எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 22 மே, 2012

இனிய இல்லறம். அது நல்லறம். & இளம் மாஜிஷியன் ஆர்த்தி மங்களா சுப்ரமண்யம்.

இனிய இல்லறம்.. அது நல்லறம். :-
************************************

வீடென்று எதனைச் சொல்வீர்.. ஒரு கணவனும் மனைவியும் இணைந்து இறையாண்மையோடு செயல்படும் இடம்தான் வீடு.ஒரு இல்லம் இனிய இல்லமாக இருக்க கணவன் மனைவி இருவரின் கூட்டு முயற்சியும் புரிந்து கொள்ளலும் அவசியம். தான் தான் பெரியவன் அல்லது பெரியவள் என்ற எண்ணம் கணவன் மனைவிக்குள் பொதுவா இருக்கக் கூடாது.. விட்டுக் கொடுத்துப் போதலும் புரிந்து கொள்ளும் தன்மையும் அவசியம்.


வீடு என்பது கோயில் என்றால் அங்கே கணவனும் மனைவியும் குழந்தைகளுக்கு கடவுளைப் போல இருக்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் கணவன் மனைவி இருவரின் பொறுப்பும் பளுவும் அதிகம். வாழ்வியலுக்கான பணம் சம்பாதிக்க கணவன் மனைவி இருவரும் ஓடி ஓடி சம்பாதிக்கிறாங்க.. ஆனா சிலர்தான் அதன் பயனை அனுபவிக்கிறாங்க.. சிலர் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாத தன்மையோடு வேறு வழியில்லாமல் சேர்ந்து வாழ்ந்துகிட்டு இருக்காங்க.. இந்த நிலைமையிலிருந்து உங்க வாழ்க்கை என்றென்றைக்கும் மகிழ்ச்சியானதா ஆக சில மந்திர வார்த்தைகள் உண்டு .. அதை உங்களோடு பகிர்ந்துக்கிறேன்..

முதலில் மனைவிகளுக்கு நீங்க உங்க கணவரை நேசிக்கிறீங்களா.. இதுதான் முதல் கேள்வி.. இதிலிருந்துதான் எல்லாம் தொடங்குது.. உண்மையா நேசித்தால் அவரிடம் இருக்கும் குற்றம் குறைகளைப் பொருட்படுத்த மாட்டீர்கள்.. உங்க பொருளாதார விபரங்களைப் பகிர்ந்து கொள்வது போல உங்கள் எண்ணங்களை , ஆசைகளை நிதானமான ஒரு சந்தர்ப்பத்துல அவருக்கு புரிய வைச்சிருக்கீங்களா..

எப்ப பார்த்தாலும் வருமானம் பத்தியும்., வரவு செலவு கணக்கு பத்தியும்.,அவர் அதிகமா செலவு செய்றது பத்தியும் அவங்க அப்பா அம்மாவுக்கு செய்றது பத்தியும் பேசிகிட்டே இருக்கீங்களா.. அப்போ அவருக்கு உங்களைப் பார்த்தா இன்கம்டாக்ஸ் ஆஃபீசரப் பார்த்தது போலத்தான் இருக்கும். எதை மறைக்கலாம் என முயல்வார். சில சந்தர்ப்பங்களையும் சில விஷயங்களையும் அவருக்காக விட்டுக் கொடுங்க. என்கொயரி ஆஃபீசர் போல கண்காணிச்சுகிட்டே இருக்காதீங்க.

எப்பவும் உங்க கூடவே இருக்கணும்னு நினைக்காதீங்க. அவருடைய நண்பர்களோடவும் அவர் நேரம் செலவழிக்க அனுமதிங்க.. ஒரு சின்ன சின்ன பிரிவும் உங்க தாம்பத்துல நெருக்கத்தை ஏற்படுத்தும். அவருக்கு பிடிச்ச விஷயங்கள்ல அபிப்ராய பேதம் இருந்தாலும் அதை ரொம்ப சொல்லி காட்டிக்கிட்டே இருங்காதீங்க.

ஒரு விவாதம்னு வந்தா முடிந்தவரை அதை தவிர்க்கப் பாருங்க.. வீட்டுக்குள்ள உங்களோடு இருக்கிற அவர்தான் முக்கியம்.. நீங்க சண்டை போடக்கூடிய விஷயம் முக்கியம் இல்லை. அது போல அவருடைய ஆசைகள்., எண்ணங்கள் என்னன்னு காது கொடுத்துக் கேளுங்க.. அவர் பேசும்போது அவர் அருகில் அமர்ந்து கண்களை கவனியுங்கள்.. ஏதோ வேலை செய்துகிட்டு ஏனோ தானோன்னு கேக்குறது , போற போக்குல வாய்க்கு வந்த கமெண்டை உதிர்த்து அவரை சங்கடப்படச் செய்யாதீங்க..

