வெள்ளி, 29 ஜூலை, 2011

வெளிநாட்டு இந்தியருக்கான முதலீடு .(7)

வெளிநாடுகளில் வேலை செய்யும் சகோதரர்கள் (திரு நெல்லிமூர்த்தி மற்றும் நாஞ்சில் மனோ ) தங்கள் பணத்தை ரியல் எஸ்டேட் தவிர எதில் எல்லாம் முதலீடு செய்யலாம். அதுவும் தாங்கள் வந்து செல்லும் ஒரு மாதகால அவகாசத்துக்குள் எனக் கேட்டிருந்தார்கள். இதற்கு, முதலீட்டு ஆலோசகர் மற்றும் சென்னை பங்குச் சந்தை இயக்குனர் திரு நாகப்பன் அவர்களிடம் குறுகிய கால அவகாசத்தில் இந்தியா வந்து செல்பவர்களின் முதலீட்டுக்கான ஆலோசனைகள் வழங்குமாறு கேட்டோம். அவர் கூறியவற்றைத் தொகுத்துள்ளேன்.

வங்கியில் இருக்கும் பணத்துக்கு இருவிதமான முதலீடுகள் செய்யலாம். அவை

(1) அசையும் ( LIQUID ASSETS) முதலீடுகள்.

(2) அசையா ( ILLIQUID ASSETS) முதலீடுகள்.

வீடு., இடம்., நிலம் இந்த மூன்றும் அசையா சொத்துக்கள். வந்து செல்லும் குறுகிய காலத்துக்குள் இவற்றின் டாக்குமெண்டேஷன்., லோன் எல்லாம் முடிக்க வேண்டும் என்பதால் டென்ஷன் அதிகம். சர்டிஃபிகேட்ஸ் எல்லாம் சரியாக இருக்கிறதா என வில்லங்கமில்லாமல் பார்த்து வாங்கவேண்டும் – குறுகிய காலத்தில் இவ்வளவும் சாத்தியமா ? மேலும் இன்றைய சூழலில், தற்போது கையில் 5 லட்சரூபாய் இருப்பு இருந்தால்கூட, அதற்குள் அரைக்காணி நிலம்கூட வாங்க முடியாது.

எனவே மிடில் க்ளாஸ்., லோயர் மிடில் க்ளாஸ் மக்களுக்கு, சொந்தமாக ஒரு வீடு கட்ட வேண்டும் என்பது போன்ற, தங்கள் பெரிய இலக்குகளை அடையும்வரை, சுலபமாக விற்றுக் காசாக்கக் கூடிய வகையில் உள்ள (LIQUID INVESTMENTS ) 2 விதமான முதலீடுகள் இருக்கின்றன.

(1) FIXED RETURN INVESTMENTS – முதலுக்கு உத்தரவாதமுள்ள வருவாய் தரக்கூடிய முதலீடுகள்.

(2) ”வேரியபிள் ரிட்டர்ன் - ரிஸ்க் அதிகமுள்ள ஆனால் வருவாயும் அதிகமாக வாய்ப்புள்ள முதலீடுகள்.

முதலில், பிக்ஸட் ரிட்டர்ன் இன்வெஸ்ட்மெண்ட்ஸில்



1. பாங்க் டெப்பாஸிட்டுகள்.



2. கம்பெனி டெப்பாஸிட்டுகள் ( மீடியம் ரிஸ்க் உள்ளது ) .



3. பாண்டுகள்., டிபென்சர்கள் ( கடன் பத்திரங்கள் .-- மீடியம் ரிஸ்க் உள்ளது)

4. போஸ்ட் ஆஃபீஸ் சேவிங்க்ஸ் ( அஞ்சலக சேமிப்பு)

5. பப்ளிக் ப்ராவிடண்ட் ஃபண்ட். ( பொது சேம நல நிதி)
ஆகியன அடங்கும்.

இதில் வருடத்துக்கு 8 லிருந்து 10% வரை ரிட்டர்ன் இருக்கு.

ஓரளவு பாதுகாப்புடன் ஓரளவு உத்தரவாதத்துடன் கூடியது.முதலுக்கு மோசமில்லாத முதலீடு. இதுக்கு அதிக ஆராய்ச்சியோ ஆலோசனையோ தேவை இல்லை. நேஷனலைஸ்ட் பாங்க்., சுந்தரம் ஃபைனான்ஸ் போன்றவற்றில் போட அதிகம் யோசிக்க வேண்டியதில்லை.

இதில் ஒரே ஒரு பிரச்சனை என்னவெனில் பண வீக்கம் காரணமாக பணத்தின் மதிப்பு குறைந்து வருவதுதான். சமீபத்திய பணவீக்கம் 9 % க்கு மேல்! இத்திட்டங்களின் மூலம் வரும் வருவாய், விலைவாசி ஏற்றத்தை சரிக்கட்டத்தான் போதுமானதாக இருக்குமே தவிர பெரிய லாபம் இருக்காது.

அடுத்த்து, ரிஸ்க் அதிகமுள்ள இன்வெஸ்ட்மெண்டில்

1. ஈக்குவிட்டி ம்யூச்சுவல் ஃபண்ட் மற்றும் புதிய பரஸ்பர நிதி வெளியீடுகள் ( NFO)

2. ஈக்குவிட்டி ஷேர்ஸ் மற்றும் புதிய பங்கு வெளியீடுகள் ( IPO., FPO) - இதில் ஃப்யூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ். மற்றும் ஸ்பாட் ட்ரேடிங் இருக்கிறது.

3. கம்மாடிட்டீஸ் ட்ரேடிங்க் ( கோல்ட்., சில்வர்., க்ரூட் ஆயில்., ரப்பர்., பெப்பர்., இதுபோல 50 பொருட்கள் இருக்கு)

4. கரன்ஸி ட்ரேடிங்க் . இதில்

(1) ஸ்டெர்லிங் பவுண்ட்ஸ்

(2) யூ எஸ் டாலர்ஸ்

(3) யூரோ

(4) ஜப்பான் யென்.

5. IPO - INITIAL PUBLIC OFFERINGS. - புதிய பங்கு வெளியீடு. மூலதனம் திரட்டுதல்.

ஹையர் ரிஸ்க் இன்வெஸ்ட்மெண்ட்ஸில் வர்த்தகம் செய்ய, கவனிக்க வேண்டியவை:

(1) இன்ஃபார்மேஷன்ஸ் திரட்ட வேண்டும். நாம் முதலீடு செய்யும் கம்பெனிகளின் வர்த்தக நிலவரம் பற்றிய தகவல்கள் திரட்டவேண்டும். இன்று இணையதளங்கள் மூலமாக இது எளிதில் சாத்தியமாகிறது.

(2) பான் அட்டைதேவை. சேவிங்க்ஸ் அக்கவுண்ட், டீமேட் கணக்கு மற்றும் ட்ரேடிங் அக்கவுண்ட் ஓபன் செய்ய வேண்டும். தேவையான எல்லா டாகுமெண்ட்ஸையும் கைவசம் வைத்திருக்கவேண்டும்.

(3) ட்ரைவிங் லைசன்ஸ்., ரேஷன் கார்டு. பான் கார்டு., சம்பள விவர பட்டியல் போன்ற தேவையான டாகுமெண்ட்கள்., ஃபோட்டோக்கள் கைவசம் இருக்கவேண்டும்.

(4) எந்த கம்பெனி நன்றாக சேவை செய்யக்கூடியது என்று கண்டு சேவைக்கட்டணம் சற்றே அதிகமானாலும் அதிலேயே அக்கவுண்டை தொடங்கவேண்டும். என் ஆர் ஐயாக இருப்பதால் எந்தக் கம்பெனி ஆன்லைனில் நம்முடைய தகவல்கள் பரிமாற்றத்துக்கு ., தொடர்புக்கு எந்நேரமும் உதவிகரமாக இருக்கக்கூடும் எனக் கண்டறிந்து அவற்றில் பிஸினஸ் செய்வது நம் பணத்துக்கு நல்லது. எனவே இரண்டு மூன்று கம்பெனிகளைத் தொடர்புகொண்டு எது நமக்கு நல்ல சேவை வழங்குமோ அதில் அக்கவுண்டை ஆரம்பிக்கலாம்.

ஒன்று தெரியுமா? பங்குச் சந்தையிலும், பங்குச் சந்தை சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களிலும் செய்யும் முதலீட்டின் மீது வரும் நீண்ட கால ஆதாயம் ( ஓராண்டுக்கு மேல் ) முழுமையும் பூரண வரிவிலக்குடன் கூடியது; மிக முக்கியமான இன்னொரு தகவல்: இந்த முதலீட்டின் மீது நமக்குக் கிடைக்கும் டிவிடெண்ட் வருமானத்திற்கும் வருமான வரியே கிடையாது ! ஆக, ஆதாயத்துக்கும் நோ டாக்ஸ், வருமானத்திற்கும் நோ டாக்ஸ் – அது எத்தனை கோடி ரூபாய்களாக இருந்தாலும்!

