வியாழன், 26 ஏப்ரல், 2012

சிகண்டியின் சாம்பலும் அமிர்தமும்..

சிகண்டியாய் இருப்பது
எளிதல்ல..
கொஞ்சம் குத்தும்
பார்வைகள் சேமிக்க வேண்டும்.
ஊசிகளில் உறைந்து
கிடப்பவனிடம் திரும்ப செலுத்த.

வெளுப்புக் கிரீமும்
வெண்மைப் பல்லும்
மயக்கம் தருகிறது
விடிந்ததும் விலகி
வெருண்டு செல்பவனுக்கு.

உடலைப் பெண்ணாய்
உணர்வை ஆணாய்ப்
படைத்தவனுக்கும் இருக்கிறது
ஹார்மோனல் இம்பாலன்ஸ்.

வணக்கத்திற்குரிய
கோலங்களில் நின்றுகொண்டு
பிறப்பவைகளை
அலங்கோலப்படுத்துவதில் தீர்கிறது
அவனது கலியுகம்.

கோபத்தை எல்லாம்
சேமித்து சூரியனாய்
எரிவதில் தீர்வதில்லை
சடையனின் வெண்சாம்பலும்.,
மோஹினி அமிர்தமும்..

வாழ்ந்தே கிடப்பது.,
எல்லா வினைகளையும்
அனுபவித்தே தீர்ப்பது
இதுவே ஆயுதம்தான்
இந்த ஜென்மம் முழுமைக்கும்.

யாரையும் தாக்காமல்
இடப்பட்டவைகளைக்
கடந்து வெற்றிக்கொடி
கட்டுவதிலே இருக்கிறது
வாழ்விற்குண்டான பலன்..

டிஸ்கி:- இந்தக் கவிதை ஆகஸ்ட் 1, 2011 உயிரோசையில் வெளிவந்தது. 

புதன், 25 ஏப்ரல், 2012

அந்த இரவு..

அந்த இரவு மிகவும்
நேசிப்புக்கு உரியதாய் இருந்தது.

அவள் ஆடைகளைக் கழற்றாமலேயே
நிர்வாணமாகிக் கொண்டிருந்தாள்.

பூட்டிய பொக்கிஷ அறையை
வார்த்தைச் சாவியால் திறந்திருந்தாள்.

சுமக்க முடியா லட்சம் பொன்னை
பாதாள அறைகளில் அடைத்து வைத்திருந்தாள்.

ஈர இடுக்கு மூலைகளில்
சிலந்தி வலைகள் படிந்து கிடந்தன.

வௌவால் முடை நாற்றமும்
எலிகளின் சிறுநீரும் கூட.

களிம்பு படாத கட்டிகளைக்
கைகள் நிறைய அள்ளி வைத்தாள்.

புஷ்பிக்காத பெண்மை பற்றி.,
கசிந்து பெருகாத முலைகள் பற்றி.,

தவறான ப்ரயோகங்களால்
காயப்பட்டது பற்றி.,

ரத்தம் பெருகி மூச்சிழந்து
சுருண்டு கிடந்தது பற்றி.,

உன்னை மட்டுமே எனக்குப் பிடிக்கும்
என்ற பொய்யான பசப்புகள் பற்றி

இழந்த சுயம் பற்றி., எதையோ
பற்றிக் கொள்ளத்தோன்றும் பயம் பற்றி

வீசப்பட்ட வார்த்தைப் பிரயோகங்கள்
பாறைகளாய் சூழ்ந்திருக்கும் நிலை பற்றி

உடைத்து உடைத்து நீந்திக்
கொண்டிருந்தாள் நினைவு வெளியில்.

எல்லாம் உடைந்த விடியலில்
தலை கோதித் தூங்க வைத்தேன்.

உடைந்த சிற்கள் எல்லாம்
என் மனதிலும் கண்ணிலும் குத்திக் கிடந்தன.

இழந்த பணம் பற்றி சொத்து பற்றி மட்டும்
பேசவேயில்லை அவள்.

அவளை விடுவித்த அந்த விடியலில்
அந்த இரவு இன்னும் நேசிப்புக்கு உரியதாய் இருந்தது.

டிஸ்கி :- இந்தக் கவிதை ஆகஸ்ட் 1., 2011 உயிரோசையில் வெளிவந்தது.


செவ்வாய், 24 ஏப்ரல், 2012

மெழுகு..

மெழுகு..:-
***********
முதுமையுற்றவரின் கண்கள்
நீரால் நிறைந்திருக்கின்றன.
கசியக் கசியத் துடைத்துக்
கொண்டேயிருக்கிறார்.
பழுதடைந்த கண்களின்
பலவீனத்தாலும் இருக்கலாம்.

இந்தியாவின் காலடியில்
கேட்பாரற்றுக் கிடக்கும்
ரத்தச்சொட்டாய்த் துளிர்த்துக்
கொண்டேயிருக்கிறது அது.
அதைப்போலச் சுண்டி
எறியமுடியவில்லை இதை.

தமிழை வளர்த்தவள்
தனியளாய் அமர்ந்து
மெழுகைச் செய்து
கொண்டிருக்கிறாள்.

வருமுன் காவாத
பெற்றவரின் கண்ணீரால்
செந்நிறமாக வடிந்து
கொண்டிருக்கிறது.,
சிறைக்குள் அந்த மெழுகு.

தானாடாவி்ட்டாலும்
தனை மறந்து
நீராய்ச் சிதறிக்
கொண்டிருக்கிறது..
சடசடப்போடு மெழுகு.

நீதி தேவதையோ
கண்கள் கட்டாமல்
நியாயத்தராசில்
எடையிட்டுக் கொண்டிருக்கிறது
மெழுகுகளின் உற்பத்தியை.

டிஸ்கி:- இந்தக் கவிதை 11.7.2011 உயிரோசையில் வெளிவந்தது. 


திங்கள், 23 ஏப்ரல், 2012

சொர்க்கவாசி.

சொர்க்கவாசி;-
****************
கனவுகள் மேலிமைக்குள்ளிருந்து
கீழிமைவழி கசிந்தன.
புத்தக வாசத்தோடே
பலகனவுகளும்.

அச்சிலிடப்பட்ட சிறுபத்ரிக்கையும்
ஆளையடித்துத் திரிசங்காக்குகிறது
இன்னும் பேர்காணும்
பேரின்பம் வேண்டி.

 பெரிய விதையாயிருந்தும்
கிளைப்பது சின்னச்செடி
தலை சுற்றிப் பார்க்கிறது
சிறு விதை விருட்சங்களை.

வீரியம் அடக்கின செடிகளுக்கு
வெடித்தபின் வாய்க்கிறது 
எட்ட நினைத்த உயரம்
அளந்து வைத்த அளவு.

ரோஜாக்கள் மரமாவதில்லை
மாட்சிமை விருது பெறுவதில்லை
எனினும் கிடைக்கிறது
விருதளிப்பவரின் இதயத்தில் இடம்

புத்தக அடுக்குகளூடே
ஒரு சோடா புட்டிக் கண்ணாடியும்
ஒரு புதைகல்லறையும்
கிடைக்கப்பெற்றவர் சொர்க்கவாசி.

டிஸ்கி:- இந்தக் கவிதை மே 29.2011 திண்ணையில் வெளியானது.


சனி, 21 ஏப்ரல், 2012

மோனநிலை..

மோனநிலை..:-
*****************

ஒருத்திக்கு கிளி பூச்செண்டு
இன்னொருத்திக்கு கரும்புவில்
மற்றுமொருத்தி காசைக் கொட்டுகிறாள்
சிலர் மட்டும் ஆயுதம் தாங்கி.

நான் சமையலறைக் கரண்டியுடன்
சிலசமயம் லாப்டாப்புடன்
எதுவும் சுமக்கா மோனநிலையில்
ஏன் எவருமே இல்லை.

டிஸ்கி:- இந்தக் கவிதை மே. 29, 2011 திண்ணையில்  வெளியானது.


 

புதன், 18 ஏப்ரல், 2012

விளிம்பற்றவை..

விளிம்பற்றவை:-
**********************
விளிம்பு மடிக்கப்படாதவை
பாதுகாப்பானவை அல்ல.
தம்ளர்களில் தட்டுக்களில்
கீறக்கூடிய அபாயமுடையவை

மலைப்பிரதேசங்களில்
பாதுகாப்பு விளிம்புகளைப் போல
திருமண விளிம்புக்குள் நிற்பது
உடலை அழிவிலிருந்து காப்பாற்றுகிறது.

பொருளாதார விளிம்புகளில்
ஒதுக்கப்பட்டவர்கள் ஏழைகளாகவும்
சமூக விளிம்புகளில் ஒதுக்கப்பட்டவர்கள்
பாலியல் தொழிலாளியாகவும்
பால் மதிப்பீடு விளிம்புகளில்
தள்ளப்பட்டவர்கள் பால் சுயம்புகளாகவும்
ஒடுக்குமுறை விளிம்புகளில்
ஒதுக்கப்பட்டவர்கள் சமூக விரோதிகளாகவும்

விளிம்புநிலை மனிதர்களை
விளிம்பு அற்ற வெளியில்
வீசிக் கொண்டிருக்கிறது சமூகம்.

