திங்கள், 19 ஆகஸ்ட், 2024

இப்படியும் சாதிக்கலாம் - முன்னுரை

 இப்படியும் சாதிக்கலாம் என்ற என்னுடைய 26 வது நூலின் முன்னுரை.

முன்னுரை


சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே வலசைக்குக் கொண்டுவிக்கச் சென்றவர்கள் நம் மக்கள். முன்னர் செழித்து வந்த தனவணிகம் 1977 க்குப் பின்னர் பேப்பர், எலக்ட்ரிக், மருந்துக் கடைகள் என மாறியது. 1980 களில் இருந்து வங்கிப் பணிக்கும், 2000 ஆண்டுகளில் இருந்து மென்பொறியாளர் பணிக்கும் செல்ல ஆரம்பித்தனர் நம் இளையர்கள். இன்றும் வணிகம்தான் நம் தொழில் என்று விடாமுயற்சியோடும் தொடர் அர்ப்பணிப்போடும் ஈடுபட்டு வருபவர்கள் பலரும் உண்டு. அவர்களில் தொழில் முனைவோராக, வணிகத்தில் வெற்றிக்கொடி நாட்டும் வனிதையராக, கல்வி நிலைய நிறுவனர்களாக, பேருந்து உரிமையாளர்களாக, கட்டுமானத் தொழில் வல்லுநர்களாக நம் ஆச்சிகளும் அடக்கம். எந்த இடையூறிலும் இன்னல்களிலும் தங்கள் பணியைத் தொடரும் அவர்களின் தன்னம்பிக்கை என்னைப் பிரமிக்க வைக்கின்றது. அவர்கள் அனைவரின் உழைப்பையும் விதந்தோதும் விதத்தில் நான் எடுத்த பேட்டியும் நேர்காணல்களுமாகப் ”பெண்மையைப் போற்றுவோம்” என்கின்ற இத்தொகுப்பு வெளியாகின்றது.


இக்கட்டுரைகளும் பேட்டிகளும் நமது செட்டிநாடு, ஸ்டார்ட் அப் அண்ட் பிஸினஸ், ஐ பி சி என் ஆகியவற்றில் வெளியானவை. இதன் ஆசிரியர்கள் திரு. எஸ். பி. அண்ணாமலை (ஐபிசிஎன்), திரு. ஆவுடையப்பன் நடராஜன் (நமது செட்டிநாடு), திரு. சேதுராமன் சாத்தப்பன் (எஸ்பிஎன்) ஆகியோருக்கு நன்றி. நம் தனவணிக மக்களுக்கு எடுத்துக்காட்டாய்ச் செயல்பட்டு வரும் இக்கட்டுரை நாயகிகளுக்கும் மனமார்ந்த நன்றி. 

இது என்னுடைய இருபத்தி ஆறாவது நூல். இந்நூலைக் கொண்டு வரும் நூல்குடில் பதிப்பகத்தின் திரு இராம. மெய்யப்பன் (உணவு உலகம்) அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. 

தேனம்மைலெக்ஷ்மணன்.
கானாடுகாத்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)