எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 24 ஜூன், 2015

குழந்தைப் பாட்டும் விளையாட்டும் - பகுதி 9 ஒத்தையா இரட்டையா & ஒருபத்தி திருபத்தி.


42. புளியமுத்தில் ஒற்றையா இரட்டையா. ( பிஸ்தா ஓட்டில் )


ஒற்றையா இரட்டையா பம்பையா பரட்டையா. என்று சொல்லி விளையாடும் விளையாட்டு இது. வீட்டில் முன்பு எல்லாம் கோடைகாலங்களில் வருடத் தேவைக்கான புளி வாங்கி சுத்தம் செய்வார்கள் அந்தப் புளியமுத்து ஒரு படி இரண்டு படி கூட இருக்கும். 



அதில் கொஞ்சம் எடுத்துக் கொண்டு இருவர் முதல் பலர் வரை விளையாடலாம் இந்த விளையாட்டு. இப்போது மாதத் தேவைக்குக் கடைகளில் புதுப்புளி வாங்கி விடுவதால் புளியங்கொட்டை எல்லாம் பார்க்க முடிவதில்லை. எனவே சால்டட் பிஸ்தா வாங்கும்போது அதன் ஓட்டை உரித்து இது போல் விளையாடுவதுண்டு. 



இருவருக்கும் சமமான எண்ணிக்கையில் புளியமுத்து வைத்துக் கொள்ளணும். இருவரில் ஒருவர் கை நிறைய புளியமுத்து அல்லது பிஸ்தா ஓட்டை வைத்துக் கொண்டு எதிர் ஆட்டக்காரரிடம் ஒத்தையா இரட்டையா பம்பையா பரட்டையா என்று கேட்கணும். அதாவது அவர் கைக்குள் வைத்திருக்கும் முத்துகள் ஒற்றைப்படை எண்ணிக்கை கொண்டனவா அல்லது இரட்டைப்படை எண்ணிக்கை கொண்டனவா அல்லது பம்பையா பரட்டையா என்றால் ஒன்றுமில்லையா என்று அர்த்தம். பரட்டை அல்லது மொட்டை என்றால் கையில் முத்து இல்லை என்று அர்த்தம். இப்போது பம்பையா பரட்டையா என்பதை மொட்டை என்று சொல்கிறார்கள். பம்பை என்பது சந்தத்துக்காக சேர்த்துக் கொள்வது. 



ஒற்றைப்படை, இரட்டைப்படை என்று எதிராளி சொன்ன எண்ணிக்கைப்படி இருக்கிறதா என்று எண்ணிப் பார்ப்பார்கள். இருந்தால் எதிர் ஆட்டக்காரருக்கு அப்படியே கொடுத்துவிட வேண்டும். இல்லாவிட்டால் அவர் அதே எண்ணிக்கையில் புளிய முத்து அல்லது பிஸ்தா ஓடுகளைக் கொடுப்பார்.



மொட்டை என்றால் ஐந்து அல்லது பத்து முத்துகளை நிர்ணயம் செய்துகொள்வார்கள். இதையும் ஓரளவு எண்ணத் தெரிந்த வயதுடைய குழந்தைகளுடன் விளையாடலாம். 


43 .கிச்சுக்கிச்சுத் தாம்பாளம்.

மண்ணில் விளையாடும் விளையாட்டு. பீச் விளையாட்டு என்றும் சொல்லலாம். இதுக்கு ஒரு சின்ன குச்சி அல்லது ஒரு பொருள் தேவை. அதை மண்ணில் ஒளித்து வைத்து தேடச் சொல்வது. 

இருவர் விளையாடும் விளையாட்டு இது. இருவர் எதிர் எதிராக அமர்ந்துகொண்டு இரு கைகளாலும் மண்ணை நீளவாக்கில் குவித்துக்கொள்ள வேண்டும். 

முதலாமவர் ஒரு பொருளை அல்லது குச்சியைக் காண்பித்துவிட்டு அதைக் குவித்திருக்கும் அந்த மணலுக்குள் இரு விரல்களாலும் பிடித்து ”கிச்சுக் கிச்சுத் தாம்பாளம், கிய்யா கிய்யா தாம்பாளாம்” என்று சொல்லியடி செலுத்திக்கொண்டே சென்று ஓரிடத்தில் புதைத்துவிட்டுப் பின்பு மண்ணை இரு கைகளாலும் கோதி பழையபடி நீள மேடாக்க வேண்டும்.
இவர் எங்கே புதைத்திருப்பார் என்று உத்தேசமாகக் கருதும் எதிர் ஆட்டைக்காரர் அந்த இடத்தில் மண்ணில் மேல் இரு கைகளையும் கோர்த்து அதன் மேல் வைப்பார். 