தம்ளர் விளிம்புகளில் ஏடுகளையும்
தட்டு விளிம்புகளில்
கருவேப்பிலையும் இன்னபிறவும்..

விளிம்பு மடக்கப்பட்டவை
பலசமயம் பாதுகாப்பானவை
சில சமயம் மழுங்கடிப்பட்டவை.

டிஸ்கி :- இந்தக் கவிதை வல்லமை மின்னிதழில் 8.3.2012 மகளிர் தினத்தில் வெளியானது
 

செவ்வாய், 17 ஏப்ரல், 2012

பள்ளி நினைவுகள்..( நம்பிக்கைப் பாண்டியனுக்கு நன்றி)

காரைக்குடி அழகப்பா மாண்டிசோரி( ப்ரிப்பரேட்டரி)தான் முதன் முதலா நான் போன பள்ளிக்கூடம். அங்கே பள்ளிக் கூடம் குடில் குடிலாக இருக்கும். ஏப்ரல் பூ அங்கேதான் எனக்கு அறிமுகம். போகன் வில்லா பார்க்கும்போதெல்லாம் எனக்கு எங்க ஸ்கூல் ஞாபகம் வந்துடும். அப்புறம் ஞாபகம் வருதே ஞாபகம் வருதேன்னு எல்லாம் பாட ஆரம்பிச்சுடுவேன்னா நம்பவா போறீங்க..:)

அங்கே படிச்சனோ இல்லையோ ஆண்டுவிழாவுல ஒரு பாட்டுப் பாட சொன்னாங்க. நல்லா கொழுக் மொழுக்குன்னு இருக்க பிள்ளைங்கள எல்லாம் மேடையில ஏத்தி ரைம்ஸ் சொல்ல சொல்வாங்கள்ள அதுதான். அந்தப் பாட்டு

“ தங்கம் போல பளபளவென்று ஆப்பிள் இருக்குது
தங்கைப் பாப்பா கன்னம் போல ஆப்பிள் இருக்குது
எங்க ஊரு சந்தையிலும் ஆப்பிள் விக்குது
எனக்கும் உனக்கும் வாங்கித் தின்ன ஆசை இருக்குது”

அப்பிடின்னு கன்னம் எல்லாம் தொட்டு அபிநயம் செய்து பாட சொல்லி கொடுத்தாங்க. சமத்தா பாடினவுடனே ஒரு சில்வர் ஆப்பிள் டப்பாவுக்குள்ள நிஜ ஆப்பிளும் ஒரு யானை பொம்மையும் ( துணியில் தச்சு பஞ்சு அடைச்சு ஜம்கி , சரிகை வேலைப்பாடு செய்தது ) கிடைச்சுது.

எல் கே ஜி , யுகேஜி எல்லாம் முடிச்சதும் மன்னைக்கு அனுப்பிட்டாங்க.. பின்ன ஆயா வீட்டிலேயே வச்சு அலக்கொடுப்பாங்களா என்ன..:) மன்னார்குடி.. இது ராஜ மன்னார்குடி..அங்கே ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்டு, செகண்ட் ஸ்டாண்டர்ட். ஏன் இங்கிலிபீஸ் ல சொல்றேன்னா அது கான்வெண்ட்.செயிண்ட் ஜோசப் ஸ்கூல் அப்போதான் கட்டிக்கிட்டு இருந்தாங்க.  க்ளாஸ் எடுத்த டீச்சர்ஸும் ஆங்லோ இண்டியன்ஸ். டீச்சர்ஸுக்கு பிடிச்ச பொருளை வைச்சு ஒருத்தர ஒருத்தர் நிக் நேம்ல கூப்பிட்டுப்பாங்க. எனவே எனக்கும் அந்தப் பேருதான் ஞாபகம் இருக்கு. ஹார்லிக்ஸ் மிஸ். பனானா மிஸ். எங்க மிஸ் பேரு ஹார்லிக்ஸ் மிஸ். என் தம்பியோட க்ளாஸ் மிஸ் பேரு பனானா மிஸ்.

இங்கேயும் ஸ்கூல் ரைம்ஸ் ஆண்டுவிழாவில்  ஏதோ ஒரு ஆங்கில ரைம்ஸ் சொல்லி பரிசு கிடைச்சுது. ( நாம பாருங்க தமிழ் நேசக்காரி.. அதுனால நாம சொன்ன தமிழ் பாட்டு ஞாபகம் வச்சிருந்து இம்மி பிசகாம எழுதினோம். ஆனா பாருங்க ஆங்கிலப் பாட்டுன்னு அதை ஞாபகம் வச்சுக்கலை !)

இங்கே நான் ஒரு பரத நாட்டிய க்ளாஸ்ல சேர்ந்தேன். சேர்த்துவிட்டாங்க.. பதற வேண்டாம்.இன்னும் ஒரு நாட்டியப் பேரொளியை நீங்க இழந்துட்டீங்க. !. சாயங்காலம் ஆனா தை தை தித்தித்தை.. தாம் தாம் என்று ஒரெ ஸ்டெப்பை நாலு நாள் மடக்கி மடக்கி போட்டதுல முட்டி எல்லாம் வலி. அதோட முடிஞ்சுது நம்ம டான்ஸ் ஆர்வம். இன்னும்கூட ஆச்சர்யம்.  ஆடுறவங்க  எல்லாம் எப்பிடி இதையே வாரக்கணக்கா ஆடி பின்ன அடுத்த ஸ்டெப்பெல்லாம் கத்துகிட்டாங்ன்னு.

எங்க சித்தப்பாக்களும் நாங்களும் அடுத்து போன ஸ்கூல் மன்னார்குடியிலேயே ரொம்ப ஃபேமஸ்.. “ கணபதி விலாஸ். நடுநிலைப் பள்ளி” இது மன்னார்குடி ஒத்தத்தெருவில இருக்கு. இங்கே ஸ்கூல் படிக்கும்போது பள்ளிக் கூட எதிர்ல தூரத்துல ஆனந்த விநாயகர் கோயில் தெரியும். இங்கேருந்தே ஒரு கும்புடு மட்டுமில்ல. ரோட்டுல இருக்க மண்ணையும் எடுத்துப் பூசிக்கிறது. இதெல்லாம் நாமளா செய்யிறதில்லை. பள்ளிக்கூட மாணவமணிகளோட நம்பிக்கை. ஒரு நாள் எங்க வாத்தியார் நாராயணன் சார் திட்டுனவுடனேதான் இத சில பேரு விட்டோம். நீங்க எல்லாம் என்ன ஆட்டு மந்தைகளா. ஒருத்தன் எடுத்து நெத்தில பூசுனா எல்லாரும் பூசிக்கிட்டு வர்றீங்கன்னு விளாசிட்டாரு  .. வார்த்தையாலதான். அதுக்கப்பறமும் சில பேரு ரகசியமா பூசிக்கிட்டுத்தான் இருந்தாங்க.

இங்கதான் ப்ரேயர் சாங்ஸ் ல பித்தா பிறை சூடியையும், ஓங்கி உலகளந்தவையும் கத்துக்கிட்டேன். அலுவலகத்துக்குப் பக்கத்துல ஒரு தண்டவாளத் துண்டு தொங்கவிட்டு  இருக்கும் அதுல ஒவ்வொரு முக்கா மணி நேரத்துக்கும் ஒண்ணு , ரெண்டு , மூணுன்னு பெல் அடிப்பாங்க. பட்டாபி ராமன் சார்தான் தலைமை ஆசிரியர். வகுப்பு முடிஞ்சதும் எல்லாரும் போயி குச்சி ஐஸ், இலந்தை வடை, பெப்பர்மிண்ட், கல்கோனா, கடலை அச்சு, பாக்கு மிட்டாய், தேன் மிட்டாய், மாங்கா பத்தை, கொடுக்காபுளி,  எல்லாம் வாங்கி திம்பாங்க. ஆனா நம்ம வீட்டுல செம்ம கண்டிஷன்கிறதால நோ பாக்கெட் மணி.. ஒன்லி ஜொள்ஸ் விட்டுட்டு வூட்டுக்குவர வேண்டியதுதான். ( (வேணும்னா வீட்டுல சொல்லு வாங்கித்தரோம் .. என்ன வேணும்னு கேப்பாங்க.. ஆனா அந்த பள்ளிக்கூட ஃப்ரெண்ட்ஸ் முன்னாடி பந்தாவா வாங்கி தின்னுகிட்டே போற சந்தோஷம் கிடைக்குமா.. ஹூம்ம்ம்ம்.:))

 மன்னார்குடியை சேர்ந்த பாதிப்பேர் கணபதி விலாஸ்லயும் நேஷனல் ஹைஸ் ஸ்கூல்லயும்தான் படிச்சிருப்பாங்க. அங்கே ஷண்முகம் வாத்தியார்னு ஒருத்தர் மூணாப்பு எடுத்தார். நாலாவது க்ளாஸ் டீச்சர் பேர் மறந்துடுச்சு. ஆனா வகுப்பு லீடர் சிவசங்கர். கொட்டு வைச்சஆளை  மறக்க முடியாதுல்ல. ஹிஹி. ஆனா அஞ்சாவது க்ளாஸ் டீச்சர் பேரு. மீனாக்ஷி டீச்சர். அப்பதான் நாம் படிக்கணும்னு எல்லாம் ஒரு குறிக்கோள் வந்துச்சு. அது வரைக்கும்  ஏதோ பள்ளிக் கோடத்துக்கு அனுப்புறாங்களேன்னு போன நாம படிக்க ஆரம்பிச்சது அப்பத்தான். 4, 5 வது ராங்க் வாங்குவேன்.

