சுயராஜ்ஜியத்தைப் போதித்த ராஜமாதா ஜீஜாபாய் போன்ஸ்லே
மராட்டியப் பேரரசர் என்றாலே நமக்கு சத்ரபதி சிவாஜிதான் ஞாபகத்துக்கு வருவார். அத்தகைய மாவீரனை உருவாக்கி அவருக்கு சுயராஜ்ஜியத்தின் பெருமையைப் போதித்த அவரின் தாய் ராஜமாதா ஜீஜாபாயின் வீரமும் விவேகமும் வியக்கத்தக்கது.
பதினாறாம் நூற்றாண்டில் முகலாயர்களின் ஆக்கிரமிப்பில் பல்வேறு இந்து சாம்ராஜ்யங்களும் அடிமைப்பட்டுக் கிடந்தன. அக்காலத்தில் யாதவர்கள் மராத்திய க்ஷத்திரியர்களாகஇருந்தார்கள். அந்த வம்சாவளியில் வந்த ஜீஜாபாய் மாபெரும் வீரத்தோடு விளங்கினாள். முகலாயர்களுக்கு அடிமைப்பட்டு வாழும் வாழ்வை அவள் விரும்பவில்லை.
ஜீஜாபாய் 12, ஜனவரி 1598 இல் மகாராஷ்ட்ராவின் சிந்த்கேட் அருகில் உள்ள தேல்கானில் லகுஜி யாதவ் மற்றும் மஹாலசபாய்க்கு மகளாகப் பிறந்தார். எனவே அவள் தேவகிரியின் இளவரசி. தந்தை சிந்த்கேட்டின் ராஜாவாக இருந்தும் நிஜாம் ஷாஹி சுல்தான்களின்கீழ் இராணுவத் தளபதியாகத் தன் மூன்று மகன்களுடன் சேர்ந்து பணிபுரிந்தார். இது ஜீஜாபாய்க்கு முற்றிலும் பிடிக்காத விஷயமாக இருந்தது.
இருந்தும் சுல்தானின் இராணுவத்தில் பணிபுரிந்த வீரம்மிக்க தளபதியான ஷாகாஜி போன்ஸ்லே என்பவருடன் ஜீஜாபாயின் திருமணம் நடந்தது. அவர்களுக்கு ஆறு மகள்களும், சம்பாஜி, சிவாஜி ஆகிய இரு மகன்களும் பிறந்தார்கள்.
முகலாயர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்த மராட்டியத்தை மீட்க அவள் பெரிதும் விரும்பினாள். ஆக்கிரமிப்பாளர்களின் சூழ்ச்சியால் இந்துக்கள் இழிவுபடுத்தப்படுவது அவளுக்கு வெறுப்பை உண்டாக்கியது. யாதவர்களும், போன்ஸ்லேக்களுமே அக்காலத்தில் பிளவுபட்டுக் கிடந்தார்கள். இவர்கள் பகைமையை ஒழித்து முகலாயர்களுக்கு எதிரான ஒற்றுமையை உருவாக்க ஜீஜாபாயும் ஷாகாஜியும் பெரிதும் முயன்றார்கள்.
இதனால் கோபமுற்ற நிஜாம் ஷஹாஜியைப் பிடிக்க அவரது மாமனாரான லகுஜிராஜையே ஒரு படையுடன் ஜுன்னாருக்கு அனுப்புகிறார். சிவனேரிக் கோட்டையில் தனது நம்பிக்கைக்குப் பாத்திரமான விஸ்வஸ்ராவ் மற்றும் வைத்தியராஜின் பொறுப்பில் கர்ப்பமாக இருந்த ஜீஜாபாயை ஒப்படைத்துவிட்டு புனேவுக்குத் தப்பிச் செல்கிறார் ஷாகாஜி. ஜுன்னாரை அடைந்த லகோஜி தனது மகளின் தேசபக்தி மிகுந்த வார்த்தைகளால் மனம் திருந்துகிறார்.
”மராட்டியர்களான நமது வீரம்மிக்க வாள்கள் ஒன்றுபட்டால் வெளிநாட்டுப் படையெடுப்பாளர்களை முறியடிக்கலாம். தோல்விக்குப் பயந்து ஆக்கிரமிப்பாளர்களின் கீழ் வேலை செய்வது அவமானகரமானது. அதை நீங்களும் நம் க்ஷத்ரிய வீரர்களும் கைவிடவேண்டும் ” என்று மகள் தந்தையைக் கேட்டுக்கொள்ள அவர் மனம் மாறி ஷகோஜியுடன் சமாதானம் ஆகிறார். இதனால் யாதவர்களுக்கும் போன்ஸ்லேக்களுக்கும் நிரந்தரமாகப் பகைமை தீர்ந்து ஒற்றுமை ஏற்பட்டது.