புதைத்து வைத்தவர் அந்த இடத்திற்கு முன்னும் பின்னும் உள்ள மணலில் கீறிக் கீறி தான் புதைத்து வைத்ததைத் தேடிக் கண்டுபிடித்து எடுத்து நீட்டுவார். அவ்வாறு இல்லாமல் அவர் புதைத்த இடத்தை கரெக்டாகக் கணித்து எதிர் ஆட்டைக்காரர் கை வைத்திருந்தால் அந்த இடத்தில் இருந்து அவர் புதைக்கப்பட்ட அந்தப் பொருளைக் கண்டெடுத்து நீட்டுவார். அடுத்தது ஜெயித்த அவர் அந்தப் பொருள் அல்லது குச்சியை தான் பாட்டுப் பாடியபடி ஒளித்து வைப்பார். இதுபோல இருவரும் மாறி மாறி விளையாடுவார்கள். இதுவும்  சிறு குழந்தைகளுடன் விளையாடக்கூடிய விளையாட்டு.

44 . கை வைச்சு விளையாடுறது. ஒரு பத்தி திருப்பத்தி

இது ஒரு வயதுக் குழந்தையுடன் கூட விளையாடக்கூடிய விளையாட்டு. அனைவரும் வட்டமாக அமர்ந்துகொண்டு கீழே கைவைத்து விளையாடுவது. கையா முய்யா என்று கத்தி அமர்க்களப் படுத்தி அம்மாவை உண்டு இல்லை என்று இரண்டு படுத்தும் குழந்தைகளைக் கூட்டி உக்காரவைத்து கையைத் தரையில் வைத்து விரல்களை எண்ணுவது போல விளையாடும் விளையாட்டு. அவர்களின் கத்து பெரிசா, நம்மோட கத்து பெரிசா என்று கூட போட்டி வைத்துக் கொள்ளலாம்.  :) :) :)
. 
கை மேல் அல்லது விரல்களின் மேல்
“/// ஒரு பத்தி
திருபத்தி
ஓவிய
மங்கல
மாமுனி
மாடு
கன்னு
வார
நேரம்
மஞ்சத்
தண்ணி
குடிக்கிற
நேரம்
உங்க அப்பா பேர் என்ன. –///

{{என்று யார் கையில் நாம் கைவைத்திருக்கிறோமோ அவரிடம் கேட்கவேண்டும். அவர் பதிலுக்கு தன் அப்பா பேரை சொல்லுவார். சின்னக் குழந்தைகளிடம் இது ஒரு சுவாரசியம். இல்லை இல்லை முருங்கப்பூ சொல்லு என்போம்.

உடனே அது முருங்கைப்பூ என்பதை முங்கப்பூ என்கும். கேட்கும் அனைவரும் விழுந்து விழுந்து சிரிப்பார்கள். இல்ல என் அப்பா பேர் முருகப்பன் இல்லை சாத்தப்பன் என்று ஏதாவது சொல்லும் இல்லப்பா விளையாட்டுல அப்பிடித்தான் சொல்லணும் என்றதும் நம்மைப் பார்த்து சந்தேகமாக மலங்க மலங்க விழிக்கும்}}. 

//முருங்கைப்பூ/// – என்றதும் 

விளையாடுபவர் உடனே
அடுத்த அடுத்த விரல்களில் 

///முருங்கைப் பூவும் தின்னாதே
முள்ளுத் தண்ணியக் குடிக்காதே  
கரும்புக் காட்டுக்கும் போகாதே
பாம்பு விரலைப் படக்குன்னு மடக்கு///

என்றவுடன் நாம் விரல் வைத்திருக்கும் குழந்தை 

”மாட்டேன்” என்று சொல்லும் ( மாட்டேன்னு சொல்லு என்று சொல்லிக் கொடுக்கணும். ! J
 
உடனே நாம்.
அடுத்தடுத்த விரல்களில் 

/// மாட்டேன் மாட்டேன் வாழைக்காய்
மாமரத்துல கோபுரம்
புள்ளப் பெத்த மண்டபம்
பூமாதேவி கையெடு. /// 

