**டாட்டூப் பட்டாம்பூச்சி வரைந்து
அழகுபடுத்துகிறாய்.
வெட்கித் தலைசாய்ந்து
தோளசைக்கும்போதெல்லாம்
சிறகசைக்கின்றன பட்டாம்பூச்சிகள்.
**கூடு என்னுடையதுதான்
கோபித்துக்கொண்டு
கட்டியிருக்கிறேன்
உன்னுடைய மரத்தில்
**என் பேரையும் உன் பேரையும்
இணைத்து இணைத்து எழுதுகிறாய்
நடுவில் வேறு யார் பேரோ
இருப்பதுபோல் துழாவுகிறேன்
கண்ணில் கோளாறா
கண்ணுக்குத் தெரியாததையும்
படிக்கக் கற்றுவிட்டேனா ?
**கோயிலுக்குப் போய்
தரிசனம் முடித்தாயிற்று
வீடு திரும்பவேண்டும்
சாமிகள் கூட வருவதில்லைதான்.
**என் மேலான கோபத்தில்
என்னைக் கடிய முடியாமல்
எனக்குப் பிடித்ததெல்லாம்
வாங்கித் தின்கிறாய்
நான் நினைக்காமலே
புரை ஏறுகிறது உனக்கு.
தலையைத் தட்டித் தட்டி
அடக்குகிறாய் என்னுடைய நினைப்பை.
வெளியேறும் வழியின்றிக்
கண்ணீராய் வழிகிறேன் நான்
**சூரியன் துரத்த
மரங்களில் இருந்து
குதித்திறங்குகிறது
பச்சைய வாசத்தோடு
இரவின் குளிர்ச்சி.
**நித்தம் ஒரு மாற்றத்தைக்
கூட்டுகிறது உருவம்
காட்டும் கண்ணாடிக்கோ
காணும் கண்களுக்கோ
வயதாவதில்லை
**தத்துவங்களையே படித்து
வயதாகிவிட்டது நமக்கு
வா திரும்பிவிடுவோம்
பால்யத்துக்கு.
**என்ன இவ்வளவு மொக்கையாக எழுதுகிறாய்
எனக் குழல் சுழற்றிக் கேட்கிறாய்
எப்போதும் கூடவே இருக்கும்
ஊடலற்ற உன்னைக் காதலித்தால்..
இவ்வளவுதான் வரும்
நீ கொடுத்து வைத்தது அவ்வளவுதான்.
**சிறிது கோபித்துக் கொள்ளேன்
நான் அவசரமாக ஒரு
காதல் கவிதையேனும் எழுதி
ஆகவேண்டும் ஒரு போட்டிக்கு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)