எங்கள் தோழர் விநாயகர்
புது முயற்சி, வியாபாரம், சுபநிகழ்வுகள் எதுவென்றாலும் பிள்ளையார் சுழி போட்டு செயலெதுவும் தொடங்குவோம்.. சொல்லப்போனால் உ என்ற எழுத்துக்கு சிவன் என்று பொருள். அதை நாம் பிள்ளையார் சுழி எனக் கூறுகிறோம். சமண, பௌத்தக் காப்பியங்கள், பிரபந்தங்கள், சங்ககால இலக்கியங்கள் தவிர அனைத்துப் பக்தி இலக்கிய நூல்களையும் நாம் விநாயகர் காப்பைக் கொண்டே தொடங்குகிறோம். புதுமனை புகுதல், திருமணம் மற்றும் எந்த ஹோமம், பூஜை என்றாலும் விக்னம் இல்லாமல் நடந்தேறவேண்டி விநாயகருக்கு அனுக்ஞை பூஜை செய்து யதாஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்தபின்தான் மற்ற பூஜைகள், ஹோமங்கள் செய்யப்படும்.
விழிக்குத்துணை உன் மென்மலர்ப்பாதங்கள் என முருகனிடம் உருகும் நாம் நம் வழிக்குத்துணையாக அவரைக் கூப்பிட்டாலும் நம் வழி முழுவதும் (ஆலோ, அரசோ, குளமோ கம்மாயோ, அதனருகில் கோயில் கொண்டு) துணையாக வருபவர் கணபதி. பாலும் தெளிதேனுமோ,பாகும் பருப்புமோ, கைத்தலம் நிறை கனியோ, அப்பமோடு அவல்பொரியோ படைப்பதெல்லாம் நம் விருப்பம்தான். ஆனால் மிக எளிமையாக ஒரு சிதர்காயை உடைத்துவிட்டால் நம் வேண்டுதல்கள் எல்லாம் அவர் அருளால் சித்தியாகிவிடும் என்பது கண்கூடு.