தேன் பாடல்கள்: மாதங்களும் வாரங்களும்
கலைஞர் ஒரு அரசியல் கூட்ட சுற்றுப் பயணமொன்றில் ஒரு ஊருக்கு வர தாமதமான போது “ மாதமோ சித்திரை மணியோ பத்தரை உங்களுக்கோ நித்திரை எனக்கோ யாத்திரை “ என்று கூறிக் கூட்டத்தை நான்கே வார்த்தைகளில் கலகலப்பூட்டிச் சென்றதாக உறவினர் ஒருவர் சொல்லக் கேள்வி. இந்தச் சித்திரை மிகப் பிடித்துப் போனதால் மாதங்கள் வாரங்கள் என எனக்குப் பிடித்த சில தேன் பாடல்கள் உங்களுக்காகவும் இங்கே.
சுஜாதா சொன்னது போல சினிமா ஒரு கனவுத் தொழிற்சாலை. தமிழ் சினிமாவில் பாடல்கள்தான் அதன் உற்பத்தித் தரத்தின் அளவுகோல். பாடல் ஹிட்டாகி படம் சொதப்புவதும் உண்டு
சித்திரைச் செவ்வானம் பாடல் படமாக்கப்பட்டவிதம் சொதப்பல். கவிதாவும் முத்துராமனும். ஆனால் கவிதா பயந்து ஒதுங்கி நம்மையும் பதட்டப்பட வைத்திருக்கிறார் காட்சியமைப்பில். கெமிஸ்ட்ரி பிசிக்ஸ் எல்லாம் வொர்க்கவுட் ஆகலை போல. சித்திரை மாதம் பௌர்ணமி நேரம். வளர்ந்த குழந்தையைப் போலிருக்கும் விஜயாம்மா நடிகர் திலகத்துடன் நடித்த அழகுப் பாடல். "பூமாலைகள் உன் தோளில் விழுந்து ஊரெங்கும் பேர் பாடும் நன்னாளிலே பாமாலைகள் பல்லாக்கு வரிசை ஒன்றல்ல பலகோடி உன் வாழ்விலே” ஈகோ இல்லாத காதல். சித்திரை மண்டபத்தில் சில முத்துக்கள் கொட்டி வைத்தேன் என அன்பைத் தேடி சிவாஜியும் ஜெயாம்மாவும் பாடுவார்கள்.
சித்திரை நிலா ஒரே நிலா, என கௌதம் கார்த்திக்கும் சித்திரை மாதத்து நிலவு வருது வழிவிடு வழிவிடு மேகமே வழி விடு மோகனும் ரேவதியும் நிலா உலாவுக்குப் பாடுவார்கள். சித்திரையே சித்திரையே அடி சித்திரையே என் நித்திர போயிருச்சே என லிவிங்ஸ்டன் தேவயானிக்காகப் பாடுவார்.
பிரபு, பிரசாந்த், வினய் மட்டும் சளைத்தவர்களா என்ன? பிரபு “வைகாசி மாசத்துல பந்தல் ஒண்ணு போட்டு ரெண்டு வாழை மரம் கட்டப் போறேண்டி” என்று ராதிகாவுக்காகப் பாட, வைகாசி வெள்ளிக்கிழமைதானே என பிரசாந்த் சிவரஞ்சனிக்காகவும், வைகாசி நிலவே வைகாசி நிலவே மை பூசி வைத்திருக்கும் கண்ணில் என வினய் சதாவுக்காகவும் பாடுவார்கள். வைகாசி பொறந்தாச்சு பிரசாந்த் நடித்த படம்
ஆனிப்பொன் தேர் கொண்டு என மஞ்சுளா எம்ஜியாருக்காக உருகுவார். ஆனிமுத்து வாங்கி வந்தேன் ஆவணி வீதியிலே என பாமா விஜயத்தில் கோஷ்டி கானம் பாடுவார்கள் சௌகார், ஜெயந்தி, காஞ்சனா ஆகியோர். முத்து முத்து ஆனி முத்து என விஜய்காந்த் குழந்தைக்காகப் பாடுவதும் விசேஷம்.