என்று சொல்லி அந்த விரலை மடக்கிக் கொள்ளச் சொல்லி விட்டு அடுத்த விரலில் இருந்து திரும்ப ஆரம்பிக்கணும். ஒரு பத்தி திருபத்தி என.
எல்லாரும் இரு கைகளையும் பரப்பி வைத்திருக்க விளையாடுபவர் தன் இடது கையை மட்டும் வைத்துக் கொண்டால் போதும். மிக சுவாரசியமான விளையாட்டு இது. இந்த விளையாட்டை  விளையாட வயது முக்கியமில்லை என்பதை உணரலாம். ( ஆட்டைக்குப் பெரியவர்களையும் சேர்த்துக் கொள்ளலாம் :)

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

1. குழந்தைப் பாட்டும் விளையாட்டும் தாலாட்டும் -- பகுதி - 1.தாப்பூ தாமரைப் பூ.

2. குழந்தைப் பாட்டும் விளையாட்டும் -- பகுதி - 2. கொட்டப் ப்ராந்து.


3. குழந்தைப் பாட்டும் விளையாட்டும் - பகுதி 3. கல்லா மண்ணா.

 

 

4.  குழந்தைகள் விளையாட்டு -- பகுதி - 4. ( இண்டோர் கேம்ஸ் - INDOOR GAMES )

 

5. குழந்தைப் பாட்டும் விளையாட்டும் - பகுதி 5. ஐ ஸ்பை, I SPY.

 

6. குழந்தைகள் விளையாட்டு. பகுதி 6. டயர் விளையாட்டு. 

 

விளையாட்டும் வார்த்தைகளும். 

 

 7. குழந்தைகள் விளையாட்டு பகுதி 7 . ஈஸி சுடோகும் காகுரேவும்.

 

8.  குழந்தைகள் விளையாட்டு. பகுதி 8. பிங்கோ.

 

 

9. குழந்தைப் பாட்டும் விளையாட்டும் - பகுதி 9 ஒத்தையா இரட்டையா & ஒருபத்தி திருபத்தி. 

 

10. குழந்தைப் பாட்டும் விளையாட்டும் - பகுதி 10. சொப்புச் சாமானும் நுங்கு வண்டியும்.

 


7 கருத்துகள்:

  1. சொல்ல வார்த்தைகள் வரவில்லை...

    சிறுவயதில் விளையாடிய இனிய நினைவுகள் ஞாபகம் வந்தன...

    பதிலளிநீக்கு
  2. அந்தக்கால அனைத்து விளையாட்டுக்களையும் பாட்டோடு சொல்லி, எப்படி எப்படி விளையாடுவார்கள் என்பதையும் மிக அழகாக எடுத்துக்கூறியுள்ளது, மறந்துபோன சில பழைய நினைவலைகளை மீண்டும் கிளறி விட்டன. பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  3. சிறப்பான குழந்தை விளையாட்டுக்கள்! ஒரு பத்தி திருபத்தி போல கீ கீ பெரண்டி! கீயா கீயா பெரண்டி என்றொரு விளையாட்டு எங்கள் பக்கத்தில் உண்டு! நன்றி!

    பதிலளிநீக்கு
  4. நினைவுகளில் மிதந்து கொண்டே...படித்து முடித்தேன்.

    இப்போது விளையாட்டுக்கள் மாறிவிட்டன, ஆனால் சில இடங்களில் இருந்து கொண்டு இருக்கிறது தான். அருமையான விளையாட்டுக்கல் அல்லவா...? சகோ.

    பதிலளிநீக்கு
  5. பல சிறுவயது நினைவுகளை மீட்டி விட்டது...முக்கியமாக ஒற்றையா இரட்டையா பம்பையா பரட்டையா....மலரும் நினைவுகள்!

    பதிலளிநீக்கு
  6. நன்றி டிடி சகோ

    நன்றி விஜிகே சார்

    நன்றி தளிர் சுரேஷ். கீ கீ பெரண்டி கீயா கீயா பெரண்டி பற்றி எழுதி இருக்கீங்களா. இருந்தா இணைப்பு கொடுங்க சகோ :)

    நன்றி உமையாள் ஆமாம்பா :)

    நன்றி துளசி சகோ & கீத்ஸ் :) ஆமாம் :)

    பதிலளிநீக்கு
  7. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...