அதனால் வெகுண்ட நிஜாம் ஜீஜாபாயின் தந்தையையும் அவளது மூன்று சகோதரர்களையும் நிராயுதபாணியாக வரவழைத்து ஏமாற்றிக் கொன்றார். அதில்ஷாவின் உத்தரவுப்படி புனே நகரமே சாம்பலாக்கப்பட்டது. இதைக் கேட்டு ஜீஜாபாயின் உள்ளம் எரிமலையாகக் கொந்தளித்தது. அவள் உள்ளத்தில் இன்னும் இன்னும் சுயராஜ்ஜியத்திற்கான கனவு கொழுந்து விட்டெரிந்தது.
மஹாதேவி , பவானிதேவி போன்ற உக்கிர பெண் தெய்வங்களை வணங்கி வந்தவள் ஜீஜாபாய். சிவாஜி கர்ப்பத்தில் சுமந்து இருக்கும்போது எதிரிகளை அழிக்க ராமனைப் போன்ற மகனைத் தரும்படி இந்த உக்கிர தேவிகளிடம் வேண்டி வந்தவள்.
1627 இல் சிவாஜி சிவனேரிக் கோட்டையில் பிறந்தார்.
சுயராஜ்ஜியம் என்னும் தன்னாட்சி செய்யவேண்டும் என்பதே அவளுடைய வாழ்நாள் நோக்கமாக இருந்தது. சிவாஜிக்கு இராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றின் அரசியல் கருத்துக்களோடு சுயராஜ்ஜியத்தின் பெருமையையும் ஊட்டி வளர்த்தாள். ராமனின் நேர்மை, பீமனின் வலிமை, தாய்நாடு, தன் மக்கள் என்ற பாசம், இறைபக்தி, தேசத்தின் மீது அன்பு, தர்மத்தின் மீது பிடிப்பு, நிர்வாகத் திறமை, தொலைநோக்குப் பார்வை, உத்வேகம், அச்சமின்மை, தலைமைத்துவம். நம்பிக்கை, தைரியம், உறுதி, பொறுமை, மரியாதை, பரந்த மனப்பான்மை, தியாக மனப்பான்மை, கடவுளின் ஆசியால் மட்டுமே வெற்றியைப் பெற முடியும் என்பதை எல்லாம் போதித்தாள்
ஷஹாஜி மஹுல் உடன்படிக்கையில் கையெழுத்திட்டதால் கர்நாடகாவிற்கு தனது மூத்த மகனுடன் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சிவாஜிக்கு 14 வயதாய் இருக்கும்போது ஷாஹாஜி புனேவை நிர்வகிக்கும் பொறுப்பைக் கொடுத்தார். நிஜாம்ஷா, ஆதில்ஷா ஆகியோரின் தொடர் படையெடுப்பால் சிதைந்திருந்த புனே நகரை தாதாஜி கொண்டோடியோவுடன் மீட்டு எடுத்தார்கள் ஜீஜாபாயும் சிவாஜியும். விவசாயத்தின் மேன்மையை மக்களுக்கு உணர்த்தித் தரிசு நிலங்களையும் பண்படுத்தினார். கஸ்பா கணபதி மந்திர், கேவரேஷ்வரர் கோயில் மற்றும் தாம்பாடி ஜோகேஸ்வரி கோயிலைப் புதுப்பித்து எழுப்பியவர். அதுமட்டுமல்ல வாளேந்திப் போரிடவும், குதிரையேற்றமும் கூடப் பயின்ற துணிச்சல்காரி.
மூத்த மகன் சம்பாஜி ஒரு போரில் முகலாயத்தளபதி அப்சல்கானால் பிடிக்கப்பட்டுக் கனக்கிரியில் கொல்லப்பட்டான். மேலும் அப்சல்கான் கோவில்கள், தெய்வச்சிலைகளை அழித்து, வயல்களை எரித்து மக்களைக் கொன்று சிவாஜியையும் அழிக்கும் முயற்சியில் ராஜ்கோட் நோக்கி முன்னேற ஜீஜாபாய் சிவாஜிக்கு அப்சல்கானை அழிக்கும்படிக் கட்டளையிட்டார். அதன்படி அப்சல்கானை அழித்தார் சிவாஜி. எத்தனையோ உயிராபத்துக்கள் வந்தும் சிவாஜி ஜீஜாபாயின் பிரார்த்தனைகளாலும் நம்பிக்கையாலுமே உயிர்பிழைத்து வந்தார்.
பல மொழிகளையும் கற்பது, பஜனை கீர்த்தனைகள் கேட்பது, சமஸ்கிருத நூல்கள் படிப்பது, மத அனுஷ்டானங்களைப் பின்பற்றுவது, பிரார்த்தனைகள் செய்வது ஆகிவற்றை அவள் தொடர்ந்து பின்பற்றி வந்தாள் .தன் ஆசைக் கணவன் ஷஹாஜி ராவை இழந்த இக்கட்டான சூழ்நிலையிலும் அன்பு மகன் சம்பாஜியை இழந்த
போதிலும் அவள் கடவுள் நம்பிக்கைதான் அவளை மீட்டது.
ஒருமுறை பன்ஹாலா கோட்டையை சித்தி ஜௌஹார் முற்றுகையிட்டபோது சிவாஜி அதனுள்ளே சிக்கிக் கொண்டார். அங்கேயிருந்து சிவாஜி தப்பிக்கும்வரை, ஷாயிஸ்தாகானுடன் போரிட்ட மராட்டிய வீரர்களை ஜீஜாபாயே வாள் ஏந்தி வழிநடத்தி எட்டுமாதங்களுக்கும் மேலாகத் தன் மக்களைப் பாதுகாத்தார். .
