எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 13 நவம்பர், 2023

திருமணத் தடை நீக்கும் புரவி எடுப்பு

திருமணத் தடை நீக்கும் புரவி எடுப்பு

ஸ்ரீ நரியங்குடி கருங்குளம் பூரண புஷ்கல சமேத ஸ்ரீ ஆதினமிளகி அய்யனார் காட்டுக் கருப்பர் கோயில்

காடுகளையும் கழனிகளையும் காக்கும் ஊர்க்காவல் தெய்வங்கள்தான் அய்யனாரும், கருப்பரும். கம்மாய்க் கரையோரம் அமைந்த இவ்வகைக்கோவில்கள். சிவகங்கைப் பகுதியில் அதிகம். இவை பல்வேறு இனத்தாருக்கும் குலதெய்வக் கோயில்களாகத் துலங்குகின்றன. அவற்றில் ஒன்று நரியங்குடியில் உள்ள பூரண புஷ்கல சமேத ஸ்ரீ ஆதினமிளகி அய்யனார் காட்டுக்கருப்பர் கோவில்.

இங்கே கருப்பருக்காகப் புரவி எடுப்பும் அய்யனாருக்காக சிவன் ராத்திரியும் கொண்டாடப்படுவது விசேஷம். அய்யனாரையும் கருப்பரையும் குலதெய்வமாகக் கொண்டவர்கள் வெவ்வேறு ஊர்களில் இருந்தாலும் புரவி எடுப்பிலும் சிவன்ராத்திரியிலும் கலந்து கொள்ள இங்கே வருவார்கள்.

பட்டமங்கலத்தில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஊர் நரியங்குடி.. அங்கே கடந்த மாதம் புரவி எடுப்பு நடைபெற்றது. இப்புரவி எடுப்பு காடு கழனி செழிக்க மழை வேண்டி நிகழ்த்தப்படுகின்றது. இதில் முதல்நாள் இரண்டு பூதங்களும் இரண்டு புரவிகளும் அத்துடன் பத்துப் பசுக்களும், ஒரு காளையும் கொம்பு, கொட்டு, சுருட்டி, எக்காளம் ஒலிக்கக் சுமந்து வந்து மந்தையில் வைக்கப்படுகின்றன.

மறுநாள் கொடி, குடை, ஆலவட்டம் சூழ கருப்பருடன் இவை அனைத்தும் மேளதாளம், வாணவேடிக்கையோடு ஊர்வலமாக ஊரைச் சுற்றி வந்து கோவிலில் சேர்க்கப்படுகின்றன. அங்கே அய்யனார், கருப்பர், மற்றும் பரிவார தெய்வங்களுக்கு வண்ண மாலைகள் சாத்தி அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்படுகின்றது.

இந்த ஊர்வலத்தில் ஊர்மக்கள் புரவிகள், பூதங்கள், கருப்பருக்குச் சிறப்புச் செய்கின்றார்கள். திருமண வேண்டுதல் செய்து கொண்ட இளைஞர்கள் இதில் பசுக்களையும் காளையையும் தங்கள் தலைமேல் ஒருபீடத்தில் வைத்துச் சுமந்து வந்து கோயிலில் சேர்க்கின்றார்கள்.

இப்புரவி எடுப்பு நான்கு நிகழ்வுகளாக நடைபெறும். புரவி எடுப்பு சம்பந்தமாக நாள் குறிப்பதை நாள் கொட்டுதல் என்பார்கள். அதற்கு அடுத்துப் புரவி செய்ய வேளாரிடம் அல்லது குயவரிடம் பிடிமண் எடுத்துக் கொடுப்பதை சேங்கை வெட்டுதல் என்பார்கள். அடுத்துப் புரவி வனைவதை உருவாரம் எடுத்தல் என்பார்கள். முடிவில் குறித்த நாளில் புரவிகள், பூதங்கள் சூழ கருப்பரைக் கோவிலில் கொண்டு வருவதைப் புரவி எடுத்தல் என்பார்கள். இப்புரவி எடுப்பு இரு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. கோயிலைச் சுற்றித் தீர்த்தப்பூரணி ஐயர் ஊரணியும், முனி ஐயா தோப்பு ஊரணியும் உள்ளது.

வைகாசியில் கருப்பருக்குப் புரவி எடுப்பு என்றால் மாசியில் அய்யனாருக்கு சிவன் ராத்திரி சிறப்பு. அன்று இக்கோவிலைக் குலதெய்வமாகக் கொண்டவர்களும், சுற்றி உள்ள ஊர்க்காரர்களும் வண்டி கட்டிக்கொண்டு வந்து இங்கே சமைத்துண்டு பூசைகள் செய்து வழிபடுவார்கள். சிவன் ராத்திரிக்கு அடுத்த நாள் பாரி வேட்டை.கோயிலை அடுத்துள்ள கம்மாய்க்கு அருகிலுள்ள பெரிய புளியமரத்தின் அருகில் பாரி வேட்டைக்கான சம்பிரதாய நிகழ்ச்கள் நடைபெறும்.

