எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 30 டிசம்பர், 2023

12.ஐவகைப் புற்றுநோய்களும் சிகிச்சைமுறைகளும்

 12.ஐவகைப் புற்றுநோய்களும் சிகிச்சைமுறைகளும்


மகளிர்க்கு ஏற்படும் நோய்களில் முக்கியமானவை மார்பகப் புற்றுநோய்களும், கருப்பைப் புற்றுநோய்களும் ஆகும். கருப்பைப் புற்றுநோய் ஏற்படுவதற்கு எது காரணம் என்று இனம் கண்டுபிடிக்கப்படவில்லை. மரபுரீதியான கோளாறுகள், ஹார்மோன் குறைபாடு, உடல் பருமன் போன்ற காரணங்களால் கர்ப்பப்பைக் கட்டிகள் உருவாகின்றன. கர்ப்பப்பை கட்டியின் அளவு, எண்ணிக்கை ஆகியவற்றைப் பொறுத்து இதன் அறிகுறிகள் மாறுபடுகின்றன. இவற்றில் தீங்கற்ற கட்டிகளும், தீங்கு உருவாக்கும் புற்றுநோய்க் கட்டிகளும் அடக்கம்.

இளம்பெண்களை விட அறுபது வயதான பெண்களே கருப்பைப் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். பாலூட்டும் தாய்மார்களுக்கு மார்பகப்புற்றும் கருப்பைப்புற்றும் ஏற்படுவது குறைவு என்கிறது ஒரு புள்ளிவிபரம். பொதுவாகத் தாய்ப்பால் ஊட்டும்போது கர்ப்பப்பையின் வாய் சுருங்கித் தசைகள் இயல்பு நிலைக்குத் திரும்புகின்றன. உடலுறவின் போது ரத்தக்கசிவு, மாதவிடாய் முற்றிலும் நின்ற சில ஆண்டுகளுக்குப் பிறகு இரத்தப்போக்கு, மாதவிடாய்க்கு இடையே இரத்தப் போக்கு ஆகியன ஏற்பட்டால் உடனடியாக மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

ஐந்து முக்கிய மகளிர் புற்றுநோய்கள் பெண்ணின் இனப்பெருக்க உறுப்புக்களிலேயே தோன்றுகின்றன. பெண்ணின் இடுப்புக்குள் வயிற்றுக்குக் கீழே மற்றும் இடுப்பு எலும்புகளுக்கு இடையில் உள்ள உறுப்புகளில் ஏற்படும் புற்று நோய்கள் தீவிர விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை. முதலாவது கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய், இது கருப்பை வாயில் தொடங்குகிறது. இது கருப்பையின் கீழே உள்ள குறுகிய முனையாகும். இரண்டாவது கருப்பைப் புற்று நோய் கருப்பையின் ஒவ்வொரு பக்கத்திலும் அமைந்துள்ள கருப்பைக் குழாயில் ஏற்படுகின்றது.

மூன்றாவது கருப்பைப் புற்றுநோய் குழந்தை வளரும் கருப்பையிலேயே ஏற்படுகின்றது. நான்காவது யோனியில் அதாவது கருப்பையின் அடிப்பகுதிக்கும் உடலின் வெளிப்புறம் உள்ள யோனித் துவாரத்திற்கும் இடைப்பட்ட குழல் பகுதியில் உருவாகிறது. ஐந்தாவது பெண் பிறப்பு உறுப்பான யோனியின் வெளிப்புறப் பகுதில் (லாபியா மினோரா என்னும் உள் மடிப்பு இதழ், லாபியா மஜோரா என்னும் வெளி மடிப்பு இதழ் மற்றும் பெரின்னியம் எனப்படும் யோனித்துவாரத்துக்கும் மலத்துவாரத்துக்கும் இடைப்பட்ட பகுதியில்) ஏற்படுகின்றது. இது வல்வார் புற்றுநோய் எனப்படுகின்றது. 

