உலகில் உள்ள பெண் வடிவங்கள் எல்லாம் நம் தாயின் வடிவங்களே என்று கூறும் மந்திரம் ஒன்று உள்ளது. மேலும் நம் மனக்கவலையை நீக்கவும், பந்தபாசங்களை அறுக்கவும், அதே சமயம் ஞானம் கிட்டவும் அம் மந்திரம் உதவுகிறது என்று அறியும்போது வியப்பு மேலிடுகிறதுதானே. அது என்ன மந்திரம் என்று அறிய ஆவலாய் இருக்கிறது அல்லவா! மேலும் அந்த மந்திரம் எப்படி ஒரு மன்னனுக்கும் மனிதனுக்கும் உதவியது என்றும் பார்ப்போம்.
முன்னொரு காலத்தில் சுரதன் என்னும் அரசன் தன்னுடைய நாட்டை ஆண்டு வந்தான். திடீரென அவனுடைய அண்டை நாட்டு மன்னர்கள் அவன் மீது படையெடுத்தனர். அவனுடைய நாட்டை சூழ்ந்து வளைத்து முற்றுகையிட்டனர். எதிர்பாராத அந்தத் திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த மன்னன் அதற்குத் தயாராக தன்னுடைய படையை வைத்து இல்லாததால் தோல்வி அடைந்தான். எனவே நாட்டை விட்டு வெளியேறும்படி ஆயிற்று. மனம் நொந்து அவன் காட்டை அடைந்தான். மரங்கள் சூழ்ந்த அந்த அடர்வனத்துக்குள் மனம் போன போக்கில் நடந்து கொண்டிருந்தான்.
