செவ்வாய், 8 ஏப்ரல், 2014

அன்ன பட்சி பற்றி பத்மா & இளங்கோ.

எதிர்பார்க்கவே இல்லை இளங்கோ இவ்வளவு அருமையான சொல்லாட்சிகளுடன் கூடிய விமர்சனத்தை. என் கவிதை வார்த்தைகளைக் கையாண்ட விதம் அழகு. இதற்கு நன்றி என்ற ஒற்றைச் சொல் போதுமா.. நீங்கள் இருவரும் விமர்சிப்பீர்கள் எனத் தெரியும்.. ஆனால் இவ்ளோ அழகா இருக்கும்னு எதிர்பார்க்கலை. மேலும் சூலும் சூலமும் , பிரம்ம கபாலம் பத்தி ஒரு கண்டனக் குரல் கொடுப்பீங்களோன்னு பயந்துகிட்டே இருந்தேன். மொத்தத்தில் இத்தனை நாள் நான் காத்திருந்தது வீண் போகவில்லை.. நன்றியும் அன்பும் வாழ்த்துக்களும் நெகிழ்வும் உங்களுக்கும் பத்மாவுக்கும்.

/////Kt Ilango 'அன்னப் பறவை'யைக் கையில் எடுக்கும் போது, இரண்டு நாட்களில் படித்து முடித்து விடலாம் என்று நினைத்து, தேனம்மையுடன் சேர்ந்து 'தேடலில்' ஆரம்பித்தோம். ஆனால் தேடலில் தொடங்கி, 'ஆக்கிரமிப்பில்' மூழ்கி, 'முத்துச் சிப்பிகளைக்' கண்டெடுத்து, 'வார்த்தைச் சிறகு'களில் எங்கள் பயணம் முற்றுப் பெற்ற போது, நாட்கள் வாரங்களாகி இருந்தன.



'சுருங்கச் சொல்லத் தெரிவதில்லை. எல்லாமே எல்லை மீறி' என ஆக்கிரமிப்பில் ஆர்பரித்தாலும், உடனேயே 'எனக்கு மட்டுமேயான பிரசாதமாய்' என்று சுருங்கச் சொல்லி வியக்க வைக்கிறார்.


'உன்னை விளையாடிக் கொண்டிருக்கிறேன்' என்ற வார்த்தை விளையாட்டு ரசிக்க வைக்கிறது.


'எச்சப் புள்ளி, நிழற் கோலம், நீர்ப் பூக்கள், சூரியத் தட்டு' என அழகுச் சொற்கள் எங்கும் சிதறிக் கிடக்கின்றன.


படிக்கும் காலத்தில் பற்றிய வேதியியலின் தாக்கம்,'விவசாயத்திலும், விட்டுப் போனவைகளிலும், ரசாய(வ)னத்திலும்' தெளிவாய்த் தெரிகின்றது. அருமையாக இருக்கின்றது.


'ஆழக் கற்கள் புரட்டுவதில்லை. புரளுவதில்லை' என்ற வரிகளில் தான் எத்தனை ஆழம்.


படைத்தவனின் சரிவை 'சிகண்டி' மூலம் எடுத்தாண்ட வார்த்தைகளில் தெரியும் துயரம், 'மோகினியின் அமிர்தத்தைக் கூட சடையனின் வெண் சாம்பலாக்கி' விடும்.


'அந்த இரவில்' அவளை விடுவித்தது 'அந்த விடியல்'.ஆனால் அதன் வலி படித்தவர் மனச் சிறையில்.


நிழல் நீண்டதை நீழலே என நீட்டினார் நாவுக்கரசர். அவர் அடி பின்பற்றி, ' ஓர் இரவுப் பிரயாணத்தில்' யானை நிழல்' என நீட்டியமை அழகு.
'நீ கீறியது ஒரு முறை. நான் கிளறிக் கொண்டது பல முறை' என்ற வரிகளில் ரணம் தெரிகிறது.


'மௌனமாய்,அங்கீகரிப்பும் அனுமதிப்புமாய்' இருக்கும் 'தோழிப் பொம்மை', ஒவ்வொருவர் வாழ்விலும் உண்டு.


'மெழுகின் முணுமுணுப்பில் கை விரல்களில் கொக்கும் கிளியும் நாயும் சுவற்றில்' என்ற வரிகளில் மலரும் நினைவுகள்.


