எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 3 செப்டம்பர், 2020

குவாலியர் கோட்டையில் கோட்டீஸ்வரும் சாஸ்பகு மந்திரும் குருத்வாராவும்.

ரெட் சாண்ட் ஸ்டோன் எனப்படும் செந்நிறக் கற்களால் கட்டப்பட்டது குவாலியர் கோட்டை. ஜெயின் ராக் கட் கல்சர் எனப்படும் வர்ணக் கற்களை வெட்டி ஒட்டி அழகு படுத்தப்பட்ட கோட்டை இது.

மன் மந்திர் என்னும் மகாலை ராஜா தோமர் மான்சிங் பதினாலாம் நூற்றாண்டில் கட்டினார். அந்த மன் மந்திரை ஒட்டிய இப்பகுதி பின்னாட்களில் ராஜரீகக் கைதிகளை அடைத்து வைக்கும் இடமாக இருந்திருக்கிறது. மேலே மூன்று உப்பரிகைகள். ராஜா, மந்திரி, தளபதிக்கான இடமோ அல்லது ராஜா ராணி இளவரசருக்கான இடமோ தெரியவில்லை. 



குவாலியர் கோட்டையில் ஒரு சிவன் கோவில் உள்ளது. ஏழாம் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்கிறார்கள். இதில் சிவலிங்கமும் ஆஞ்சநேயரும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார்கள். 

முகலாயர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலும் இவை பின்னப்பட்டு இருக்கலாம். இப்போது நாம் காணும் இந்த வழிபாட்டு உருவங்களே எஞ்சி உள்ளன. இவர்தான் அந்தக் கோட்டீஸ்வரரா எனவும் தெரியவில்லை. 


கோட்டை முழுமைக்கும் நீர் வழங்கும் நீர் சேமிப்புக்குளம். 

சேமிப்புக் கருவூலமோ அல்லது ராஜாவின் இன்னொரு மகாலோ. கரண் மகாலிலிருந்து சிறிது தொலைவில் உள்ளது. 

ஆங்காங்கே கோட்டையின் எச்சங்கள்  , துண்டுத் துண்டு பாகங்கள், சிதைந்தவற்றைத் திரும்பச் சீரமைத்துக் கொண்டும் இருக்கிறார்கள். 

பாருங்கள் இது எல்லாம் மெயின் கோட்டைக்கு எதிரில் உள்ள குட்டிக் கோட்டைகள் பலவற்றின் பெயரும் தெரியவில்லை. 

குஜ்ரி மகால் எது கரண் மகால் எது என்றெல்லாம் தெரியவில்லை. 

கரன் மகாலுக்குச் செல்லும் வழியில் குட்டி பீரங்கி. 

ஆக்ராகேட் பக்கம் நகரம். 

தூரத்தே ஆக்ரா கேட் சுரங்கம் வழியாக வெளியேறிச் சென்றால் தட்டுப்படும் நகரின் இப்பகுதி. 

எத்தனையோ ராஜா ராணிகளைப் பார்த்த இந்த மாடமாளிகை அன்று எங்களையும் பார்த்தது. தூரத்தே நிலவும் வியப்போடு வானேறியது. :)


விதம் விதமான அமைப்பில் கல் மண்டபங்கள். 

ரெட் ஸாண்ட் ஸ்டோனில் கட்டப்பட்ட இன்னொரு கோவில் இந்த சாஸ்பகு மந்திரி. சாஸ்த்ரபகு என்றால் விஷ்ணு டெம்பிள் எனவும் சொல்கிறார்கள். இக்கோவிலில் சரஸ்வதி , விஷ்ணு, பிரம்மா சிலைகள் இருக்கிறதாம். 

சாஸ் பகு என்றால் மருமகள் மாமியார் என்று அர்த்தம். இருவரும் இணைந்திருக்கும் கோவிலோ என்னவோ :) ஒரு வேலை லெக்ஷ்மியின் மருமகள் சரஸ்வதி என்ற அர்த்தத்தில் சாஸ்பகு கோவில் என்கிறார்களோ.  இருவரும் இணைந்திருந்தால் இல்லமே கோவில்தானே ஒரு ஆண்மகனுக்கு :)


மூன்றடுக்குக் கொண்ட இக்கோவில் ஆளரவமே இல்லை. எனவே இருட்டத் தொடங்கியதால் நாங்களும் ஏறிப் பார்க்கவில்லை. எப்படியோ மாமியார் மருமக்கள் நன்றாக இருந்தால் சரி :)  இக்கோவிலை பதினொன்றாம் நூற்றாண்டில் கச்வாஹா வம்சத்தைச் சேர்ந்த அரசன் மகிபாலன் என்பவர் கட்டினாராம். 

இக்கோட்டையில் சீக்கியர்களின் புனித குரு ஹர் கோபிந்த் சிங்கை பேரரசர் ஜஹாங்கீர் சிறை வைத்திருந்தாராம். அதன் பின் இங்கே இந்த குருத்வாரா அமைக்கப்பட்டதாகச் சொல்றாங்க. 


மாலையில் பொன் வெய்யில் ஒளிவிடும் நேரத்தில் துப்பட்டாவால் தலையைச் சுற்றி மூடி குருத்துவாராவுக்குள் சென்று வணங்கினேன். பொதுவாக குருத்துவாராக்களில் எல்லாம் ஒரு வழக்கம். ஆணோ பெண்ணோ தலையில் ஒரு கர்ச்சீஃப் அல்லது துண்டாவது போட்டு மறைத்துத்தான் உள்ளே செல்ல முடியும். மேலும் வாயிலிலேயே வரும் நீரோட்டத்தில் கால் நனைத்தபின்தான் உள்ளே அனுமதி. துப்பட்டா இல்லையென்றாலும் கவலையில்லை. அங்கே செருப்பு விடும் இடத்திலேயே  துப்பட்டாவும் வைத்திருக்கிறார்கள். கேட்டால் கொடுப்பார்கள்.  செருப்பை எடுக்கப்போகும்போது திருப்பிக் கொடுக்கலாம். 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...