இக்கோயிலுக்கு சிவகங்கை மன்னர்களின் மானிய நிலமும் கூட உண்டு. சிவங்கை மன்னர்கள் இப்பகுதிக்கு நரி வேட்டையாட வந்தபோது இங்கே உள்ள மக்கள் அன்புடன் உபசரித்ததால் இக்கிராமத்தை கரும்பூனை ரத்தத்தால் ஓலையில் முறி எழுதி இவ்வூர் மக்களுக்குப் பரிசளித்தாராம். நரியங்குடியைச் சுற்றி உள்ள கட்டுக்கண்பட்டி, அப்பாடிப்பட்டி, ஊடகம் பட்டி, பிராமணப்பட்டி, வேளாண்பட்டி, சாமுத்தம்பட்டி, கல்லுப்பட்டி ஆகிய கிராம மக்களுக்கும் இந்த அய்யனார்தான் குலதெய்வம்.

1934ஆம் வருடம், அதற்குப் பின்னர் 1996 இலும் அடுத்து 2009 இலும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. சென்ற ஆண்டு ஆகஸ்ட் 31, 2022 அன்று ஆவணி மாதம் 15 ஆம் நாள் புதன்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது. நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்த சுமார் 108 குடும்பங்களுக்கு இவர்தான் குலதெய்வம். இக்கோயிலின் திருப்பணிகள் மற்றும் புரவி எடுப்பு ஆகியவற்றுக்கு இவர்கள் பெரும் பங்களிப்புச் செய்துள்ளார்கள். இங்கு விடுதியும் சமையல் கூடமும் உள்ளது. அதைச் சவுக்கை என்கிறார்கள். அங்கே உண்மை மட்டுமே ஒலிக்க வேண்டுமாம்!. தற்போது அது சமுதாயக்கூடமாகவும் செயல்படுகிறது.

இவ்வூருக்குச் சதுர்வேத மங்கலம் என்ற பெயரும் உண்டாம். ஆதீனம் அழகிய அய்யனார், அழகிய அய்யனாரைக் கொண்ட ஆதீனம் அல்லது ஆதீனம் இளகிய அய்யனார் என்பதுதான் மருவி ஆதீனமிளகி அய்யனார் ஆகிவிட்டது என்பது ஆய்வாளர்களின் முடிவு.

கிழக்கு நோக்கி மூன்று நிலை இராஜ கோபுரத்தின் முன் சேமக் குதிரை ஓங்கி உயர்ந்து காட்சி அளிக்கிறது. அதில் பக்கவாட்டில் சுதைச் சிற்பங்களாக விநாயகரும் முருகனும், முன்புறம் அரிவாளோடு கருப்பரும் காட்சி அளிக்கிறார்கள். சேமக்குதிரையின் பின் பக்கம் மதிலை ஒட்டி ஒன்பது அரிவாள்கள் பதிக்கப்பட்டுள்ளன. பார்த்தவுடன் சிலிர்க்கிறது.

உள்ளே நுழைந்தால் அதைவிட அதிகமாகப் புல்லரிக்கிறது. கடந்த ஐந்தாண்டுகளாக எடுத்து வரப்பட்ட பத்துப் புரவிகள் தெற்குப் பக்கத்திலும் , வடக்குச் சுவரில் சாய்ந்து பத்துப் பூதங்களும் பிரம்மாண்டமாகக் காட்சி கொடுக்கிறார்கள். இடப்புறம் சுதைச் திருவாட்சியினுள் முன்னோடி காட்சி அளிக்கிறார். எங்கெங்கும் புரவிச் சத்தம்.. சந்தம்..

இந்தக் கோயிலில் கிழக்கு நோக்கிய இருநிலைக் கர்ப்பக்கிரகத்தில் ஆதினமிளகி ஐயனாரும், வடக்கு நோக்கிக் காட்டுக் கருப்பரும் அருள் பாலிக்கிறார்கள். கோயிலும் திருச்சுற்றும் புராதனக் கல் திருப்பணிகள். இராஜ கோபுரத்தின் மேல்பக்கம் நிலைகளுக்குப் பக்கவாட்டில் துவார பாலகர்கள் கதாயுதத்தோடு சிங்கத்தின் மேல் கால் வைத்தபடி நிற்கிறார்கள். பக்கவாட்டில் பைரவர்களும் பிள்ளையார், முருகனும், அர்த்தநாரீஸ்வரரும், ஹரிஹரனும், நீலவண்ணக் கண்ணனும் மற்றுமுள்ள உக்கிர தெய்வங்களும் காட்சி அளிக்கிறார்கள்.