எனவே சகோதரர்களே .. . வெளிநாட்டிலிருந்து வரும் முன்னே தகவல்களைத் திரட்ட ஆரம்பியுங்க. இங்கு வந்தபின் அந்த கம்பெனிகளில் உங்க பணத்தை முதலீடு செய்து பெருக்க வாழ்த்துக்கள்.

டிஸ்கி:- ரியல் எஸ்டேட் தவிர எதில் முதலீடு செய்வது லாபம் என்ற தலைப்பில் இக்கட்டுரை ஜூலை 2011 இவள் புதியவளில் வெளிவந்துள்ளது. :)

வியாழன், 28 ஜூலை, 2011

இணைய இதழ்கள்., பத்ரிக்கைகளுக்கு படைப்புகள் அனுப்புவது எப்படி..?

இணைய இதழ்களுக்கும்., பத்ரிக்கைகளுக்கும் படைப்புகள் அனுப்புவது எப்படி என்பது அடிக்கடி என்னிடம் இன்பாக்ஸில் கேட்கப்படும் கேள்வி.. நம் வலைப்பதிவர்கள் நிறைய பேரின் படைப்புக்கள் இணையங்களிலும்., பத்ரிக்கைகளிலும் வலம் வருகின்றன. இந்த வகையில் என்னுடைய படைப்புகள் சிலவற்றில் வந்திருப்பதால் இதை சொல்லலாம் என நினைக்கிறேன்.

முதலில் இணையங்கள்.
திண்ணை தற்போது புது திண்ணை என்ற பெயரில் வருகின்றது. http://puthu.thinnai.com/ என்ற ஐடியில் வாசிக்கலாம். . இதற்கு படைப்புகக்களை editor@thinnai.com என்ற ஈமெயில் ஐடிக்கு அனுப்பவேண்டும்.

அடுத்து உயிரோசை என்பது உயிர்மையின் இணையம். இதற்கு uyirosai.com@gmail.com என்ற ஐடிக்கு அனுப்ப வேண்டும்.

இளமை விகடன் கலக்கலாக வருகிறது. குட் ப்லாக்ஸ் என்ற பெயரில் நம்மையும் அடிக்கடி ஊக்குவிக்கிறார்கள். யூத்ஃபுல் விகடனுக்கு அனுப்ப youthful@vikatan.com என்ற ஐடிக்கு அனுப்பவும்.

கீற்றுவிற்கு அனுப்ப editor@keetru.com என்ற ஐடிக்கு அனுப்பவும்.

வார்ப்புவிற்கு editor@vaarppu.com என்ற ஐடிக்குஅனுப்பவும்.

வல்லினத்துக்கு valllinamm@gmail.com என்ற ஐடிக்கு அனுப்பவும்.

அதீதத்துக்கு articlesatheetham@gmail.com என்ற ஐடிக்கு அனுப்பவும்.

முத்துக்கமலத்துக்கு msmuthukamalam@gmail.com என்ற ஐடிக்கு அனுப்பவும்.

பூவரசிக்கு elaavani@gmail.com என்ற ஐடிக்கு அனுப்பவும்.

இனி பத்ரிக்கைகள்:-
லேடீஸ் ஸ்பெஷலுக்கு raghavan.girija@gmail.com என்ற ஐடிக்கு அனுப்பவும்.

தேவதைக்கு devathaidesk@gmail.com என்ற ஐடிக்கு அனுப்பவும்.

இவள் புதியவளுக்கு ivalputhiyaval@yahoo.in என்ற ஐடிக்கு அனுப்பவும்.

சூரியக்கதிருக்கு editor@suriyakathir.com என்ற ஐடிக்கு அனுப்பவும்.

சமுதாய நண்பனுக்கு rathinavel.natarajan@gmail.com என்ற ஐடிக்கு அனுப்பவும்.

ஆனந்த விகடனுக்கு av@vikatan.com என்ற ஐடிக்கு அனுப்பவும்.

அவள் விகடனுக்கு aval@vikatan.com என்ற ஐடிக்கு அனுப்பவும்.

குமுதத்துக்கு kumudamindia@gmail.com என்ற ஐடிக்கு அனுப்பவும்.

குங்குமத்துக்கு kungumambest@gmail.com என்ற ஐடிக்கு அனுப்பவும்.

கல்கிக்கு kalki@kalkiweekly.com என்ற ஐடிக்கு அனுப்பவும்.

முக்கிய டிப்ஸ்:-
1. எல்லா இணைய இதழ்களுக்கும் அனுப்பி ஒரு வாரம் மினிமம் பொறுமையாக இருக்கவேண்டும். அதீதத்துக்கு என்றால் 15 நாட்கள். முதல் 30 நாட்கள் வரை.

2. பத்ரிக்கைகளுக்கு என்றால் 2 மாதம். ஒரு முறை செழியன் விகடனில் சொல்லி இருந்தார் ., அவருடைய கதை ஒன்று கிட்டத்தட்ட 2 வருடம் கழித்து வெளிவந்ததாம். அதாவது திருமண நிச்சயத்தின் போது வரும் என்று நினைத்திருந்தது திருமணம் முடிந்து பையனுக்கு முதல் பிறந்தநாள் வந்தபோது வந்ததாம்..:)

3. சிறப்பானது என்று கருதுவதை அவசரக் குடுக்கையாய் முன்பே வலைப்பூவில் வெளியிட்டுவிடவேண்டாம். எல்லா இணையங்களும் புது வடையை( இடுகையை) த்தான் எதிர்பார்க்கின்றன.. அப்புறம் உங்களுக்கு வடை போச்சே . கதைதான்.

4. ஒரு படைப்பை ஒரு இணைய இதழுக்கு அல்லது பத்ரிக்கைக்கு மட்டும் அனுப்பவும். சுண்டல் விநியோகம் போல இருக்கும் லிங்குக்கு எல்லாம் க்ளிக் செய்து அனுப்ப வேண்டாம்.. ( சொ்ந்த அனுபவம் இதெல்லாம் ஹிஹிஹி) .

5. பத்ரிக்கைக்கு அனுப்பும் போதும் இணையத்துக்கும் அவர்கள் கேட்கும் விபரங்களைப் பூர்த்தி செய்து அனுப்பவும். பின்னால் அவர்கள் உங்களுக்குத் தரப்போகும் சன்மானத்தைப் பெற்றுக் கொள்ளத்தான் இதெல்லாம். ரெண்டு மாதங்களில் அனைத்து பத்ரிக்கைகளும் சன்மானம் அனுப்புகிறார்கள். விகடன் என்றால் கரெக்டாக மூன்றாவது வாரம் மணிஆர்டர் உங்கள் வீட்டு வாயில் கதவைத் தட்டும். வீட்டில் இருப்பவர்களிடம் நானும் சம்பாதிக்கிறேன் என அடிக்கடி சொல்லிக் கொள்ளுமளவும் இருக்கும். சிலது பெயரளவும் இருக்கும். ஹிஹி.

6. ஒரு வாரம் அல்லது மாதம் வராவிட்டால் சோர்ந்து விடவேண்டாம். இணையம் என்றால் வாராவாரம் வருவது போதை போல இருக்கும் . சிலநாள் கழித்து நமக்கே போரடிக்கும் போது ஒரு இடைவெளி விடலாம். பத்ரிக்கை என்றால் முதலில் செலக்ட் ஆகும் பின் அது ஒரு டீமின் பார்வைக்குப் போகும். பின் மூன்றாவதாய் எடிட்டருக்குப் போகும். அதன் பின்தான் புத்தகத்தில் வரும். எனவே நம் கவிதை எல்லா திறனாய்வுக்கும் உட்பட்டுத்தான் வருகிறது. எனவே மிக நன்றாக இருந்தாலொழிய வராது. அடுத்து சிறப்பாக என்ன இருக்கிறதோ அதுதான் வரும். மேலும் ஒருவரின் படைப்பே மிகச் சிறப்பாக இருந்தாலும் அடுத்து அடுத்த வாரங்களில் வருவது கஷ்டம் . நாம் பிரபலமான எழுத்தாளராக இருந்தால் கூட. ஏனெனில் படிக்கும் பொது ஜனத்துக்கு வெரைட்டியாக இருந்தால்தான் பத்ரிக்கை சுவாரசியமாக இருக்கும். எனவே நம் படைப்பே பெரிது என எண்ணாமல் அடுத்தவர்களுடையதையும் ரசிக்கவும் பாராட்டவும் கற்றுக் கொள்ளுங்கள்.