அங்கேயும் ஒரு வில்லன் இருந்தான் வகுப்பு லீடர் ரூபத்துல. சந்தான ராமன்னு பேரு. சரியா ஒப்பிக்காட்டி பெஞ்ச் மேலே ஏறுன்னு சொல்லி நிக்க வைச்சிருவான். குர்ருன்னு பார்த்துகிட்டே மேலே ஏறி நின்னா. சாயங்காலம் வந்து என் சித்தப்பாகிட்ட என்ன உன் தங்கச்சி மொறைச்சி பார்க்குது. ஜாக்கிரதையா இருக்க சொல்லுன்னு மிரட்டல் வேற.. நாம எங்க முறைச்சு பார்த்தோம் . பயந்தபடிதானே பார்த்தோம்கிறது நமக்குத்தான் தெரியும்.

ஆறாப்பு ராமாமிர்தம் சார். ஏழாவது சட்டநாதன் சார், எட்டாவது இன்னொரு நாராயணன் சார். இதுல டீ பார்ட்டின்னு வருஷா வருஷம் கலெக்‌ஷன் செய்து வாத்தியார்களை கூப்பிட்டு பசங்க ஆட்டம் போடுவாங்க. பொண்ணுங்க சைலண்ட்தான். அடிக்கடி பென்சில் திருகி எழுதிகிட்டு இருந்ததுதான் ஞாபகம் வருது. அப்போவெல்லாம் ரேவதின்னு ஒரு பக்கத்து சீட் வில்லி.,” டீச்சர் இவ காப் வீட்டு காப் விட்டு எழுதுறான்னு போட்டுக் கொடுப்பா. பொதுவா நல்ல மதிப்பெண்களும்  எப்பவாவது 3, மத்தபடி 4, 5, 7 ந்னு ராங்க் வாங்கினதால டீச்சர்கள் ஒண்ணும் சொல்றதில்லை.வீட்டிலேயே எல்லாருக்கும் ட்யூஷன் வாத்தியார் வந்து சொல்லிக் கொடுக்கும்படி அப்பா ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த வகுப்புல எல்லாம். கலைமகள்னு  இந்தியன் பாங்க் மேனேஜர் பொண்ணு என் கூட படிச்சா. என் அப்பாவும் வங்கியில் காசாளரா இருந்ததால நாங்க ரெண்டுபேரும்தான் பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ், இன்னும் வைஜெயந்தி மாலா, தாமரைச் செல்வின்னு தோழிங்களும் இருந்தாங்க.

ஒன்பதாம் வகுப்பு மன்னையின் செயிண்ட் ஜோசப் பள்ளியில். தூயவளனார் பெண்கள் மேல் நிலைப்பள்ளி. அப்ப இந்த ஸ்கூல் இன்னும்  மேல் நிலைப் பள்ளி லெவலுக்கு வந்துருச்சு.  இதுலதான் என் ஒன்பதாம் வகுப்பு ஆசிரியையாக தங்கம் மிஸ்ஸும். பத்தாம் வகுப்பு ஆசிரியையாக மைதிலி மிஸ்ஸும் வந்தாங்க. கணக்குன்னா எனக்கு உயிரு. ஏன்னா எனக்கு வகுப்பு எடுத்த மைதிலி மிஸ் அவ்வளவு அழகா கணக்கு சொல்லிக் கொடுத்தாங்க. குட்டை புஸ்கானா இருந்த நான் இந்தப் பள்ளிக்கூடம் வந்ததும் ஓல்லிக் குச்சியா உயரமா வளர ஆரம்பிச்சுட்டேன். நான் வளர்கிறேனே மம்மின்னு பாடாத குறைதான். ஒரு வேளை அம்மா கொடுத்த( பூஸ்ட் , ஓவல்டின், போர்ன்விட்டா, மைலோ, )காம்ப்ளானோ என்னவோ..:)

பத்தாவது படிக்கும்போதுதான் ஒரு பெண்ணுக்கு உண்டான குணங்கள் குடியேற ஆரம்பித்தன. அதுவரைக்கும் சரிக்குச் சரியாக ஆண் போல எண்ணிக் கொண்டிருந்த எண்ணங்களில் எல்லாம் மாற்றம். நேற்று இல்லாத மாற்றம் என்னதுன்னு பாடலை அவ்வளவுதான்..:)பள்ளிக்கூட ஆண்டுவிழாவுல  எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது அப்பிடிங்கிற பாட்டுக்கு ஒரு டாக்டர் பொண்ணு அழகா டான்ஸ் ஆடினா. அந்த தேவதை பாட்டு ரொம்பப் பிடிச்சுது.

அங்கேயும் நாங்க மூணுபேர் ஃப்ரெண்ட்ஸ். அமுதா. ராணி. அமுதா ஒரு லாண்ட்லார்டு பொண்ணு. தஞ்சாவூர்ல வயல். எனவே பாட்டி வீட்டில் இருந்து ராமகிருஷ்ணா நகர்லேருந்து வந்து படிச்சா.  ராணி கொழும்பு ஸ்டோர்ஸ்காரர் பொண்ணு. எங்களுக்கு அஃஹன்னா ராணிகள்னு பேரு. எங்க இருந்தாலும் ஒண்ணா இருப்போம். ஒண்ணா உண்போம். ஒண்ணா படிப்போம். இன்னொருத்தி பேர் வச்சா முக்கூட்டு உடன்படிக்கை, முந்நாட்டு ஒப்பந்தம்னு..யார் என்ன கண்ணு வச்சாலும் பிரியாத நாங்க ப்ளஸ்டூவுல பிரிய நேர்ந்துச்சு. இதுக்கு நடுவுல என்னோட பத்தாவது படிச்சவ நளினி. பயங்கர பாசம். மன்னார்குடி ரெட்டைத்தெருவில இருந்து வருவா. எனக்கு அப்பவே ரொம்ப பாசத்தைக் கொட்டி கடிதம் எழுதுவா.நிறைய சினிமா பாடல்கள், வசனங்கள் எல்லாம் போட்டு ஒரு மாதிரி பாசக்கடல். நாம அவகிட்ட திரும்ப சரியா அன்பு காட்டலையோன்னு கூட எனக்கு ஒரு கில்டி ஃபீலிங்க் இன்னிக்கு வரைக்கும் உண்டு. தோழிகள் கை கோர்த்து உரையாடுவது போன்ற இன்பம் எங்காவது இருக்கா என்ன..?

ஆனா ஒண்ணு நாங்க டில்லியில் இருந்து சிதம்பரத்துக்கு மாற்றலாகி வந்து ட்ரெயினை விட்டு இறங்கி நிக்கிறோம். லக்கேஜ் எல்லாம் இறங்கிட்டு இருக்கு கிட்ட வந்து தேனம்மைன்னு கட்டிப் பிடிச்சுகிட்டவ  என் பசங்களப் பார்த்துக் கேட்டா என்னடி இவங்க உன் தம்பியான்னு.. டீ இவ்வளவு வருஷம் கழிச்சும் என் தம்பிங்க அப்பிடியேவா இருப்பாங்க.. இது என் பசங்கடி என்றேன்..:)

சந்த்ரோதயம்னு இன்னொரு தோழி. அவங்க அப்பா மன்னை மளிகைன்னு வச்சிருந்தார். அவளை அடுத்து சிதம்பரம் வந்தபின்னாடி சந்திச்சேன். ரோட்டில போயிக்கிட்டு இருக்கும்போது ஏய் நீ தேனம்மை தானேன்னு கையைப் பிடிச்சுகிட்டா. பத்தாவதுல தோள் மேல் கை போட்டு உலவிய நாங்கள் அதன் பின் பல முறை சந்திச்சோம்.. 

வயசுப்பிள்ளைகள் என்பதால் ஒரு மாட்டு வண்டியில்  ஸ்கூலுக்கு அனுப்புவாங்க. அந்த வண்டியில் டி ஏ எஸ் ரத்தினம் பட்டணம் பொடி கடைக்காரர் பொண்ணு லதாவும், நானும், என் அன்புத்தோழி சிராஜுன்னிசாவும் போவோம். ஒரே ரோட்டில மூணு பேர் வீடும் இருந்தது. சிராஜ் சிகப்பு பர்தா போட்டு வருவா. கண்ணுக்கு வலை மாதிரி ஓபன் இருக்கும். பத்தாவதோட நளினி, அமுதா, ராணி, சந்திரா, சிராஜ் ஆகியோர் படிப்பை நிறுத்திட்டதாலும் வேறு டிப்ளமா படிப்புல சேர்ந்ததாலும் சந்திக்க முடியலை.

