வியாழன், 25 ஏப்ரல், 2013

பசலையல்ல.. கனவு.

தூரத்தில் ஒருவன்
காத்திருக்கிறான் காலகாலமாய்
நிச்சயமற்ற எனக்காய்.
கட்டிக் கிடக்கும்
குட்டி மிருகம் விடுத்து
சுதந்திரமாய்
நடக்கத் துவங்குகிறேன்.

காமம் நிலவாய்ப் பெருகி
பொட்டலாய் எதிரொலித்துப்
பல்விரித்துச் சிரிக்கிறது.
கூந்தல் புரள
ஒவ்வொரு மயிர்க்காலும்
காற்றில் சிலிர்க்கிறது,
ஒளிக்காட்டில்
ஒலியெழாமல்
நடப்பதுபோல்
நடந்து கொண்டே இருக்கிறேன்.,
வெவ்வேறு காலங்களில்..
கடப்பதுமில்லை,
முடிவதுமில்லை பாதை.
பாதத்தின் கீழ் மண் நெகிழ
வற்றிய கடலிலிருந்து உதித்த
மனிதத் தாவரமாய் அசைகிறேன்.
யாரோ பார்க்கின்ற பார்வை ஊடுருவ
உதறும் உடம்போடு
அள்ளிக் குவித்த காற்றை விட்டு ஓடி
ஆசைகளைச் சுற்றுகிறேன்.
பழைய இறுக்கத்தில் புகுந்ததும்
அடைபட்ட மூச்சு மெல்லக் கசிகிறது.
ஹ்ம்ம்.. இது பசலையல்ல.. கனவு..


 டிஸ்கி:- யுகமாயினி சித்தன் அவர்களின் ஓவியத்துக்காக வனைந்த கவிதை இது.


3 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)