எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 21 டிசம்பர், 2010

தேனீர் தாகம்.. முதல் பரமபதப் பாம்புகள் வரை.. எட்டு கவிதைகள்..

1. தேனீர் தாகம்..
**************************

சுப்ரபாதத்தோடு
கணவருடன் ஆறுமணிக்கு.,
பையனுடன் எட்டு மணிக்கு.,
பலகாரத்துக்குப் பின்
பத்துமணிக்கு.,

வேலைக்காரப் பெண்ணுடன்
பன்னிரெண்டு மணிக்கு.,
மாலை நாலுக்கும்.,
பின் ஆறுக்கும் கூட..


எப்போது ஆரம்பித்தது
என்று தெரியாமல்
நேரமற்றுத் தொடர்ந்து.,

நீர்ச்சத்தோ., சர்க்கரையோ
குறையும் போதெல்லாம்.,
கிடைக்கும் போதெல்லாம்.,
மாற்றம் வேண்டும் போதெல்லாம்.,

எழுதத் துவங்குமுன்.,
எழுதி முடித்தபின்.,
எல்லாரோடும்.,
தனியாயும்.,

சிந்தனையின் போது.,
கவலையின் போது.,
மகிழ்ச்சியின் போது.,
காரணமற்றும்.,

குடிகாரர்களைத் திட்டும்
போதெல்லாம் உள் கேலி.,
”நீ யாராம்... போடீ
தேனீர் குடிகாரி என்று..”

==============================

2. நானென்ற கம்பீரம்..
**************************

புதைக்கப் பட்டதற்காய்ப்
புதையாமல்
வெடித்து வேர்விட்டுத் தேடு..

முளை விரல் நீட்டி
சூரியக் கரம் பிடித்து
மேலேறு...

புல்லாகவோ.,
பெருமரமாகவோ.,
நானென்ற கம்பீரத்துடன்...

=============================

3. டெஃப்லான் தோசைகள்..
***********************************

தாமரைத் தண்ணீர்..
நீர்மேல் எண்ணெய்..
உறவுற்று உறாமல்..

நிலவொட்டிய வானம்..
ஒட்டில்லை..
உறவு உண்டு..

பேனாக் கத்திகளாய்..
பேனாக் கடத்திகள்..
ஆளற்ற அனைத்தும் தூக்கி..

விக்கிலீக்ஸ் காட்சி.,
சுவிஸ் வங்கி ஆட்சி.,
அசாங்கே சாட்சி..

தொலையும் தொடர்பில்
ஆளுமைகள் மாற..
ஆசையர்கள் மாற..

இரும்பு ., இண்டாலியம்.,
டெஃப்லானாய்த் தேய..

ப்ளாஸ்டிக் வீச்சத்துடன்..
டெஃப்லான் தோசைகள்..
எல்லார் தட்டிலும்..

==============================

4. நிசிப்பறவைகள்..
******************************

நிசியில் பறவைகள் சடசடக்க..
நெஞ்சக் காடு தேடி..
ரோமக் கூட்டுக்குள்..
முகம் தத்தி அமர்ந்து..
முத்த முட்டைகள் பொரித்து..

விடிந்ததும் தெரிகிறது..
பறவைகள் அமர்ந்த இடம்..
விலகிய ரோமச்சுள்ளிகளில்
கால்களின் நகக்கீறலோடு..

=============================

5. ஈரப்பூக்கள்...
***********************

ஈரம் கசியும் கன்னங்களை
திரும்பத் துடைக்கிறேன்..
கனவில் முத்தமிட்டாயோ..
முகமருகே குனிந்து
கண்ணீர் சிந்தினாயோ..
உன்னை நினைத்துக்
கிடந்த என் கண்ணீரோ..
மழை பெய்த சுவர்த்தடமாய்
ஈரப்பூக்கள் கன்னமெங்கும்..

=============================

6. குழந்தைப் பூ..
************************

நானும் கறுப்பு..
மனைவியும் கறுப்பு..
குழந்தைக்கு ஏன் குங்குமப்பூ..

==============================

7. மழைக் கேள்விகள்..
*******************************

குழந்தையின் கேள்விகளாய்
தொறுதொறுத்துக் கொண்டே மழை...
விடை தெரியாது ஓடுபவளாய் நான்..

சுவற்றில் ஆக்டோபஸ்களாகவும்..
அமீபாக்களாகவும் ஈரக்கால் பரப்பி..
சிலந்தியில்லா தண்ணீர் வலைகள்..

