சமத்துவம் போதித்த சாதுவன்.
கடல் கொந்தளிக்கிறது. அலை தத்தளிக்கிறது. கப்பல் தடுமாறுகிறது. மேலும் கீழும் சதிராடுகிறது. திசைமாறிச் சென்று எதன் மீதோ மோதுகிறது. மிகப் பெரும் பாறையாக இருக்கக்கூடும் அது.
வெளியே எங்கும் அந்தகாரம். எந்தப் பிடிமானமும் கைக்கு அகப்படவில்லை. உடைந்த மரக்கலத்தின் ஒரு துண்டுகூடக் கிட்டவில்லை. இருளைப் பற்றி நீரைச் சுழற்றி நீந்துகிறான் சாதுவன். எங்கெங்கும் நீர். சில்லென்று மேனியெங்கும் விறைக்கிறது. தான் பிழைப்போமா சாவோமா தெரியாது நீரில் தவறி விழுந்த பறவையைப் போலத் தலைதெறிக்க நீந்திக் கொண்டிருக்கிறான் சாதுவன்.
அலை எங்கெங்கோ இழுத்துச் செல்கிறது. கால்கள் சோர்வுறுகின்றன. அவனுடன் பயணித்தவர்கள் எங்கே ?. நாவாய் மோதித் தெறித்ததும் அனைவரும் எங்கெங்கோ சிதறிப் போனார்கள். கண்கள் இருள கைகளும் கால்களும் சோர தன் அன்பிற்குரிய மனையாட்டி ஆதிரையின் முகத்தை நினைத்து ஏங்கியபடி மயக்கத்துக்குப் போனான் சாதுவன்.
ஆமாம் யார் இந்த சாதுவன்.? அவன் ஏன் கப்பலில் பயணித்தான். ஏன் விபத்துக்கு ஆட்பட்டான். பார்க்கப் போனால் கண் போன போக்கிலும் கால் போன போக்கிலும் மனம் போன போக்கிலும் வாழ்ந்த ஒருவன் சாதுவன். அவன் எப்படி சமத்துவம் போதித்தான் அதுவும் யாருக்குப் போதித்தான் ?