ஆடியிலே காற்றடித்தால் ஆயிரமாய் இலை உதிரும் ஐப்பசியில் மழை பொழிந்தால் அத்தனையும் தழைத்து வரும் அவள் ஆடிவரப் பார்த்திருந்தேன் ஆடி வந்து சேர்ந்ததம்மா ஐப்பசிக்கும் காத்திருந்தேன் எப்பசியும் தீரவில்லை என உத்தமன் சிவாஜி கடற்கரையில் சோகப் பாடல் பாடுவார். ஆடி மாசக் காத்தடிக்க எனப் பாயும் புலியாய் ரஜினியும் ஆடி வெள்ளி தேடி உன்னை நான் அடைந்த நேரம் கமலும் ஆடிக்குப் பின்னே ஆவணி மாதம் வருவது உண்டு என்று சிவாஜியும் துணையை அடைந்தது பற்றிப் பாடுவார்கள். ஆடி வெள்ளி, ஆடிப்பெருக்கு, ஆடி விரதம் ஆகியன திரைப்படங்கள்.
ஆடி வெள்ளிப் புத்துக்குப் பால் விட்ட யோகம் என பிள்ளைப் பேறு பற்றி சித்தாரா உருக , ஆடி போனா ஆவணி, அவள் ஆளை மயக்கும் தாவணி என்கிறது அட்டக்கத்திப் படம். ஆவணி மாசம் பிறக்கட்டும் என்கிறது பொண்ணு பிடிச்சிருக்கு படம். மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி என்கிறார் ரவிச்சந்திரன் காஞ்சனாவிடம்! நிகழும் ஆவணித் திங்கள் இருபதாம் நாள் எனத் தான் தங்கையாகக் கருதும் பெண்ணின் திருமணத்துக்கு அழைக்கிறார் சிவாஜி ! ஆவணி மாசத்துல தாவணி போட்ட புள்ள, ஆவணி மாசம் தாவணி போட்ட சின்னப் பொண்ணுக்கு, ஆவணி மாதத்தில் தாவணி கட்டிய பூவே என்று ஆவணிக்கும் தாவணிக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறது இப்பாடல்களில் !!
மலைக் கோவில் வாசலில் கார்த்திகை தீபம் மின்னுதே என்கிறார் வீரா ரஜனி. மாதங்களில் அவள் மார்கழி இது கண்ணதாசன் கிருஷ்ணர் நான் மாதங்களில் மார்கழியாக இருக்கிறேன் என்று கூறிய கீதையின் சார தத்துவத்தைக் கொடுத்த பாடல். பனியில்லாத மார்கழியா என்று எம்ஜியார் கேட்க மார்கழி மாசத்து மல்லிகைப் பூ ஒன்னு மாலையில் சேருதடி என்று அப்பாஸும், மார்கழித் திங்கள் அல்லவா என்று ஆண்டாளாய் விந்தியாவும், மாசமோ மார்கழி மாசம் என்று சரிதாவும் மார்கழிப் பூவே என்று சோனாலியும், மார்கழி மாசம் ரொம்பக் குளிரெடுக்காதா என்று வினிதாவும் உருகி மருக, மார்கழிதான் ஓடிப்போச்சு போகியாச்சு என்று தை மாசத்தை வரவேற்கிறது தளபதி படம்.
அறுவடையும் திருமண சந்தோஷங்களும் தை மாச ஸ்பெஷல். தை பிறந்தாச்சு என்கிறது ஒரு படம். தை பிறந்தால் வழி பிறக்கும் படத்தில் தைபிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம் என்கிறது பாடல். தந்தன தந்தன தை மாசம் அது தந்தது தந்தது ஒன்னத்தான் என விஜய்காந்தும், தை மாசம் ஊர கூட்டு தஞ்சாவூரு மேளம் கொட்டு என்று விக்ரமும் மஜாவாகத் தாளம் போடுகிறார்கள். பூப்பூக்கும் மாசம் தை மாசம் என்கிறார் வருஷம் 16 குஷ்பூ. தை மாத மேகம் என்று குழந்தைக்காகப் பாடுகிறார் பத்மினி.
