செவ்வாய், 1 ஏப்ரல், 2014

வீடு ரேகையும் விதையான சீதையும்.

வீடு ரேகை
கால் சுற்றிக் கிடக்கிறது
பாம்பாய்.
காலடி எடுத்து
வைக்கும் போதெல்லாம்
தடுக்கி விடுகிறது
சுவர்கள் அரண்களாய்
ஆரண்யத்திலும்.



எல்லாமானும்
பொய்மானேயென
சாதிக்கிறான் ராமன்
தனக்கான குடுவையில்
மின்னுமதன் ரத்தம்
கலந்து பருகியபடி.

சர்க்கஸ்காரிகளைப் போல
நெருப்பு வளையத்தில்
புகுந்து புறப்படுகிறாள் சீதை
தனக்கான மனவாசம் நோக்கி
தான் பெற்றும்
பிரிந்து போகும்
இரட்டைகளைச் சுமந்து.

கடைசிப் புகலிடமாய்
அவளைச் சுமந்த மண்
காத்திருக்கிறது
மீண்டும் சுமக்க
ஆசையோடு வயிறு பிளந்து..
அடுத்த கர்ப்பத்தின்
புதுவிதையாகிக்
கொண்டிருக்கிறாள் சீதை.


3 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)