திருப்பாற்கடலை வரவழைத்த திருமூலநாதர்
திருப்பாற்கடல் என்றால் திருமால் பள்ளி கொண்டிருக்கும் இடம்தானே, அது எப்படி பூமிக்கு வந்தது அதுவும் அதை வரவழைத்தவர் திருமூலநாதர் என்றால் சிவபெருமான் ஆயிற்றே என்று எண்ணலாம். ஆனால் பூமியில் பசியோடு அழுத ஒரு பாலகனுக்காகத் திருமூலநாதர் திருப்பாற்கடலை வரவழைத்தார். அது எங்கே எனக் காண்போம்.
முன்னொரு காலத்தில் மத்யந்தினர் என்றோர் முனிவர் இருந்தார். அவருடைய குமாரன் பெயர் மாத்யந்தினர். தந்தையான மத்யந்தினர் தனது மகனுக்கு நால் வேதங்களையும் ஆறு சாத்திரங்களையும் பயிற்றுவித்தார். அதன் பின் ஆத்ம ஞானம் பெறுவதற்குத் தில்லைவனத்தை அடைந்து சிவபெருமானைப் பூசிக்கும்படிக் கூறினார்.
தந்தையின் சொற்படி மாத்யந்தினரும் அவ்வாறே தில்லைவனத்தைத் தேடிச் சென்றார். பலகாடுகள், நாடுகள் கடந்தன. பலரிடமும் கேட்டு ஒருவழியாகத் தில்லைவனத்தை வந்து சேர்ந்தார். இறுதியாக ஒரு தில்லை மரத்தின் கீழ் சுயம்புவாக எழுந்தருளி இருந்த திருமூலநாதரைக் கண்டடைந்தார். அந்த மூர்த்தியின் அருகிலேயே இருந்த சிவகங்கைத் திருக்குளத்தில் நீராடி அனுட்டானம் முடித்தார். சிவனின் திருமுன்பு வந்து பஞ்சாங்க அட்டாங்க வணக்கம் செய்தார்.