தை மாசி பங்குனி போயி சித்திரை மாசம் என்கிறார் வசந்தகாலப் பறவை ரமேஷ் அரவிந்த். மாசி மாசி பாசி காட்டுவாசி என்று எசைப்பாட்டு இசைக்கிறார் ஆதவன் சூர்யா, மாசி மாசம் ஆளான பொண்ணு என்று ரஜனி கௌதமியுடனும், மாசிமாசம்தான் கெட்டி மேளம் தாளம்தான் என்று ராதிகாவுடனும் டூயட்.. இதை எல்லாம் விட ஆசயக் காத்துல தூதுவிட்டு பாடலில் வாசம் பூவாசம் வாலிபக் காலத்து நேசம் மாசம் தை மாசம் மல்லியப் பூமணம் வீசும் என்று ஜெயசுதா ரஜினியை வசீகரமாய்ப் பார்த்துப் பாடுவது ரம்யம். மாசி என்றொரு படமும் உண்டு. பங்குனிக்கப்புறம் சித்திரையே ஒரு பங்கு கொடுத்திரு சர்க்கரையே என்கிறது வண்ண வண்ணப் பூக்கள். திரும்ப சித்திரைக்கு வந்துட்டோம்!
ஞாயிறு ஒளி மழையில் திங்கள் குளிக்க வந்தாள் என்று கமல் வன்காதலிலும், ஞாயிறு என்பது கண்ணாக திங்கள் என்பது பெண்ணாக செவ்வாய் கோவைப் பழமாக என்று எஸ் எஸ் ஆர் மென்காதலிலும் கரைவார்கள். செவ்வாய்க்கிழமை என்பது ஒரு படத்தின் பெயர். வெள்ளிக்கிழமை தலைமுழுகி மல்லிகைப் பூவைத் தலையில் வைச்சு என்று ஒரு மலையின் மீதேறி டிஸ்கோ ஷாந்தி பயத்தைத் தூண்டுவார். இன்னும் கிலி கிளப்ப வெள்ளிக்கிழமை ராமசாமி வாராண்டோய் படத்தில் ஒரு யானை அதே பெயரில் வேகவேகமாக ஓடி வேறு வரும்.
வெள்ளிக்கிழமை விடியும் வேளை வாசலில் கோலமிட்டேன் என்று ஜெயம்மா பாடுவது இனிய இல்லறம். விளக்கேத்து விளக்கேத்து வெள்ளிக்கிழமை விளக்கைப் போல வெளிச்சமாகும் நம்ம நிலைமை என்ற பாடல் தெய்வீகம். வெள்ளிக்கிழமை விரதம் படமும் சிறப்பு.
நீ மர்லின் மன்றோ க்ளோன்ங்கா பாடலில் சாட்டர்டே நைட் பார்ட்டிக்கு போகலாம் வர்றியா ஹேய் பேபி என்று அழகிய தமிழ் மகன் விஜய் நமீதாவிடம் கேட்பது மரபு மீறல். ஆகமொத்தம் புரட்டாசி, புதன், வியாழன் மட்டும்தான் பாடல்களில் வரவே இல்லை! ஆண்டுக்கு ஆண்டு தேதிக்குத் தேதி ஆயிரம் இருக்குது சுபதினம். 35 ஆண்டுகளாக இரவும் நிலவும் உலகை ரசிக்க நினைத்தது என்று அஞ்சலியில் பாடும் புத்தாண்டுப் பாட்டும், 43 ஆண்டுகளுக்கு முன் ஹே எவ்ரிபடி விஷ் யூ எ ஹேப்பி நியூ இயர் என்று சகலகலா வல்லவன் கமல் பாடியதும்தான் இன்றுவரை நமக்குப் புத்தாண்டுப் பாடல்கள். அனைவருக்கும் சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்!.
டிஸ்கி:- மனத்திரையில் மின்னலில்,” திரையில் பெண்கள் “ என்ற கட்டுரையைப் பாராட்டிய காரைக்குடி வாசகர் திரு சிவ. வள்ளியப்பன் அவர்களுக்கு நன்றிகள். இந்த வாசகர் கடிதத்தை மணி மடல்களில் வெளியிட்ட தனவணிகனுக்கும் நன்றிகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)