எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 12 பிப்ரவரி, 2020

பிரமராயனைக் காக்க வந்த பரிமேலழகன். தினமலர் சிறுவர்மலர் - 51.

பிரமராயனைக் காக்க வந்த பரிமேலழகன்.
இக்கட்டில் மாட்டிக்கொண்ட ஒருவரைக் காப்பாற்ற சரியான நேரத்தில் வருவது முக்கியம். அத்தோடு அவரை அந்த இக்கட்டிலிருந்து விடுவிக்கத் தேவையான பொன் பொருள் கொண்டு செல்ல வேண்டும். அப்படி வாக்குக் கொடுத்த ஒருவர் மாட்டிக்கொண்டவருக்காக பொன் பொருள் அல்ல குதிரைகளைக் கொண்டு வந்து கொடுத்தார். அதுவும் எப்படி ? நரிகளைப் பரிகளாக்கிக் கொண்டு வந்தார். அது ஏன் எனப் பார்ப்போம் குழந்தைகளே.
திருவாதவூர் என்னும் ஊரில் சம்புபாத சரிதருக்கும், சிவஞானவதிக்கும் மகனாகப் பிறந்தவர் திருவாதவூரார். சிறுவயதில் இவர் சகல கலைகளையும் கற்றுக் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினார். அப்போது மதுரையை ஆண்டு வந்த அரிமர்த்தன பாண்டியன் என்பான் இவரது புலமையைக் கண்டு தென்னவன் பிரமராயன் என்ற பட்டம் அளித்துத் தன் அமைச்சராக்கிக் கொண்டான்.
என்னதான் பெரும்புலமை பெற்று மன்னனிடம் சேவகம் புரிந்துவந்தாலும் திருவாதவூரார் தன் மனதில் ஏதோ வெறுமையை உணர்ந்தார். அதனால் நிலையற்ற செல்வங்களை விட்டு அவர் மனதை ஒருமுகப்படுத்தி நிலையான செல்வமான சிவனிடம் பக்தி செலுத்தி வந்தார்.
ஒருமுறை சோழநாட்டில் நல்ல ஜாதிக்குதிரைகள் வந்திருக்கின்றன என்று கேள்விப்படுகிறான் மன்னன் அரிமர்த்தன பாண்டியன். தன் படையை விரிவுபடுத்த எண்ணி தன் மந்திரி வாதவூராரிடம் பொற்காசுகள் கொடுத்து அந்தக் குதிரைகளை வாங்கி வருமாறு பணிக்கிறான்.