அடினோகார்சினோமா, சர்கோமா ( லியோமியோசர்கோமா, எண்டொமெட்ரியல் ஸ்ட்ரோமல் சர்கோமா) ஆகியன கருப்பப் புற்றுநோயின் வகைகள். கருப்பைக் கட்டிகள் அவற்றின் அசாதாரண உயிரணு வளர்ச்சியின் தோற்றத்தின்படி மூன்றாகப் பிரிக்கப்படுகின்றன. மேற்பரப்பு எபிடெலியல் கருப்பைப் புற்றுநோய்கள், கிருமி உயிரணு கட்டிகள் ( முட்டைகளாக உருவாகும் உயிரணுக்களில் ஏற்படும் கட்டிகள் ), ஸ்ட்ரோமல் கட்டிகள் (இனப்பெருக்க ஹார்மோன்களை உற்பத்தி செய்யும் கருப்பையில் ஏற்படும் கட்டிகள்).

அசாதாரண ரத்தப் போக்கு, கடுமையான வயிறு மற்றும் இடுப்பு வலி, பசியின்மை அல்லது சாப்பிட ஆரம்பிக்கும்போதே வயிறு நிறைந்துவிட்ட உணர்வு, செரிமானக் கோளாறு, வயிற்று உப்புசம், வாந்தி, மயக்கம், அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு, அதீத சோர்வு, வயிற்று வீக்கம் மற்றும் மலச்சிக்கல் ஆகியன கருப்பைப் புற்றின் அடையாளங்கள் ஆகும்.

கருப்பைப் புற்றில் நான்கு நிலைகள் உள்ளன. ஸ்டேஜ் ஒன்று மற்றும் இரண்டு  என்று கூறப்படும் கருப்பைப் புற்றுக்கு அறுவை சிகிச்சை பரித்துரைக்கப் படுகின்றது. அது பரவி இருப்பதைப் பொறுத்துச் சில கேஸ்களில் கீமோதெரஃபி செய்யப்படுகின்றது. வலியுடன் அதிக அளவு ரத்தப் போக்கு ஏற்பட்டால் அது கருப்பையில் உள்ள அசாதாரண உயிரணு வளர்ச்சியின் அறிகுறியாக இருக்கலாம். கருப்பையில் உள்ள பல்வேறு வகையான செல்கள் குழந்தையைச் சுமக்க உதவுகின்றன. இந்த செல்கள் அசாதாரணமாக வளரும்போது ஃபைப்ராய்டுகள், கருப்பை பாலிப்கள், அடினோமயோசிஸ் போன்ற நிலைகள் ஏற்படலாம். இவற்றுக்கு மருந்து மற்றும் அறுவை சிகிச்சைகளே தீர்வாகின்றன. ஸ்டேஜ் மூன்று மற்றும் நான்கில் முழுமையாகக் கருப்பை அகற்றப்படுகிறது.


முழுமையான இடுப்பு பரிசோதனை மற்றும் ட்ரான்ஸ்வஜினல் அல்ட்ராசவுண்ட் மற்றும் சிஏ-125 இரத்தப் பரிசோதனை செய்யப்படுகின்றது. டி வி யு எஸ் என்பது ஒலி அலைகளைப் பயன்படுத்தி கருப்பை, ஃபலோப்பியன் குழாய்கள் மற்றும் கருப்பைகளை யோனிக்குள் அல்ட்ராசவுண்ட் வாண்டை வைத்துப் பார்க்கும் சோதனை ஆகும். கருப்பை நார்த்திசுக் கட்டிகள், கருப்பை பாலிப்கள், கருப்பைப் புற்றுநோய் (சர்கோமா), எண்டோமெட்ரியோசிஸ் கருப்பை அகப்படலம், இடுப்பு அழற்சி நோய், கருப்பைச் சரிவு, கருவுறாமை ஆகியவற்றின் காரணங்களையும் இவற்றின் மூலம் அறியலாம். 

நார்த்திசுக் கட்டிகள் பெரும்பாலும் இனப்பெருக்கம் மற்றும் மாதவிடாய் நின்ற பெண்களுக்கு ஏற்படுகின்றன. பெரிய நார்த்திசுக்கட்டிகள் குடல், சிறுநீர்ப்பை மற்றும் இரத்த நாளங்கள் உட்பட வயிறு மற்றும் இடுப்புப் பகுதியில் உள்ள மற்ற உறுப்புக்களை அழுத்துகின்றன. சிறுநீர் ஓட்டத்தைக் குறைப்பது, கால்களில் இரத்தக் கட்டிகளை ஏற்படுத்துவது போன்ற தீங்கு விளைவிக்கும் நார்த்திசுக் கட்டிகள் கருப்பைக் குழியைச் சிதைக்கக் கூடும். இது இளம்பெண்களுக்குக் கர்ப்பம் தரிப்பதில் சிரமத்தை உண்டாக்கும்.