ப்ளஸ்டூவில் ப்யூர் சயின்ஸ் க்ரூப்புக்கு மட்டும்தான் ஆங்கில மீடியம் கொடுத்தாங்க எங்க பள்ளிக்கூடத்துல. மத்ததெல்லாம் தமிழ் மீடியம்.  நேஷனல் ஹைஸ்கூலில் தான் கணிதம் ஆங்கில மீடியம் படிக்க முடியும். ஐயோ ஒரு ராமனுஜராகவோ, சகுந்தலா தேவியாவோ வரணும்னு நினைச்ச என் நெனைப்பில மண் விழுந்தது. அங்கே ப்யூர் சயின்ஸ் எடுத்து படிச்சேன். இங்கே எங்க க்ளாஸ் டீச்சர் இராஜராஜேஸ்வரி. பேருக்கு ஏத்தமாதிரி கம்பீரமானவங்க. இங்க்லீஷ் டீச்சர் பாரதி கண்ணம்மா. இந்தப் பேரைக் கேட்கும்போதெல்லாம் எனக்கு  அப்போ வந்த பாரதி கண்ணம்மா பாட்டு ஞாபகம் வரும்.

டென்த் படிக்கும்போது  கிராஃபும், மேப்புமா அலைஞ்ச மாதிரி ப்ளஸ்டூ படிக்கும் போது டெய்லி ரெக்கார்டு நோட்டு வரைவேன். எனக்கு வரைய பிடிக்கும். அதுல பென்சில ஷார்ப்பா சீவிக்கிட்டு புள்ளி புள்ளியா வைச்சு செல்லோட பாகம் குறிக்கிறதும். விதம் விதமான ஃபாண்ட் ல அது பேரை எழுதுறதுமா இருப்போம் நானும் ஜெயலெக்ஷ்மியும்.

அங்கேயும் நான், அமுதா, சாந்தி. மூணு பேரும் திக் ஃப்ரெண்ட்ஸ். அமுதா அப்பா திருச்சியில் கஸ்டம்ஸ் ஆஃபீசர், சாந்தி அப்பா ஏதோ பிஸினஸ் செய்துகிட்டு  இருந்தார். எங்களுக்கு தமிழுக்கு ஒரு மாஸ்டர் . அவர் பேரு அறம் வாழி.. மிக அழகான பேரு இல்ல.  என் நல்ல தமிழுக்கெல்லாம் இவரும் ஒரு காரணம்.

இன்னும் சில மாஸ்டர்சும் இருந்தாங்க. அடைக்கலம் மாஸ்டர் பிசிக்ஸ் எடுத்தார், பொலிட்டிகல் சயின்ஸ் போஸ் மாஸ்டரும், எகனாமிக்ஸ் செல்வராஜ் மாஸ்டரும் எடுத்தாங்க. மத்தவங்க எல்லாரும் டீச்சர்ஸ்தான். எப்பவாவது ஸ்கூல்ல திரைப்படம் போடுவாங்க. “ குழந்தையும் தெய்வமும்” நு ஒரு படம் பார்த்து பிழிய பிழிய அழுதேன் நான். அன்னைக்கு புடவையில் ( மலேசியாவில் இருந்து சபாபதி மாமா கொண்டுவந்த  ப்ரிக் ரெட் புடவை) போனதால அழுதத எல்லாம் பிழிந்து துடைக்க முடிந்தது..:) புதுசா முதல் முதல்ல புடவை கட்டினதால டீச்சர்ஸ் மற்றும் தோழிகளின் ஆச்சர்யப்பார்வைகளை முதன் முதலா சந்திச்சேன். நாம் கூட அழகா இருக்கமோன்னு சின்ன சந்தேகம் வந்திருச்சு..:))

என் பெரியம்மா மற்றும் அம்மா சில்வர் பாத்திரக் கடை வைச்சிருந்ததால (ஏவிஎம் மார்ட்னு பேரு) , வருடம் ஆரம்பிச்சா காலண்டர் டீச்சர்ஸுக்கு காலண்டர் கொடுக்குற வேலையை என்கிட்ட கொடுத்துடுவாங்க. அப்ப நான் எல்லாருக்கும் கொடுத்துட்டு கடைசியா என் ஃப்ரெண்ட் சாந்திகிட்ட கொடுத்தேன். அவளுக்கு கோவம். நம்மோட இருக்கவங்கதாண்டி முக்கியம். மத்தவங்களுக்கு அப்புறம் கொடுத்திருக்கலாம்ல என்றாள். என் கண்ணோட்டம் என்னவென்றால் அவள் என் தோழி . கடைசியில் பத்தாமல் போயிட்டா கூட வீட்டில் இருந்து மறுநாள் கொண்டு வந்து கொடுக்கலாம் என்பது. ஒன்னா இருந்தாலும் ஒவ்வொருவர் கண்ணோட்டமும் வேறுன்னு புரிஞ்சுகிட்டேன்.

வசந்தி. ராஜ ராஜேஸ்வரி, ப்ரேமலதா, ஷெண்பகம்,  ஆயிஷா,ஜெயலலிதா , மலர்விழி ன்னு நல்ல தோழிகள் அதிகம் அந்த வகுப்பில். ஆங்கில மீடியம் என்பதால் 16 பேர்தான் இருந்தோம். ஒரு நாள் ” ஒரு தலை ராகம்” படம் பார்த்துட்டு வந்து  அவ ஏண்டி அப்பிடி பண்ணான்னு வசந்தி, ஜெயலலிதா, எல்லாம் அழுதது மறக்க முடியாது.

எங்க பள்ளியில் எனக்கு பிடிச்ச அம்சம் என்னன்னா. அதுலயே வயல் குளம்னு ஒரு தன்னிறைவு பெற்ற கிராமம் போல இருக்கும். சோலை போல அழகு. இன்னும் என் பதின்பருவப்பள்ளிதான் கண்ணுக்குள்ள நிக்குது. சொல்ல முடிந்ததும் சொல்ல முடியாததும், உணர முடிந்ததுமான பதின்பருவம் யாருக்குமே மறக்க முடியாத பருவம்தானே. 

என்ன படிச்சதை எல்லாம் எழுதாம நடந்த நிகழ்ச்சிகளையே எழுதி இருக்கேன்னு பார்க்கிறீங்களா. நாம் என்ன படிச்சும் என்ன ஐ நா சபைக்கா போயிட்டம். ஏதோ பிள்ளைங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்தோம். ப்லாக் எழுதுறோம். இதுதாங்க அதோட பலன்.. சரி சரி ஒரு ப்லாகரா என்னைப் பள்ளி நினைவுகள் எழுத கூப்பிட்ட ராஜு பாண்டியன் என்ற நம்பிக்கைப் பாண்டியனுக்கு நன்றி..!!!

திங்கள், 16 ஏப்ரல், 2012

கோமாளி ராஜாக்கள்.

கோமாளி ராஜாக்கள்..
**********************
ராஜாக்களாய்க்
கற்பிக்கப்பட்டவர்கள்
ராணிகளாய்த் தெரியும்
சேடிகளின் கைப்பிடித்து.,
ரகசியக்காமத்துள்
சுற்றி வந்து..

பட்டத்து ராணீக்கள்
அடகு நகை மீட்கவோ.,
அலுவலகத்துக்கோ
அழும் பிள்ளைக்கு
பால் வாங்கவோ
சென்றிருக்கலாம்..

தன் அந்தப்புரத்து
ராணிகளைக்
கவனிக்க ஏலாமல்
யார் யாரின்
அந்தப்புரத்துள்ளோ
அத்துமீறி நுழைந்து

ஆக்கிரமிக்கும் ராஜாக்கள்.
சிரச்சேதம் செய்யப்படலாம்..
சேதமுற்றே திரிவோர்க்கு
சிரச்சேதம் பெரிதா என்ன..
ராஜாக்கள் கூஜாக்களாய்
பின் கோமாளிகளாய்..

டிஸ்கி:- இந்தக் கவிதை  மே 29,2011 திண்ணையில் வெளியானது.

வியாழன், 12 ஏப்ரல், 2012

மூலக்கூறுக் கோளாறுகள்.

மூலக்கூறுக் கோளாறுகள்..:-
*******************************
ஒன்றறியாமலே
ஒன்றின் கால்
ஒன்றறியும்..

எண்டோசல்பான் கலந்த
கார்பன் ஹைட்ரஜன்
மூலக்கூறுக் கோளாறில்

விசையுற்றுப் பறக்கும்
ஃபோட்டான்கள் மிதக்க
உள்நுழைந்த
கார்னியா கிரணம் பீடிக்க

எண்டார்ஃபின்கள்
தடை பிறழ்ந்த
உற்பத்தி..

டெசிபல்களும் பிக்சல்களும்
மாயக்கண்ணாடிப் பிம்பம்
விளைத்த க்ளோனிங்குகள்..

சடை விழுது பின்னிய
சாரையும் சர்ப்பமும்..
காலற்ற பைசாசங்கள்
சுற்றிய நஞ்சுக் கொடி..
 
டிஸ்கி:- இந்தக் கவிதை மே 22, 2011 ஞாயிறு திண்ணையில் வந்துள்ளது.

புதன், 11 ஏப்ரல், 2012

என்ன வாசிப்பது.

என்ன வாசிப்பது..
********************
 கண்களின் வழியோ
கண்ணாடி வழியோ
பிரதிபலிக்கிறது
நீ வாசிப்பது....
எழுத்துக்களோ., கோப்புக்களோ.,
அங்கங்களோ., ஆராய்ச்சியோ..