7. நிறைய படியுங்கள். ஆறப்போட்டு பின் உங்கள் அனுபவங்களோடு தொடர்புடையதாக எழுதுங்கள். இன்வால்வ்மெண்ட் என சொல்லலாம். நாம் ஒன்றை தொடர்பில்லாமல் எழுதத்துவங்கும் போது அதன் உயிர்ப்புத்தன்மை இல்லாமல் போய் விடும். எனவே உள்வாங்கி உயிர்ப்போடு எழுதுங்கள். ஜெயிக்கும்.

8. பின் ஒரு முக்கியமான விஷயம் . நாம் எழுதிய எல்லாமே நன்றாக இருக்கும் என நினைக்கக் கூடாது. பிழைகள் மற்றும் சுவாரசியமற்ற தன்மை இருக்கலாம். எனவே அடுத்தவரின் பார்வையில் ஒரு வாசிப்பாளனின் நோக்கில் ஒரு முறை படித்துப் பாருங்கள். அப்போது எடிட் செய்ய வேண்டி இருந்தால் டக் கென்று எடிட் செய்து விடுங்கள். முடியும் நகமும் கூட வெட்டினால்தானே அழகு. நம் சிற்பம் போல செதுக்கும் கவிதைக்கும் அதுதான். ஆனால் சரியாக செதுக்க வராவிட்டால் விட்டு விடுங்கள். பின் வீட்டிலேயே குழந்தைகளுக்கு விளையாட்டாய் முடி வெட்டிய கதையாகிவிடும்.:))

9. இப்போது தேர்வாகாவிட்டால் என்ன .. அது சிறந்த படைப்பு அல்ல என வருந்த வேண்டாம். நம் படைப்பு அருமையாக இருந்தாலும் எல்லாவற்றிற்கும் இடம் பொருள் ஏவல் காலம் எல்லாம் உண்டு. என்றாவது ஜெயிக்கும். முதலில் கொஞ்சம் பேரைச் சம்பாதியுங்கள். தொடர்ந்து நல்ல கருத்துக்களோடு கூடிய படைப்புக்களை உருவாக்குங்கள். அவர்களாகவே உங்களிடம் படைப்புக்கள் கேட்பார்கள். ( அதற்கென்று தினந்தோறும் படைப்பை அனுப்பி அவர்களைப் படுத்த வேண்டாம். அவர்கள் நம் ஐடியை பார்த்தாலே ஸ்பாமுக்கு அனுப்பும் அளவு..:))

10 . கடைசியாக வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு அழகு. விழுப்புண் இல்லாமல் வெற்றி ருசிக்காது. எனவே விழுப்புண்களும் நிறைய கிடைக்கும். அவற்றை அனுபவம் என்பார்கள். நிறைய அனுபவம் சேர சேர ., நீங்கள் மூவேந்தர் அளவு புகழ் பெறுவீர்கள்.. வாழ்த்துக்கள் மக்காஸ்.. :))

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையம். இந்த இணைய முகவரிதாரர்கள் என்னை கோபிக்காமல் இருப்பார்களாக..!!!

டிஸ்கி:- ஈழம் பற்றி ..ஈழத்தமிழ்ப் பெண்வலைப்பதிவர்களின் எழுத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. லேடீஸ் ஸ்பெஷல் ஐடிக்கு நேரடியாக அனுப்பி வைங்கப்பா., ஈழவாணி., மாயோமனோ., தமிழ்நதி., ஹேமா மற்றும் அனைவரும். :))

செவ்வாய், 26 ஜூலை, 2011

ஸ்ரீஜியுடன்.. சப்தஸ்வரங்கள்..:))

நாதமெனும் கோயிலிலிலே ஞான விளக்கேற்றி வைத்தேன் .. ஏற்றி வைத்த விளக்கினிலே என்னை விட நீ கிடைத்தாய்.. என்ற பாடல் அவ்வப்போது மனதுள் ஒலிக்கும். எங்களுக்குக் கிடைத்த முகப்புத்தக நண்பர் பூவாளூர் ஸ்ரீஜி எனப்படும் ஆத்மாநாம் அவர்களுக்கும் இந்தப் பாடல் பொருந்தும்.



முகப்புத்தகத்தில் எத்தனையோ நட்புக்களைச் சேர்க்கிறோம். ஆனால் சிலர் நம்முடன் எப்போதும் வந்து வருவதாகவே உணர்வோம். புதிதாகப் பார்ப்பது போலோ ., சந்திப்பது போலோ இருக்காது.. ஆனாலும் முதன் முறை சிம்ரனில் ஸ்ரீஜியை நேரில் பார்த்தபோது விரு விருமாண்டி விருமாண்டி மீசையில் கொஞ்சம் மிரட்டலாக இருந்தார்..





ஒரு சங்கீதக்காரர் என்றால் நம் மனதில் ஒரு இமேஜை வரைந்து வைத்திருப்போம் . அதை எல்லாம் தகர்த்தது அந்த சந்திப்பு. அவர் பூவாளூர் திரு வெங்கட்ராமனின் மைந்தர். தனது சொந்த ஊரான பூவாளூருக்கு விக்கிபீடியாவில் முக்கிய இடத்தைப் பெற்றுத் தந்தவர். யுனிவர்சிட்டி ஆஃப் டெக்சாஸில் இசைப் பேராசிரியராகப் பணிபுரிகிறார். கிராமி அவார்டுக்குப் பரிந்துரைக்கப்பட்டவர். நிறைய நிகழ்ச்சிகள் உலகம் முழுமையும் ( ஜாஸ்.,& ஃப்யூஷன்., ஆர்கெஸ்ட்ரா., வானொலி நிகழ்ச்சிகள்., 1000 க்கும் மேற்பட்ட கர்நாடக இசை நிகழ்ச்சிகள். தொலைக்காட்சியிலும்) கொடுத்திருக்கிறார். ஒரு லிவிங் விக்கிபீடியா /என்சைக்ளோபீடியா/வேர்டு டிக்‌ஷ்னரி., என்று இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.





சென்னை முகப்புத்தக நண்பர்களுக்காக உட்லாண்ட்ஸ் ட்ரைவ் இன்னில் அவருடைய கர்நாடக இசை நிகழ்ச்சி ஏற்பாடாகி இருந்தது. IGMAA -- INSTITUTE OF GLOBAL MUSIC AND ARTS. செவிக்கும் பின் வயிற்றுக்கும் அறுசுவை உணவுகள். அன்றைய நிகழ்ச்சி மிக இனிமையாய் இருந்தது. காதுகளில் தேனை நிஜமகவே ஊற்றினாற்போல.. ஸ்ரீஜியின் மிருதங்கமும்., ஜமாலின் தர்பூக்காவும்., கணேஷ் பிரசாத்., விட்டல் ராமமூர்த்தியின் வயலினும்., ராமானுஜனின் மோர்சிங்கும் அற்புதம்.. வயலின் வாய்ப் பாட்டைப் போல குழைந்துநெளிந்து அழகிய லயத்தோடு காதுகளில் கொடிகளாக வளையத்துவங்கும் நேரம் ஸ்ரீஜியின் மிருதங்கமும்., ஜமாலின் தர்பூக்காவும் காதுகளில் வித்யாசமான பூக்களைப் பூக்க வைத்தன. வாசனைக் கொடிகளூடே வளர்ந்து பூப்பந்தாடும் ராஜகுமாரிகளாய் ஆக்கியது பின்னே தொடர்ந்த வயலின். பெண்ணின் சந்தனக் குரலைப்போல இனிமை வாய்ந்த வயலினின் முன் மிருதங்கம் ஆணைப் போல ச(ப்)த்தஸ்வரத்துடன் தன் இடத்தை நிலை நாட்டியது. இன்னிசையே ஒரு நர்த்தகியாகவும் ஆகி மனதை மயக்கிய விந்தை நிகழ்ந்தது. இடம்., அகம்., புறம்., காலம் மறந்தோம்., நாதப்பிரம்மத்தில் கலந்து கிடந்தோம்.



