புதன், 11 ஜூன், 2025

விஸ்வேஸ்வரருக்குப் பிடித்த வாரணாசி

விஸ்வேஸ்வரருக்குப் பிடித்த வாரணாசி


காசி என்னும் ஆனந்தவனம் பற்றிக் கேள்வியுற்றிருப்பீர்கள். ஒருமுறை இந்த ஆனந்தவனத்திலிருந்து ஒரு வேண்டுகோளினால் மந்த்ராசலத்துக்குத் தன் இருப்பிடத்தை மாற்றிக் கொண்டார் விசுவநாதர். எங்கும் உறையும் இறைவனே ஆனாலும் தனக்குப் பிடித்த இடத்தில் கோவில் கொள்வதைத்தான் விரும்புவார் என்பதை காசி மாநகருக்கே அவர் திரும்பி வந்த கதை உணர்த்துகிறது. அது பற்றிப் பார்ப்போம்.

பத்ம கல்பத்தின் போது உலகெங்கும் வறட்சி ஏற்பட்டதால் உயிரினங்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டன. படைப்புக் கடவுள் பிரம்மாவுக்கே இனித் தான் படைக்கும் தொழிலில் ஈடுபட முடியுமா என்று நினைக்கும் அளவில் புதிய உயிர்களைத் தோற்றுவிப்பது கடினமாக இருந்தது. அந்த அளவு அழிவின் விளிம்பில் அனைத்து உயிர்களும் உடலைப் பற்றிக் கொண்டிருந்தன.

ஆனந்தவனம் என்னும் காசியும் அதற்கு விதி விலக்கல்ல. இதைக் காப்பாற்ற வல்லவன் யார் என்று பிரம்மா தேடியபோது ரிபுஞ்செயன் என்னும் மன்னன் மிகுந்த அர்ப்பணிப்புடன் தவத்தில் ஈடுபட்டிருந்தான்.அந்நகரைக் காப்பாற்ற வல்லவன் என்று பிரம்மா தான் கணித்த மன்னன் அவனுக்குத் திவோதாசா என்று பெயரிட்டு காசிக்கு மன்னனாக இருக்கும்படிக் கூறினார்.

அவனோ தான் காசியில் அரசனாக வீற்றிருக்கும் காலம் வரை அங்கே தேவர்களும் மற்றைய கடவுளர்களும் காசியிலிருந்து விலகி இருக்கும்படிக் கேட்டுக் கொண்டான். இதனை பிரம்மனும் ஒப்புக் கொண்டு அனைத்து தேவர்களையும் காசியை விட்டு விலகித் தங்கள் அமராவதிக்குச் செல்லும்படிக் கூறினார். சிவபெருமானை அவ்விதம் கேட்க பிரம்மா தயங்கியபோது மந்த்ராசலம் என்னும் மலை சிவபெருமானிடம் தன்னிடம் வந்து குடும்பத்தோடு தங்கியிருக்கவேண்டும் எனக் கேட்டுக் கொள்ளவும் சிவனும் மந்த்ராசலத்துக்கு இடம் பெயர்ந்தார்.


திவோதாசாவிடம் காசிக்கு வருபவர்களும் வசிப்பவர்களும் தங்கள் ஆன்மீக சாதனையைச் சிறந்த முறையில் செய்ய உறுதுணயாக இருக்கவேண்டும் என பிரம்மா கேட்டுக் கொள்ள அதனை திவோதாசாவும் ஒப்புக் கொண்டார். அங்கே ஒரு அஸ்வமேத யாகம் செய்யவேண்டும் எனப் பிரம்மா விரும்பிய போது பத்து அஸ்வமேத யாகம் செய்வதற்குரிய ஏற்பாடுகளை மன்னன் செய்து கொடுத்தான். இங்கனம் அவனது இனிமையான ஆட்சியில் ஆனந்தவனம் செழித்தது. உலகம் உய்ந்தது.

வெகுகாலமாகக் காசிக்கு வராமலிருந்த சிவபெருமானுக்குத் தனது சொந்த நகரமான ஆனந்தவனத்துக்குச் செல்லும் எண்ணம் உதித்தது. காசியிலோ நீதி நெறி தவறாமல் திவோதாசா ஆட்சி புரிந்து வருகிறான். அவனை அப்புறப்படுத்தினால்தான் காசிக்கு செல்ல முடியும். அவன் ஏதேனும் குற்றம் இழைத்தால்தான் அவனை அப்புறப்படுத்த முடியும். எனவே தனது திருவிளையாடலை நிகழ்த்த எண்ணினார் சிவபெருமான்.