காக்கைக்கால் கோடுகள்
உற்சாகம் கிளப்பும் ஒன்றையும்.,
நெற்றிச் சுருக்கங்கள்
பொருளாதார வரைபடங்களையும்
கன்னக் குழிவுகள்
ஒரு கிளர்த்தும் காமத்தையும்
இதழின் இறுக்கங்கள்
உள்பூக்கும் பிடிவாதத்தையும்...

 என்னவென்று அறியாத
இன்பமாய் இருக்கிறது.
எதிர்வினைகள்
ஏதும் அற்று
எதிரே அமர்ந்து
என்ன வாசிக்கிறாய்
என்பதறியாமல்
உன்னை வாசிப்பது..

டிஸ்கி:- இந்தக் கவிதை மே 15,2011 ஞாயிறு திண்ணையில் வெளிவந்தது.

செவ்வாய், 10 ஏப்ரல், 2012

களங்கமில்லாமல்..

மனம் ஒவ்வொரு
உருவமாக உன்னை
வனைந்து பார்க்கிறது..
நீ பிரதிபிம்பங்களுக்குள்
அடங்காமல் மஹிமா
லகிமா அணிமாவாய்
எங்கேயோ அமர்ந்து
என்னை நானறியாமல்
பார்ப்பாயோவென்ற
எதிர்பார்ப்போடு
கழிகிறது நொடிகள்..
எப்போதாவது
நீயறியாமல்
உன்னை அறிய நேர்ந்தால்
அன்று தெப்பம்தான்
திருநாள்தான்
தேரோட்டம்தான்
எங்கே கண்டுபிடித்தாய்
என்னை..?
ஏன் இன்னும்
கண்ணாமூச்சியில்..?
என்னைத் தொலைக்காமல்
களங்கமில்லாமல்
உன்னைக் கண்டுபிடிப்பேனோ
என்ற கவலையிலும்
ஆர்வத்திலும் நான்..

 டிஸ்கி:- இந்தக் கவிதை மே 8, 2011 ஞாயிறு திண்ணையில் வெளிவந்தது.

வியாழன், 5 ஏப்ரல், 2012

சிவப்புப் பட்டுக் கயிறு. ( தினமணி-காரைக்குடி புத்தகத் திருவிழா இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் ஊக்கப்பரிசு பெற்ற கதை)

சிவப்புப் பட்டுக் கயிறு:-
*************************

 பட்டியக்கல்லில் இருந்து கீழ் வாசலுக்குள் தண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. காசாணி அண்டாவில் தண்ணீர் நிரம்பி வழிந்தபடி இருந்தது. இதுதான் இன்னும் சிலநாட்களுக்குக் குடிக்கவும் சமைக்கவும். நல்லவேளை தண்ணீர் தூக்க குடி தண்ணி ஊரணிக்கு பித்தளைக்குடமும் புளியுமாகப் போகவேண்டாம்.அங்கே செம்மண்ணில் தேய்த்து அதிலேயே கழுவி அப்புறம் கொஞ்சம் ஊரணிக்கு உள்ளே போய் தெளிந்த தண்ணீர் மோந்துகிட்டு வரணும். இப்ப கொஞ்ச நாளைக்கு அந்த அவஸ்தையில்லை என்ற நினைப்பே அவளுக்கு போதுமானதாய் இருந்தது.

 வெய்யில் நாளில் வரும் மழை குளுமையை மட்டுமல்ல., கொஞ்சம் வெக்கையையும்தான் கிளப்பிக் கொண்டு வருகிறது. ஐயா பட்டாலையில் குறிச்சியில் உக்கார்ந்து சுருட்டைப் புகைத்தபடி பார்த்துக் கொண்டிருந்தார்கள். யார் யாரோ பீடி ., சிகரெட் குடிக்கும் போதெல்லாம் வரும் கோபம் ஐயாவின் சுருட்டைப் பார்த்தால் வருவதில்லை. பிறந்ததில் இருந்து அவர்களை சுருட்டும் கையுமாகப் பார்த்துவிட்டதாலோ என்னவோ. அல்லது சிறுபிள்ளையில் படித்த வெளிநாட்டுக் காமிக்ஸ் கதைகளில் வரும் பணக்கார ஹீரோக்கள் -- ரிப்கெர்பி-- ஸ்டைலாக சுருட்டு பிடிப்பதும் ஒரு காரணமாயிருக்கலாம்.

காஃபி போடவேண்டும். இந்த மழைக்காலத்தில்தான் காஃபி., டீ எல்லாம் அவ்வளவு ருசிக்கும். கருப்பட்டிக் காப்பி., சுக்குக் காப்பியும் கூட. திருமணம் ஆகியும் கூட ஆத்தா வீட்டின் ருசி என்பது எவ்வளவு பிடித்தமானதாய் இருக்கிறது. திருமணம் ஆகி சென்றபின் சென்ற அந்த வீட்டின் எல்லாவற்றோடும் பிடித்தமானதை விட வீடுதான் முதலில் ஒட்டும் இடமாக இருக்கிறது. தாய் வீடு என்பது சொந்த சுவாசம் போலவும். மாமியார் வீடு என்பது கொஞ்ச காலத்துக்கு ஆக்ஸிஜன் சிலிண்டரில் சுவாசிப்பது போலும் இருக்கிறது. வீட்டின் கதவுகள்., ரூம்கள்., அலமாரிகள்., பொருட்களுடனான பரிச்சயம் அதிகமான பின் அதுவும் இன்னொரு சுவாசமாய் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது

நெல் பயிரை இரண்டு முறை நடவு செய்வது போல். ஒரு இடத்திலிருந்து மறு நடவு செய்தபின்தான் அது செழிக்குமென்றால் அதுதானே செய்ய வேண்டும். என்ன சொன்னாலும் வேரோடிய இடத்திலிருந்து பிடுங்குவது வலிக்கத்தானே செய்கிறது மண்ணுக்கும் பயிருக்கும்.

மாசமான பின் பேறுக்காக ஆத்தா வீடு வந்த பின் அந்த வீடு பழக்கப்பட்டதாய் இருந்தாலும் லேசாக அந்நியமான ஒரு உணர்வு இருந்தது. வீடு ஜகஜ்ஜோதியாக இருந்தாலும் தன் வீடு அது இல்லை என படிந்து விட்டது. காஃபியை டிக்காக்‌ஷன் விட்டு நுரை பொங்க ஆற்றியபடி ஐயா அருகே அமர்ந்தாள் அவள். இருவரும் மழையையும் காஃபியையும் ருசித்தபடி இருந்தார்கள். மழை சொட்டுச் சொட்டாய் வடியத்துவங்கியது. இந்தப் பட்டாலையில் இந்தப் பத்தி., வளவுகளில்தானே கல்லா மண்ணா விளையாடியது. இந்த ஆல்வீட்டில்தானே ஐஸ்பால் டப்பா விளையாடியது. திடீரென்று தான் பெரிய பெண்ணாக ஆகியதும் விருந்து விஷேஷமும்., கல்யாணமும் ஆகி வயிற்றில் குழந்தையும் ஆகிவிட்டது. குழந்தை லேசாக முண்டியது. வயிறே அசைவது போல த்ரில்லிங்காக இருந்தது. குட்டிக் கையாலோ., காலாலோ வயிற்றில் சுரண்டியது. லேசான புன்சிரிப்போடு வயிற்றைப் பிடித்தபடி ஐயாவைப் பார்த்தாள். ஐயாவும் ., ”என்னாத்தா பேரப்பய முண்டுறானா”., என சிரித்தார்கள் சிரிப்பு என்பதை ஐயாவின் கண்கள் வழிதான் பார்க்கவேண்டும். அந்தக்கால பாலிவுட் நடிகர்களைப் போல மிக கம்பீரமான பர்சனாலிட்டியும் ஆகிருதியுமாக இருப்பார்கள் ஐயா. கருணை பொங்கும் கண்கள் வழி காந்தம் வழிவது போல ஈர்க்கும் சிரிப்பு.இத்தனையையும் ரசிக்கக் கொடுத்து வைக்காமல் இரண்டு அப்பதாக்களும் போய் வி்ட்டார்கள்., ரெண்டு சின்னச் சித்தப்பாக்களை விட்டுவிட்டு.

தம்பிகளும் சித்தப்பாக்களும் கல்லூரி விடுதியில் தங்கிப் படித்துக் கொண்டிருந்தார்கள். அப்பாவும் அம்மாவும் வெளியே சென்றவர்கள் திரும்பி இருந்தார்கள். ரெண்டாங்கட்டில் சலசலப்பு கேட்டது. யாரென்று பேர் தெரியாத ஒருவர் ஐயாவைப் பார்க்க வந்திருந்தார். அவரை வரவேற்றுவிட்டு எழுந்து உள்ளே காஃபி கலக்கச் சென்றபோது வந்தவர் ஐயாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார். அப்பச்சி உங்க நடு மகனுக்கு சுவீகார ஜாதகம். அவுகளுக்குப் பொருந்திப் போகுதாம். ஆத்தா இல்லை அங்கேயும் அப்பச்சி மட்டும்தான். நம்மளப் பிள்ள வரப்போகப் பார்க்க முடியும். என்ன சொல்றீக என்றார்.