நெஞ்சம் அதிர்ந்து கொண்டிருந்தது இன்னிசையால். இரு வேறு வாத்யார்களின் சிஷ்யர்களாக ( லால்குடி ஜெயராமன்., வி. வி சுப்ரமணியன் ) கணேஷ்., விட்டலின் வயலின் இசையில் இம்மியும் பிசகாத இசைக்கோர்வை.. தேவி நீயே துணையில் தேவியின் கைபிடித்து அழைத்து சிம்மாசனமிட்டு அமரவைத்திருந்தாள் கீரவாணி.. முக்கால் மணிநேரம் இசை உலக வி ஐ பிக்கள் கூட அமர்ந்து ( ஈரோடு நாகராஜ்., லால்குடி ஜெயராமன் மகள் லால்குடி விஜயலெக்ஷ்மி., மகன் லால்குடி ஜி ஜெ ஆர் கிருஷ்ணன்., சுரேஷ் - கடம்., முராரி வடக்கன்சேரி (வயலின் வி. வி. சுப்ரமணியனின் புதல்வர் ) ., பத்ரி சதீஷ் குமார்., ரமேஷ் விநாயகம் ( நள தமயந்தியின் மியூசிக் டைரக்டர். தற்போது ஒரு தெலுங்கு படத்தில் பெஸ்ட் சிங்கர் அவார்டு வாங்கி இருக்கிறார்.) கண்டு களித்தோம்..



பம்பையைப் போல அதிர்ந்தது ஜமாலின் மிருதங்கம்..தர்பூக்கா.. ( இது ஆஃப்ரிக்க வாத்தியம்) . அதற்கு பதில் சங்கதி சொல்லியபடி வெளுத்து வாங்கினார் ஸ்ரீஜி.. மொத்தத்தில் ஒரு சுவையான நீயா நானா.. நிகழ்ச்சியாய் இருந்தது.. ஸ்ரீஜியின் தனியும் அருமை.



சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா இன்னும் இருக்கா என்ற கேள்வி நிஜமாகவே எழுந்தது.. தாய்., பாலி., சிங்கப்பூர்., அமெரிக்கா என உலகம் பூரா ஒலித்த இசையனைத்தும் ஒரு சேரக் கேட்டுக் களிக்க முடிந்ததில் மகிழ்ச்சி ஸ்ரீஜி..



மெரினா பீச்சில் மூன்றாம் முறை குடும்பத்தோடு சந்தித்து பட்டம் விட்டு., பஞ்சுமிட்டாய் சாப்பிட்டுப் பிரிந்தபோது தோன்றியது.. எவ்வளவு பெரிய மியூஸிஷியன்.. என்ன எளிமை .. HOW GREAT HE IS ..என்று.



உங்கள் இசைமுயற்சி உலகம் முழுக்க பரவி ..( ACROSS THE WORLD) இசை கேட்டால் புவி அசைந்தாடும்.. என நிறைய இன்னிசைஞர்கள் உருவாக வாழ்த்துக்கள் ஸ்ரீஜி ... எங்கள் அன்பிற்குரிய நண்பரே..! இன்னும் இன்னும் சிகரங்களை எட்டுங்கள்..! உங்கள் பின்புலமாய் உங்கள் குடும்பமும் .. தோழமைத் தூண்களாய் நாங்களும் இருப்போம்..!!





டிஸ்கி :- ஸ்ரீஜியின் இரண்டு வெப்சைட்டுக்கள். http://www.poovalur.com/
http://www.brahmah.com/


திங்கள், 25 ஜூலை, 2011

கிரிஜாம்மாவுடன் சென்னை பெண் வலைப்பதிவர்கள் சந்திப்பு...




மேமாதம் சென்னை வலைப்பதிவர்கள் சந்திப்பு ஒன்றை லேடீஸ் ஸ்பெஷல் சார்பாக நிகழ்த்த வேண்டும் என்பது கிரிஜாம்மாவின் விருப்பம். எப்போதும் தன்னைச் சுற்றிப் பெண்களாக இருக்கக்கூடியவர் அவர். பெண்களின் ப்ரச்சனைகளின் மையப்ப்புள்ளியைக் கணித்து தீர்வு சொல்பவர் அவர். அவர் அழைத்திருக்கிறார் என்றவுடன் அனைத்து பெண் பதிவர்களும் ஆர்வத்தோடு சம்மதித்தனர்.

கிட்டத்தட்ட 20 பேர் சென்னையில் இருக்கிறார்கள் . ஆனால் அன்று 12 பேரே வரமுடிந்தது. குடும்பக் கடமைகளோடு ப்லாகிலும் எழுத்துப் பணி செய்யும் இவர்கள் பணியும் பாராட்டுக்குரியது. மிகப் பெரிய எழுத்தாளர் மதுமிதா ., அதிக வயதுடைய எழுத்தாளர் ருக்மணி அம்மா., ஈழத்துப் பேச்சில் மயக்கும் வாணி ஜெயா தீபன்., சமூக சேவையில் ஈடுபடும் விஜயலெக்ஷ்மி ஜெயவேலு., கொஞ்சகாலமாக எழுதி வரும் வசுமதி., விளிம்பு நிலை மனிதர்களுக்காய் பாடுபடும் கீதா., தலித் மக்களுக்காக சேவை செய்யும் மணிமேகலை., எஃப் எம்மில் பணிபுரியும் கவிதா சொர்ணவல்லி., பல வருடங்களாய் எழுதும் ஸாதிகா., தைரிய லெக்ஷ்மி ரம்யா தேவி., அவரின் முன்னேற்றத்தில் பங்குபெறும் அவரது அக்கா ., சுய தொழில் செய்யும் அனுராதா நிகேத் மற்றும் நான் அனைவரும் கிரிஜாம்மாவை சந்திக்க சென்றோம்

மே 20 ஆம் தேதியன்று சென்னை மெரீனாவில் காந்தி சிலையருகில் சந்திப்பதாக ஏற்பாடு.
அன்று மெரீனாவே எழுத்தாளர் மெரீனாவின் நாடகம் போல கலகலத்தது. முதலில் நானும் ஜெயா தீபனும் கிரிஜாம்மா காரில் மாலை கரெக்டாக 5 மணிக்கே காந்தி சிலையருகில் ஆஜராகி விட்டோம். ஒவ்வொருவராக வரத்துவங்கினார்கள். முதலில் மதுமிதாவும்., ஸாதிகாவும். அப்போது கிரிஜாம்மா எங்களுக்கு அவருடைய புத்தகத்தை கொடுத்தார். அதைப் பார்த்த இரு் பெண்கள் அருகே வந்து நீங்க லேடீஸ் ஸ்பெஷல் கிரிஜா மேடம்தானே. நாங்க உங்களை டிவியில் பார்த்து இருக்கோம். உங்க வாசகியர் நாங்க .. என்றதும் மேடம் புன்னகையோடு ஆமோதித்து இரண்டு புத்தகங்களை அவர்களுக்கும் அன்புப் பரிசா வழங்கினார்.

ருக்கு அம்மாவும் எங்களோடு இணைந்து கொள்ள மெதுவாக நடந்து க்வாலிட்டி ஐஸ் பக்கம் போனோம். அடுத்து ரம்யாதேவி., அவரது சகோதரி காயத்ரி., கீதா., அனுராதா ஆகியோர் வந்தார்கள். அடுத்து வசுமதியும்., விஜியும்., மணிமேகலையும்., கவிதா சொர்ணவல்லியும் இணைய ஜமா களை கட்டியது.. பூச்சரங்களைக் கோர்த்தது போல அங்கே எழுத்துக்களை வலைப்பூவில் பொறிப்பவர்களின் சந்தோஷம் மத்தாப்பாய் பொறிந்தது.

கடல் மண்ணில் கால் புதைய கொஞ்சம் நடந்து வட்டமாக அமர்ந்தோம். அனைவருக்கும் கிரிஜாம்மா., ஐஸ்க்ரீம் ., சுக்கு காஃபி., என வழங்க. கடலையோடு கொஞ்ச நேரம் கடலை போட்டோம் அனைவரும். பின்கிரிஜாம்மா ஒவ்வொருவரையும் சுய அறிமுகம் செய்து கொள்ளச் சொன்னார்.

முதலில் ஸாதிகா. குடும்பத்தலைவி. எல்லாப் புகழும் இறைவனுக்கே என்ற வலைப்பதிவர். தொடர்ந்து பல வருடங்களாக பத்ரிக்கைகளுக்கு படைப்புகள் அனுப்பி பிரசுரமாகி உள்ளதாக கூறினார். இவர் நம் லேடீஸ் ஸ்பெஷலில் பலவித மேனேஜ்மெண்ட் பற்றி எழுதி உள்ளார்.

அடுத்து விஜயலெக்ஷ்மி ஜெயவேல். இவர் போர்ட் ட்ரஸ்டில் ஏஜிஎஸ் ஆடிட்டிங்கில் பணிபுரிகிறார். இவர் நிறைய ட்ரஸ்ட்டுகள் மூலம் சமூகப் பணி செய்கிறார். ஃபேஸ் புக்கில் இவர் எழுதும் நோட்ஸ்கள் அர்த்தமுள்ள பகிர்வுகள். .

