எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 6 ஜூலை, 2018

ஆனந்தம் யூத் ஃபவுண்டேஷனின் அற்புத சேவைகள்.


ஆனந்தம் யூத் ஃபவுண்டேஷனின் அற்புத சேவைகள்.

”என்னம்மா உனக்கு ஸ்காலர்ஷிப் கொடுத்தா நல்லா படிப்பியா.”

”எனக்கு ஸ்காலர்ஷிப் கொடுக்காட்டியும் பரவாயில்லை. என்னை விட கஷ்டப்படுற நிறையப்பேர் இருக்காங்க. அவங்களுக்கு கட்டாயம் கொடுங்க. உங்க உதவி தேவைப்படுறவங்க நிறைய இருக்காங்க. ” என்று கண்ணீர் விட்டு அழுது தனக்கு வந்த உதவியைக் கூட இன்னொருவருக்கு விட்டுக்கொடுத்த அச்சிறுமி மிகவும் எளிய குடும்பத்தைச் சேர்ந்தவள். இதைக் கேட்ட அந்த ஃபவுண்டேஷன் சார்பாக இந்தக் குழந்தைகளை நேர்காணல் நடத்திய என் உறவினர் கண்களிலும் கண்ணீர்.


எளிய உடைகள், தன்மையான சுபாவத்தோடு கண்கள் நிறைய எதிர்பார்ப்போடு அங்கே நிறையக் குழந்தைகள் காத்திருந்தார்கள். எத்தனை குழந்தைகள், கூலித்தொழில் செய்யும், வீட்டு வேலை செய்யும் , ரோட்டோரம் காய்கனி விற்கும் பெற்றோரின் குழந்தைகள் ( முக்கால்வாசிப்பேர் சிங்கிள் பேரண்ட். அல்லது தாய் தந்தையை இழந்த குழந்தைகள் ) மேல்படிப்புக்காக ஆவலோடு வந்திருந்தார்கள். முதல் தலைமுறையாக மேல்கல்வி கற்க வந்த மாணவர்கள் அவர்கள். கல்விச் செலவு அதிகமுள்ள இஞ்சினியரிங், ஐ ஏ எஸ், எம் பி பி எஸ் ஆகியவற்றுக்கும் முழுச்செலவையும் ஏற்றுப் படிக்க வைக்கிறார்கள் ஆனந்தம் யூத் ஃபவுண்டேஷன் நிறுவனத்தார் எனத் தெரிந்து ப்ளஸ்டூவில் அதிக மதிப்பெண் எடுத்த, மேலே செலவழித்துப் படிக்க வசதி வாய்ப்பில்லாத,  அரசுப்பள்ளியில் பயின்ற மாணவ மாணக்கியர் வந்திருந்தார்கள். 

ப்ளஸ்டூவில் நிறைய மதிப்பெண் எடுத்திருந்தும் கல்லூரிக் கல்விக்குச் செலவழிக்க இயலாத, மேல்படிப்புக்குச் செல்ல இயலாத, கிராமப்புற நகர்ப்புற ஏழை மாணவர்களுக்காக உதவும் தொண்டு நிறுவனம் ஆனந்தம்  யூத் ஃபவுண்டேஷன். இது போக இன்னும் இரத்த தானம் போன்ற பல்வேறு வகை தொண்டுகளும் செய்து வருகிறார்கள்.

வருடந்தோறும் நாற்பது குழந்தைகளைத் தேர்ந்தெடுத்து இதுபோல் ஸ்காலர்ஷிப் உதவி வழங்கி வருகிறது ஆனந்தம் ஃபவுண்டேஷன். இது 100 சதம் கல்லூரி ஃபீஸ், தங்கும் உதவி, உணவு உதவி அடங்கியது. படிக்கும் காலம் முழுவதும் இந்தக் குழந்தைகளின் செலவுகளை ஆனந்தம் ஃபவுண்டேஷனின் நிறுவனர் கோமல் திரு. அன்பரசன் அவர்களும் அவருடைய நண்பர் திரு. செல்வகுமார், மற்ற நண்பர்களும், தன்னார்வலர்களும் ஏற்றுக்கொள்வதால் இது சாத்யமாகிறது.

”வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்” என்று எங்களைத் தினமும் வாழ்த்தி வரும் எங்கள் உறவினர், என் ப்ரியத்திற்குரிய பெரிய அத்தை சரஸ்வதி அவர்களின் மகன் எங்கள் சுப்பு ஐய்த்தான் (  திரு. சுப்பையா அவர்கள் )  இந்த நிறுவனம் பற்றி ஒரு வாரமாக வாட்ஸப்பில் பகிர்ந்து வருகிறார்கள். மேலே நிகழ்ந்த மாணவியின் நேர்காணலும் இவர் செய்ததுதான்.