பயிர்களைப் போல
சுவர்களும் அழுகி பூசணங்கள்..
மாவுகளில் குளமற்ற ஆம்பல் பூத்து..

வகுப்பறை மேசைகள் ஈரம் கசிந்து..
புழுக்கமாய் வியர்வையா..
கருணையாய் ஊற்றா..

சில்வண்டுகளாய் ரீங்கரித்த மழை..
தவளையாய் தவ்விச் சென்றபின்..
கேட்பது அற்ற காதுகளுடன் நான்..

==================================


8. பரமபதப் பாம்புகள்..
****************************

மோட்டு வளையைப்
பார்த்துக் கொண்டே
கவலையற்றுப்
படுத்திருக்க..

தொட்டில் குழந்தையாய்..
இன்னுமொரு
பிறப்பு வேண்டி..

விடியலில் எழுந்து..
காலைக் கடன்
கழித்தும்., கழிக்காமலும்..

டப்பி சோறும்..
ஓட்டமும் நடையும்..
மின் வண்டித் தடமும்..
பேருந்துப் புகையும்..

வருடக் கணக்காய்
பல கை மாறி..
சரிபடுத்தப்படாத
தணிக்கைக் கணக்கும்..

நாளைக்கு வந்து
நச்செறியப் போகும்
தணிக்கை அதிகாரியும்..

கிடைக்கப் போகும்
குறைந்த நட்சத்திரங்களும்..
குடும்பக் கவலையும்..
கண்ணுக்குள் குழம்ப..

பள்ளிப் பருவக்
குழந்தையாய்..
குறைந்த மதிப்பெண் கனவில்
விழுந்ததாய் விதிர்த்து எழுந்து..

பரமபதப் பாம்புகளால்
சொர்க்க வாசல் அடைந்த நான்
மீண்டும் முதலில் இருந்து
அதன் வால் பிடித்து..

டிஸ்கி..1..:- நானென்ற கம்பீரம் என்ற கவிதை 20 . 12. 2010 உயிரோசையில் வெளிவந்துள்ளது... நன்றி உயிரோசை..

டிஸ்கி :- தேனீர் தாகம்., நானென்ற கம்பீரம்., டெஃப்லான் தோசைகள்., நிசிப் பறவைகள்.. ஈரப் பூக்கள்., குழந்தைப் பூ., மழைக்கேள்விகள்.. பரமபதப் பாம்புகள்.. இந்த எட்டு கவிதைகளும் 19. 12. 2010.. திண்ணையில் வெளிவந்துள்ளன.. நன்றி திண்ணை..:))

27 கருத்துகள்:

  1. அருமையான கவி விருந்து. அத்தனையும் அருமை. ரெண்டும் எட்டும் மிகப் பிடித்தன. திண்ணை உயிரோசையில் வந்தமைக்கு வாழ்த்துக்கள் தேனம்மை.

    பதிலளிநீக்கு
  2. தேனீர் பற்றியும் ஒரு கவிதை. நீங்கள் தொடாத விஷயங்களே இருக்க போவதில்லை போலும். ஆனாலும் எல்லாமே நிறைவு என்பதே உங்கள் கவிதையின் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  3. கவிதைகள் சூப்பர்..படிக்க படிக்க திகட்டாதவை...

    பதிலளிநீக்கு
  4. எல்லாக்கவிதைகளும் நல்லாருக்கு.. குறிப்பா பரமபத பாம்புகள்.

    பதிலளிநீக்கு
  5. பறவைகள் தம் பறத்தலின் உயரத்தை ஆகாசத்தில் குறித்து வைப்பதில்லை
    அவை பறக்கின்றன *சும்மா* பறக்கின்றன

    பதிலளிநீக்கு
  6. நீண்ட நாட்கள் கழித்து தங்கள் தளத்தில் ரசிக்கத்தக்க கவிதைகள்

    குழந்தைப்பூ மிகப்பிடித்தது

    வாழ்த்துகள் தேனு...!

    பதிலளிநீக்கு
  7. தேனீர் குடிகாரியும், டெப்லான் தோசையும் என்னை எக்கச்சக்கமாக கவர்ந்துவிட்டது...

    பதிலளிநீக்கு
  8. முத்து முத்தாய் எட்டுச் சிந்தனைகள்.பாராட்டுக்கள் தேனக்கா !