அடுத்து பாட்டி சொல்லும் கதைகள் என்ற ப்லாக்குக்குச் சொந்தக்காரர் ருக்மணி ஷேசஷாயி அவர்கள் . 73 வயதிலும் இன்னும் குழந்தைகளுக்குச் சொல்ல அநேக ஒழுக்கம் பற்றியகதைகளும் ., ஆன்மீகக் கதைகளும் கைவசம் வைத்திருப்பவர். கதை அருவி.. ! நம் லேடீஸ் ஸ்பெஷலில் திருக்குறள் கதைகள் என்ற தலைப்பில் 8 கதைகள் எழுதி இருக்கிறார். இவர் 27 புத்தகங்கங்கள் வெளியிட்டு இருக்கிறார். இன்னும் 3 பதிப்பில் இருக்கின்றன.

வசுமதியின் கருத்தோட்டங்கள் என்ற வலைப்பதிவர் வசுமதி குழந்தைகள் சைக்காலஜி பற்றி அருமையாக எழுதுகிறார். இவர் ஒரு ஹெச் ஆர் மேனேஜர் என்பதோடு குச்சுப்பிடியும் கற்றுக் கொள்கிறார்.

அடுத்து மதுமிதா ராஜா. இவர் பத்து புத்தகங்கள் வெளியிட்டு இருக்கிறார் . மிகச் சிறந்த மொழிபெயர்ப்பாளர். சுய அனுமானத்தோடு தன் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார்.
மொழிபெயர்ப்பாளர் என்று முத்திரை குத்தப்படக் கூடாது என அடுத்த கவிதைகள் தொகுதியும்., நேர்காணல்களும்., தொகுப்புகளும் எழுதியதாகக் கூறினார்.

ஈழவாணி ஜெயா தீபன் மிக அருமையான மொழிக்கு சொந்தக்காரர். இவர் தமிழ் பேசினால் கேட்டுக் கொண்டே இருக்கலாம். நாம் மறந்து போன செந்தமிழ் இவர் நாவில் ஈழ மணத்தோடு விளையாடுகிறது. இவர் தணல் என்ற வலைப்பதிவர். ஐந்து புத்தகங்கள் வெளியிட்டுள்ள இவர் நாட்டார் பாடல்களையும் தொகுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஈழக்கதைகளை நம் லேடீஸ் ஸ்பெஷலில் பகிரவிருக்கிறார்.

அஃறிணைகள் என்ற ஆவணப்படமும்., ஆட்டிசம் பற்றிய குறும்படமும் எடுத்திருக்கும் கீதா இளங்கோவன் மிகச் சிறந்த சமூக சேவகர். மதுரையில் உள்ள கூடு என்ற அமைப்பிலும் இருக்கிறார். இது அம்பேத்கார் பற்றிய சிந்தனைகளை எல்லாருக்கும் எடுத்து செல்வது. மேலும் இவர் பெண்ணியவாதி. சிந்தனைகளால் செயலால்., சொல்லால். தந்தை வழி சமூகம் சார்ந்த பெண்மேல் சுமத்தப்பட்ட கோட்பாடுகளில் இருந்து பெண்களை சுயமாய் சிந்திக்க .,முன்னெடுத்துச் செல்ல உதவுவது இதன் சித்தாந்தங்களில் ஒன்று. இவர் சாஸ்த்ரி பவனில் பணிபுரிகிறார். துளித்துளி என்ற ப்லாகில் ஜெரோம் ஷர்மிளா பற்றிய இவரின் பகிர்வு அருமை.

மணிமேகலை புரட்சிப்பெண் என்ற வலைப்பதிவர் . இவர். சாஸ்த்த்ரிபவன் தலித் பெண்கள் யூனியன் லீடராகவும்., பெண்கள் யூனியன் லீடராகவும் வெற்றிகரமாக செயல்படுபவர். மிகத் துடிப்பானவர். இவரும் ரோட்டரி., லயன்ஸ் கிளப் ஆகியவற்றின் மூலமும் தனது அட்சயா ஃபவுண்டேஷன் மூலமும் சமூக சேவைகள் செய்து வருகிறார்.

அனுராதா நிகேத் சுயதொழில் மு்னைவோர். இவர் ஓரிஃப்ளேமின் தரமான ப்ராடக்ட்டுகளை வாங்கித்தருகிறார் தேவையானவர்களுக்கு.

ரம்யா தேவி. ரம்யாவின் தன்னம்பிக்கைப் பக்கங்கள் என்ற வலைப்பதிவர். இவர் நம் லேடீஸ் ஸ்பெஷலில் வெளிவந்த முதல் வலைப்பதிவர். கடுமையான தீக்காயத்தால் 45 சர்ஜரிகளைக் கடந்து இன்று சிங்கப்பூர் பேஸ்டு கம்பெனியில் பணிபுரியும் இவர் தன்னம்பிக்கையின் உச்சகட்ட எடுத்துக்காட்டு.

106.4 எஃப் எம்மில் பணிபுரியும் கவிதா சொர்ணவல்லி ப்லாக் வைத்திருக்கிறார் . பணி நிமித்தம் தற்போது ப்லாக் எழுத நேரமில்லை என்றாலும் இவர் கதைகள் விகடன்., சூரியக்கதிர்., தமிழ் ஃபெமினா போன்றவற்றில் வெளிவந்துள்ளன. மிகச் சிறந்த சிறுகதைகள் அவை.

இவை எல்லாம் முடிந்ததும் கிரிஜாம்மா பேச ஆரம்பித்தார்கள். இன்று உங்களை எல்லாம் நான் இங்கு சந்திக்க விரும்பியதே.. இனி வலைப்பதிவர்களா அடுத்து நீங்க சமூகத்துக்கும் ஏதாவது செய்யணும் . என்ற கருத்தை சொல்லத்தான். லேடீஸ் ஸ்பெஷல் எப்போதுமே பெண்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து உயர்வு கொடுக்கும் பத்ரிக்கை. தினமும் என்னை சந்திக்க 2 முதல் 10 பெண்கள் வரை வராங்க. அதில் பலருக்கும் பல பிரச்சனைகள் இருக்கும். என்னைப் பார்த்த மாத்திரத்தில் ., என்னிடம் சொல்லியபின் அவர்கள் மனபாரம் குறைந்தவர்களாகிறார்கள்.

லேடீஸ் ஸ்பெஷல் ஆரம்பித்து 13 வருஷம் ஆகிறது. நல்ல ரெஸ்பான்ஸ் மக்களிடையே. நிறைய வாசக வாசகியர். எங்கு பார்த்தாலும் தெரிந்த முகமாய் இருக்கிறதே என யாராவது விசாரிப்பார்கள். என் பத்ரிக்கைக்கு இன்னும் கொஞ்சம் இளைய சிந்தனை தேவைப்பட்டபோது தேனம்மை கிடைத்தார்கள். அவர்கள் சுறுசுறுப்பு தடதடவென்ற ரயில் பெட்டி போல என்றார்கள்.

உங்களை எல்லாம் இங்கு சந்திக்க அழைத்த நோக்கமே.லேடீஸ் ஸ்பெஷல் பத்தினத விட உங்களால் இந்த சமூகத்துக்கு., பெண்களுக்கு பயன்படுற மாதிரி ஏதாவது செய்ங்கன்னு கேட்டுக்கத்தான் என்றார். அவரின் உயர்ந்த கருத்தை ஏற்று நடத்துவதாக அனைவரும் ஆமோதித்தார்கள். இனி 3 அல்லது 4 மாதங்களுக்கு ஒரு முறை இந்த மாதிரி பீச்சில் கூடி இது போன்ற பல விஷயங்களையும் பகிர்ந்து கொள்ளலாம். என்றார்கள்..

அனைவரும் கிரிஜாம்மாவை வாழ்த்தி நன்றி தெரிவித்த பின் புகைப்படம் எடுத்து., கூடி நின்று பேசி., தனித்து பேசி., பின் தமிழ்த்தாய் வாழ்த்தோடு விடைபெற்றோம்.. கடற்காற்றும் அலையும் அடித்துக் கொண்டே இருந்தன.. அடுத்த சந்திப்பை எதிர்நோக்கி.

டிஸ்கி;- இந்தச் கட்டுரை ஜூன் மாத லேடீஸ் ஸ்பெஷலில் வெளியாகி உள்ளது. :))

வெள்ளி, 22 ஜூலை, 2011

வி ஆர் எஸ்ஸில் வெளிவந்த கணவர்களும்., வெளிவரத் துடிக்கும் கணவர்களும்..



கணவரின் கோபத்தை சமாளிப்பது எப்படி., மனைவியின் நச்சரிப்புக்களை சரி செய்வது எப்படி என்று ஒரு தோழி கேட்டிருந்தார். நிலையான உத்யோகங்களில் இருக்கும் குடும்பத்துக்குள்ளே சண்டை சச்சரவுகள் இருக்கும்போது வீஆர் எஸ்ஸில் வந்தவர் குடும்பம் எப்படி இருக்கும்.

