எந்த ஒரு விஷயத்தைச் செய்தாலும் பதறாமல் செய்தால் நிச்சயம் அதை முழுமையாய்ச் செய்யலாம். அதன் மூலம் பல்வேறு நன்மைகளையும் அடையலாம். நமக்கெல்லாம் தெரிந்த ஔவைப்பிராட்டி இப்படி ஒருமுறை ஒரு காரியத்தைப் பதற்றத்தோடு செய்து அதன் பின் நிதானமாக அதைப் பூர்த்தி செய்து கைலாயமே சென்றாராம். அது என்ன என்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
கொன்றை வேந்தன் ஆத்திச்சூடி ஆகியன எழுதியவர் ஔவைப்பிராட்டி. பழம்நீயப்பா ஞானப் பழம்நீ அப்பா இந்த சாதாரண மாம்பழம் உனக்கு கிட்டவில்லையே என்று எதற்குக் கோபம் நீயே ஒரு ஞானப் பழம்தானே என்று முருகனை ஆற்றுப்படுத்தியவள். அதே முருகன் சுட்ட பழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா எனக் கேட்டபோது சுடாதபழம் வேண்டும் எனச் சொல்லி முருகன் உலுக்கிய நாவல் பழத்தைப் பொறுக்கி ஊதித்தின்றவர். என்ன பாட்டி பழம் சுடுதா என்று முருகன் சிரித்தபடி கேட்ட கேள்வியில் முருகனின் தமிழ்ப் புலமை கண்டு வியந்தவள்.