தனது 23 கோட்டைகளை ஔரங்கசீப்பிடம் இழந்தாலும் புரந்தரின் உடன்படிக்கைக்குப் பிறகு முகலாயர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து மீண்டு சிவாஜி ஹிந்தவி சுயராஜ்ஜியத்தைத் திரும்பக் கட்டி எழுப்பினார்.
அதில்ஷா, குதுப்ஷா, சித்தி ஜௌஹர், பிரிட்டிஷ், போர்த்துக்கீசியப் படைகள் அனைத்துமே ஹிந்தவி சுயராஜ்ஜியத்தின் மீது கண்ணைப் பதித்திருந்தன. அதிலிருந்து நாட்டைப் பாதுகாத்து குடிமக்களைப் பரிபாலனம் செய்து அத்தோடு சித்தூர்க் கோட்டையையும் கட்டி முடித்தார் ஜீஜாபாய்.
நிர்வாகத்திலும் சிறந்து விளங்கினார் ஜீஜாபாய். அரசநிர்வாகம், குடிகளின் மத, சமூக, நிதிச் சிக்கல்களைத் தீர்ப்பது, குற்றவாளிகளைத் தண்டிப்பது, நீதி வழங்குவது, போர் ஆலோசனகள் வழங்குவது என அரசு இயந்திரத்தைப் பாரபட்சமற்று நடத்திச்செல்லும் வல்லமை அவருக்கு இருந்தது. ராஜமாதா என்று தன்னை உயர்த்திக் கொள்ளாமல் மக்களோடு மக்களாக வாழும் வாழ்வையே அவர் தேர்ந்தெடுத்திருந்தார்.
தாயைப் போலவே சிவாஜியும் விவசாயிகளுக்கு நிலமும் விதைகளும் அளித்து விவசாயத்தை ஊக்குவித்தார். துணிச்சலான நம்பகமான தோழர்களைக் கொண்டிருந்தார். ஏழைகளின் மேல் பரிவுடன் இருந்தார். தனது ராஜ்ஜியத்தின் பாதுகாப்பிற்காக 350 சிறிய மற்றும் பெரிய பாதுகாப்புக் கோட்டைகளைக் கண்காணிப்புக் கோபுரங்களோடு உருவாக்கியவர் இவர் மட்டுமே. புதுவிதமாக நீர்த்தேக்கங்கள் அமைத்துத் தனது கோட்டைகளுக்குள் பல மாதங்கள் கூட மழை நீரைச் சேமிக்கும் உத்தியைப் புகுத்தியவர்.
350 கப்பல்கள் கொண்ட கப்பற்படையும் கொண்டிருந்தார்.
தோல்வியை மட்டுமல்ல. வெற்றியைத் தொடர்ந்து வரும் ஆணவத்தைக் கையாள்வது பற்றியும் ஜீஜாபாய் மகனுக்கு எடுத்துரைத்துத் திருத்தி இருக்கிறாள். வறட்சி, விலங்குகள், கொள்ளைக்காரர்கள், கொடூரமான நிலப்பிரபுக்கள் நிறைந்த புனே நகரை ஆட்சி செய்து வந்தாலும், முகலாயர்களின் படையெடுப்பு அச்சுறுத்தல்களிலேயே வாழ்நாளைக் கழித்தாலும் மனித நேயத்தோடு வாழக் கற்றிருந்தார் சிவாஜி.
போரில் தான் கைப்பற்றிய அந்நியர்களையும், எதிரிகளையும் மன்னிக்கும் பெருந்தன்மை மாவீரன் சிவாஜியிடம் இருந்தது. தான் கைப்பற்றிய ஒரு அந்நியநாட்டுப் பெண்ணைத் தன் தாயைப் போலக் கருதி நடத்தும் பெருமனம் வாய்க்கப் பெற்றிருந்தார். அனைத்துச் சாதி, சமயப் பெண்களையும் சமமாகப் பாவித்தார். இவை யாவும் ஜீஜாபாய் சிவாஜிக்குத் தந்த நற்குணங்கள்.
சிவாஜியை சிறந்த ஆட்சியாளராக வடிவமைத்ததில் ஜீஜாபாயின் பங்கு முழுமையானது. சிவாஜி மராத்தியப் பேரரசராக 1674 ஜூன் 5 ஆம் தேதி முடிசூட்டிக் கொண்டார். அவர் சுயராஜ்ஜியம் பெற்றுப் பதவி ஏற்ற பன்னிரெண்டு நாட்கள் கழித்து தன் முழு வாழ்க்கையையும் சுயராஜ்ஜியம் பெறவே அர்ப்பணித்த ராஜமாதா ஜீஜாபாய் ஜூன் 17,1674 இல் ராய்காட் கோட்டைக்கு அருகில் உள்ள பச்சாட் என்ற கிராமத்தில் இறந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)