முன்பு எல்லாம் கணவர்கள் நி்லையான உத்யோகம் பார்த்து வந்தார்கள். இப்பவெல்லாம் அடிக்கொருதரம் கம்பெனி மாறுகிறார்கள். சில சமயம் நிறுவனங்களே தன்னுடைய ஊழியர்களை வீஆர் எஸ்ஸில் வெளியேற்றுகிறது.


ஒரு நிறுவனம் பொருளாதார நிர்வாகக் காரணங்களால் இன்னொரு நிறுவனத்துக்குக் கை மாறும்போதே பல குடும்பங்களுக்கு சனி பிடிக்க ஆரம்பிக்கிறது. புது நிர்வாகம் பழைய நிறுவனத்தை எடுக்கும் முன்பு அனைவரையும் போக சொல்ல மாட்டோம் என்ற உறுதி அளித்தபடி எடுக்கிறது. ஆனால் அது தன் கொள்கையை சிறிது காலத்துக்குப் பின் மாற்றிக் கொள்கிறது. கம்பெனி கை மாறிய போதே தளரும் ஊழியர்கள் அது வீஆர் எஸ் ஸ்கீமைக் கொண்டு வந்து நாசுக்காக கழுத்தைப் பிடித்து வெளியேறச் சொல்லும் தருணம் மனதளவில் சோர்வுற்றவர்களாகிறார்கள்.

வாலண்டரி ரிட்டயர்மெண்ட் ஸ்கீம் என்பதுதான் அதற்குப் பெயர் என்றாலும் இங்கே கம்பெனியே ஊழியரை வாலண்டரியாக ரிட்டர்மெண்ட் செய்யச் சொல்லிக் கட்டாயப்படுத்துவதுதான் பிரச்சனை.

போகாட்டா தெரியும் . அங்கே போடுவோம்., இங்கே போடுவோம் என மிரட்டுதல். அடுத்த அடுத்த வருடங்களில் இது செய்யலை., அது செய்யலை என இன்ஸ்பெக்‌ஷனில் குறித்தல். கடைநிலை ரேட்டிங் போடுதல்., தன் பொருளை விற்கச் சொல்லி டார்கெட் போடுதல்., பாண்டு பிடி., இன்சூரன்ஸ் பிடி., தங்கம் விய்யி என கம்பெனிகள் படுத்துவது தனி ரகம்.

வி ஆர் எஸ்ஸில் நல்ல பேக்கேஜ் கொடுத்தாலும் பலர் பென்ஷன் ஆப்ஷன் கொடுப்பதில்லை. கொடுத்தவர்க்கு பரவாயில்லை. இல்லாதவர்க்கு அதுவும் நஷ்டம். மேலும் ஒரே கம்பெனியில் வேலை பார்த்துவிட்டு ஒரு குறிப்பிட்ட வயது லிமிட்டேஷனுக்குப் பிறகு எங்கு சென்று வேலை பார்ப்பது ., பலரைத் தான் நிர்வகித்தது போக இன்னொருவரிடம் கைகட்டி வேலை செய்வதா. மேலும் இந்தக் கம்பெனியில் நிறைய சம்பளம் இருக்கும். செல்லும் கம்பெனியில் அதில் மூன்றில் ஒரு பங்கு கூட இருக்காது. இந்தக் காரணங்களால் குடும்பத் தலைவர் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகிறார்.

வீட்டில் கல்லூரிப் படிப்பில் மகன் ., திருமணம் செய்ய வேண்டிய மகள். தங்கள் பிற்கால வாழ்க்கை., அதற்கான சேமிப்பு என கணவரின் கழுத்தைச் சுற்றி எதிர்காலம் இறுக்குகையில் அந்தக் கயிற்றுக்குள் அவர் தன் குடும்பத்தையும் ., மனைவியையும் நுழைக்கிறார். விளைவு தினம் சண்டையும் சச்சரவும்தான்.

சிலரை மட்டும் அனுப்பும் நிர்வாகம் மற்ற சிலரை வைத்துக் கொள்ளும். அப்போது அவர் நினைப்பார் எனக்கு என்ன தகுதி இல்லை என்று அனுப்பினார்கள் என்று . இந்த மூளைக் குடைச்சலால் அவதியுறும் அவர் தன் குடும்பத்தைப் படுத்தத் துவங்குகிறார். மனைவி எது செய்தாலும் குற்றம்., என்ன பேசினாலும் குற்றம். ”ஏங்க அவர் மட்டும் வேலையில் இருக்கார். உங்களை மட்டும் அனுப்பிட்டாங்க.. நீங்க இதுக்கு ஒத்துக்கிட்டு இருக்கக்கூடாது” என மனைவி சொல்லும்போது அவர் கோபம் பன்மடங்காகிறது.

அடுத்து முயற்சி எடுத்து செல்லும் பணி இடங்களும் அவர் இதுவரை பார்த்து வந்த ஸ்டேட்சுக்கு ஈக்வல் இல்லாமல் இருப்பதாக அவர் கருதுவதால் எதற்குமே போய் ஒன்றிரண்டு மாதங்கள் கூட தாக்குப் பிடிக்க முடிவதில்லை. இன்னும் சிலர் பிசினஸ் செய்கிறேன் என்று தங்கள் பணத்தை தெரியாத முதலீடுகளில் போட்டு வைப்பார்கள். அல்லது யாரையாவது நம்பிக் கொடுப்பார்கள். அல்லது இவர் முதலீடு செய்த பங்குச் சந்தை தாறுமாறாக ஏறி இறங்கி இவர் பணத்தை எல்லாம் முழுங்கி இருக்கும்.

இதில் சிலர் மட்டுமே பாலன்ஸ் செய்து இருப்பார்கள். பணிக்கால ஆரம்பத்திலேயே முறையான சேமிப்பு., சொந்த வீடு., தங்கம் ., பிக்ஸட் டெப்பாசிட்டுகள்., குழந்தைகளின் படிப்பு செலவுக்கு என சேமிப்பு என திட்டமிட்ட முதலீடு செய்தவர்கள் தப்பிப்பார்கள். மற்றவர்கள் மனதுக்குள் குமைந்து கொண்டு அல்லும் பகலும் வீட்டை நரகமாக்கிக் கொண்டு பிடிக்காத தொழிலில் வேலை பார்த்து தானும் நிம்மதி இழந்து மனைவியையும் படுத்துவார்கள்.

மனைவி அடுத்தவர்களிடம் என்ன பேசுகிறாள். தன்னைப் பற்றி ஏதும் குறை சொல்வாளோ என நினைத்து அடுத்தவரிடம் பேச விடுவதில்லை. ஒரு மாதிரி கொஞ்சம் பணம் இருந்தாலும் ஹோம் ஜெயிலுக்குள்ளே அடைபட்ட மன நிலையை அந்த மனைவி அடைகிறார். ”ஏன் பால் இவ்வளவு திக்கா கலக்குறே. நல்லா தண்ணீ ஊத்தீ காச்சி காஃபி போடு. கடுகை கொட்டாம தாளி . அதுவே சிறந்த சிக்கனம். ” என மனைவி எது செய்தாலும் அட்வைஸ் செய்வது பின்னாலேயே சென்று உண்பது ., தின்பது., உடுத்துவது என எல்லாவற்றிலும் கருத்து சொல்லி மனைவி என்பவளை ஒரு ஜீவனாக கருதாமல் தான் சொல்வதை செய்ய வேண்டிய கொத்தடிமையாக எண்ணுகிறார்கள்.

இந்த மாதிரி வி ஆர் எஸ்ஸில் வந்தவர்களின் குழந்தைகளுக்கு சிக்கனத்தை சொல்லிக் கொடுக்கவே வேண்டாம். தன் அப்பாவின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் அவர்கள் தெரிந்து கொள்வார்கள். பணம் முக்கியமானதுதான். பாசமும் கூட.

