**நீரற்ற உலகில்
வாழக் கற்கிறேன்
நீரற்ற உலகில்
வாழப் பழகுவேனா.
**ஒளிந்து ஒளிந்து
உன்னை ரசிக்கிறேன்.
திருட்டுக் கண்காணிப்புக்கும்
ருசி அதிகம்தான்.
**தாவும் குறுஞ்செய்திகளால்
தம்மைத் தாமே
ஊஞ்சலாட்டிக் கொள்கிறது
நமது காதல்.
**ஜலக் க்ரீடைகளில்
மிக விருப்பம் உனக்கு.
புதிய அவதாரத்தில் நிகழ்த்துவது
ரகசிய பிக்சல் டெசிபல் க்ரீடை.
**ஆர்வக் கோளாறால்
கவிதை எழுதவில்லை
உன் மேலான ஆர்வம்
கோளாறானதால் கவிதை எழுதுகிறேன்.
**என் விழிக்குள்
உன் விழிகள் பட்டதால்
அச்சோ விழுப்புண்.
**பேரைச் சொல்லாதே
கத்துகிறேன்
பாடத் துவங்குகிறாய்
மீனு எத்தனை மீனு
குளத்துப் பாசியாய்க்
கடிக்கத் துவங்குகிறேன்
பக்கத்திருக்கும் உன் பாதங்களை.
**சொட்டுச் சொட்டாய்
சிதறும் உன்
ஞாபகத் தேனை
ருசிக்கிறது மனவண்டு.
**குறுக்கும் நெடுக்கும்
சிறகசைத்துத் திரும்புகிறாய்
உதிரும் இறகுகளில்
சிலிர்க்கிறது வரிவரியாய்க் குளம்.
**கன்னம் நக்கி
கால் கவ்வி
ஓடி விளையாடி
கைபிடித்துக் கடித்துத்
தான் மட்டுமே என் துணை என
நினைத்துக் கொள்கிறது
என் செல்ல நாய்க்குட்டி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)