எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 21 ஆகஸ்ட், 2013

கலைச்செல்வி மெய்யம்மை ஆச்சி.

கலைச்செல்வி மெய்யம்மை ஆச்சி..

கொப்பனாபட்டியில் அ. மெய்யப்பச் செட்டியார் , நாச்சம்மை ஆச்சி அவர்களால் ஆரம்பித்து நடத்தபட்டது கொப்பனாபட்டி கலைமகள் தமிழ்ப் பள்ளி ஆரம்பிக்கப்பட்ட வருஷம் 5040.  அதாவது 1937 இல்  கட்டப்பட்டது.

திருமதி மெய்யம்மை ஆச்சி காரைக்குடியைச் சேர்ந்தவர். திரு. வள்ளியப்ப செட்டியார் அவர்களின் புதல்வி. திரு மாணிக்கம் செட்டியாரின் மனைவி. அவர் அந்தக் காலத்திலேயே அங்கே படித்துக் கலைச் செல்வி பட்டம் பெற்றவர். எனவே அவரிடம் அது பற்றி விசாரித்தேன்.


தமிழுக்குத் தொண்டு செய்ய கொப்பனாபட்டியைச் சேர்ந்த  அ. மெய்யப்பச் செட்டியாரால் ஆரம்பிக்கப்பட்டது அந்தத் தமிழ்ப் பள்ளி. அவரின் துணைவியார் நாச்சம்மை ஆச்சி, அவர்களுக்கு மூன்று  பிள்ளைகள் .  இரண்டு  மகன்கள்  தியாகு, சரவணன்,  ஒரு மகள் சரஸ்வதி.

மெய்யம்மை ஆச்சி  படித்தபோது மீனாக்ஷி பாரதி என்ற தலைமை ஆசிரியை பணிபுரிந்திருக்கிறார். தமிழ் பண்டிட் ராமசாமி, சுப்பிரமணியன், பெரிய சாமி, மற்றும் பள்ளி, விடுதிக் காப்பாளராக பாலாம்பாள் ஆகியோர் பணி புரிந்திருக்கிறார்கள். சுமார் 250 மாணவர்கள் தங்கிப் படித்திருக்கிறார்கள்.

இங்கே படித்து முடித்தவர்களுக்கு கலைச் செல்வி, கலைச்செல்வம்  என்று இரண்டு பட்டங்கள் கொடுப்பார்கள்.  இங்கே படித்துக் கலைச் செல்விப் பட்டம் வாங்கியவர்தான் திருமதி மெய்யம்மை ஆச்சி. இவர்கள் படித்த வருடம் 1944 இல் இருந்து 1951 வரை ஆறு வருடங்கள்.

இதைப் படித்தவுடன் தான் மாணாக்கர்கள் புலவர் = வித்வான் பட்டம் படிக்க சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்குச் செல்வார்களாம்.  இதில் கலைச் செல்வி  ஒன்பதாவது வகுப்பு. கலைச்செல்வம் பத்தாவது வகுப்பு.

ஆறு மாதத்துக்கு கல்வி மற்றும் தங்கும் கட்டணம் ரூபாய் 150. ஆரம்ப காலத்தில் சொந்தப் பண்ணையில் இருந்து காய்கறி பயிரிட்டுக் கொண்டுவந்து மாணவருக்கு உணவளித்துள்ளார்கள். மற்றும் சொந்தமாய்  18மாடுகள் வைத்துப் பராமரித்து பால், தயிர் போன்றவற்றையும் மாணவர்களுக்கு வழங்கி இருக்கிறார்கள். சாப்பாட்டில் நித்தமும் பசுவநெய் ஊற்றி சாப்பாடு போடுவார்கள்  எனக் கூறினார்கள். மாணவர்களின் கல்வியோடு உடல் நலத்தில் அக்கறை கொண்ட நல்ல  நிர்வாகமாம்.

செக்காலைக் காந்தி திரு மெய்யப்பச் செட்டியார் இந்தக் கல்லூரியை விஸ்தரிக்கப் பாடுபட்டார்களாம். ஆரம்பத்தில் நகரத்தார் நிர்வாகத்தில் செயல்பட்ட இந்தப் பள்ளியைத்  தற்போது அரசாங்கம் எடுத்து நடத்துகிறதாம்.

இங்கே படித்த திருமதி மெய்யம்மை ஆச்சி என் அன்பிற்குரிய பெரியம்மா அவர்கள். அவர்களும் என் அம்மாவும் ( சும்மாவின் அம்மா )  மரபுக் கவிதையில் ஆற்றல் மிக்கவர்கள். இருவருமே  சிறந்த திருமண வாழ்த்துப்பாக்கள்  இயற்றுவார்கள் என் அம்மா அத்துடன் தெய்வீகப் பாமாலைகளும் இயற்றுவார்கள். அதிலும் என் பெரியம்மா கலைச்செல்வி என்பதால் அவர்களின் கவிதைகளில் ஆழ்ந்த தமிழ்ச் சொற்களைக் காணலாம். இதுவரை 50  திருமண வாழ்த்துப்பாக்கள் எழுதி இருக்கும்  கலைச்செல்வி மெய்யம்மை ஆச்சி அவர்களுக்கு ஒரு சின்ன வலைத்தள வாசியாக என்னுடைய வந்தனங்கள்.. :)

டிஸ்கி:- அவர்களின் வாழ்த்துப்பாக்கள் கிடைத்தால் வலையேற்றுகிறேன். :)

4 கருத்துகள்:

  1. திருமண வாழ்த்துப்பாக்கள், தெய்வீகப் பாமாலைகள் - விரைவில் எதிர்ப்பார்க்கிறேன்...

    பதிலளிநீக்கு
  2. அன்பின் தேனம்மை - நல்லதொரு பதிவு - கலைச் செல்வி மெய்யம்மை ஆச்சி அவர்களீன் எழுத்துகளைத் தேடிப்பிடித்து பகிர வேண்டுகிறேன். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  3. நிச்சயம் வலையேற்றுகிறேன் தனபால் சகோ

    நிச்சயம். நன்றி சீனா சார்

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...