சம்சாரம் அது மின்சாரம் மனோரமா
நடிப்புக்காகத் தன்னையே நேர்ந்து கொண்டவர் மனோரமா. அண்ணா, எம்ஜியார், என் டி ஆர், கருணாநிதி, ஜெயலலிதா என ஐந்து முதல்வர்களுடன் நடித்த பெருமைக்குரியவர். பள்ளத்தூரில் வசித்த காரணத்தால் ஆச்சி எனப் பிரியமாக அனைவராலும் அழைக்கப்பட்டவர். நாயகி, துணை நாயகி, நகைச்சுவை நாயகி எனக் கிட்டத்தட்ட 1500 படங்களிலும் 5000 க்கு மேற்பட்ட நாடகங்களிலும் நடித்த சாதனை நாயகி.
1937 மே 26 இல் பிறந்த இவர் 2015 அக்டோபரில் தனது 78 ஆவது வயதில் மறைந்தார். இவருடைய பெயர் கோபிசாந்தா. இவரது கணவர் எம். எஸ். இராமநாதன். மகன் பூபதி. மருமகள் மற்றும் தனது மூன்று பேரக்குழந்தைகளுடன் சென்னையில் வசித்து வந்தார். தனது பன்னிரெண்டாவது வயதிலிருந்து நாடகங்களில் மனோரமா என்ற பெயரில் நடிக்கத் தொடங்கினார். முதலில் எஸ் எஸ் ஆருடன் நடித்திருக்கிறார். ஏன் எம் ஜி யாருடனே ஜோடியாகத் தன் முதல் படத்தில் நடித்துள்ளார். ஆனால் அது வெளிவரவில்லை.
