வியாழன், 9 மே, 2024

16.பிரசவம் என்பது மறுபிறப்பு

 16.பிரசவம் என்பது மறுபிறப்பு


பிரசவம் என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் மறுபிறப்பாகும். ஒவ்வொரு குழந்தை பிறக்கும்போதும் அந்தத் தாயும் புதிதாகப் பிறப்பெடுக்கிறாள். தன் வாழ்விற்கானா ஒரு புதிய ஜீவனை வெளிக்கொணரப் போகும் மகிழ்வோடு அவள் தாங்கும் பிரசவ வலி என்பது மனோதைரியத்துடன் கூடியது. 


பொதுவாகப் பெண்ணுக்கு தைராய்டு காரணமாக கர்ப்பம் தரிப்பது தள்ளிப் போகிறது. ஆண்கள் குடிப்பது புகைப்பது மட்டுமல்ல. தற்காலத்தில் பெண்களும் குடிப்பதும், புகைப்பதும், அடிக்கடி கருச்சிதைவு செய்து கொள்வதும் கூட குழந்தைப் பேறு தாமதமாக அல்லது குழந்தைகளுக்கு பாதிப்பு நேரிடக் காரணமாகின்றது. கர்ப்பகாலத்தில் பெண்கள் குடிக்கவோ புகைக்கவோ கூடாது

 

பெண்ணின் கருக்குழாயில் போதுமான வளர்ச்சியடைந்த கருமுட்டை இல்லாவிட்டால், கர்ப்பப்பையில் நீர்க்கட்டி இருந்தால் கருப்பை வளைந்து இருந்தால், கருப்பைச் சுவர் வீக்காக கரு  சீக்கிரம் கலையும் வாய்ப்பு இருந்தால், ஃபெலோப்பியன் ட்யூப்பில் அடைப்பு இருந்தால், அடிக்கடி டி& சி செய்து இருந்தால் அடிக்கடி தடுப்புமுறைகளை மேற்கொண்டிருந்தால், தைராய்டு அல்லது ட்யூபர்குளோசிஸ் போன்ற குறைபாடுகள் இருந்தால் , ஹார்மோன் இம்பாலன்ஸால், ஈஸ்ட்ரோஜன் குறைபாடால், ஒழுங்கற்ற மாதவிடாயால், குழந்தை பேறு என்பது குதிரைக் கொம்பாக ஆகி விடுகிறது.  சில சமயம் பெண்ணுக்கு உடலுறவின்போது சுரக்கும் திரவத்தில் அமிலத்தன்மை அதிகம் இருந்தால் அது விந்தணுவின் செயல்பாட்டைக் குறைக்கிறது. அல்லது கொன்றுவிடுகிறது.

 

ஃபோலிக் ஆசிட் குறைபாட்டாலும் கரு தரிப்பதில்லை. இதற்காக அது தொடர்பான மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. கரு உண்டான பின்பு ஸ்கான் கட்டாயம் செய்ய வேண்டுமென்பதில்லை.. ஆனால் செய்து கொண்டால் நல்லது. சிலர் இதெல்லாம் தெரிந்து கொள்ள செய்வார்கள். பாலிசிஸ்டிக் ஓவரியன் டிசீஸ்-- பி.சி.ஓ.டி.  ( சினைப்பையில் சிறிய நீர்க்கட்டிகள் ) அல்லது செப்டிசீமியா எனப்படும் கரு உள்ளேயே சிதைவுறுதல் ஆகியன கண்டுபிடிக்கப்படும். இப்படி கரு உள்ளேயே சிதைந்து விட்டால் உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டு டி & சி அல்லது  சிசேரியன் செய்யப்படவேண்டும் அல்லது அது தாயின் உயிருக்கே ஆபத்தாக அமையும்.

 

கருத்தரிப்புக் காலங்களில் நோய்த்தொற்றுக்களில் இருந்து தாயையும் சேயையும் பாதுகாப்பது முக்கியமானது. சிறுநீரகத் தொற்று என்பது இதில் முக்கியமானது. குழந்தை பெரிதாகும்சமயம் கர்ப்பப் பை அழுத்தம் காரணமாக சிறுநீர் வெளியேறும்போது முழுமையாக வெளியேறாமல் உள்ளே சிறிதளவு தங்கிவிடுவதே இந்நோய்க்கும் காரணம். சுகாதாரம் பேணுதல், அதிக அளவு நீர் அருந்துதல் மூலம் இவற்றைத் தவிர்க்கலாம்.

 

சரியாக வேகைவைக்கப்படாத இறைச்சி, பதனிடப்படாத பால் மூலம் ஏற்படும் தொற்றினைத் தவிர்க்க அவற்றை நன்கு சமைத்து உண்ணுதல் வேண்டும். குளிர்பதனப் பெட்டியில் வைக்கப்பட்ட, ஏற்கனவே சமைத்து டின்களின் அடைக்கப்பட்ட உணவினை உண்ணும்போது லிஸ்டரோஸிஸ் எனப்படும் பாக்டீரியா தாக்குதல் ஏற்படும். இதனால் பாதிக்கப்பட்டால் கருச்சிதைவு, குழந்தை இறந்து பிறத்தல் மேலும் பிறக்கும் குழந்தைக்கு தீவிரமான உடல் நலக் குறைவு ஏற்படுதல் போன்ற பிரச்சனை இருக்கும்.