வி ஆர் எஸ்ஸில் வந்தவர்கள் நிலைமை இப்படி என்றால் அந்த நிறுவனத்திலேயே பல்லைக் கடித்துக் கொண்டு பணியாற்றிக் கொண்டிருப்பவர்களின் நிலை இன்னும் விநோதம். அங்கே புது கம்பெனியின் எம்ப்ளாயீஸ் அளவுக்கு ரெக்கனீஷன் இருக்காது. சம்பளமும் வேறுபடும். அந்த நிறுவனத்தில் டைரக்ட் ஊழியருக்குக் கொடுக்கப்படும் சம்பளத்தில் பாதி அல்லது பகுதிதான் இந்த இணைப்பு கம்பெனி ஊழியருக்குக் கொடுக்கப்படும். போனஸ்., இன்க்ரிமெண்ட் எல்லாம் அப்படித்தான். வருடா வருடம் ரேட்டிங் போட்டு ஒவ்வொருவரையும் ஓரம் கட்டுவதால் இந்த இயர் எண்டிங்., ரேட்டிங் எல்லாம் ஏன்தான் வருறதோ என அந்த ஊழியரின் மனைவி ஆதங்கப் படுவார். ஏனெனில் கணவருக்கு தகுதி இருந்தும் நிர்வாகம் அல்லது அது சார்ந்த மனிதர்கள்தான் தீர்மானிக்கிறார் என்றால் அடுத்த வீஆர் எஸ் பாக்கேஜ் எப்ப வரும் என காத்திருக்க ஆரம்பிக்கிறார்கள். ஏனெனில் இவர்கள் பிள்ளைகள் படிப்பு., திருமணம் போன்றவை நடைபெற்றிருக்கும். நல்ல வீ ஆர் எஸ் பாக்கேஜ் வந்தால் வெளியேறி நிம்மதியாயிருக்கலாம் என்ற எண்ணம் தோன்றுமளவு அந்த கம்பெனியில் டார்கெட் கொடுத்து படுத்திக் கொண்டிருப்பார்கள்.

பையன்கள் வேலை செய்யும் சாஃப்ட்வேர் கம்பெனிகள் கூட சனி ஞாயிறு லீவு கொடுக்கும். ஆனால் 50 வயது அப்பா வேலை செய்யும் நிறுவனத்துக்கு அவர் காலை 7 மணிக்குச் சென்று இரவு 9 மணி வரை வேலை செய்ய வேண்டி இருக்கும். மேலும் சிலநாள் தணிக்கை வேலைகளை செய்ய இயலாமல் ஞாயிறுகளிலும் வேலை செய்யும் அப்பா., பேப்பர் படித்தல்., டிவி., சினிமா போன்ற பொழுது போக்குகளே இல்லாமல் வேலை செய்யும் எந்திரமாய் இருப்பார். எப்போது ரிட்டயராவோம் அல்லது வி ஆர் எஸ் பாக்கேஜ் வரும் என்பதே அவர் எண்ணமாய் இருக்கும். இதற்காய் அவர் மனைவியிடம் நாளொரு ப்ளான் சொல்லிக் கொண்டிருப்பார். இருக்கும் பணத்தில் அங்கே வீடு வாங்குவோம். இங்கே இடம் வாங்குவோம் என. அல்லது ரிசைன் செய்கிறேன் வேறு ஏதாவது படிச்சிட்டு வேற கம்பெனியில் வேலை செய்கிறேன் என. மனைவி திகைத்துப் போய் இருப்பார் என்ன சொல்வதெனத் தெரியாமல்.

”பார் அன்னைக்கே அவன் வெளியே போயிட்டான். கையில இவ்வளவு கேஷ் கிடைச்சது. இன்னிக்கு இன்னொரு வேலையில் நல்லா இருக்கான். என்ன நீதான் வரவேண்டாம்னுட்டே. ஒரு வேளை நானும் அன்னைக்கே வெளிய வந்திருந்தா வேறோரு வேலைக்குப் போய் நல்லா வந்திருப்பேன். ”என உளைச்சலுக்கு ஆளாக்குவார் மனைவியை.

மனைவியின் சொந்தகாரர்கள் வந்தால் குற்றம்., மகன் மகள் நண்பர்கள் வந்தால் குற்றம் என கோபிக்கும் குடும்பத்தலைவர் பார்த்து குடும்ப உறுப்பினர்கள் ஒதுங்க ஆரம்பிப்பார்கள். பிள்ளைகள் படிக்கிறேன் என்று நண்பர்களோடும்., மனைவி படிக்கிறேன் என்று ஏதோ ஒரு புத்தகத்தோடும்.

வேலைக்குக் செல்லும் மனைவியருக்கு இந்த தொல்லைகள் ரொம்ப உறுத்துவது இல்லை.. ஏனெனில் குடும்பத்தலைவரின் தொல்லைகளில் இருந்து தப்பித்து அவர் வேலைக்குச் செல்கிறார் என்பது ஒன்று, மற்றும் அவரின் சம்பாத்தியமும் குடும்பத்தை நடத்திச் செல்ல உதவுவதால் குடும்பத் தலைவரும் அடக்கி வாசிக்கிறார் எனலாம். பின்னே மனைவி வேலை செய்யும் தைரியத்தில் தானே வி ஆர் எஸ்ஸில் வந்தது அல்லது வரத் துடிப்பது.

ரிட்டயர்மெண்ட் ஆன கணவர்கள் செய்யும் அனைத்து அன்புத் தொல்லைகளையும் இந்த வி ஆர் எஸ்ஸில் வெளி வந்த கணவர்களும் ., வி ஆர் எஸ்ஸீல் வரத்துடிக்கும் கணவர்களும் பாரபட்சமில்லாமல் செய்து கொண்டிருப்பார்கள்.

வேலைக்குச் செல்லாத மனைவி என்பதையும் குடும்பம் என்பதையும் உங்கள் அடிமைக்குட்பட்ட ப்ராப்பர்டியாக எண்ணாமல் சுதந்திரம் கொடுங்கள். உங்களுக்கு நேர்ந்ததேதானே அவர்களுக்கும் நேர்ந்திருக்கும். இதில் அவர்களை குற்றம் சுமத்துவது ., குமைச்சலுகுள்ளாக்குவது ஏன்.

வி ஆர் எஸ்ஸில் வெளிவந்து பத்து வருடமாக மனைவியைப் படுத்துகிறவர்களையும் பார்த்திருக்கிறேன். வி ஆர் எஸ்ஸில் வராமல் இப்போது வரை மனைவியைப் படுத்தும் கணவர்களையும் பார்த்திருக்கிறேன். எதெற்கெடுத்தாலும் மனைவியை குற்றம் கண்டுபிடிக்கும் மனப்பான்மையிலிருந்து மாறுங்கள். அவள் உங்கள் சந்தோசம்., துக்கம் இரண்டையும் பகிர்ந்து வாழவே வந்திருக்கிறாள்.

ஒரு நாளில் சில மணி நேரமாவது மனைவிக்கு சுதந்திரத்தைக் கொடுங்கள் . அவளுக்குப் பிடித்த டி வி ஷோ., அவளுடைய சிநேகிதிகள். , அவளுடைய சொந்தக்காரர்கள்., அவள் உணவு விருப்பம். அவளுடைய உடைத்தேர்வு., அவளுடைய பொழுது போக்கு என. ஒரு வேளை அவள் ஏதேனும் தொழிலில் ஈடுபட்டால் அதற்கும் நீங்கள் உறுதுணையாகவும் வழிகாட்டியாகவும் இருக்கலாம்.

விஆர் எஸ் என்பது வாழ்க்கையில் உங்களுக்குக் கிடைத்ததே. உங்கள் மனைவிக்கு அந்த வாய்ப்பு என்றாவது உண்டா என நினைத்து அவளை அன்பு செலுத்துங்கள். வி ஆர் எஸ் என்றோ., பென்ஷன் என்றோ மனைவி கேட்டால் என்ன ஆகும். விட்டுக் கொடுப்பதாலும்., ப்ரச்சனைகளை ஆராய்ந்து அதற்குத் தீர்வு காணவேண்டும். தன் உத்யோகப் பிரச்சனைகளைக் குடும்பத்துக்குள் புகுத்தாமலும் இருந்தால் குடும்பமே சொர்க்கமாகும். பணத்தை விட அன்பான மனம்தான் சாதிக்கும்.

டிஸ்கி:- வி ஆர் எஸ் வாங்கிவிட்டு வீட்டில் நச்சரிக்கும் கணவரை சமாளிப்பது எப்படி? என்ற தலைப்பில் ஜூலை இவள் புதியவளில் இந்தக் கட்டுரை வெளிவந்துள்ளது.:)

வியாழன், 21 ஜூலை, 2011

காஃபி...

விஷ்..விஷ் என வடிவேலு போல சப்தமெழுப்பினார் என் கணவர்.. அட அவர் விஷ் மட்டும் தான் வடிவேலு போல .. ஆனா ஆள் அந்தக்கால பாலாஜி., அப்புறம் வந்த பாக்கியராஜ். இப்போ இருக்கும் பிருத்விராஜ்., இன்னும் இருக்கும் மம்முட்டி போல அழகன்..

