எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 10 ஏப்ரல், 2024

51 வருடப் பாரம்பர்யமிக்க லெட்சுமி மெட்டல்ஸ் திரு. அழகப்பன்

 51 வருடப் பாரம்பர்யமிக்க லெட்சுமி மெட்டல்ஸ் திரு. அழகப்பன்



காரைக்குடி முத்துப்பட்டிணத்தில் பெயர் பெற்ற குடும்பம் வெள்ளைக் குதிரை சுப்பிரமணியம் செட்டியார் வீடு. 1972 இல் ஃபேன்ஸி மெட்டல்ஸ் ஆரம்பித்து வீட்டின் பின்புறத்திலேயே பட்டறையும் வீட்டின் முன்பக்கம் சில்வர் கடையும் நடத்தி வந்தவர் திரு. சுப்பிரமணியம் செட்டியார். இவர்கள் மனைவி திருமதி. மெய்யம்மை ஆச்சி. இவர்கள் தேவகோட்டை திரு. டி.வி.வெங்கடாசலம் செட்டியார், திருமதி .உமையாள் ஆச்சி தம்பதிகளின் புதல்வர் திரு.இராதாகிருஷ்ணன் அவர்களை அழகப்பன் என்ற பெயரில் 1986 இல் சுவீகாரம் செய்து கொண்டார்கள்.


 

திரு அழகப்பன் 1963 டிசம்பர் 8 ஆம் தேதி பிறந்தவர். சேவுகன் அண்ணாமலை கல்லூரியில் இளங்கலை கணிதம் பயின்றவர். பிள்ளை வளர வந்த இடத்தில் குடும்பத் தொழில் என்பதால் ஃபேன்ஸி மெட்டல்ஸ் மற்றும் சில்வர் பட்டறைத் தொழிலில் ஈடுபாடு கொண்டார். இவருக்குப் பிறந்த இடத்தில் ஒரு சகோதரரும் இரு சகோதரிகளும் உண்டு. மனைவி கானாடுகாத்தான் திரு. ராமனாதன் செட்டியார் அவர்களின் புதல்வி விசாலாக்ஷி. பிள்ளைகள் மூவர். இரு பெண் குழந்தைகள், ஒரு பையன். இவர்களுக்குத் திருமணமாகிப் பேரன் பேத்தி எடுத்து விட்டார்கள்.  

 

சென்னை, கேரளா, மதுரை, கரூர், ஈரோடு, கோவை, திருச்சி போன்ற ஊர்களுக்கு இவர்கள் 1972 இல் இருந்து சில்வர் சாமான்களைத் தயாரித்து விற்பனைக்கு அனுப்புகிறார்கள்.  கிட்டத்தட்ட 51 ஆண்டுகளாகக் காரைக்குடியில் கோலோச்சி வருகிறது இந்த நிறுவனம். 1993 இல் தனது தந்தையாரின் மறைவுக்குப் பின் 1999 இல் ஃபேன்ஸி மெட்டல்ஸ் என்ற தனது நிறுவனத்திற்குத் தனது மூத்த மகளான லெட்சுமியின் பெயரைச் சூட்டியுள்ளார். சில்வர் தொழிலில் சிறப்பிடம் பெற்ற இவர்கள் தங்கள் சொந்தப் பட்டறையில் இருந்து அடிக்கும் பொருட்களை மட்டுமே விற்பனை செய்து வருகிறார்கள். நகரத்தாரில் மூன்று நான்கு பேர்கள் மட்டுமே இத்தொழிலில் ஈடுபடுகிறார்கள்.  

 

சில்வர் தொழில் பற்றி இவரிடம் கேட்டபோது, “சலீம் பட்டறை, கே. வி. நாதன் ஆகிய பட்டறைகள் காரைக்குடியில் முன்பு செயல்பட்டு வந்தன. இப்போது சில்வர் அடித்த சில பட்டறைகள் வெள்ளிப் பட்டறைகள் ஆகிவிட்டன. தேவி அன் கோவும் நாங்களும் மட்டுமே சில்வர் பட்டறையும் கடையும் வைத்துள்ளோம்.தேவையான பொருட்களை எங்கள் பட்டறையிலேயே தயார் செய்து விற்கிறோம். திருமணம் மற்றும் விசேஷங்களுக்கு 100 இலிருந்து 300 வரை மொத்த ஆர்டர் கிடைக்கும்.”என்றார்.


 

இவர்களின் ஸ்பெஷாலிட்டி பரங்கிக்காய்த் தூக்கு. இங்கே அடிக்கும் பொருட்கள் தரமாக இருப்பதால் அவை வாய் வார்த்தையாகவே நிறைய வாடிக்கையாளரைப் பெற்றுத் தந்துள்ளன. கல்யாணம், கிரகப் ப்ரவேசம், சாந்தி, போன்றவற்றுக்கும், முறைகளுக்குக் கொடுப்பதற்கும் இங்கே பரம்பரை பரம்பரையாக சாமான் வாங்குவோர் உண்டு. வரும் திருமண சீசனுக்காக சுமார் ஆயிரம் வாளிகள் செய்து அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. மேலும் டிஷ் ப்ளேட், உயரச் சட்டி, பால் சட்டி, சம்படம், டப்பா, சொருகு சட்டி, மாவிளக்கு வாளி, பல சைஸ் சில்வர் வாளிகள் பரங்கிக்காய் தூக்கு மேலும் வேலைப்பாடு உள்ள சாமான்கள் போன்றவை இங்கே அடிக்கடி ஆர்டர் செய்து வாங்கப்படும் பொருட்கள்.

