எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 10 பிப்ரவரி, 2024

14.இயற்கைக் கருத்தரிப்பும் செயற்கைக் கருத்தரிப்பும்

 14.இயற்கைக் கருத்தரிப்பும் செயற்கைக் கருத்தரிப்பும்


கருத்தரிப்பு என்பது பாலூட்டிகளில் நிகழும் ஒன்று. அடுத்த சந்ததியை உருவாக்க, மனித இனம் செழித்துப் பெருக கருத்தரிப்பு இன்றிமையாதது. பரிணாம வளர்ச்சியில் மனித இனமே முதல்நிலை வளர்ச்சி அடைந்த ஆறாம் அறிவு பெற்ற உயிரினமாகும். உறவு கொள்ளும்போது ஆணின் விந்தணு பெண்ணின் சினைமுட்டையுடன் இணைந்து கருவுறுவது இயற்கைக் கருத்தரிப்பு.

இயற்கைக் கருத்தரிப்பில் கலவியின் போது ஆணின் விந்தணு பெண்ணின் இனப்பெருக்க உறுப்பினுள் பலமணி நேரங்கள் நீந்திச் சென்று கருப்பை வாய் வழியாக ஃபலோப்பியன் குழாயை அடைகிறது. கருப்பையிலிருந்து வெளியேறி ஃபலோப்பியன் குழாய்க்கு வரும் சினைமுட்டையை துளைத்துச் சென்று இணைந்து கரு உருவாகிறது. இதன் பின்னர் கருவணுவானது கருப்பை நோக்கி நகர ஆரம்பிக்கிறது. இதற்கு 4 – 7 நாட்கள் ஆகும்.

பல ஆண்டுகள் இயற்கைக் கலவி மூலம் கரு ஏற்படாவிட்டால் செயற்கை விந்தூட்டல், சோதனைக் குழாய் மூலம் கருவூட்டல் நடைபெறுகிறது. விந்தையும் முட்டையையும் பெட்ரிடிஷ் எனப்படும் கண்ணாடிக் கிண்ணத்தில் வளர்ப்பூடகத்தில் இணைத்துக் கருவணுவை உருவாக்கிப் பெண்ணின் கருப்பைக்குள் வைத்து வளர்ப்பது சோதனைக் குழாய் முறை. செயற்கை விந்தூட்டல் முறை என்பது தூண்டிய இனப்பெருக்கத் தொழில்நுட்ப முறைகளில் ஒன்றாகும்.

ஆணின் விந்தில் போதிய விந்தணுக்கள் இல்லாமலிருந்தாலோ, அல்லது விந்தணுக்கள் செயலூக்கம் பெறாமலிருந்தாலோ, பெண்ணுக்குப் போதிய வளர்ச்சி பெற்ற கருப்பை இல்லாமலிருந்தாலோ அல்லது போதிய சினைமுட்டைகள் இல்லையென்றாலோ செயற்கைக் கருத்தரிப்பு நடைபெறுகிறது.

ஆணின் விந்தில் இருக்கும் செயலூக்கம் உள்ள விந்தணுக்களைப் பிரித்து உறைநிலையில் வைத்துப் பெண்ணுக்குச் செலுத்திச் சினைமுட்டையுடன் இணையவைத்துக் கரு உண்டாக்குவது ஒரு முறை. விந்தணுக்கள் செயல் இழந்துவிட்டால் விந்தணு தானம் பெற்றுப் பெண்ணுக்குச் செலுத்தப்பட்டுக் கரு உண்டாக்கப்படுகிறது. இதற்குச் செயற்கை விந்தூட்டல் என்று பெயர்.

பெண்ணுக்கும் கருப்பை நன்றாக இருந்து போதிய அளவில் சினைமுட்டை வளர்ச்சி பெறாமலிருந்தால் சினைமுட்டையும் தானமாகப் பெறப்பட்டு கரு உண்டாக்கப்படுகிறது. கணவனுக்குப் போதிய விந்தணுக்கள் இருந்து மனைவிக்கு போதிய சினைமுட்டையோ, கருப்பை வளர்ச்சியோ இல்லாமல் இருந்தால் வாடகைத் தாய்க்குச் செலுத்தப்பட்டுக் கரு உண்டாக்கப்படுகிறது

கணவன் மனைவி இருவருக்கும் விந்தணுவும் சினைமுட்டையும் நன்றாக இருந்து வேறு காரணங்களால் கருத்தரிக்காவிட்டால் சோதனைக்குழாய் முறை மூலம் கரு உண்டாக்கப்பட்டு மனைவியில் கருப்பையில் வைக்கப்படுகிறது.

வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதற்கு இணைய தளங்களும், சில விதிமுறைகளும் உள்ளன. கருவுறும் காலத்திலிருந்து பிள்ளைப் பேறு வரை இந்த வாடகைத் தாயை நியமித்துக் குழந்தை பெற்றுக் கொள்பவர்களே அனைத்து மருத்துவச் செலவுகளையும் தாயின் போஷாக்குக்கான செலவுகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒப்பந்தத்தின் படி குழந்தை பெற்றுச் சில மாதங்களானபின் பெற்றோரிடம் வாடகைத் தாய் குழந்தையை ஒப்படைத்துச் சென்றுவிட வேண்டும்.


இயற்கைக் கருத்தரிப்பில் சினைமுட்டை கருவுறாவிட்டால் மாதவிடாய்க் கழிவுடன் வெளியேறும். சில சமயம் பெண்ணின் உறுப்பில் தோன்றும் ஒருவித திரவமானது விந்தணுக்களைக் கொன்று விடுவதால் அந்தப் பெண்களும் கருத்தரிப்பதில் சிரமம் ஏற்படலாம். அதேபோல் நீர்க்கட்டிகள், சதைக்கட்டிகள், சீழ்க்கட்டிகள், புற்றுக் கட்டிகள், கருப்பைக் குறைபாடு, சினை முட்டையே இல்லாமலிருந்தல், இருந்தால் செயற்கைக் கருத்தரிப்பு அல்லது வாடகைத் தாய்முறை உதவும்.  

