அதென்ன உயிர் ஒன்று உடல் இரண்டு. அப்படி யாரும் இருக்க முடியுமா. இருந்தாலும் எப்படி வாழ முடியும். எப்படி இரு உடலில் ஒரு உயிர் இருக்கும், கேட்கவே விநோதமாக இருக்கிறதல்லவா குழந்தைகளே. அது எப்படி எனச் சொல்கிறேன் கேளுங்கள்.
மந்தார மலையை மத்தாகவும் வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகவும் கொண்டு பாற்கடலை அசுரர்களும் தேவர்களும் கடைந்த போது முதலில் ஆலகால விஷம் வெளிப்பட்டது. அதை ஈசன் உண்டு கண்டத்தில் நிறுத்தி உலகைக் காப்பாற்றினார்.
அடுத்து காமதேனு, கற்பக விருட்சம், லெக்ஷ்மி, சந்திரன், ஐராவதம், உச்சைசிரவஸ், அமிர்தம் போன்றவை வெளிப்பட்டன. இதில் அமிர்தம் கொண்ட கலசத்தை ஏந்தியபடி தன்வந்திரி வெளிவந்தார். இந்த அமிர்தம் சாகாவரம் கொடுக்கக் கூடியது. இதை வேண்டித்தானே அசுரர்களும் தேவர்களும் பாற்கடலைக் கடைந்தார்கள்.
அதனால் அமிர்தம் கிடைத்தவுடன் அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் அதை அடையப் போட்டி ஏற்பட்டது. ஒரே களேபரம். பார்த்தார் விஷ்ணு . உடனே மோகினி அவதாரம் எடுத்து தன்வந்திரியின் கையில் இருந்த அமிர்த கலசத்தைத் தன் கையில் வாங்கி அனைவருக்கும் பகிர்ந்தளிப்பதாகக் கூறினார்.