இந்த நிறுவனத்துக்காகத் தன்னார்வலர்கள் நிறைய உதவிகள் செய்து வருகிறார்கள். வலதுகை கொடுப்பது இடது கைக்குத் தெரியாது என்பது போல் இவர்கள் வழங்கிய உதவியால் நிறைய எம்பிபிஎஸ் மாணவர்களும், ஐ ஏ எஸ் மாணவர்களும் உருவாகி உள்ளனர் என்பது சிறப்புச் செய்தி.  ஐபிஎம், இன்ஃபோசிஸ், கெவின்கேர் ஆகியவற்றில் இவர்கள் ப்ளேஸ்மெண்ட் ஆகிவருவதும் சந்தோஷத்திற்குரியது.

சத்தமில்லாமல் எந்தவித விளம்பரமுமில்லாமல் பிரதிபலன் கருதாமல் உதவி வரும் இந்நிறுவனத்தாரின் சேவை பாராட்டிற்குரியது. மூன்று சிறார்களுக்குத் தன் கையால் நிதி உதவி செக்கை வழங்கியபோது ஏற்பட்ட உணர்வை வார்த்தைகளில் வடிக்க இயலவில்லை எனவும் இன்னும் நிறைய செய்ய வேண்டும் என்ற ஆவலும் ஏற்பட்டதாக சுப்பு ஐத்தான் கூறினார்கள்.


இந்த ஃபவுண்டேஷனின் நேர்காணல் நடைபெற்றபின் உரிய மாணவச் செல்வங்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த இடத்தில் உதவி வழங்குகிறார்கள் என்று கூறி நிறைய மதிப்பெண் எடுத்த மாணவர்களை ஒரு தமிழாசிரியர் வெவ்வேறு கிராமங்களின் இருந்து இது பற்றிய விபரம் அறிவித்துத் தனது செலவில் அழைத்து வந்தாராம். அவரை என் உறவினர் பார்த்துப் பாராட்டுத் தெரிவிக்கிறார். நிஜமாகவே பாராட்டுவதற்குரிய செயல். எங்களது பாராட்டுகளும் ஐயா.

சுப்பு ஐத்தானும் தன் சார்பாக முடிந்த நிதிவழங்கியதோடு பார்வைக்குறைபாடு உள்ள மாற்றுத் திறனாளிப் பெண் குழந்தை ( பெயர் பிரியதர்ஷிணி )  ஒருவரைத் தத்தெடுத்து மேல்கல்வி கற்க – பி ஏ பொலிட்டிகல் சயின்ஸும் அதன் பின்னர் ஐ ஏ எஸ்ஸும் படிக்க -  100 சதம் உதவித் தொகை வழங்கி உள்ளார் என்பது மகிழ்ச்சிக்கும் நெகிழ்ச்சிக்கும் உரிய செய்தி. 


( தன்னை இத்தொண்டில் இணைத்துப் பங்களிப்புச் செய்ய உதவிய கோமல் அன்பரசன் அவர்கள், செல்வகுமார் அவர்கள், முன்வர் அவர்கள் ஆகியோரைப் பற்றிப் பலமுறை கூறி நன்றி நவின்றார்கள் எங்கள் சுப்பு ஐத்தான் )

சென்னை கோடம்பாக்கம், ரங்கராஜபுரம் பசுமார்த்தி சாலையில் இயங்கி வருகிறது ஆனந்தம் யூத் ஃபவுண்டேஷன். அவர்களின் வெப்சைட் இது. 


திறமை இருந்தும் வசதி இல்லாத குழந்தைகளின் கல்விக்காக நிதி கொடுக்க விரும்புவோர் ஆனந்தம் ஃபவுண்டேஷனின் இந்த இணைப்பில் வங்கி விவரம் பார்த்து அனுப்பலாம்.


தொடர்பு கொள்ள :- 91 44 445 885 55

மொபைல். : - 91 955 193 9551.
ஈமெயில் :- info@anandham.org. 

வாழ்க வளமுடன் . வாழ்க வையகம். வாழ்க ஆனந்தம் ஃபவுண்டேஷன். வாழ்க எங்கள் சுப்பு ஐத்தான் & குடும்பத்தினர். J

6 கருத்துகள்:

  1. திரு. சுப்பு அவர்களுக்கு எமது வாழ்த்துகளும் சகோ.

    பதிலளிநீக்கு
  2. அருமையான உதவி ஆனந்த் ஃபௌவுண்டேஷன் செய்வது அதில் தங்கள் உறவினர் சுப்பு ஐத்தான் அவர்களும் இணைந்து உதவியது பாராட்டிற்குரிய ஒன்று. வாழ்த்துகள்! பாராட்டுகள் அனைவருக்கும்

    குறித்துக் கொண்டோம்.

    பதிலளிநீக்கு
  3. வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

    எங்கள் பாஸிட்டிவ் செய்தியில் இணைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. நலங்கொண்டு வாழ்க... என்றென்றும்!..

    பதிலளிநீக்கு
  5. நன்றி கில்லர்ஜி சகோ

    நன்றி துளசி சகோ

    நன்றி புதியமாதவி

    நன்றி ஸ்ரீராம்

    நன்றி துரை சார் :)

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...