எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 24 ஜூன், 2022

எவர்க்ரீன் பாட்டி எஸ் என் லட்சுமி

 எவர்க்ரீன் பாட்டி எஸ் என் லட்சுமி


ஹீரோவாகவோ ஹீரோயினாகவோ ஆகவேண்டும் என்ற தீவிரக் கனவுகளுடன் ஊரை விட்டு ஓடிவரும் எல்லாரையுமே சினிமா உலகம் பூச்செண்டு கொடுத்து வரவேற்பதில்லை. வில்லனாக அறிமுகமானவர் சூப்பர் ஸ்டார் ஆவதும், காமெடியனாக அறிமுகமானவர் ஹீராவாக ஆவதும் சினிமாவில் சாத்தியமே என்றாலும் கிடைக்கும் ரோலில் நடித்து வாழ்க்கைப் படகை ஓட்டிச் சென்றவரே அநேகம்.

அப்படி அறிமுகமான ஒரே ஒரு படத்தில் மட்டும் இளம்பெண்ணாக நடித்தவர், மூச்சைப் பிடித்துக் கொள்ளுங்கள் கிட்டத்தட்ட 58 – 60 வருடங்கள் எவர்க்ரீன் அம்மாவாகப் பாட்டியாக நடித்துச் சென்றவர் நடிகை திருமிகு எஸ் என் லட்சுமி அவர்கள்.

இவர் 1934 இல் பிறந்தவர். விருதுநகர் அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த நாராயணன் பழனியம்மாள் தம்பதியின் பதிமூன்றாவது குழந்தை. தந்தை மறைவுக்குப் பின் கூடப் பிறந்தவர்கள் வாழ்வாதாரத்துக்காகக் கல் உடைக்க இவர் 6 வயதிலேயே நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். 11 வயதில் பாய்ஸ் கம்பெனி நாடகக் குழுவுடன் சென்னைக்குச் சென்றார்.

திங்கள், 20 ஜூன், 2022

பொதிகையின் மங்கையர் சோலையில் ஒரு மலராக.

 வாராவாரம் சனிக்கிழமை இரவு ஒன்பது மணிக்குப் பொதிகைத் தொலைக்காட்சியில் நடைபெறும் நிகழ்ச்சியின் பெயர் மங்கையர் சோலை. 





இந்நிகழ்வில் பங்குபெறும்படி திரு. விஜயகிருஷ்ணன் அவர்கள் அழைத்திருந்தார்கள். ஒவ்வொரு வாரமும் அறிமுகமாகும் பெண்கள் வித்யாசமான துறைகளைச் சார்ந்தவர்கள் மட்டுமல்ல. வயது வரம்பில்லாமல் விதம்விதமான சாதனைகளைச் செய்தவர்களும் கூட. 

புதன், 15 ஜூன், 2022

பாண்டியனைத் துரத்திய பிரம்மஹத்தி

 பாண்டியனைத் துரத்திய பிரம்மஹத்தி


பாண்டிய மன்னன் ஒருவன் அறியாமல் ஒரு பாவம் செய்தான். அதனால் அவனைப் பிரம்மஹத்தி துரத்தியது. ஆனால் அவன் பக்தியைக் கண்டு கடவுளே அந்தப் பிரம்மஹத்தியிடமிருந்து தப்பிக்கும் உபாயத்தை அப்பாண்டிய மன்னனுக்கு அருளினார். அது என்ன கதை என்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே!.

எட்டாம் நூற்றாண்டில் பாண்டிய நாட்டை வரகுணன் என்ற மன்னன் ஆட்சி செய்து வந்தான். இவனுடைய பாட்டனார் சடையவர்மன். இவனது தந்தை இரண்டாம் இராஜசிம்மன். சிவபக்தியில் சிறந்தவன். கோயில்களுக்குப் பொன்னும் நிதியமும் அளித்துத் திருப்பணிகள் செய்தவன். கோயில்களில் நித்தமும் திருவிளக்கு எரிந்திட இறையிலி அளித்து ஆவன செய்தவன்.

இவனுடைய சமயத் தொண்டுகளைச் சிறப்பித்து மணிவாசகர்,பட்டினத்தடிகள், நம்பியாண்டார் நம்பி ஆகியோரும் கூடப் புகழ்ந்து பாடி இருக்கிறார்கள். சிவ பக்தர்களுக்கு இடையூறு நேராமல் காத்தவன். எப்பொருளிலும் சிவனைக் கண்டு வணங்கியவன். இப்படிப்பட்ட மன்னனுக்கும் ஒரு சோதனை வந்தது. அதுவும் அவன் அறியாமல் செய்த தவறால் வந்தது.

வியாழன், 9 ஜூன், 2022

ஒற்றைப் பெற்றோர் எதிர்கொள்ளும் சவால்கள்

ஒற்றைப் பெற்றோர் எதிர்கொள்ளும் சவால்கள்


”தனியே தன்னந்தனியே நான் காத்துக் காத்து நின்றேன்” என்று ஒரு பாடல் ரிதம் படத்தில் வரும். அந்தப் படத்தில் மீனா ஒரு சோலோ பேரண்டாக ஒரு குழந்தையை வளர்த்து வருவார். அதுவும் அவர் பெற்ற குழந்தை அல்ல. தத்து எடுத்து வளர்க்கும் குழந்தை என்பது க்ளைமேக்ஸில்தான் தெரியவரும்.

