ஜூலை, 2009

அம்மாவின் அன்பு

நான்கும் ஒன்று என்று சொன்னாலும்
சில சமயம் தெரிந்துவிடுகிறது
அம்மாவின் தனிப்பட்ட அன்பு.

ஒரு தட்டில் மட்டும் வீழும்
அதிகப்படியான முருகலும் வறுவலும்.

எந்த ஒரு தனித் திறமையும் வெல்வதில்லை
அவளின் மனச் சூலின் தேனை அருந்த
அவளாக மனம் வைத்தால் உண்டு.

எந்தத் தவறு செய்தாலும்
அவளுக்கான குழந்தை மட்டும்
மன்னிக்கப் பட்டு விடுகிறான்

ஒரு கள்ளப் புதையல் போல
கண்களின் ஒளிர்வும்
கன்னங்கள் அடக்கிய சிரிப்பும்
உயர்ந்த தோள்களும்
பெருமிதத் தலை அசைவும்
அரவணைக்கும் உடல் மொழியும்
காட்டிக் கொடுத்துவிடுகிறது அவளுக்கான குழந்தையை.

பேரன்பைப் பகிர்ந்து கொள்ளாத
பிற குழந்தைகளும் சில சமயம்
பரவசமடைகிறார்கள் பெருமூச்சுடன்

திங்கள், 27 ஜூலை, 2009

ஃபீனிக்ஸ்

கூட்டுப் புழுவைப்போல் கூண்டுக்குள் இருந்தேன்,
கூட்டை உடைத்த போது தெரிந்தது நான்
வண்ணத்துப் பூச்சிதானென்று. ...!!!!

அன்னத்தைப் போல் இல்லையே என வருந்தினேன்,
என் குரல் வெளிப்பட்ட போது தெரிந்தது நான்
குயில் தானென்று.....!!!

சாம்பலாகி விட்டோமென்று நினைத்தேன்,
உயிர்த்தெழுந்த போது தெரிந்தது நான்
ஒரு பீனிக்ஸ் பறவையென்று....!!!

புலங்கள் பெயரும் பறவை என இருந்தேன்....
கண்டம் விட்டுக் கண்டம் சென்று
கணங்கள் தோறும் அனுபவங்கள் சேகரித்தேன்....!!!!

விழித்துக் கொண்ட போது தெரிந்தது,
நான் வாழ நினைத்ததை விட
அற்புதமாய் வாழ்ந்து இருக்கிறேனென்று....!!!!!

தன்னை அறிதல்

அவரவர்க்கான தேடலில் அவரவர்.
பால் சுயம்போ கல்கியோ ரோஸோ
இருப்பை வெளிப்படுத்தவேணும்
உரக்கச்சொல்ல வேண்டும்

இவர்கள் திருநங்கைகள்
உணர்வால் மங்கைகள்
உலகின் இறை சக்திகள்

சங்கர நாராயணர்,
ஹரிஹரன்,அர்த்த நாரீஸ்வரர்என
ஒரு உடலில் இரு உணர்வும்
தன்னை அறிந்த ஞானமும்

பெண்களை விடப் பெண்மை மிகுந்தவர்கள்
இவர்களது பிறப்பு இறைப் பிறழ்வு அல்ல
அதை ஏற்றுக் கொள்ளாத நம் மனப்பிறழ்வு

எல்லா உயிரும் ஒன்று
அவரவருக்கான தேடலில் அவரவர்
அனைவரும் கண்டு அடையட்டும்

தேடல்

ஓசையிலாத இசையும்
வர்ணங்களில்லாத நிறமும்
மேகங்களை ஒத்த உருவமும்
நீரைப் போல உணர்வும் கொண்டு அலைகிறேன்
இந்த அண்டத்திலே
ஒரு விண்மீணும்
ஒரு பால் வீதியும்
எனக்கான ஒரு சூரியனும் சந்திரனும் தேடி!!!!!

குழந்தை வளர்ப்புத் தொழிலாளிகள்

சிறகை இழந்த பறவைகள்
ஒரு போதும் பறக்கவே முயல்வதில்லை,
சிறகு வளர்ந்த பின்னும்.

இருப்பதற்கும் இரைப்பைக்கும்
இறகை சிறிது அசைப்பது தவிர
உயரப் பறக்க இசைவதில்லை
உள்ளமெல்லாம் பறந்தாலும்.

குழந்தைக்கான கூடும்
குடும்பக் கண்ணியமும் காத்து நிமிர்கையிலே
முறிந்து வீழ்கிறது பால்யமும் பேரிளமையும்.

குழந்தைத் தொழிலாளிகள் இல்லை
இவர்கள் குழந்தை வளர்ப்புத் தொழிலாளிகள்

வியாழன், 16 ஜூலை, 2009

நன்றிகள்

என்னை நாடியும் சில பறவைகள்....
புதிய உயிராக்கிய வேரே... உனக்கு நன்றி !
விளை நிலமே ! என் இடு உரமே !
என் தாய் மண்ணே !
எனக்குப் பறக்கக் கற்றுத் தந்தவளே !!
உன் காலடியில் சர்வமும் சரணம் !!
நன்றி ! நன்றி !! நன்றி !!!!

புதன், 15 ஜூலை, 2009

அம்மாவுக்கு...

அம்மா உந்தன் நெற்றிப் பொட்டாய் ஆக மாட்டேனா
அழகொளியாய் நெற்றி வானில் மினுங்க மாட்டேனா