அப்பழுக்கில்லாமல் ஆண்டுவந்த திவோதாசாவின் ஆட்சிக்கு இடைஞ்சல் ஏற்படுத்த அறுபத்துநான்கு யோகினிகளை அனுப்பினார். அவர்கள் ஆனந்தவனம் வந்ததுதான் தாமதம் சொர்க்கலோகம் போல் காட்சியளித்த அதன் அழகில் மயங்கி அங்கேயே தங்கிவிட முடிவு செய்தனர். அவர்கள் திரும்பி வராததை அறிந்த சிவபெருமான் அடுத்து அங்கே கலகத்தை ஏற்படுத்துவதற்காகச் சூரிய பகவானை அனுப்பினார்.


ஆனந்தவனத்தின் அமைதியான சூழலில் வந்து சேர்ந்தார் சூரிய பகவான். அங்கே அவர் ஜோதிடராக, ப்ராமணராக, வணிகராகப் பண்டிதராகப் பல்வேறு வடிவங்கள் கொண்டு சுற்றி வந்தார். அவரும் ஆனந்தவனத்தில் எழிலால் கவரப்பட்டு எந்தக் கலவரமும் செய்யவில்லை. மேலும் எதையும் செய்யாமல் சென்றால் சிவபெருமான் கோபித்துக் கொள்ளலாம் என நினைத்து அங்கேயே தங்கிவிடும் எண்ணத்தில் பன்னிரெண்டு ரூபங்கள் எடுத்துக் காசியில் பல்வேறு இடங்களில் தம்மை இருத்திக் கொண்டார்.

இவரும் திரும்பாததால் அடுத்துத் தமது சிவகணங்களை அனுப்பினார். அவர்களும் ஆனந்தவனம் ஏற்படுத்திய ஆனந்தத்தை அனுபவித்து அங்கேயே தங்கிவிட்டார்கள். இனி யாரையும் அனுப்பிப் பயனில்லை என நினைத்த சிவபெருமான் தன் பிரியத்துக்குரிய மூத்த மைந்தனான விநாயகனை அழைத்தார்.

காசிக்குச் சென்று எப்படியும் கலகத்தை நிகழ்த்தியே தீரவேண்டும் என்று தன் மகனிடம் விசேஷமாகச் சொல்லி அனுப்பினார். விநாயகப் பெருமான் காசியை அடைந்ததும் ஒரு வயதான ஜோதிடர் உருவத்தை எடுத்துக் கொண்டார் விநாயகர். மக்களுக்குச் சில கனவுகளை ஏற்படுத்தினார். அதனால் பயந்திருந்த அவர்களைக் காலையில் சந்தித்துக் கனவின் பலன்களைக் கூறித் தம் பக்கம் இழுத்துக் கொண்டார்.  

இப்படியே அரண்மனை வரை அவர் புகழ் பரவ அந்தப்புரப் பெண்களும் இவரிடம் பலன் கேட்டறிந்தனர். அப்படியே அரசியின் நன்மதிப்பையும் பெற்றார். அரசி அரசரிடம் வயதான ஜோதிடரின் பெருமைகளைக் கூறி அவரை கௌரவிக்கும்படிக் கூற அரசன் அவரை அரசவைக்கு வரவழைத்துத் தன்னுடைய அரசாட்சி பற்றிக் கூறும்படிக் கேட்டார்.

இதுதான் சமயம் என்று விநாயகரும் அரசரிடம் அன்றிலிருந்து பதினெட்டாவது நாள் அரசவைக்கு ஒரு அந்தணர் வருவாரென்றும் அவர் கூறும் அறிவுரையை அரசன் கட்டாயம் கடைப்பிடிக்கவேண்டுமென்றும் கூறினார். அந்தப் பதினெட்டாவது நாள் மகாவிஷ்ணு அந்தணர் வடிவில் மன்னனின் அரண்மனைக்கு வந்தார். அவரைப் பூரணகும்ப மரியாதையுடனும் சிறப்புடனும் அரசன் வரவேற்றான்.


தர்மங்களை எடுத்துக் கூறிய அவரிடம் தன்னுடைய நாட்டில் நீதி நெறியும் பக்தி நெறியும் செழித்திருப்பதாக மன்னன் கூறினார். இருந்தாலும் நாட்டில் ஒரு சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபடுவது சிறப்பு என்றும், அதைப் பிரதிஷ்டை செய்த ஏழாவது நாளில் விண்ணிலிருந்து ஒரு தெய்வீக விமானம் வந்து அவனைச் சிவலோகத்துக்கு அழைத்துச் செல்லும் எனவும் கூறினார்.

என்னதான் நீதி தர்மம் செழித்திருந்தாலும் இறைவழிபாடு முக்கியம் என உணர்ந்தான் மன்னன். தன் மகனான ஸமரஞ்ஜயனிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்துவிட்டுச் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தான். அன்றிலிருந்து ஏழாவது நாள் மன்னன் சிவனருள் பெற்றுச் சிவலோகம் அடைந்தான்.

அவன் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்த அக்கணமே சிவபெருமான் தன்னுடைய நகரான ஆனந்தவனத்தை அடைந்து அங்கேயே நூற்றுக்கும் மேற்பட்ட கோவில்கள் பல கொண்டு இன்புற்று இருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)