பண்டைக்காலத்திலிருந்து இன்றைக்காலம் வரை நீர் பற்றிய தகவல்கள் அடங்கிய தொகுப்பு இது. நீர் சேமிப்பு, நீராதாரங்கள், அவை இருந்த இடங்கள் அவற்றை எப்படி உருவாக்கினார்கள். இன்று அவை எவ்வாறு மறைந்தன அவற்றினால் ஏற்படும் இயற்கைப் பேரிடர்கள் அவற்றைத் தவிர்ப்பது எப்படி, மென்மேலும் நீர்வளத்தைத் தக்கவைக்க என்னென்ன செய்யலாம், அவற்றின் பராமரிப்பு என்பதை ஆக்கபூர்வமாக அலசுகிறது இந்நூல்.
பொதுமக்களும் அரசும் கைகோர்த்துச் செயல்பட்டால்தான் இதன் உண்மையான வெற்றி சாத்தியப்படும். சென்னையிலும் மதுரையிலும் எத்தனை எத்தனையோ கண்மாய்களும் ஏரிகளும் கால்வாய்களும் எப்படி மறைந்தன என்று இவர் கூறும் தகவல்கள் வருந்தவைக்கும் ரகம். இதனால்தான் சுனாமி போன்ற வெள்ள அழிவுகள் ஏற்பட்டு ஊரே நாசமானது. அதேபோல் இன்றைய வறட்சிக்கும் இதேதான் காரணம்.
நீர் சம்பந்தப்பட்ட நீர்க்கோள், மாமூல்நாமா, வாரபந்தி, சுருங்கை, கலிங்கு, குமிழித்தூம்பு, கொறம்பு, கற்சிறை, பாசிபட்டம், குழிகுத்தி, திருவோடிப்புறம், குளப்பட்டி, தூம்புகள், தசபந்து, மடை, குமிழி, மதகு, முறைப்பானை, குமுழிப்பள்ளன், நீர்க்கீய்ந்த வண்ணம் ஆகிய அருஞ்சொற்பொருள்களைத் தெரிந்துகொள்ள வேண்டியே இந்நூலை வாசியுங்கள்.
மேலாண்மை என்றால் என்ன, அறிஞர்களின் கருத்துக்கள், புவி வெப்பம், கோயில்களின் அருகில் நீர் நிலைகள், ஆறு, குளம், வாய்க்கால், ஏரி ( கண்மாய் ) கிணறு ஆகியவற்றின் வகைகள், நீர்வழிச் சூத்திரம், நீர் நிலைகளின் பெயர்கள், குடி மராமத்து முறை, பிடாகை முறை, மடை அடைப்பவர்களை அழைக்கும் பெயர்கள், நீர்க்கட்டிகள், நீர்ப் பழமொழிகள், நீர் பற்றிய சொல்வழக்குகள், மன்னர்கள் காலத்துப் பாசனம், அவர்கள் வழங்கிய நிலங்களுக்கும் பாசனம் செய்ய நீர்நிலைகளை சாசனம் செய்தது, நீர்மேலாண்மையின் அரசு, சமூகம், தனிநபர் ஆகியோரின் பொறுப்பு விவரிக்கப்படுகிறது.
இன்னும் சில ஆண்டுகள் இதே தொடர்ந்தால் நீர் சேமிப்பைத் தகுந்த முறையில் செய்யாவிட்டால் உணவு உற்பத்தியில் தட்டுப்பாடு, சுற்றுச்சூழல் அச்சுறுத்தல் மட்டுமல்ல மிகுந்த வறட்சியில் சிக்கித் தவிக்க நேரும் எவ்வுயிரும் உயிர்வாழ்வதற்கே அச்சுறுத்தலாகும் என்று எச்சரிக்கை மணி அடிக்கிறார்.
மகாராஷ்ட்ராவில் உள்ள ஒரு ஊரில் தண்ணீர் கொண்டுவரவேண்டியே ஆண்கள் பலதிருமணங்கள் புரிகிறார்கள் என்பது அதிர்ச்சிச் செய்தி. நீர்மேலாண்மை பற்றிச் சினிமாக்களில் இருந்தும் மேற்கோள் காட்டி உள்ளார்.
இவர் பகிர்ந்திருந்த பல்வேறு சங்ககாலப் பாடல்கள் , இலக்கியங்களில் இருந்து இந்தப் பாடல் மிகவும் பிடித்தது. நீர்மேலாண்மையைப் பற்றி அன்றே பாடி இருக்கிறார்கள்.
1600 ஆண்டுகளுக்கு முன்பு காரியாசான் என்பவர் எழுதியது ( பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான சிறுபஞ்சமூலத்தில் )
குளந்தொட்டுக் கோடு பதித்து, வழி சீத்து
உளந்தொட்டு உழுவயலாக்கி,
- வளந்தொட்டுப்
பாகு படும்கிணற்றோ டென்றிவ்வைம் பாற்படுத்தான்
ஏகும் சுவர்க்கத் தினிது ( 66 )
இதைப் பின்பற்றினால் என்றும் இன்பமே. முழுமையான இந்நூலைப் படித்துப் பாருங்கள். நீர்மேலாண்மையில் நம் ஒவ்வொருவரின் கடமையும் என்ன என்பது தெள்ளென விளங்கும்.
நூல் :- நீர்மேலாண்மையைத் தேடி
ஆசிரியர் :- ப. திருமலை
வெளியீடு :- தமிழர் ஆய்வு மையம்
விலை :- ரூ 50/-