அவரோ சோணாடு செல்லும் வழியில் ஆவுடையார் கோவில் என்ற இடத்தில் குருவடிவில் சிவனைக் கண்டு பணிந்து இனிய பாடல்கள் பாடுகிறார். அவர் பாடிய ஒவ்வொரு வாசகமும் திருவாசகமாக இருந்தது. ஒவ்வொரு வார்த்தையும் மாணிக்கம் போல் பொலிந்தது. எனவே அதைக்கேட்ட அக்குரு” உன் பாடல்கள் அற்புதம். இன்றுமுதல் நீ மாணிக்க வாசகன் எனப்படுவாய் “என ஆசீர்வதித்தார்.
இறையருள் கிட்டியதும் மன்னன் இட்ட பணி எல்லாம் மறந்தே போனது மாணிக்க வாசகருக்கு. அவர் தன்னை மறந்து அங்கேயே தங்கி இறைவனுக்குக் கோவில் எழுப்புகிறார். மன்னன் கொடுத்துவிட்ட பொற்காசுகள் அனைத்தும் தீர்ந்துவிடுகின்றன.
மன்னனோ தன் மந்திரிக்குக் ”குதிரைகளுடன் உடனே வரவும்” என்று ஓலை அனுப்புகிறான். மந்திரியோ அந்த ஓலையைத் தன் குருவிடம் கொடுத்து “ ஐயனே அனைத்துப் பொன்னையும் கோவில் கட்ட செலவழித்து விட்டேன். என் செய்வேன்” என வருந்துகிறார். குருவும் ஓலையைப் படித்துவிட்டு மாணிக்க வாசகரைக் காக்கவேண்டி “ ஆவணிமாத மூல நட்சத்திர நாள் அன்று குதிரைகள் மதுரைக்கு வரும் என்று மன்னனிடம் சொல்” என வீரர்களிடம் வாக்குக் கொடுத்து அனுப்புகிறார். 
மாணிக்க வாசகர் மீண்டும் மன்னன் பற்றியோ குதிரைகள் பற்றியோ கவலை இல்லாமல் கோவில் வேலையில் ஈடுபட்டிருக்கிறார். ஆவணி மூல நாளும் நெருங்கிக் கொண்டிருக்கிறது. குதிரைகள் எந்தத் திசையிலும் வரும் அரவம் காணாத மன்னன் அரிமர்த்தன பாண்டியன் முகம் கோபத்தால் சினக்கிறது.   
வாக்குக் கொடுத்தவரோ குரு. ஆனால் மன்னன் வீரர்களை அனுப்பி மாணிக்க வாசகரைக் கைது செய்து அழைத்துவரச் செய்கிறான். விசாரணையே இல்லாமல் இரும்புச் சங்கிலிகளால் பிணைத்துச் சிறையில் அடைக்க உத்தரவிடுகிறான்.
மந்திரி பிரமராயன் என்ற மாணிக்கவாசகனுக்கு வாக்குக் கொடுத்த குரு அவரைக் காக்க வேண்டிக் காட்டில் இருக்கும் நரிகளை எல்லாம் பரிகளாக்குகிறார். அந்தப் பரி ஒன்றின் மேல் தான் பரிமேலழகனாக அமர்ந்து மதுரைக்கு வருகிறார். அவர் பின் வரிசையாக வருகின்றன ஆயிரக்கணக்கான ஜாதிப் புரவிகள். ஒவ்வொன்றும் மிக அழகாகவும் மிடுக்காகவும் திகழ்கின்றன. அவற்றின் வெண்நிறமும், சாட்டை போன்ற வாலும் கண்ணைக் கவர்கின்றன. பிடரி சிலிர்க்க, தங்கள் குளம்படி ஒலிக்க அந்தப் பரிமேல் அழகர் பின் கனைத்தபடி ஓடி வருகின்றன.
இவற்றுடன் மதுரையை அடைந்து அங்கே ” இன்றுதான் ஆவணி மூல நாள் அமைச்சர் பிரமராயன் என்னிடம் உங்களுக்காக வாங்கும்படிக் கூறிய குதிரைகள் இவைகள்தான். இவற்றைத் தங்கள் வசம் ஒப்படைத்துவிட்டேன் ” என மன்னனிடம் ஒப்படைக்கிறார். பிரம ராயனுக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற காட்டில் இருந்த நரிகளை எல்லாம் பரிகளாக்கி பரிமேல் அழகராகி அதன் மேல் அமர்ந்து அழைத்து வந்தவர் அந்த குருதான்.
அத்தோடு முடிந்ததா. அதுதான் இல்லை. நள்ளிரவாயிற்று. காட்டில் கிடந்த நரிகள் எல்லாம் பரிகளாகி வந்துவிட்டன.ஆனால் அவற்றின் பிறவிக் குணம் போகுமா. இருட்டைப் பார்த்தது அவை லாயத்தில் இருந்தாலும் காட்டில் இருக்கும் நினைப்பில் ஊளையிட்டன. அதே நேரம் இருள் கூடக் கூட அவை திரும்பவும் நரிகளாகிவிட்டன. தங்களைப் பிணைத்திருந்த சேணங்களில் இருந்து நழுவிக் காட்டைப் பார்க்க ஓடின.
இரவு முழுவதும் குதிரை லாயத்தில் இருந்து நரிகளின் ஓலம் கேட்ட மன்னன் அரிமர்த்தன பாண்டியன் விடிந்ததும் வந்து பார்த்தால் முதல்நாள் வாங்கிய ஜாதிக்குதிரை ஒன்று கூட இல்லை. எல்லாம் நரியாகிக் காட்டை நோக்கி ஓடியிருந்தது. அதனால் மாணிக்க வாசகரைத் தண்டிக்க எண்ணுகிறான். ஆனால் அவரை மீண்டும் வைகையின் சுடுமணலில் நிறுத்திக் கேள்விகள் கேட்கிறான்.
வைகையிலோ வெள்ளம் பெருகி மாணிக்க வாசகரைக் காக்கிறது. ஒவ்வொரு நிகழ்வும் மாணிக்க வாசகருக்குச் சாதகமாகவே செல்வதைக் கண்ட மன்னன் அவரின் குருபக்தியையும் சிவபக்தியையும் உணர்கிறான். தன் தவறை உணர்ந்து அவரையும் விடுவிக்கிறான்.
பிரமராயனுக்காக  மன்னனுக்கு சொன்ன நாளில் குதிரைகள் வழங்கி பிரமராயனைக் காக்க வந்த பரிமேலழகனின் செயல் வியப்பைத் தருகிறது தானே குழந்தைகளே.

டிஸ்கி :-  இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 17 .1. 2020  தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர், தனது அழகான ஓவியங்களால் கதைக்கு எழில்கூட்டும் ஓவியர்கள் அஷோக் &  ரஜனி & எடிட்டர் தேவராஜன் ஷண்முகம் சார்.      


டிஸ்கி :- 2. செருக்கினால் துயர் ஏற்படும் என்பதை உணர்த்திய சுகரின் கதையைப் பாராட்டிய ஆறுபாதி வாசகி, திருமிகு. ஆ. மகாலெட்சுமி அவர்களுக்கு நன்றி. 

4 கருத்துகள்:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு
  2. எழுத பொருள் இல்லாவிட்டாலோ கற்பனை கை கொடுக்கா விட்டாலோ இருக்கவே இருக்கிற்து இதிகாச புராணக் கதைகள்

    பதிலளிநீக்கு
  3. ஆமாம் பாலா சார் :)

    நன்றி வெங்கட் சகோ.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...