நார்த்திசுக் கட்டிகளைஅழிக்க எண்டோமெட்ரியல் நீக்கம், ஃபோகஸ்ட் அல்ட்ராசவுண்ட் ட்ரான்ஸ்யூசர் மூலமாக திசுக்களின் வளர்ச்சியை அழிக்க ஒலி அலைகளை அனுப்புதல், கருப்பை நார்த்திசுக்கட்டி எம்போலைசேஷன், லேப்ராஸ்கோபிக் அல்ட்ராசவுண்ட், மயோமெக்டோமி, முடிவில் கருப்பை நீக்கம் ஆகியன செய்யப்படுகின்றன.

இடுப்புப் பரிசோதனையில் அல்ட்ராசவுண்ட் ஸ்கேனிங் கருப்பையின் உட்புறத்தை ஒலி அலைகள் மூலம் படமாக உருவாக்குகிறது. ஹிஸ்டரோஸ்கோபி மூலம் மெல்லிய ஒளிரும் குழாய்கள் யோனிக்குள் செருகப்பட்டு கருப்பையின் உட்புறங்கள் படமாக்கப்படுகின்றன. எம் ஆர் ஐ ஸ்கேன் கருப்பை மற்றும் இடுப்புப் பகுதியில் உள்ள இனப்பெருக்க உறுப்புக்களின் படத்தை எடுக்கிறது.

மார்பகப் பரிசோதனை, வயிற்றுப் பரிசோதனை மற்றும் இடுப்புப் பரிசோதனை ஆகியன மூன்று வருடங்களுக்கு ஒருமுறையாவது செய்து கொள்ள வேண்டும். இதில் வெளிப்புறப் பிறப்புறுப்பு, யோனி, கருப்பை வாய் மற்றும் மலக்குடல் பரிசோதனையும் அடங்கும். பேப் ஸ்மியர் பரிசோதனை மூலம் கர்ப்பப்பை வாய் மற்று பிறப்புறுப்பு ஸ்மியர் ஸ்க்ரீனிங்கிற்காக எடுக்கப்படுகிறது. ஆய்வுப் பகுப்பு செய்ய பயாப்ஸி அல்லது இன்னும் நுண்ணியமாகக் கணிக்க டி & சி எனப்படும் அறுவை சிகிச்சை செய்யப்படுகின்றது.

கருப்பைக் கட்டிகள் சிறியதாக இருக்கும்போது லேப்ராஸ்கோபியும் பெரிதானால் லேபரோடமியும் செய்யப்படுகின்றது. வீரியம் மிக்க புற்றுநோய்க் கட்டியாக இருந்தால் கதிர்வீச்சு சிகிச்சை, கீமோதெரஃபி, ஹார்மோன் தெரஃபி மற்றும் இம்யூனோதெரஃபி ஆகியன மேற்கொள்ளப்படுகின்றன. அந்தக் கட்டியானது பகுதியாகவோ முழுமையாகவோ நீக்கப்பட்டுக் கருப்பைகள் விடப்படுகின்றன. சிலசமயம் ஒரு கருப்பை அகற்றப்பட்டு இன்னொரு கருப்பை விடப்படுகிறது. இதன் மூலம் கர்ப்பம் தரிக்கலாம். ஆனால் புற்றுநோய் பாதிப்பு அதிகம் இருந்தால் மிக அரிதாக இரண்டு கருப்பைகளும், ஃபலோப்பியன் குழாயும் முழுமையாக அகற்றப்படுகின்றன.

பாலியல் ரீதியாகப் பரவும் தொற்று நோய்கள், மார்பக, கருப்பை வாய் மற்றும் எண்டோமெட்ரியல் புற்றுநோய் ஆகியவற்றைத் தடுக்க ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுதல், உடல் நலத்தைப் பாதுகாத்தல், சுகாதாரத்தைப் பேணுதல் வேண்டும். பதப்படுத்தப்பட்ட, அதிகம் பொரித்த உணவுகளைத் தவிர்த்தல், அதிகமாகத் தண்ணீர் குடித்தல், பழங்கள் காய்கறிகள் நிறைந்த உணவை உண்ணுதல், உடற்பயிற்சி மற்றும் யோகா செய்தல் வேண்டும்.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...