பொதுவாக சிங்கிள் பேரண்ட், சோலோ பேரண்ட் என்கின்ற வார்த்தைகள் தனித்துக் குழந்தைகளை வளர்த்து வரும் ஒற்றைப் பெற்றோரான தந்தையுமான தாயைக் குறிப்பதாகத் தோன்றினாலும் இக்காலத்தில் அது தாயுமான தந்தையையும் சுட்டுகிறது. எடுத்துக்காட்டாக நடிகர் இயக்குநர் பார்த்திபன் தன் குழந்தைகளைத் தனியாளாக வளர்த்துத் திருமணம் செய்துவைத்த நிகழ்வைச் சொல்லலாம்.

ஓரிரு குழந்தைகளோடு தனித்து வாழும் விதவை, மனைவியை இழந்தவர், விவாகரத்துப் பெற்றவர், திருமணம் செய்துகொள்ளாமல் முன்னர் சேர்ந்து வாழ்ந்து இப்போது பிரிந்தவர்கள் மட்டுமல்ல, திருமணமாகாமல் தனித்து வாழ்ந்து ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்ப்பவரும் ( சுஷ்மிதா சென் போன்ற மாடல் மங்கையர்) இந்த ஒற்றைப் பெற்றோர் குடும்பத்தில் அடங்குவர்.

சனி, 4 ஜூன், 2022

பெண்பூக்கள் ஓவியங்கள் -1.

 எனது பெண் பூக்கள் நூலுக்குத் தோழியும் ஆர்டிஸ்டுமான திருமதி மீனாக்ஷி மதன் சில ஓவியங்கள் வரைந்து கொடுத்தார். அது ஆழி பதிப்பகத்தின் மூலம் வெளியிடப்படுவதாக இருந்தது. திரு செந்தில்நாதன் அதற்கான முயற்சிகள் எடுத்திருந்தார். ஏதோ ஒரு காரணத்தால் அது ஓவியங்களுடன் வெளியாகவில்லை

இது நடந்து பத்து வருடங்கள் இருக்கும். அவர் வரைந்த ஓவியங்கள் என்னிடம் அப்படியே இருந்தன. அவற்றை இன்று இங்கே பகிர்வதில் பெருமகிழ்வு கொள்கிறேன்

இவற்றுக்குப் பொருத்தமான எனது கவிதைகளின் இணைப்பையும் தந்திருக்கிறேன். காதலர் தினத்தில் வெளியாகவிருந்த இந்நூல் மாபெரும் பேர் பெற்றிருக்கும். ஏனோ அந்த வாய்ப்பை இழந்துவிட்டது. இருந்தாலும் என் வலைப்பூவின் மகத்துவமும் குறைந்தது அல்லவே. :) 

இதுதான் பெண் பூக்களுக்கான அட்டைப்படம்

போகன் வில்லாப் பூக்கள்

http://honeylaksh.blogspot.com/2009/10/blog-post_28.html



 

வியாழன், 2 ஜூன், 2022

நாதத்தால் வென்றிட்ட சீர்காழி கோவிந்தராஜன்

 நாதத்தால் வென்றிட்ட சீர்காழி கோவிந்தராஜன்


மணியனின் தொடர்கதை ஒன்றில் ”என்னைவிட்டு ஓடிப்போக முடியுமா. இனி முடியுமா. நாம் இருவர் அல்ல ஒருவர் என்று தெரியுமா” என்று ஹீரோ ஹீரோயினுக்காக ரேடியோப் பாடல் ஒன்றைப் போடுவார். அதன்பின் சிலோன் ரேடியோவில் கேட்ட ஸ்ட்ராங்கான வாய்ஸ் திரு. சீர்காழி கோவிந்தராஜனுடையது. டேப்ரெக்கார்டரில் சங்கே முழங்கு என்று கேட்ட கம்பீரக் குரல்.

எங்களுக்கெல்லாம் மார்கழி என்றாலே சீர்காழிதான். அரைப்பரிட்சை நடக்கும் சமயம் மார்கழி திருப்பள்ளி எழுச்சி ஆரம்பித்து விடும். அப்போது கோயில்களில் லௌட் ஸ்பீக்கர்களில் திருவிளையாடலும், சீர்காழியில் தெய்வீகக் குரலும் கைகோர்த்து நமை எழுப்பும். குளிரும் பனியும் சூழ்ந்து நின்றாலும் விடியற்காலையில் குளித்துக் கோயிலுக்குச் சென்று தரிசனம் முடித்தபின், சீர்காழியின் முழங்கும் குரலோடு சுடச் சுட வெண்பொங்கல் சாப்பிடுவது இதம்.

“தமிழிசையைப் பரப்பியதில் பெரும் பங்கு வகித்தவர்’ எனத் திரு எம். ஏ. எம் அவர்களால் பாராட்டப்பட்டவர். சென்ற நூற்றாண்டில் தமிழிசைச் சங்கங்கள் தோன்றி தமிழை வளர்த்ததுபோல் சீர்காழி போன்றோர்கள் திரையிலும் கூட இனிய, இலக்கண சுத்தமான தமிழ்ப் பாடல்களைப் பாடி வெகுஜனத்தின் மனம் கவர்ந்தனர்.

Related Posts Plugin for WordPress, Blogger...