புராண இதிகாச நாயகி நாயகர்களின் அருங்குணங்கள்
பண்பு நிறைந்த பாத்திரங்கள்
செய்நன்றி மறவாத கர்ணன், பக்தி நெறியில் விஞ்சும் ஆஞ்சநேயர், தருமத்தின் காவலர் தருமர், உண்மையின் மறு உரு அரிச்சந்திரன், உலகோர் பசிப்பிணி தீர்த்த மணிமேகலை. ஆகியோர் பற்றியது.
நம்முடைய இதிகாசங்களிலும் புராணங்களிலும் நீதியும் நேர்மையும் உத்தம குணங்களும் கொண்ட இலட்சிய மனிதர்கள் படைக்கப்பட்டிருக்கின்றார்கள். அவர்களின் வாழ்வு மற்றும் நெறிமுறைகள் அனைவரும் பின்பற்ற வேண்டிய ஒன்றாகும். அவர்களில் சிலரை இங்கு காண்போம். செய்நன்றி மறவாத கர்ணன், பக்தி நெறியில் விஞ்சும் ஆஞ்சநேயர், தருமத்தின் காவலர் தருமர், உண்மையின் மறு உரு அரிச்சந்திரன், உலகோர் பசிப்பிணி தீர்த்த மணிமேகலை. ஆகியோர் இன்றும் நாம் பின்பற்ற வேண்டியவர்கள்.
கர்ணன் :- குந்தி தேவிக்கும் சூரியனுக்கும் மகனாகப் பிறந்தவர் கர்ணன். ஆனால் அதிரதன் என்ற தேரோட்டியும் அவர் மனைவி ராதையும் கர்ணனைத் தங்களது மகனாக வளர்த்தனர். ஒரு போட்டியில் அரசர்கள் மட்டுமே பங்கெடுக்க வேண்டும் என்று அர்ச்சுனன் கர்ணனை அவமானப் படுத்தியபோது துரியோதனன் நட்புக் கரம் கொடுத்து கர்ணனை அங்கத நாட்டு அதிபதியாக்கி கௌரவம் அளித்தார். எனவே கர்ணன் தனது உடன்பிறந்த சகோதரர்களுக்குள்ளே குருஷேத்திரப் போர் நடக்கும்போதும் அவர்கள் பக்கம் வந்து சேர்ந்து கொள்ளும்படி கிருஷ்ணரே தூது வந்தபோதும் துரியோதனன் பக்கம் துணை இருந்து செஞ்சோற்றுக் கடன் தீர்க்கப் போராடினார். கர்ணன் சிறந்த கொடையாளி. தனது கவச குண்டலங்களை இந்திரனுக்கும், இறக்கும்போது தன்னுடைய தங்கப் பல்லை பிராமணராக வந்த கிருஷ்ணருக்கும் தானம் அளித்த கொடையாளி. எந்தச் சூழ்நிலையிலும் செய் நன்றியை மறவாத கர்ணன் நாம் கொண்டாடப்பட வேண்டியவர் ஆவார்.
ஆஞ்சநேயர் :- அஞ்சனாதேவிக்கும் கேசரிக்கும் சிவபெருமானின் அம்சமாகப் பிறந்தவர் ஆஞ்சநேயர். சொல்லின் செல்வர். ராமநாமத்தை ஸ்தோத்திரம் செய்வதில் பிரியர். சீதையைக் கண்டுபிடிக்க ராமர் வானர அரசன் சுக்ரீவன் உதவியை நாடியபோது அவரின் அமைச்சராக இருந்த ஆஞ்சநேயர் ராமரின் பால் மிகுந்த ப்ரேமை கொண்டார். இலங்கைக்குச் சென்று சீதையைக் கண்டு அசோகவனத்தைத் தீக்கிரையாக்கி வந்து ராமரிடம் கண்டேன் சீதையை எனத் தெரிவித்தர். ராமர் பட்டாபிஷேகத்திற்குப் பிறகு ராமரின் பால் மாறாத பக்தி கொண்டமையால் சீதை அளித்த முத்து ஹாரத்தை உடைத்துக் கடித்துப் பார்த்து அதில் ராமர் இல்லையே என்று கூறினார். அப்போது ராமரைக் காட்டும்படி சீதை கூற தன் நெஞ்சையே அகழ்ந்து ராமரைக் காண்பித்த பக்தி நெறி மிக்கவர். ராமநாமம் ஜெபம் செய்யப்படும் இடங்களில் எல்லாம் இந்த சிரஞ்சீவி இருப்பார். இவர்போல் இறைவன் பால் ஆழ்ந்த பக்தி செய்க.
தருமர்:- பாண்டவர்கள் ஐவரில் மூத்தவர். நியாய தருமப்படி நடப்பவர். ஒரு முறை ஒரு குளத்தில் நீரருந்தி தருமரின் சகோதரர்கள் நால்வரும் மயங்கிவிழ அதற்குக் காரணமான யட்சனின் வினாக்களுக்கு விடையளித்தார் தருமர். அப்போது யட்சன் அப்பதில்களில் திருப்தியடைந்து ஒரே ஒருவரை மட்டுமே உயிர்ப்பிக்க முடியும் என்றபோது நகுலனை உயிர்ப்பிக்கக் கேட்டார். யட்சன் காரணம் கேட்டபோது குந்தி மாதாவின் புதல்வனான தான் உயிரோடு இருப்பதைப் போல மாத்ரி மாதாவின் புதல்வர் ஒருவர் உயிர்பெற்று எழவேண்டும் என்று சொல்ல யட்சன் தருமரின் நியாய தருமத்தில் மகிழ்ந்து நால்வரையும் உயிர்ப்பித்தார். தருமத்தை சூது கவ்வினாலும் இறுதியில் தர்மமே வெல்லும் என்றுணர்க.
அரிச்சந்திரன்:- வாய்மை தவறாத சூரிய குல அரசர்.
ஒரு முறை அவரை சோதிக்க விசுவாமித்திர முனிவர் தனது கனவில் அரிச்சந்திரன் நாட்டைத் தருவதாக வாக்களித்ததாகக் கூறினார். அதைக் கேட்ட அரசன் நாட்டை விட்டு மனைவி மகனையும் தன்னையும் விற்று தட்சணையாகக் கொடுத்து வெளியேறினார். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற மயானத்தில் வேலை செய்தார் அரிச்சந்திரன். அப்போது அவரது மகன் பாம்பு கடித்து இறக்க அடக்கம் செய்ய வந்த மனைவி சந்திரமதியிடமே அதற்கானவற்றைக் கொடுத்தால்தான் செய்ய இயலும் என்று சொல்ல மனைவி தனது பாதி ஆடையையும் கொடுக்க வந்தார். அதைக் கண்டு பதறிய விஷ்ணுவும் தேவர்களும் விசுவாமித்திரரும் வந்து அரிச்சந்திரன் எந்த சூழ்நிலையிலும் உண்மையையே பேசுவதை உணர்ந்து மகனை உயிர்ப்பித்து நாட்டையும் அளித்தனர்.
என்றும் வாய்மையே வெல்லும்.



வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!