    பதிலளிநீக்கு
  9. ஈரப்பூக்கள் & குழந்தைப் பூ - இரண்டும் அருமை அக்கா...

    பதிலளிநீக்கு
  10. "நானென்ற கம்பீரம்" ஒரு மாஸ்டர் பீஸ்
    நிசிப் பறவைகள் கொஞ்சம் புரியவில்லை தேனக்கா!

    பதிலளிநீக்கு
  11. கவிதைகள் அனைத்துமே அருமை அழகான ரசனையுடன்....

    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  12. கவுதைகள் நல்லாருக்கு ஆனா 8 பதிவா போட்டிருக்கலாமே

    பதிலளிநீக்கு
  13. ஆச்சரியமா இருக்கு ,இத்தனை ஓட்டு விழுந்திருக்கு ஒரு கமெண்ட் கூட விழலையா?

    பதிலளிநீக்கு
  14. எட்டும் அருமை. அதில் பரமபத பாம்புகள் நச்.

    பதிலளிநீக்கு
  15. //தேனீர் குடிகாரி//

    அந்தக் குடி போல இந்தக் குடி ‘குடியை அழிக்காது’!! :-))

    //முளை விரல் நீட்டி
    சூரியக் கரம் பிடித்து//

    அட, அட!!

    //பள்ளிப் பருவக்
    குழந்தையாய்..
    குறைந்த மதிப்பெண் கனவில்
    விழுந்ததாய் விதிர்த்து எழுந்து..//

    இது எல்லாருக்குமே வர்ற கனவு போல!! :-))))

    பதிலளிநீக்கு
  16. //நானும் கறுப்பு..
    மனைவியும் கறுப்பு..
    குழந்தைக்கு ஏன் குங்குமப்பூ..//


    அருமை.

    அனைத்தும் அருமையான படைப்புகள்.

    பதிலளிநீக்கு
  17. எட்டும் தேன் சொட்டு!
    அத்தனையுமே ரசனைக்கு உரியவை.

    பதிலளிநீக்கு
  18. அத்தனையும் அருமை.
    //. ஈரப்பூக்கள்...
    ***********************

    ஈரம் கசியும் கன்னங்களை
    திரும்பத் துடைக்கிறேன்..
    கனவில் முத்தமிட்டாயோ..
    முகமருகே குனிந்து
    கண்ணீர் சிந்தினாயோ..
    உன்னை நினைத்துக்
    கிடந்த என் கண்ணீரோ..
    மழை பெய்த சுவர்த்தடமாய்
    ஈரப்பூக்கள் கன்னமெங்கும்..//

    அருமையான படைப்பு.

    திண்ணை உயிரோசையில் வந்தமைக்கு வாழ்த்துக்கள் தேனம்மை.

    பதிலளிநீக்கு
  19. அத்தனை கவிதைகளும் அருமை..... அதிலும் தேநீர் குடிகாரி..... ஓ!

    பதிலளிநீக்கு
  20. அருமையான படைப்பு.

    ஐந்தும் ஆறும்.. அருமை..

    பதிலளிநீக்கு
  21. தேநீர் குடிகாரி ??
    நல்ல வசவுச் சொல் தந்ததற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  22. குடிகாரர்களைத் திட்டும்
    போதெல்லாம் உள் கேலி.,
    ”நீ யாராம்... போடீ
    தேனீர் குடிகாரி என்று..”

    ஈரப்பூக்கள்...

    ம்ம்ம்ம் அருமை அக்கா....

    பதிலளிநீக்கு
  23. நன்றி ராமலெக்ஷ்மி., ரமேஷ்., ஆர் ஆர் ஆர்., சாரல்., கீதா., நேசன்., வசந்த்., பிரபாகரன்., ஹேமா., வினோ., பாலாஜி., மாணவன்., செந்தில்குமார்., ( தனித்தனியா போட்ட நாளாகுமே செந்தில்..:)) மேலும் நான் கமெண்டை வெளியிட நேரம் ஆகிவிட்டது .. எனவே தான் ஓட்டு அதிகமாய் கமெண்ட்ஸ் இல்லாமல்.. இருந்து இருக்கு).,ஜெயந்த., அக்பர்., ஹுஸைனம்மா., குமார்., ரிஷபன்., ஜிஜி., லெக்ஷ்மி நாரயன்., சிவா., சிவகுமாரன்., செந்தில்

    பதிலளிநீக்கு
  24. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...