யார் யார் வீட்டிலோ சுவீகாரம் என கேள்விப்படும் போதெல்லாம் அது ஒரு பெரிய விஷயமாகத் தெரியவில்லை. தன் வீட்டிலேயே அதற்கான பேச்சு வந்தபோது கவலையாய் இருந்தது. ஒரு பெண்ணுக்குத் திருமணம் ஆனால் மாமியார் வீடு போகணும். பையன்கள் என்றால் ஜாலி . பிறந்த வீட்டிலேயே இருக்கலாம் என்று நினைத்திருந்தாள்.

டுப்படியில் மழையால் ஈரம் கசிந்து கொண்டிருந்தது சுவர்களில். மரப்ப்ளாச்சுகள் லேசாய் பூசரம் பூத்திருந்தன. வீடு ரிப்பேர் பார்க்கமுடியாலும் பராமரிக்க முடியாமலும் வெளியூரில் வேலைக்காக வலசை சென்ற சிலர் வீடுகளையும் மேங்கோப்புக்களையும் இடித்து கலைப்பொருட்களை விற்கும் போதும் அவஸ்தையாய் இருக்கும். அவர்கள் பொருளாதாரத் தேவை அது. வீடு இடித்தபின் இடத்தையும் விற்று விடுவார்கள் பல அறைகள் கொண்டதாக இருக்கும் வீடுகளில் மிஞ்சிப் போகும் சாவிகளை என்ன செய்வார்கள். போகும் ஊரிலெல்லாம் அதையும் கொண்டு செல்வார்களா. எங்கே வைப்பார்கள். அவர்கள் சந்ததியினரிடம் வாழ்ந்த வாழ்வின் பெருமையை காண்பிக்கவா. எடைக்காவது எடுப்பார்களா அந்தச் சாவிகளையும்., பழைய இரும்புப்பெட்டகங்களையும்.

முன்னோர்கள் வெளிநாட்டுக்குக் கொண்டுவிக்கப் போய் சம்பாதித்துக் கொண்டுவந்து தேக்கும் பித்தளையும் காரையுமாய்க் கட்டிய கல்லுக் கட்டிடங்கள் அவை. அவற்றின் வாழ்நாள் என்பது அவ்வளவுதானோ என்னவோ.

காஃபி கொண்டுவந்து கொடுத்தபோது அந்த சுவீகார இடம் முடிவானது போலத் தோன்றியது. லீவுக்கு பிள்ளைகள் வரும்போது முடித்துக் கொள்ளலாம் என பேசிக் கொண்டார்கள். இன்னும் சில நாட்களே விடுமுறைக்கு இருந்தன. அவ்வளவுதானா எல்லாம். ஒரு பெண்ணைத் திருமணம் செய்து அனுப்புவது போல ஒரு பிள்ளையை அனுப்பிவிட முடியுமா. வயிற்றில் ஏதோ கனமானது போல இருந்தது. வீடு என்பது எல்லாருக்கும் நிலையற்றதுதானா..

ஐயா முகத்தை பார்க்கவே முடியவில்லை. ஏதோ இது நம் கடமை. ஜாதகத்தில் அப்படி இருப்பதால் சுவீகாரம் கொடுக்கவேண்டிய கட்டாயத்தில் இருப்பது புரிந்தது. ஐயா முகத்தில் இருந்த துயரம் எல்லாம் அவள் முகத்துக்கு இடம் மாறியது. குறிச்சியில் ஐயாவின் பக்கம் அமர்ந்தபோது . சூழ்நிலை இறுக்கமாய் இருந்தது. அதை மாற்ற விரும்பிய ஐயா தலையை கோதி விடத் துவங்கினார்கள். எத்தனை இரவுகள் எல்லாரும் ஐயா என் தலையை கோதுங்க என்று சொல்லி மடியில் படுத்துக் கிடப்போம். கண்களில் துளிர்த்த நீரை ஐயா பார்க்காமல் கண்ணுக்குள்ளேயே சிமிட்டி சிமிட்டி அடக்கினாள்.

பிள்ளைகளுக்கென்று தனியான எண்ணங்கள் இருக்க முடியுமா என்ன. பெற்றவர்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும். அனைவரும் சூழ்நிலைக்கைதிகள்தான்.அப்பா., அத்தைகளின் .சுப்புடி., திருவாதிரைப் புதுமைகள் செய்த ஃபோட்டோக்கள் வரிசையாக சாமி வீட்டு நிலையில் சாய்வாக மாட்டி இருந்தன. அதில் ஒரு ஃபோட்டோவாகத் தன் திருமணமும் இடம்பெற்றது போல தன் சித்தப்பாவின் சுவீகாரமும் இடம் பெறும் என நினைத்தாள்.

குறிக்கப்பட்ட நாளும் வந்தது. அதற்கு முன்பே அவர்கள் பிள்ளைக்கு உடைகளும்., பொருட்களும் ., சாமான்களும் கொண்டு சேர்த்திருந்தார்கள். இங்கு இத்தனை பேரோடு இருந்துவிட்டு அங்கு சென்று தனியாக இருக்கவேண்டுமே என இருந்தது. சித்தப்பாக்களும் தம்பிகளும் சிட்டுக் குருவிகளைப் போலத் திரிந்து கொண்டிருந்தார்கள். போஜன் ஹாலில் பலகாரப்பந்தி அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தது.

பி்ள்ளையின் பிறந்த இடத்துத் தாய்மாமன் பிள்ளையின் கையைப்பிடித்து பிள்ளை கூட்டிக் கொள்பரின் தாய் மாமன் கையில் கொடுப்பதோடு முடிந்து விடும் சுவீகாரம் என அடுத்த வளவுக்கார ஆயா சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

டுவீட்டில் கோலமிட்டு., பத்தி வளவிலும் கோலமிடப்பட்டிருந்தது. தடுக்கில் நிற்க வைத்தார்கள் சித்தப்பாவை. அதற்கு முன்பே முறி எழுதிக் கொண்டு விட்டார்கள் இன்னார் மகனை இன்னாருக்கு சுவீகார புத்திரனாகக் தத்துக் கொடுப்பதென. கெஜட்டில் பெயர் மாற்றம்., தாய் தந்தை பெயர் மாற்றம் எல்லாம் அனுப்பக் குறிக்கப்பட்டது. பெண்ணுக்குக் கல்யாணம் என்றால் அது ஒரு வீட்டுக்கு மருமகளாக அனுப்பும் சடங்கு மட்டுமே. ஆனால் அதுவரை புழங்கிய பெயரில் ஆணுக்கு அதிகாரமில்லாமல் போவது சுவீகாரத்தில்தான்.

ஒரு புதுப்பெயரில் தன்னை யாராவது அழைத்தால் எப்படி இருக்கும் என தோன்றியது அவளுக்கு. புது உடைகளோடும்., தலையில் தலைப்பாவோடும் சித்தப்பா நின்றிருந்தது. சாமி வீட்டில் விளக்கில் போதுமான எண்ணெய் இருக்கா என பார்த்து ஊத்திக் கொண்டிருந்தார்கள். இரு பக்கமும் தாய் மாமன்கள் இல்லாததால் அதை ஒட்டிய உறவில் உள்ளவர்கள் சித்தப்பாவின் கையைப் பிடிக்கவும் வாங்கவும் தயாராய் இருந்தார்கள். விபூதித் தட்டுடன் சித்தப்பா நின்றிருந்தது. திருமண வீட்டில் தான் போய் வருகிறேன் என சொல்லி அனைவரிடமும் கும்பிட்டுக் கட்டிக் கொண்டது ஞாபகம் வந்தது.

சித்தப்பாவிடம் ஒருவர் ஏதோ சொல்லி பேனாக்கத்தியைக் கொடுக்க அது இடுப்பில் கைவைத்து பாண்டை நகர்த்தி பட்டுக் கயிற்றைப் பிடித்துக் கத்தியால் அறுத்தது. அதற்கு அறுக்க வரவில்லை. கை வலிமை இழந்தது போல தவித்தது. பிறகு கோணல் மாணலாக இழுத்து அறுத்தது. அதன் பின் அதை விபூதித் தட்டில் வைத்து விட்டு போறேன் அப்பச்சி என ஐயாவிடம் சொன்னது. எப்போதும் புன்னகை கோடிழுக்கும் கண்களோடு சிரிக்கும் ஐயா அன்று வெடித்து தலையில் அடித்துக்கொண்டு அழுதார்கள் .,போறேன்கிறானே.. ஆத்தா.. என..சுவற்றில் தலையை முட்டியபடியும். சித்தப்பாவும். அழுதது. .ஐயா அழுதால் தன்னையறியாமல் எல்லார் கண்ணிலும் நீர் வடிகிறதே. இதுதான் தன் தசையாடுவதா.