 

தாயின் இரத்தவகை ஆர் ஹெச் நெகட்டிவாக இருந்து குழந்தையின் வகை ஆர் ஹெச் பாசிட்டிவாக இருந்தால் அதற்கு ஏற்ப ஒரு ஊசி மூலம் ஒரு மருந்து செலுத்தப்பட வேண்டும். இல்லாவிட்டால் இரண்டாவது குழந்தைப் பிறப்பின் போது அது சிக்கலை உண்டு செய்யும். கர்ப்ப காலத்தில் மன அழுத்தத்தோடு இருக்கும் பெண்களுக்கு ஆட்டிசம், மாங்கலாய்ட், (டவுன் சிண்ட்ரோம்), ஸ்பாஸ்டிக், (செரிப்ரல் பால்ஸி) போன்ற குறைபாடுகளுடன் குழந்தைகள் பிறக்க வாய்ப்புள்ளது.

 

கருவுற்று சரியாக நாற்பதாவது வாரத்தில் குழந்தை பிறந்தால் அது சரியான கால அளவீடு ஆகும். 37 வாரங்களுக்கு முன்பு பிறந்தால் குறைப் பிரசவம் என்றும் 42 வாரங்களுக்குமேல் பிறந்தால் அது முதிர் பிறப்பு என்றும் அழைக்கப்படுகிறது. இறுதி மாதவிடாயின் ஆரம்ப நாளிலிருந்து கணக்கிடுதல், மீயொலிப் பரிசோதனை மூலம் கணக்கிடுதல், செயற்கைக் கருத்தரிப்பு முறை என்றால் கருக்கட்டல் நாளுடன் 14 நாட்களைக் கூட்டிக் கொள்ளுதல் என மூன்று முறைகள் பின்பற்றப்படுகின்றன.

 

ஒன்பதாம் மாதத்தில் நடைப்பயிற்சி ., மூச்சுப் பயிற்சி., ப்ரணயாமம் செய்யலாம்., சத்து மாத்திரை எடுத்துக் கொள்ளலாம். வலி எடுத்தாலோ., உதிரப்போக்கோ., பனிக்குடம் உடைந்து தண்ணீர் வெளியேறினாலோ குழந்தை அசைவு இல்லாமல் இருந்தாலோ ஹாஸ்பிட்டலுக்கு போக வேண்டும். பொதுவா லேபர் பெயின் இருந்தாலும் போகணும். பொய்வலி என்னும் பிரசவ வலி சிலருக்கு ஏற்படுவதுண்டு. ஒன்பதாம் மாதத்தில் சோம்பை வறுத்து நீரில் கொதிக்க வைத்துக் கசாயமாகக் குடிப்பதன் மூலம் இந்தப் பொய்வலியைத் தவிர்க்கலாம். மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்

 

மூச்சுப் பயிற்சி மூலம் வலியை சிறிது சகித்துக் கொள்ள முடியும். குழந்தை பிறக்கும் முன்பு சிரமமாக இருந்தால் எபிசிடியாட்டமி ( EPICITIYATAMI) .. சிறிது வெட்டி விடுதல் செய்யப்படும். நஞ்சு கட் செய்து விட்டு உதிரப் போக்கு கட்டுப்படுத்தப்படும். குழந்தை கர்ப்பத்திலிருந்து இயற்கையாகவோ அல்லது அறுவை சிகிச்சை மூலமோ பிறந்த உடனேயே நன்கு குரல் எடுத்து அழ வேண்டும். அப்போதுதான் அதற்குத் தேவையான ஆக்ஸிஜன் கிடைப்பதோடு குழந்தையின் மூளை தொடர்பான வளர்ச்சியும் சிறப்பானதாக இருக்கும்.

 

குழந்தை பிறந்தவுடன் பால் கொடுத்தல் முக்கியம். அதுக்கு கொலாஸ்டம்னு பேர். பால் நன்றாக வரும். சீம்பால் என்று தமிழில் சொல்வார்கள். அதற்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். குழந்தையை துடைத்தவுடன் அம்மாவிடம் கொடுக்கலாம். இதை எல்லாம் பேறுகாலத்தில் பின்பற்றி சுகமான பிரசவமாய் அமைந்து தாயும் சேயும் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்..

 

சிலசமயம் எல்லாம் சரியாகப் பின்பற்றப்பட்டிருந்தும் உயரத்தின் காரணமாக , அதிக எடையின் காரணமாக,  இரத்த அழுத்தம் காரணமாக மேலும் இடுப்பெலும்பு விரிந்து கருப்பை வாய் சரியாக திறக்காததன் காரணமாக, குழந்தையின் தலை கீழ் நோக்கி திரும்பாததன் காரணமாக சிசேரியன் செய்ய நேரிடலாம். இதை முடிந்தவரை தவிர்க்க. எடை மிகவும் அதிகரிக்காமலும், நடைப்பயிற்சி, மூச்சுப் பயிற்சி செய்தும், சின்ன சின்ன எளிமையான ஆசனங்கள் ( டாக்டரின் வழிகாட்டுதலின் பேரில் ) செய்தும், உணவில் அதிக அளவு கீரை, காய், பழங்கள் இருக்குமாறும் அமைத்துக்கொண்டால் பிரசுபம் எளிதாக அமையும். மேலும் கர்ப்பகாலத்தில் விபரீதமான திரைப்படங்களைப் பார்ப்பதைத் தவிர்ப்பது நலம்.அவரவர் நம்பிக்கைக்கு ஏற்ப கீதை போன்ற புத்தகங்களைப் படிப்பதும், மனதில் அமைதியான எண்ணங்களை வளர்த்துக் கொள்வதும் குழந்தைக்கு நலம் பயக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)