செவ்வாய், 24 டிசம்பர், 2019

மழையில் நனையும் வெய்யில் - ஒரு பார்வை.


மழையில் நனையும் வெய்யில் – ஒரு பார்வை

மழையில் நனையும் வெய்யில்

இந்தியாவின் முதல் கலாம் வகுப்பறை ஆசிரியரான திருமதி. பா. லெட்சுமி மிகச் சிறந்த பேச்சாளர். பல்வேறு விருதுகள் பெற்றுள்ள அவர் காரைக்குடி கார்த்திகேயன் பள்ளியின் தூண்களுள் ஒருவர். 

முப்பெரும் சகோதரிகள் இணைந்து பணியாற்றும் சிறப்புடைய பள்ளி காரைக்குடி மகர்நோன்புப் பொட்டலில் நூற்றாண்டு காலமாக ( அவர்களது தாத்தா, அப்பா ஆகியோர் பராமரித்து வந்த ) இருக்கும் கார்த்திகேயன் பள்ளி. அப்பள்ளியிலே சகோதரிகள் மூவரின் நூல்களும் வெளியாகி உள்ளன.

நந்தவனம் திரு சந்திரசேகரின் இனிய நந்தவனம் பதிப்பகம் மூலம் வெளியான ”மழையில் நனையும் வெய்யில் “ என்ற லெக்ஷ்மியின் இந்நூல் எளிமையாய் இருந்தாலும் இனிமையாய்க் கவர்கிறது. சிறப்பான வடிவமைப்பால் கண்ணையும் கருத்தையும் கவரும் விதத்தில் இருக்கிறது நூலாக்கம். 

பள்ளிப்பருவத்தில் எழுதிய கவிதைகளின் தொகுப்பு என முன் பக்கத்திலேயே விளக்கம் கொடுத்துள்ளார் ஆசிரியர். தன்னை உருக்கி என்னை வளர்த்த பெற்றோருக்கு என அவர் இந்நூலை சமர்ப்பணம் செய்திருப்பது வெகு சிறப்பு. 

அழகப்பா பல்கலையின் தமிழ் உயராய்வு மையத்தின் தலைவர், முனைவர் திருமிகு செந்தமிழ்ப்பாவை அம்மா அவர்களின் முன்னுரை இந்நூலுக்குச் சிறந்த அணியாரம்.

ஐந்தும் பெண்ணாய்ப் பிறந்தபோது கள்ளிப் பால் கொடுக்காமல் கல்விப்பால் கொடுத்த பெற்றோரைப் பாராட்டுகிறார் லெக்ஷ்மி. 

இவரது கவிதைகளில் மழையில் நனையும் வெய்யிலால் உருவாகும் வானவில் வண்ணவில்லாய் வளைகிறது. குளிர் குடிசையின் நிரந்தர விருந்தினராகிறது. 

பள்ளியில் தரப்படும் மதிய உணவு கிடைக்காமல் போய்விடும் என்பதால் விடுமுறையைக் கூட மறுக்கும் மாணவ மனநிலை யதார்த்தத்தைக் கோடிட்டது. மனிதனுக்கு இல்லாத குணமான நாயின் நன்றி, காகத்தின் பகிர்ந்துண்ணும் தன்மை குடியுரிமை பெறாமல் கூடு கட்டிய வெளிநாட்டுக்குருவி ஆகியவற்றையும் சிறப்பான கவியாக்கி இருக்கிறார்.

வித்யாசமான இவரது பார்வை இந்தக் கவிதைகளில் என்னைக் கவர்ந்தது. அறிவியல் அலை தன்னை அடித்துச் சென்று விடுமோவென்ற போஸ்ட்பாக்ஸின் ஆதங்கம், மயில்தோகை பற்றிக் கிடைத்த ஞானம், மகாத்மாவை மறுபிறவி எடுத்துவரச் சொல்லும் வேண்டுகோள், அலுவலகத்திலும் வந்து உறங்குபவர்களையும் எழுப்பிவிடுமாறு சேவலிடம் சொல்லும் குறும்பு, அயல்நாட்டிடம் பட்ட கடனில் நாம்தான் பெருங்கடல் என்ற நையாண்டி, ஆணுக்குப் பெண்ணைச் சமமாய்ப் படைக்கவில்லை இலக்கியங்கள் என்ற ரௌத்திரம், மக்கள்தொகைப் பெருக்கம் பற்றிய கவலை, சுதந்திர தினத்தில் நாட்டுக்கு என்ன ஆச்சு என்ற கேள்விக்கணை, தான் வாழப் பிறரைக் கெடுக்கும் மனிதன் பற்றிய அவசம் என நவரசங்களையும் கவிதைகளில் நொடிப்பொழுதில் படைத்து விடுகிறார்.

அம்மா என்றால் அன்பு என அகராதி உரைக்கிறார். நட்பு பற்றிய இவரது விளக்கம் அருமை. இதயம் பற்றிய எண்ணங்கள் இனிமை. இவரது கவிதைகளில் எனக்கு மிகப் பிடித்த சில வரிகள்.

“கணவன்
துடைக்காத
உன்
கண்ணீரைக்
கல்வி
துடைக்கும்.”

”இளமை
எனும்
இக்கரையில்
இருந்து
காலம்
எனும்
படகு
அழைத்துச்
செல்லும்
அக்கரை
முதுமை.!”

விடியலுக்கு இல்லை தூரம் என முழங்கும் இக்கவிஞர் இன்னும் பல கவிதை நூல்கள் படைக்க வாழ்த்துக்கள்.

நூல்:- மழையில் நனையும் வெய்யில்
ஆசிரியர்:- பா.லெட்சுமி
பதிப்பகம்:- இனிய நந்தவனம்
விலை :- ரூ 100/-

5 கருத்துகள்:

  1. மிக அருமையான நூல் அறிமுகம் .
    என் தங்கையின் நூலென்பதில் பெருமிதம் அடைகிறேன்.
    வாழ்த்துகளும் பேரன்பும் அக்கா.

    பதிலளிநீக்கு
  2. நன்றி வேலுதரன்ஸ் டெம்பிள் விசிட்

    நன்றி டிடி சகோ

    நன்றி உஸாமா பின் ஸுல்ஃபிகர்,

    நன்றி தென்றல்.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)