காலத்தின் மாற்றத்தைப் பறை சாற்றும் 'தூண்கள்'.


இயல்பான வரிகளுடன் 'சாட்சியம், ஈரத் தண்ணீரைக்' கரம் கோத்துக் கொண்டு.


இருக்கிறான் என்று உரைத்த பிரகலாதனை விட இல்லை அவன் இல்லை என மறுத்த இரணியன் தான் அவனை அதிகம் நினைத்தவன் என்று ஒரு வாதம் உண்டு. அதன் படி, தேனம்மையும் அவனை நேசித்திருக்கிறார் 'கடவுளை நேசித்தலில்'...


'மணற் சிற்பம்' எழிற் சிற்பம்.


'வயதின் கம்பீரம்' அழகோ அழகு. 'கடலையும் மலையையும்'வயதுக்குத் துணைக்கழைத்துக் கொண்டு,'சிரிப்பை சூடிக் கொண்டு இன்னும் இளமையாக'...துள்ளும் வரிகள்.


'உப்பு மூட்டையாய் இறக்க முடியவில்லை' என்ற வரிகளில் சுமந்தவள் நம் மனதை கனக்க வைக்கிறாள்.


ஒவ்வொரு பக்கமாய்த் திருப்பும் போதும் தேடிய 'அன்ன பட்சி','உன்னைச் சந்தித்த பின், உன்னையே எழுதினேன்' என்று சிரம் உயர்த்தி...அருமை.
அன்பும் கோபமும் இரு தண்டவாளக் கோடுகளாய்ச் செல்லும் என்பதைப் படம் பிடிக்கும் 'தாம்பத்யக் குகை'


வலிகளையும் வாழ்த்துக்களாக ஏந்திச் சிறக்கும் ' வலிகளுடன் வாழ்தல் இனிது'...


மனதில் புகுந்த ' நீ என் சாமி'...


'இங்க்கின் காயங்கள் வாடகைப் புத்தகத்தில்'...இவன் ' வயதின் கம்பீரத்தின்' உடன் பிறந்தவன்...


நித்தம் சந்திக்கும் பக்தி என்ற போர்வையை சற்றே விலக்கிக் காட்டும் ' ஒரு கோபுர ( நி) தரிசனம்.கடலோரம் வள்ளி ஒளிந்த இடம் காசு கேட்கும்' என்ற முத்தாய்ப்பு அழகு.


இப்படியாகத் 'தேடலில்' தொடங்கி,' வார்த்தைச் சிறகுகளாய்' முற்றுப் பெறுகிறது எங்கள் பயணம்.


நாங்களும் நிறைவு செய்கிறோம் 'தேனம்மையும் அவர் எழுத்துக்களும் தமிழாய் வாழ்க...வளர்க என்று...


என்றென்றும் அன்புடன்,
பத்மா இளங்கோ & K.T.இளங்கோ///



”அன்ன பட்சி” கவிதைத் தொகுப்பைக் கூரியர் மூலம் பெற.

சென்னைக்கு -- புத்தக விலை 80+ கூரியர் சார்ஜ் 20 = 100 ரூபாய்

மற்ற ஊர்களுக்கு - புத்தக விலை 80 + கூரியர் சார்ஜ் 45 = 125 ரூபாய்

இணையத்தில் வாங்க.

.http://aganazhigaibookstore.com/index.php?route=product/product&product_id=1795

http://aganazhigaibookstore.com/index.php?route=product%2Fproduct&product_id=1795 — with Thenammai Lakshmanan.

By post aganazhigai@gmail.com
என் நூல்கள் கிடைக்குமிடம். :- 
Aganazhigai book store.
390, Anna Salai,
KTS valagam, 1 st floor,
saidapet ,
Chennai – 15.

By post aganazhigai@gmail.com
டிஸ்கவரி புக்பேலஸ் , சென்னை
விஜயா பதிப்பகம் கோவை
மீனாக்ஷி புக் ஸ்டால் , மதுரை
அபிநயா புக் சென்டர், சேத்தியா தோப்பு
வம்சி புத்தக நிலையம்  , திருவண்ணாமலை
அகநாழிகை புக் சென்டர் , சென்னை. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)