கரு உண்டானதும் கடைசி மாதவிடாய் தினத்தில் இருந்து 280 நாட்களில் குழந்தைப் பிறப்பு நிகழும். பேறு காலங்களை மூன்று மூன்றாகப் பிரித்து மருத்துவ சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. குழந்தை வளர்ச்சிக்கு ஏற்ற விட்டமின் மினரல் சத்துள்ள உணவுகள் கொடுக்கப்படுகின்றன.

ஒரு பெண் கர்ப்பம் தரித்ததை இயற்கையாகவே அறியலாம். அந்தக் காலங்களில் நாடியைப் பிடித்துப் பார்த்தே அறிவார்கள் வைத்தியர்கள். மாத இறுதியில் மாதவிடாய் வெளிப்படாமை, குமட்டல், வாந்தி, அசதி, களைப்பு போன்றவை ஏற்படுவது உடல்சார்ந்த அறிகுறிகள். மசக்கை ஏற்படுவதால் ஊறுகாய், சாம்பல் போன்றவற்றை உண்பார்கள். மசக்கையை ஆங்கிலத்தில் மார்னிங் சிக்னெஸ் என்கிறார்கள். உடலும் மார்பகங்களும் மென்மையாகும். கருப்பைவாய், யோனி போன்றவை கருநிறமாகும். ஐந்து மாதத்தில் சில பெண்களுக்கு வயிற்றில் லீனியா நிக்ரா எனப்படும் கருமையான கோடுகள் காணப்படும். வெகுசிலருக்கு கர்ப்பம் தரித்தபின்னும் மாதாமாதம் மாதவிடாய் ஏற்படலாம்.

கர்ப்பம் தரித்ததை பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளின் மூலமும் அறியலாம். குருதி, சிறுநீர்ப் பரிசோதனை ஆகியவற்றில் ஹெச் சி ஜி எனப்படும் இயக்குநீர் அதிகமாய் இருந்தால் கரு உருவாகியுள்ளதை உறுதி செய்கிறார்கள். இது மிக அதிக அளவில் இருப்பதைப் பொறுத்து இரட்டைக் குழந்தையாய் இருக்கலாம் என்பதையும் கண்டறிகிறார்கள்.  கடைசி மாதவிடாயிலிருந்து 55 நாட்களுக்குப் பின் இச்சோதனை செய்யப்படுகிறது.

அல்ட்ராசவுண்ட் ஸ்கேனிங்கும் கர்ப்பமுற்றதைக் கண்டறியவும், குழந்தைக்கு ஏற்படக் கூடிய வேறு நோய்கள் மற்றும்  உடற்குறைபாடுகளைக் கண்டறியவும், ஒன்றுக்கும் மேற்ப்பட்ட கரு உருவாகி இருப்பதை அறிந்து கொள்ளவும் பயன்படுகிறது. சில இடங்களில் பெண் கருக்கொலை நடைபெறுவதால் இந்த ஸ்கானிங் மூலம் குழந்தையின் பாலினம் தொடர்பாக அறிந்து கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது.

இயற்கைக் கருத்தரிப்பானாலும் செயற்கைக் கருத்தரிப்பானாலும் கருவணு உருவான பின்னர் அவை 2-4-8-16-32 எனப் பெருக்கமடைகின்றன. கரு உண்டான ஒன்பதாவது வாரம் அல்லது பதினோராவது வாரத்திலிருந்து இவை முதிர்கருவாகி ஒன்பதாவது மாதத்தில் குழந்தையாகப் பிறக்கின்றன.

இவற்றிலும் க்ளோனிங் ( விந்தணு இல்லாமல் பெண்ணின் முட்டையிலுள்ள கரு நீக்கப்பட்டுப் படியெடுப்பு முறை) என்னும் சோதனை முறை தடை செய்யப்பட்டுள்ளது.  ஐ வி எஃப் கருத்தரித்தல், செயற்கைக் கருவூட்டல், கருப்பை உருவகப்படுத்துதல் மூலமாக இப்போதெல்லாம் அதிக அளவு இரட்டைக் குழந்தைகள் பிறக்கின்றன. தாமத குழந்தைப் பேறு, கருத்தரிப்பு மாத்திரைகள் எடுத்துக் கொள்ளுதல், எஃப் எஸ் ஹெச் ஹார்மோன் மாற்றம், கருமுட்டை பிளவுபட்டு இரட்டைக் குழந்தைகள் உருவாதல் மேலும் பரம்பரை வாகாலும், மரபு ரீதியாகவும் இரட்டைக் குழந்தைப் பேறு உண்டாகிறதாம்.

ஒரு சினைமுட்டையும், ஒரு விந்தணுவும் இணைந்து சில சமயம் இரு கரு உருவாவதால் மோனோசைகோட்டிக் இரட்டையர்கள் உருவாகிறார்கள். செயற்கைக் கருவூட்டலில் ஒன்றில்லாவிட்டால் இன்னொன்றாவது பிழைக்கவேண்டுமே என்று இரு கருமுட்டைகள் தேர்ந்தெடுத்து இரு விந்தணுக்கள் செலுத்தப்படுவதால் டிசைகோட்டிக் எனப்படும் ஒன்று போலிருக்கும் இரட்டைக் குழந்தைகள் பிறக்கலாமாம். இனி அடுத்து ட்ரைமெஸ்டர் எனப்படும் பேறுகால சிகிச்சைகள் பற்றிப் பார்ப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...