என் மனம் கவர்ந்த பெண்மணி தேனம்மைலெக்ஷ்மணன்
தேனம்மையின் பூர்வீகம் காரைக்குடி. மதுரை ஃபாத்திமாக் கல்லூரியில் இளங்கலைப் படிப்பு. கல்லூரியில் நிறைய எழுதிப் பரிசுகள் வாங்கிக் குவித்த இவர் திருமணமானபின் எழுத்தை மறந்தே போனார். அதன் பின் 24 ஆண்டுகள் கழித்து வலைப்பூக்கள் ஆரம்பித்து எழுதிவருகிறார்.
இவரின் எழுத்து
ராஜபாட்டையில் எடுத்தவுடன் எல்லாமே ரோஜாப்படுக்கைகளாகவே இல்லை. எதற்காக
எழுதுகிறாய்? ஏன் எழுதுகிறாய் ? அதிலும் இதை ஏன் எழுதுகிறாய்? இதை நீ ஏன் சொல்ல
வேண்டும், இதனால் உனக்கு என்ன பயன்? என்றவிதமான முட்களும் கற்களும் குத்தும்
பாதையில்தான் செல்ல வேண்டி இருந்தது. தடை ஓட்டம் மட்டுமல்ல. தொடர் ஓட்டமே தன்னை நிலை நிறுத்தும் என்பதை உணர்ந்தார். அதனால் கிட்டத்தட்டப் பதினைந்து
ஆண்டுகளாக தொடர்ந்து எழுதி வருகிறார்.
இவர் ஒரு சிறந்த
கவிஞர், எழுத்தாளர், வலைப்பதிவர், சுதந்திரப் பத்ரிக்கையாளர். யூ ட்யூபர். ஏழு
வலைப்பூக்களில் எழுதி வருகிறார். முப்பது நூல்களின் ஆசிரியர். அமேஸானில் 69
நூல்கள் வெளியாகி உள்ளன. 3 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்துள்ளார். மாதாந்திரிகள்,
பத்ரிக்கைகள் என 55 க்கும் மேற்பட்ட அச்சு நூல்களில் இவரது படைப்புகள் வெளியாகி
உள்ளன. பத்து நூல்களுக்கு முன்னுரை, அணிந்துரை கொடுத்துள்ளார். பத்துக்கும்
மேற்பட்ட தொகுப்பு நூல்களில் இவரது படைப்புகள் வெளியாகி உள்ளன. உலகளாவிய பல்கலைக்
கழகங்களில் இவரது நூல்கள் இடம்பெற்றுள்ளன. யூ ட்யூபில் 450 புத்தகங்களுக்கு
மதிப்புரைகள் வழங்கி உள்ளார்.
சாஸ்த்ரி பவன்,
போர்ட் ட்ரஸ்ட், பல்வேறு பள்ளிகள், கல்லூரிகளில் சிறப்பு விருந்தினராகவும்
நடுவராகவும் பங்கேற்றுள்ளார். கலைஞர் தொலைக்காட்சி, விஜய் டிவி , சன் நியூஸ்
தொலைக்காட்சி, புதிய யுகம், வானவில், பொதிகை, வானொலி
ஆகியவற்றில் இவரது கருத்து & பேட்டி வெளியாகி உள்ளது. பொதிகையின் காரசாரத்திலும், நம் விருந்தினர் நிகழ்ச்சியில் சிறப்பு
விருந்தினராகவும், மங்கையர் சோலையில் சிறப்பு மங்கையர் அறுவரில் ஒருவராகவும்
பங்கேற்றுள்ளார். மங்கையர் சோலையில் திரு விஜயகிருஷ்ணன் தனது அழகான
தொகுப்பின் மூலம் சிறந்த முறையில் இவரைப் பட்டி தொட்டியெங்கும் அறிமுகப்படுத்தினார்.
இவருடைய
கவிதைகள் ஆங்கிலத்திலும் கன்னடத்திலும் மலாயிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
வலைப்பூ எழுத்துக்களுக்காக 25 விருதுகளும், சமூக இணையப் பங்களிப்புக்காக சிறப்பு
விருதும், மதர் தெரசா அவார்டு, விமன் எம்பவர்மெண்ட் அவார்டு, கம்யூனிட்டி சர்வீஸ்
அவார்டு பெற்றவர். வலைப்பூவரசி, ஸ்டார் தோழி, சிறந்த பெண் வலைப்பதிவர், எதிரொலி
நாயகி, இணையதள ப்லாகர், அரிமா சக்தி, தங்க மங்கை, ஸ்ரீ சக்தி, ஸ்பெஷல் லேடி,
விஞ்ஞானி ரகுபதி நினைவு விருது, நற்றமிழ் நங்கை, பாடுவார் முத்தப்பர் ஆகிய விருதுகளைப்
பெற்றிருக்கிறார்.
இச்சமூகத்தில்
இந்த நூற்றாண்டிலும் நீடிக்கும் பெண்களின் பிரச்சனைகளையும் அதே சமயம் பொது எண்ணப்
போக்கு மாறியுள்ள இச்சமூகத்தை எதிர்கொள்ள இன்றைய ஆண்குலம் படும் அவஸ்தைகளையும்
அவதிகளையும், அவர்களைப் பெண்களாகிய நாம் நம் சகமனிதர்களாக இணைத்துச் செயல்பட
வேண்டும் என்பதைக் கதைகளாகவும், கட்டுரைகளாகவும் படைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி
வருகிறார். எழுத நினைப்பவர்கள் எந்த வயதிலும் எழுதலாம், சாதிக்கலாம், தொடர்ந்து
முயற்சி செய்தால் சாதனையாளராகவும் ஆகலாம். வாழ்வையும் சுவாரசியமாக்கலாம் என்பது
இவர் தரும் நேர்மறைச் செய்தி.
--கரு.லெக்ஷ்மி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)