பெண்கள் சாத்வீகமானவர்கள். அதிலும் கண்ணகி என்ற பெண் மிகவும் சாதுவானவள். சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பார்கள். நீதி தவறிய பாண்டிய மன்னனின் மேல் கோபம் கொண்டு சிலம்பை உடைத்தது மட்டுமல்ல அவள் சாபமிட்டதும் மதுரை மாநகரமே தீப்பற்றி எரிந்தது. அத்தகைய சக்தி வாய்ந்த கண்ணகி பற்றியும் அவளுக்குப் பாண்டிய மன்னன் இழைத்த அநீதி பற்றியும் அறிந்து கொள்ளுவோம் வாருங்கள் குழந்தைகளே.
காவிரிப் பூம்பட்டினத்தில் இரு பெரும் வணிகர்கள் வசித்து வந்தார்கள். அவர்களுள் மாசாத்துவான் என்ற வணிகனுக்குக் கோவலன் என்ற மகனும், மாநாயகன் என்ற வணிகனுக்குக் கண்ணகி என்ற மகளும் இருந்தார்கள். இருவருக்கும் அவர்கள் பெற்றோர் திருமணம் செய்துவைத்தார்கள். இருவரும் இனிதே இல்லறம் நடத்தி வந்தனர்.
ஒருமுறை சோழன் அவையில் மாதவி என்ற நடனமங்கை அற்புதமாக நடனமாடினாள். தலைக்கோல் அரிவை என்று பட்டம்பெற்று நாளொன்றுக்கு ஆயிரத்தெட்டுக்கழஞ்சுப் பொன் பெறும் சிறப்புப் பெற்றவள். கோவலன் அவள்பால் கவரப்பட்டுக் கண்ணகியை மறந்து மாதவியுடன் இல்லறம் நடத்தலானான். அவர்கட்கு மணிமேகலை என்ற புனிதமகள் பிறந்தாள்.