வயிறு வாய்க்கு வந்தது போல இருந்தது. இறுகி உருண்டு முறுக்கியது வயிறு. பிள்ளையை வயிற்றோடு பிடித்து கொள்ளவேண்டும் போல இருந்தது. தாளமுடியாத துக்கம் தொண்டையிலும் நெஞ்சிலும் பந்தைப் போல அடைத்துக் கொண்டிருந்தது. எல்லாருமே கதறி அழுது கொண்டிருந்தார்கள். ஒரு பெரும்பிரிவு அது. பின்னால் இங்கு வரப்போக முடியும் என்றாலும் அன்றைய கணக்குப்படி அந்த வீட்டோடான வாழ்வு முடிந்து விட்டது. இனி அது வேறொரு வீட்டுப் பிள்ளை. கண்ணீராய்க் கொட்டியபடி இருந்தது வீடு.

ல்லாரும் பிள்ளை கூட்டிக் கொண்ட வீட்டுக்கு கொண்டுவிடச் சென்றிருந்தார்கள் . அது இனி சித்தப்பா வீடு. இந்த வீட்டில் அதுக்கு இனி எந்த உரிமையும் இல்லை. ஒரு செடியை வேரோடு பிடுங்கி நட்டது போல நட்டுவிட்டாச்சு. இனி அது பாடு அந்த நிலம் பாடு. என்ன ஒரு நடைமுறை இது. பிள்ளை இல்லாதவர்க்குப் பிள்ளையாக., அவர்கள் பிள்ளைக் கலி தீர்க்கத்தான் சென்றிருக்கிறது சித்தப்பா என ஆசுவாசப்படுத்திக் கொள்ள வேண்டியதாயிற்று.

இனி அதுக்கு திருமணம் ., பிள்ளை குட்டி., வாழ்க்கை எல்லாம் அங்கேதான். எப்பவாவது தோன்றினால் என் சித்தப்பா எனச் சென்று பார்க்கலாம். வேறொரு சூழலில் வேறொரு வாழ்வில்.

பட்டுக் கயிறு அறுப்பது என்பது தொப்புள்கொடி அறுப்பதற்குச் சமம். இந்தவீட்டில் உன் உறவு முடிந்து விட்டது இனி இன்னொரு ஜென்மம் உனக்கு. இன்னொரு பெயர் உனக்கு. என பிரிப்பது போல.

மாசமான பெண் பிரசுபத்துக்கு வந்தபின் ஊர் விட்டு ஊர் போகக் கூடாது என வீட்டில் ஒரு பெண்ணைத் துணைக்கு வைத்து விட்டு அனைவரும் சென்று விட்டார்கள்.

ஆட்டுக்கல்லில் அந்தப் பெண் இரவு உணவுக்காக மாவு அரைத்துக் கொண்டிருந்தாள். எல்லாரும் சென்றபின் வாசக் கதவு ., நிலைக்கதவுசாத்தி ., சாமி வீட்டின் விளக்கை மலையேத்தியபின் பூட்டும் போது சித்தப்பாவின் நினைவின் மிச்சமாக அறுத்த அந்த சிவப்பு பட்டுக் கயிறு விபூதித் தாம்பாளத்தில் இருந்தது.

டிஸ்கி:- இந்தச் சிறுகதை தினமணி - காரைக்குடி புத்தகத்திருவிழா இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் ஊக்கப் பரிசு பெற்றது. நன்றி தினமணி மற்றும் காரைக்குடி புத்தகத்திருவிழா.:)

செவ்வாய், 3 ஏப்ரல், 2012

முணுமுணுப்பு..வேடியப்பனின் நூல் எனது பார்வையில் ( திண்ணையில்)

சிறுகதைகள் என்பது சட்டென்று படித்துவிட முடிவதால் எப்போதும் என் ஈர்ப்புக்கு உரியதாய் இருக்கிறது. ஒரு சில பக்கங்களில் நம்மை அந்த நிகழ்வெளிக்கு செலுத்துவது என்பது சிலரால்தான் கைகூடும். மண்ணின் மணம் வீசும் இக்கதைகளில் பனி படிந்த வயல் மண்ணை வெள்ளெலி தள்ளிய வெதவெதப்பையும் ஊரில் வீசும் சாரல் தழுவிய ஈரக்காற்றையும் உணர முடிகிறது. கண்மணி குணசேகரன் முன்னுரை அளித்திருக்கிறார். பாவை பப்ளிக்கேஷன்ஸ் வெளியிட்டுள்ள இந்நூலின் விலை . 45 ரூபாய்.

எழுத்தாளர் கயிலை மு. வேடியப்பன் என்றதும் கயிலைக்கு சென்று வந்த ஞானியோவென என நினைத்தால் அவர் முப்பதுகளில் உள்ள கயிலாயபுரம் (தர்மபுரி மாவட்டம்) என்ற ஊரைச் சேர்ந்த டிஸ்கவரி புத்தக நிலைய உரிமையாளர் வேடியப்பன். புத்தகங்கள் மீதும் எழுத்தின் மீதும்., மண்ணின் மீதும் ததும்பி ஊறிய காதலோடு வடித்து வைத்திருக்கும் இக்கதைகள் மிக அற்புதம். சினிமா தொடர்பான பணிகளிலும் ஈடுபடுவதால் ஒன்றை சித்தரிப்பது என்பது அருமையாக கைவரப் பெற்றிருக்கிறது.

மொத்தம் பத்தே கதைகள்தான்.. பத்தும் கிராமம் தழுவிய கதைகளாய் இருந்தாலும்., பெண் வாழ்வியலை அதிகம் பேசுகின்றன. விதைப்பதற்கான விதையை விவசாயிகள் வைத்துக் கொள்ளும் உரிமையைக் கூட பறித்துவிடும் நோக்கத்தில் ., தங்களது ஜீன் மாற்றப்பட்ட பி டி ரக விதைகளைப் பரப்பி உலக உணவு உற்பத்தியையே தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து அனைவரையும் பிச்சைக்காரர்களாக ஆக்கும் முடிவோடு உள்ள ஏகாதிபத்தியம் போலத்தான் இலக்கியம் என்பது இன்றைய வாழ்வியலின் நடப்பு முறையைப் பேசாமல் ஹைக்கூ., சிம்பாலிசம் ., போஸ்ட் மார்டனிசம் என பேசுவது என ஒரே விளாசல் விளாசி இருக்கிறார் வேடியப்பன் தன் முன்னுரையில்.

சின்னவனும் பெரியவனும் சித்தரிக்கப்பட்ட விதம் செல்லப்பிராணி வளர்க்க விரும்பாத நானே வளர்க்க ஆசைப்படும் படி இருந்தது . தும்பி பிடிப்பதும்., ஓணான் பிடிப்பதும் ., உடும்பு, கீரி வேட்டையாடுவதும் கிராமத்து ஆனந்தம். ஆனால் இறப்பிற்குப் பின் அம்மா அழுதுகொண்டே இருப்பதுதான் நினைவில் இருக்கிறது.

தீப்பாஞ்சாள் நகரத்துக்காரிதான் ஆனால் பிச்சைக்காரி. உடல் உழைப்பினால் நிமிரும் காட்சி நெகிழ்வு. இப்படி வழிகாட்டப்படாமல் சேற்றிலேயே புதைந்து போவோர் ஆயிரம். இரண்டு கைகள் இருக்கும் போது உழைத்து தன்மானத்தோடு பிழைக்க வழி கூறியது அருமை.

தப்பிப்பு யார் யாரிடமிருந்து தப்பிக்க முடியும் என்பதைக் கூறியது. புருஷனோ., மனைவியோ., எத்தனை நாள் அல்லது வாரம் அல்லது வருஷம் பேசாமல் இருக்கமுடியும். ஒரு கட்டத்தில் மகள் விரும்பியவனை மணந்து கொள்ள வீட்டை விடு ஓடியதும்., அதற்கு மனைவி குற்றவாளி அல்ல என்பதை உணர்ந்தாலும் அந்த விடாப்பிடியான பிடிவாதத்தை விட முடியாமலும் சமரசம் செய்து கொள்ளத் தெரியாமலும் இருக்கும் அந்தக் கணவனும் அழகுதான். மனைவிக்கு சோறை மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு தன் ஆதிக்கத்தை உணர்த்துவதும் கூட அவளுக்கு மகிழ்வைத் தருவது வினோதமான உணர்வு.

சினிமாவில் நடிக்க வந்த டீக்கடை அண்ணாச்சி கதைதான் எனக்கு மிகவும் பிடித்த கதை. எதேச்சையாக டீக்கடை அண்ணாச்சி ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்க., அதே காரணத்தால் கடை தேய்ந்து நஷ்டத்திற்கு விற்றுவிட்டு., அவர் ஆல்பத்தைத் தூக்கிக் கொண்டு ஒவ்வொருவரிடமும் சான்ஸ் கேட்பது தத்ரூபமான கோடம்பாக்கம் நிஜக்கதை.

சாராயம் காய்ச்சும் கட்டியக்காரன் கதை வித்யாசம். மாமூல் கொடுப்பதும்., சிலசமயம் கேஸ் கிடைக்காத போது கேன்களோடு உட்கார வைக்கப்பட்டு படம் பிடிக்கப்பட்டு பத்ரிக்கைகளில் வரும் மெலிந்த சாராயம் காய்ச்சி பிடிபட்ட ஆளாக கட்டியக்காரன் இருப்பது போல் ஒரு தோற்றம் விரிந்தது மனக்கண்ணில் ..