 

இத்தொழிலில் ஏற்பட்ட இடர்ப்பாடுகள் பற்றிக் கேட்டபோது ”இத்தொழிலில் பெரிய முன்னேற்றம் கிடையாது. நகரத்தார்க்கு நகரத்தார் ஆதரவு இல்லை. இந்த மாதிரி வேலைப்பாடு உள்ள பொருட்கள் செய்ய இப்போது ஆட்கள் இல்லை. 30 வருஷமான் இதற்கான ஆசாரிகள் அருகி வருகிறார்கள். 1990 இல் காரைக்குடியில் 100 பட்டறை இருந்தது. ஆயிரம் பேர் வேலை பார்த்தார்கள். இப்போது 15 இலிருந்து 20 பட்டறைகள்தான் செயல்படுகின்றன. அதுவும் ஒரு பட்டறைக்கு இரண்டு மூன்று பேர்தான் இருக்கிறார்கள். மொத்தமே 150 பேர்தான் இதில் வேலை செய்து வருகிறார்கள். அரசாங்கத்திலிருந்து இந்தத் தொழிலுக்கும் தொழிலாளிகளுக்கும் எந்தச் சலுகையும் இல்லை. இன்சூரன்ஸ் போன்றவையும் கிடையாது. முன்பு வாரக் கூலி கொடுத்தோம். ஒரு வாரம் பூரா பார்த்தாலும் கூலி என்று பார்த்தால் அவர்களுக்கு ஆயிரம் ரெண்டாயிரம்தான் கிடைக்கும். இதனால் சில தொழிலாளிகள் அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு வேறு இடம் மாறிப் போய்விடுவார்கள்.

 

கொரோனா காலகட்டத்தில் ஓரளவு சமாளித்தோம். லாக்டவுன் சமயத்தில் சிறிது சிரமம்தான். முகூர்த்த மாதங்களில் நல்ல விற்பனை இருக்கும். ஆடி, மார்கழி, புரட்டாசி போன்ற மாதங்களில் டல்லாக இருக்கும்.  சில்வர் சாமான் விற்பனை மூலம் லாபம் என்று பார்த்தால் ஐந்து முதல் பத்துப் பர்சண்ட்தான் தேறும். லாபம் கம்மி என்றாலும் பட்டறை இருப்பதால் சொந்த விருப்பத்தின் பேரில் இத்தொழிலைத் தொடர்ந்து செய்து வருகிறேன்” என்றார்.

 

இதில் பயன்படுத்தப்படும் மூலப் பொருள் பற்றிக் கேட்டபோது ஜப்பான் ஷீட் சென்னையிலிருந்தும் சேலத்தின் ரீரோலிங் ஷீட்டும் பயன்படுத்தப்படுவதாகக் கூறினார். இது இரண்டுமே தரமானது மற்றும் விலை அதிகமுள்ளது. குஜராத் அகமதாபாத்தில் பட்டா ( PATTA) என்னும் ஷீட்டும் பயன்பாட்டில் உள்ளது. முதலில் ஷீட் தேர்வு. அதன் பின் அதைத் தேவையான அளவு வெட்டிப் பொருளாக வெல்ட் செய்வது, அதன் பின் அதைத் தட்டிச் சீர் செய்வது பின்னர் பாலிஷிங் என்ற முறைப்படித் தயாராகிறது ஒவ்வொரு பாத்திரமும். 

 

இத்தொழிலில் உங்கள் முன்னோடிழிகாட்டி என்று யாரும் உண்டா  ன்று கேட்டபோது ”தந்தையார்தான் என்னுடைய முன்னோடி வழிகாட்டி,  கிழக்கு இராமநாதபுரம் மாவட்டம் எவர்சில்வர் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவராகவும் காரைக்குடி சங்கத்தின் தலைவராகவும் இருந்தவர்கள் அப்பச்சி. தற்போது நான் காரைக்குடி எவர்சில்வர் உற்பத்தியாளர் சங்கத்தின் பொருளாளராக இருக்கிறேன் என்றார். எங்கள் நிறுவனத்தின் சாமான்கள் தரமானவை என்று பெயர் பெற்றுள்ளன. மேலும் இங்கே வாங்குவதால் ராசியாக உள்ளது என்று கஸ்டமர்கள் கூறுவதுதான் எங்களுக்குக் கிடைத்த சிறந்த விருது என்கிறார்.

 

தற்போது இவர் மனைவியும் இவர் கூட தொழிலில் இணைந்து உதவி வருகிறார். பாப்பாத்தி படைப்பு, பொங்கல், ப.ராம. பங்காளிகளுடன் 150 வருடமாக கோவிலூர் சாமிக்கான மகர்நோன்பு சாமி அம்பு போடுதல், முத்துப்பட்டிணம் மீனாக்ஷி அம்மன் கோவில் ட்ரஸ்டி, நகரச் சிவன்கோவில் நகை டிரஸ்டி, அதலைக் கண்மாய் ஸ்ரீ வேட்டைக் காளியம்மன் திருவிழாக் கமிட்டியில் மெம்பர் என்று நீள்கின்றன இவரது தெய்வீகத் திருப்பணிகளும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...