வடக்கு நோக்கிய குதிரை வீரன், கருப்பர் வாயில் காட்டுக் கருப்பர் சந்நிதிக்கானது. இக்கோபுரத்தின் மேல் மிரட்டும் விழிகள், கொடுவாள் மீசை, அரிவாளோடு கருப்பர் உக்கிரக்காட்சி அளிக்கிறார். உள்ளே சிறு கோபுரங்கள் கொண்ட தனிச் சந்நிதிகளில் பிள்ளையார், முருகன் வள்ளி தெய்வானை மற்றும் பைரவர் அருள் பாலிக்கிறார்கள்

ஆலயத்தின் தெற்குப் பகுதியில் வடக்கு நோக்கிய கோஷ்ட தெய்வங்களாக காட்டுக் கருப்பருக்கு வலப்பக்கம் நொண்டிக் கருப்பர், ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ பேச்சிஅம்மன், ஸ்ரீ ராக்காச்சி அம்மன் அகியோர் ஒரு சன்னிதியிலும், காட்டுக்கருப்பருக்கு இடப்பக்கம் இன்னொரு சன்னிதியில்  சின்னக் கருப்பர்   வீரபத்திரர், சப்த கன்னியர், அரசமுகம், சன்னியாசி ஆகியோரும் காட்சி அளிக்கிறார்கள்.

அய்யனார் சந்நிதிக்கு எதிரே அய்யனாரின் வாகனமான யானையும் அதன்பின் பலிபீடமும் உள்ளது. பக்கவாட்டில் இரு யானைகளும், அய்யனாரின் சந்நிதியின் இருபுறமும் துவாரபாலகர்கள் புடைப்புச் சிற்பமாகக் காட்சி அளிக்கிறார்கள். கருப்பர் சந்நிதியின் முன்னும் சுதையால் ஆன யானைகளும் புரவி எடுப்பில் கொண்டு வந்து வைக்கப்பட்ட அரிவாளும் கதையும் ஏந்திய கருப்பர் சிலைகளும் காட்சி அளிக்கின்றன. அய்யனார் சந்நிதியின் பக்கவாட்டில் ஒன்பது மணிகள் கட்டப்பட்டுள்ளன. பூசை நேரத்தில் அவை ஓங்கி ஒலிப்பது நமக்குள் சன்னதம் பெருக்கும். முன்னோடிக்குப் பக்கவாட்டில் மடைப்பள்ளி உள்ளது..

சதுர்வேத மங்கலம் என்று கூறப்படும் நரியங்குடியில் உள்ள உகந்தம் என்னும் குளத்துக்கு  இராமாயணத்தோடு தொடர்பு உண்டு என்கிறார்கள். இங்கே மிதிலைக் கண்மாய் என்ற ஒன்றும் இருக்கிறது. முழுக்க முழுக்க ஊராரின் பொறுப்பிலேயே கோவில் இருக்கிறது. இக்கோவில் கருப்பர், அய்யனார் பேரில் சிந்து, விருத்தம், அழைப்பு, கொலு முதலிய பாக்கள் யாக்கப்பட்டுள்ளன. வேளார்கள் காலை ஒருவேளை மட்டும் பூசை செய்துவிட்டுப் போவார்கள். எனவே கருங்குளத்தில் வேளாரின் வீட்டை விசாரித்து அறிந்து கொண்டோ அல்லது தொலைபேசி எண் வாங்கித் தொடர்பு கொண்டோ சென்று வணங்கலாம். காவல்காரர் ஒருவரும் இருக்கிறார்.

நெற்கழனிகளைக் காக்கும் அய்யனாருக்குப் பிரியமான விஷயம் அன்னதானம் செய்வது. ஆகையால் ஐயனாரைக் குலதெய்வமாக வணங்கும் அனைவரும் இங்கே வருடாவருடம் வந்து மகேசுவர பூசை நடத்தி அன்னதானம் செய்கிறார்கள். அய்யனாரின் அழகிய ஆதீனத்தைத் தரிசிக்க சிவன்ராத்திரியிலோ, புரவி எடுப்பின் போதோ வந்து பாருங்கள். நாள் முழுவதும் தரிசிக்கலாம். !

எங்கே இருக்கு :- சிவகங்கை மாவட்டத்தில். நரியங்குடி வருவதற்கு காரைக்குடியில் இருந்து திருப்பத்தூர் வந்து அங்கிருந்து பட்டமங்கலம் வந்து கருங்குளம் விலக்குச் சாலையில் வரவேண்டும்.

பட்டமங்கலத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரம்.

தரிசன நேரம். காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை. விழா நாட்களில் காலையிலிருந்து மாலை வரை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...