வயலில் ஏர் பூட்டி உழ விரும்பும் ஒரு சாதாரண விவசாயித்தாத்தாவின் கதை முணுமுணுப்பு. ஒவ்வொரு மழையின் போதும் அதிகப்படியாய் பெய்து வாழை மற்றும் வயல்களை நாசப்படுத்தும் மழை குறித்தான கவலை எனக்குண்டு. எளிமையாய் களியும் கீரையும் உண்டு உழைக்க அஞ்சாத அந்தத்தாத்தா மழை வந்ததும் ஏர் பூட்டி நாடகப் பாடல்கள் பாடியபடி உழுவது அழகு.

படிப்பு மிகவும் யோசிக்கவைத்த கதை. தன்னைப் போல தன் மகனும் வாத்தியாருக்கு சாப்பாடு கொண்டு செல்வதைப் பார்த்துப் பதைக்கும் சீனி ., பின் எடுக்கும் முடிவு வரவேற்கத்தக்கது. படிக்க வரும் பிள்ளைகளை கடைக்கு அனுப்புவது., தன் வீட்டுக்குச் சென்று சாப்பாடு கொண்டு வர சொல்வது., சில இடங்களில் தனியாய் ட்யூஷன் வேறு வகுப்பாசிரியரே நடத்தி தன் வகுப்பு மாணவர்க்கே ப்ரைவேட் க்ளாஸ் எடுப்பது என்பதெல்லாம் எனக்கு ஒவ்வாத விஷயம். இந்தக் கதையின் முடிவுக்கு பெரிய பூங்கொத்து.

கற்பென்றும் தீட்டென்றும் பெண்ணை மட்டும் ஒதுக்கி நெருப்புக் கம்பளத்தில் நடக்க வைப்பது மனித் சமூகத்தின் வழக்கம். கால் ஊனமான ஆறுமுகம் தன் தந்தையிடம் சொல்லி திருமணம் செய்துகொள்ள சமூகம் புறக்கணிக்கும் பெண்ணைத் தேர்ந்தெடுப்பது அவர் மன அழகைக் காட்டியது. இருந்தும் ஊரார் முன் ஒருவரால் அவமானம் ஏற்படும் அவளுக்கு பாதை நெருப்புக் கம்பளமாய் விரிந்து நீண்டு நடப்பது வருத்தம் தந்தது.

ஆண் பெண்ணை அன்பால் ஆக்கிரமிப்பது போல இங்கே ஒரு பெண் ஆணை ஆக்கிரமித்து தன் கட்டுப்பாட்டுக்குக் கீழ்தான் என எண்ண வைக்கிறாள். ஒரு கட்டத்தில் அவள் வாழ்கை இவன் வசமாக வரும்போது அவள் தன் கம்பீரம்., செருக்கு எல்லாம் இழந்து தன் பாட்டியை., மற்ற பெண்களைப் போலாவது ஒரு சின்னத் துயரமாகத்தான் இருக்கிறது பாட்டி முகத்தில்..

முட்டக்கண்ணனார் கதை கொஞ்சம் அதிர்ச்சி கலந்த கிராமத்து ரகசியம். கிடை போட்டிருக்கும் இடத்தில் இளம் ஆடு ஒன்று இறக்க அதை போட்டிக்காக ஒருவரே தின்று விட்டால் மற்றவர் மீசை எடுக்க வேண்டுமென்பது பந்தயம் . ”பாலும் பழமும் ஒரு வகைன்னா., சாரயமும் கறியும் இன்னொரு வகை. ” என்று குதூகலிக்கும் அவர்கள் அடுத்த வருட படையலில் நேர்ந்து கொண்டவர்கள் படையலிட்டு மீசையை எடுக்கலாம் என்பதை சொல்லும் போது. நிறைய வேண்டுதல்களை நான் இப்படியேதான் செய்து கொண்டிருக்கிறோமா என்ற ஐயமும் ஏற்பட்டது..

மொத்தத்தில் என்னை கிராம மண்ணில் உலாவச் செய்த கதைகள்.. யதார்த்தமும் வாழ்வியல் அழகும் அவலமும் பொருந்திய கதைகள். கண்மணி குணசேகரனின் வார்த்தைகளில் சொன்னால் “இன்னும் கூட உள்நுழைந்து வாழ்வியலின் நுனியறியாத முடிச்சுக்களைத் தேடி எழுத ஆயத்தப்படுத்திக் கொள்வதுதான் வேடியப்பன்., தன்னை ஒரு படைப்பாளியாக நீட்டித்துக் கொள்வதும் நிலைநிறுத்திக் கொள்வதும் ஆகும்.

டிஸ்கி : - இந்த விமர்சனம் சனி. ஏப்ரல் 30, 2011 திண்ணையில் வெளிவந்தது.

திங்கள், 2 ஏப்ரல், 2012

ஜவஹர் பள்ளி குழந்தைகள் நடனப் போட்டியில் நடுவராக.

சென்னை ஜவஹர் வித்யாலயாவில் ஆகஸ்ட் 24  , 2011 அன்று குழந்தைகளுக்கான நடனப் போட்டி நடந்தது. அதில் என்னையும், டி சி எஸ்ஸில் பணிபுரியும் வைஷ்ணவியையும், டி நகர் பெங்கால் அசோஷியேஷன் பள்ளியில் தலைமை ஆசிரியையாக இருக்கும் லலிதாவையும் நடுவராக அழைத்திருந்தார்கள்.மிக அருமையாக ஆடினார்கள் குழந்தைகள். மூன்று நடனப் போட்டிகள் 3 ஆம் வகுப்பு வரை, 8 ஆம் வகுப்பு வரை ப்ளஸ்டூ வரை ஒரே நாளில் வெவ்வேறு தளங்களில் இடங்களில் நடைபெற்றன. இதில் தொலைக்காட்சி நடிகர் கமலேஷும் வந்திருந்தார் இன்னொரு நடன நிகழ்ச்சிக்கு நடுவராக வந்திருந்தார். என்னைப் பார்த்ததும் ( விஜய் டிவி நீயா நானாவில் சந்தித்திருக்கிறோம்.) நலம் விசாரித்தார். எப்படி நினைவு வைத்திருக்கிறீர்கள் எனக் கேட்டதற்கு ..எங்கள் எதிர்டீமில் பேசியவர்களை மறக்க முடியுமா. என்றார். !
நாட்டுப்புற நடனங்கள் தான் தலைப்பு . அருமையாக ஆடினார்கள் அனைத்துக்குழந்தைகளும். மதிப்பெண் வழங்குவதில் நாம்தான்
 தாராளமாச்சே.. சும்மா அள்ளி அள்ளி வழங்கினோம் . மற்ற இருவரும் கொஞ்சம் ஸ்ட்ரிக்ட். ஏன்னா ஒருத்தங்க அதுல ஹெட்மிஸ்ட்ரஸ்.. எனவே ரொம்ப கறாரா மதிப்பெண் போட்டாங்க. 

இதில் முதலாம் வகுப்பைச் சேர்ந்த
1. லெக்‌ஷி  - முதலிடம்
2. ஜானவி - இரண்டாமிடம்
3. நந்திதா - மூன்றாமிடம்

மற்றும்

இரண்டாம் வகுப்பைச் சேர்ந்த
1. தீபிகா- முதலிடம்
2. பூஜா - இரண்டாமிடம்
3. வார்ஷா - மூன்றாமிடம்

மற்றும்

மூன்றாம் வகுப்பைச்சேர்ந்த
. பாவனா - முதலிடம்
2. ஹ்ரித்திகா - இரண்டாமிடம்
உத்ரா - மூன்றாமிடம்

என அனைத்து இடங்களையும் பெண் குழந்தைகளே தட்டிச் சென்றார்கள். உடல் நளினம் மட்டுமல்ல. நல்ல நடனத்திறமையுடன் குட்டீஸ் ஆடிய காட்சி கண்கொள்ளாக் காட்சி. அதில் ஒரு குட்டிப் பையன்  பாங்க்ரா டான்ஸ் ஆடும்போது  எம் பி த்ரீ ப்ளேயர் ப்ளே ஆகாமல் நின்றுவிட அவரது அம்மா ஓடிச் சென்று காரிலிருந்து லாப்டாப்பை எடுத்துவந்தார். இருந்தும் குட்டிப் பையனால் சரியாக ஆட இயலவில்லை.

இதிலும்  BORN ARTIST  எனப்படும் பிறவிக் கலைஞர்கள் இருக்கிறார்கள். அந்தக் குழந்தைகள் ஆடிய ஆட்டமே வெற்றி பெற்றது. அன்று பூரா ஒரே குதூகலம்தான் நமக்கும்.  குட்டீஸோடு குட்டீஸாக ஒரே பரவசம்.  இதற்கான பரிசுகள் அனைத்தும் நவம்பர் 14 , 2011 குழந்தைகள் தினத்தில் வழங்கப்பட்டன. நடுவர்களுக்கும் பள்ளி சார்பில் நினைவுப் பரிசுகள் வழங்கினார்கள்.

நல்ல நிகழ்வில் பங்குபெற அழைத்தமைக்காக நன்றி ரம்யா முரளி மற்றும் சித்ரா.