நீங்க வேலை செய்யும் இடங்களில்., வெளிஆட்களுடன் பழகும்போது என்ன மரியாதை கொடுக்கிறீங்க.. பிடிக்காட்டி கூட வேலை ஆகணும்னா விட்டுக் கொடுத்து சிலசமயம் புன்னகையோடு சகிச்சுகிட்டு வேலையை வாங்கிக்கிறீங்க.. உங்களோடு வாழ்நாள் பூரா கைபிடிச்சு நடக்கப்போற கணவன் கொஞ்சம் அப்படி இப்படி கோச்சுகிட்டா மட்டும் வாழ்நாள் பூரா பேசாத மாதிரி வென்சன்ஸ் வச்சுக்காதீங்க..

எந்தக் கோவத்தையும் அப்பவே விட்டுடுங்க.. சொல்ல வேண்டியதை சரியா சொன்னா மற்றும்புரிய வைச்சா போதும். உங்க கோவம் அவங்களை யோசிக்க வைக்கணும். காயப்படுத்தக் கூடாது. உதவி தேவைன்னா கேளுங்க.. எல்லாரும் உதவ தயார்தான் . அது நீங்க எப்படி காரியம் சாதிச்சுக்கிறீங்கங்கறது முக்கியம். எதையும் அவரிடம் ஒரு வார்த்தை சொல்லிட்டு செய்ங்க.. பணத்தை மாதாந்திர செலவுகளுக்கு பட்ஜெட் போடுவதிலிருந்து பங்குச் சந்தையில் சேமிப்பது வரை.. அவரிடம் கேக்காம சீட்டு கட்டி பின்னாடி ஏமாந்து போறதை எல்லாம் இது தவிர்க்கும்.. ,

மனைவி என்பவள் இன்னொரு அம்மா மாதிரி.. எனவே உங்க கணவரை குழந்தையாக்கும் சாமர்த்தியம் உங்க அணுகுமுறையில்தான் இருக்கு.

இனி கணவர்களுக்கு .. அதே கேள்விகள்தான் .. நீங்க உங்க மனைவியை நேசிக்கிறீங்களா.. எப்ப பார்த்தாலும் அடுத்த பெண்களோட சமையல்., பழகும் முறைகள்ல கம்பேர் பண்ணிகிட்டே இருக்கீங்களா.. அவங்க ரொம்ப செலவு பண்றாங்க.. அல்லது உங்கள கட்டுப்படுத்துறாங்கன்னு நினைக்கிறீங்களா.. முதல்ல உங்க செலவுக் கணக்கை எழுதிப் பாருங்க.. உங்க தனியாளுக்கு செலவழிக்கிறத விட மொத்தக் குடும்பச் செலவும் ஆகாது..

டாஸ்மாக்கு , சிகரெட்டுன்னு எத்தனை எத்தனை பழகி வைச்சிருக்கீங்க.. ஹையர் லெவல் மக்களிடம் இதுக்கான செலவு ரொம்ப பாதிக்கிறது இல்லைன்னாலும் மிடில் க்ளாஸ் லெவல்ல இது கடுமையான பாதிப்பு ஏற்படுத்துது. அப்புறம் குடிச்சா உங்களுக்கு எல்லாம் பேச தைர்யம் வந்த மாதிரி நினைச்சது நினைக்காதது எல்லாம் சொல்லி வீட்டுல சண்டை போடுறீங்க.. சிலர் அடிக்கக் கூட செய்வாங்க.. இது குடும்ப வன்முறைன்னு உங்க மனைவி கோர்ட்டுக்கு போனா என்ன ஆகும். சிலர் வார்த்தைகளால துன்புறுத்துவாங்க. இன்னும் அப்பர் க்ளாஸ் ஆண்கள் நீ சொல்றத சொல்லு நான் செய்யிறத செய்றேன்னு செய்துகிட்டு இருப்பாங்க.

அப்புறம் உங்க வரவு செலவு சேமிப்பு எல்லாம் மனைவிக்கும் சொல்லுங்க. மனைவியிடமும் நல்ல ஆலோசனைகள் கிடைக்கலாம். எதையும் மனைவியை கலந்துகிட்டே செய்ங்க.. வங்கியில் உங்க இருவருக்கும் ஜாயிண்ட் அக்கவுண்ட் இருந்தா ரொம்ப நல்லது. மனைவியின் உறவினர்கள்.,மனைவியின் ஆசைகள்., எதிர்பார்ப்புகள் ஆகியவற்றை அங்கீகரியுங்கள். வாழ்க்கையை ரொம்ப இனிக்க செய்யும் மந்திரம் இது.உங்ககூட வாழ வந்த பெண்ணை பிட்டர் ஹாஃபா ஆக்குறதும் , பெட்டர் ஹாஃபா ஆக்குறதும் உங்க கையிலதான் இருக்கு.

லீவு நாட்களில் மனைவி மட்டுமே வேலை செய்ய நீங்க டிவி., பேப்பர்., சினிமான்னு போகாம அவங்களுக்கு சின்ன சின்ன உதவிகள் செய்ங்க. அப்புறம் அவங்களையும் வாரம் ஒருநாள் வெளியே கூட்டிகிட்டு போங்க. வெளிநாடுகளில் இதனால விவாகரத்துகள் அதிகம். மனைவியோடு சேர்ந்து இருக்கும் நேரங்களிலும் அலுவலக போன்கால்கள்., பிசினஸ் மீட்டிங்குகள்., உத்யோக பிரச்சனைகளை பேசிக்கிட்டு இருக்காம கொஞ்சம் உங்க ரெண்டு பேரைப் பத்தி மட்டுமே பேசுங்க.. ஒரு வாழ்நாள் பூரா போதாதுங்க ஒருத்தர் தன் மனைவியை புரிந்து கொள்ள.. இன்னும் நிறைய சொல்லலாம். இப்போதைக்கு இது போதும்.

 மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்க.. உங்க அம்மா எப்பவுமே உங்க கூட இருக்க முடியாது என்பதால் கடவுள் மனைவியை கொடுத்திருக்கிறார்.. அந்த தேவதையோடு மட்டும் சந்தோஷமா வாழுங்க.. ****************************************************************************************

ஆர்த்தி மங்களா.. இவர் யாருன்னு கேக்குறீங்களா.. ஆறு வயசிலேயே ஆப்ரா கா டாப்ரா/ ஜீபூம்பான்னு சொல்லி மாஜிக் செய்து எல்லாரையும் அசத்துனவங்க இவங்க. . இந்த 19 வயது தஞ்சாவூர் பொண்ணு இப்போ மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜில் விஸ்காம் படிக்கிறாங்க.

எல்லாரும்தான் மேஜிக் பண்றாங்க .. இவங்க கிட்ட என்ன ஸ்பெஷல்னு கேக்குறீங்களா.. இவங்க அறிவியல் சம்பந்தமான மாஜிக் மற்றும் சமூக விழிப்புணர்வு மாஜிக் செய்றாங்க. சிகரெட்டின் தீமையை விளக்க ஒரு ப்ளாக் பாக்ஸில் சிகரெட்டை வைச்சு இதை விட்டு விலகி வரணும் அல்லது இதை விரட்டி விடணும். என்று சொல்லி சிகரெட்டை காண்பித்து மறைக்கும் மாஜிக்கை செய்வாராம்.

ராஜா., ராமசந்திரன்., கணேஷ் ஆகிய மாஜிக் நிபுணர்களிடம் கற்றுக் கொண்ட இவர் நிகழ்ச்சியைப் பார்த்து நையாண்டி தர்பாரிலும் யூகி சேது இவரை அழைத்து பங்கு பெறச் செய்தாராம். சினிமா மூலமும் மக்கள் கிட்ட மாஜிக் என்பது கண்கட்டு வித்தை இல்லை என சொல்ல விரும்புவதால் விஸ்காமில் டைரக்‌ஷன் கோர்ஸ் படிக்கிறார். பெண்களால் எல்லாம் செய்யமுடியாதுன்னு சொல்லப்பட்ட இந்த மாஜிக்கை வெற்றிகரமா செய்துகிட்டு வர்றாங்க.  ஆர்வத்தோடு இருக்குற  நிறைய திறமையுள்ள புதுமுகநடிகர்., நடிகைகளை வைத்து ஒரு திரைப்படம் இயக்க நினைக்கிறார்.

இவங்களும் இனி தன்னோட கருத்துக்களை, எண்ணங்களை எழுத்து வடிவில் இன் அண்ட் அவுட் சென்னையில் உங்களோட அடுத்த அடுத்த இதழ்களிலும் பகிர்ந்துக்க வர்றாங்க.. ரெடியா இருங்க.. ஆப்ராகா டாப்ரா..!!!

டிஸ்கி:- இந்தக் கட்டுரை டிசம்பர் 15 - 31, 2011 இன்  அண்ட் அவுட் சென்னையில் வெளிவந்தது. 


8 கருத்துகள்:

  1. தம்பதியர் மட்டுமல்ல அனைவரும் படிக்க வேண்டிய பதிவு ..!

    பதிலளிநீக்கு
  2. வலைச்சரத்தில் உங்கள் வலைப்பூவை அறிமுகம் செய்துள்ளேன்
    நேரம் இருப்பின் வாருங்கள் (வலைச்சரத்திற்கு)

    பதிலளிநீக்கு
  3. இல்லறம் நல்லறமாக அனைவரும் படிக்க வேண்டிய கட்டுரை இது. புரிந்துணர்தல் இருந்து விட்டால் வீடு சொர்க்கம் தான்க்கா. அருமை.

    பதிலளிநீக்கு
  4. அனைவரும் படிக்க வேண்டிய பதிவு.

    பதிலளிநீக்கு
  5. நன்றி வரலாற்று சுவடுகள்

    நன்றி செய்தாலி

    நன்றி கணேஷ்

    நன்றி குமார்

    பதிலளிநீக்கு
  6. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  7. சமுதாயம் என்பது முதலில் நம் வீடுதான் சமுதாயதிற்கு என்ன சொல்லவேண்டுமோ அதை சமநோக்குடன் சொல்லியதற்கு மிக்க நன்றிகள்!

    பதிலளிநீக்கு
  8. சமுதாயம் என்பது முதலில் நம் வீடுதான் சமுதாயதிற்கு என்ன சொல்லவேண்டுமோ அதை சமநோக்குடன் சொல்லியதற்கு மிக்க நன்றிகள்!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...