அது ஒரு ஞாயிறு மாலை நேரம்.. தொலைக்காட்சியில் மொத்தக் குடும்பமும் மூழ்கி இருந்தது.. என்ன விஷ் விஷ் என்றேன் நானும் சங்கேதமாய்.. என் சின்ன மகன் இடுப்பில் அமர்ந்து எங்கள் விஷ் விஷைப் பார்த்து சிரித்தான்.. அவனுக்கு ஏதோ விளையாட்டுக் காட்டுவதாய்..

கொஞ்சம் காப்பி என்றார் என் கணவர்.. ஐயையோ இப்பவா என்றேன் நான்,, அட இது புதுமைப் பெண் படக் காப்பி இல்லைங்க.. சாதா காப்பிதான்.. ரொம்ப குடிச்சா முடி கொட்டிப் போயிரும் காஃபின்னால என்றேன்..

ஆத்தா சைன்ஸ் பாட்டி .. இப்போ கொடு பின்னாடி பார்த்துக்கலாம் என்றார்.. பின்னாடி எங்கே சூரிய பிறை மாதிரி இப்பவே ஆரம்பிச்சுகிட்டு வருது வழுக்கை .. எல்லாம் போதும் என்றேன்..

என் மாமியாரும் மாமனாரும் தொலைக்காட்சியில் அண்ணாமலை தீப தரிசனத்தை பார்க்க காத்துக் கொண்டிருந்தார்கள்.. சினிமா பார்க்க முடியாமல் கொழுந்தனாரும் நாத்தனாரும் எங்கள் பெட்ரூமில் ஒளிந்து பிடித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள்..


இவர்கள் இருக்கும் போது காபியாவது ஒண்ணாவது ..திடீரென்று அடுத்த ரூமுக்கு இருவரும் ஓடினார்கள். பையனும் இறங்கணும் என்று ஒரே ஆட்டம்..குழந்தை அவர்கள் செல்லும் திசை நோக்கி பார்த்தபடி கை வீசிக் கொண்டிருந்தான்..

ராத்திரிக்கு சப்பாத்தி மாவு பிசையணும் . இவனைப் பிடிங்க என்றேன் நான்.. உடனே என் கணவர் குழந்தையை வாங்கும் சாக்கில் முகத்தோடு முகம் உரசி குழந்தையை வாங்கினார். அடப்பாவி மனுஷா.. குழந்தைக்கும் தெரியாமல் சந்தடி சாக்கில் ஒரு காபியா.. திகுதிகுவென்று உதடு எரிந்தது..

என் மாமியார்.. சீக்கிரம் வாம்மா டி வி யில் தீப தரிசனம் தெரியுது என்றார்.. குழந்தையை வாங்கிய இவர் ஹாலுக்கு சென்று விட்டார். புன்னகைத்தபடி..

தலை கலைந்தது போல இருந்தது .. கண்ணாடியில் பார்த்து சரி செய்யும் போது பொட்டைக் காணவில்லை.. அடடா எங்கே கழுத்தில் கன்னத்தில் இருக்குமோ என தேடிப்பார்த்தேன். தரையில் கூட இல்ல.. தலை முடியில் இருக்குமோ.. தலையைத் தடவினேன்.. தலை சுற்றி., தரையை சுற்றி., சரி போகுது போ என அட்டையைப் பிரித்து முகம் கழுவி ஒன்றை ஒட்ட வைத்து டக்கென்று ஹாலுக்கு சென்றேன்..

யாருக்கும் தெரியுமோ என்ற பதைப்பு இருந்தது. ஊர்வசி மாதிரி ஒரு புன்னகையை வழிய விட்டு நானும் சென்று ஜோதியில் ஐக்கியமானேன்,

தீப தரிசனம் முடியும் போது என் மாமியார் என் பையனை என் கணவரிடமிருந்து வாங்கினார்.. இது என்ன என்று சிரித்தபடி தன் மகனின் கண்ணாடிக்குக் கீழே கண்ணோரத்திலிருந்து அவர் எடுத்து என்னிடம் கொடுத்தது சில்வர் ஃபிஷ் போல் ஒட்டிக் கொண்டிருந்த என்னுடைய பொட்டை..

தன்னை அறியாமல் வாயை உட்புறமாக மடித்துக் கொண்டேன்.. என் கணவர் அசட்டு சிரிப்பை உதிர்த்தார்.

காப்பியடித்து கையோடு பிடிபட்ட மாணவர்களாய் மாட்டிக் கொண்டு விழித்தோம் நாங்கள் இருவரும்..

டிஸ்கி :- இந்தக்கட்டுரை ரொமான்ஸ் என்ற தலைப்பில் கோதை என்ற புனைபெயரில் ஜூலை இவள் புதியவளில் வெளிவந்துள்ளது. :)

புதன், 20 ஜூலை, 2011

சிறகு முளைக்கும் சிட்டுக்கள். பள்ளி செல்லும் பறவைகள்.



”பள்ளிக்குச் சென்றிருக்கும் பையன்களில் சிறிய பையன் துள்ளிக் குதித்தே மான்போல் தொடர்ந்தோடி வீழ்ந்தானோ” எனக் கவலையுறுவது அம்மாக்களின் இயல்பு. உங்க வீட்டில் ஸ்கூலுக்கு போக ரெடியா குட்டிப் பொண்ணு அல்லது குட்டிப் பையன் இருக்கானா .. அப்ப இந்த விவரம் எல்லாம் நீங்கதான் தெரிஞ்சுக்கணும். தெரிஞ்சுகிட்டு உங்க குட்டீஸ்கிட்டயும் சொல்லிக் கொடுக்கணும்.

முதன் முதலா வீட்டின் செல்லக் குட்டி ஸ்கூலுக்கு போக நாம முதல்ல ரெடி பண்ணனும். குழந்தை பிறந்தவுடனே ஸ்கூல் அப்ளிக்கேஷன் ஃபில் பண்ணிக் கொடுக்கணும்னு ஜோக் எல்லாம் படிச்சிருக்கலாம். ஆனா அது உண்மையாகிக்கிட்டுத்தான் வருது. நல்ல பெயர் எடுத்த பள்ளிகள்ல சேர்க்குறதுக்கு தந்தையும் தாயும் கொஞ்சம் மெனக்கெடத்தான் வேணும். தற்காலத்துல பிறக்குற குழந்தைகள் எல்லாம் அதிகமான ஐக்யூவோட பிறக்குறாங்க. எனவே இண்டர்வியூவெல்லாம் ஜமாய்ச்சிடுவாங்க. பெற்றோரான நீங்க சொதப்பிடாம இண்டர்வியூவில நல்லா பதில் சொல்லுங்க.

முதல்ல குழந்தைகள் பள்ளிக்கு போகணும்னா கொஞ்சம் பிரிவுக்கு தயார்படுத்துங்க.. வேலைக்குப் போற அம்மாக்கள்னா குழந்தைகள் கொஞ்சம் பிரிஞ்சு பழகி இருப்பாங்க.. ஆனா வீட்டில் அல்லும் பகலும் கூடவே கட்டிக்கிட்டு இருக்கிற அம்மாக்கள் கொஞ்சம் உங்க பிள்ளைகளை அவ்வப்போது சில மணி நேரமாவது பிரிந்து அம்மா வீட்டில் அல்லது மாமியார் அல்லது உறவினரிடம் விட்டுட்டு எப்படி இருக்குறாங்கன்னு பாருங்க.. நீங்களும் கொஞ்சம் பிரிஞ்சு இருக்க கத்துக்கணும். இல்லாட்டி ஸ்கூலுக்கு போய் அவங்க அழறதுக்கு முன்னாடி நீங்க கண்ண கசக்கிக்கிட்டு நிப்பீங்க.

ரெண்டாவதா சுகாதாரம். வீட்டிலேயே ஒன் பாத்ரூம் வந்தா ., டாய்லெட் வந்தா சொல்லி விடச் சொல்ல சொல்லுங்க. அப்பதான் ஸ்கூலயும் அந்த பழக்கம் வரும். இல்லாட்டி டீச்சர் அல்லது ஆயா தினம் திட்ட ஆரம்பிச்சிடுவாங்க. பிள்ளைகளுக்கு நாப்கின் கட்டி விடுற பழக்கத்தை 1 1/2 வயதுக்கு மேல நிறுத்திடுங்க. உணவையும் ஊட்டியே பழக்காமல் ஒரு பவுலில் போட்டு ஸ்பூன் போட்டு சாப்பிடப் பழக்குங்க. கொஞ்சம் முதல்ல சிந்தத்தான் செய்வாங்க. அப்பதான் தேவையானதை சாப்பிடப் பழகுவாங்க.. இல்லாட்டி ஸ்கூல்ல இண்டர்வெல் பிரீயட் முடியுற வரைக்கும் பாதி லஞ்ச் கூட சாப்பிடாம முழிச்சிகிட்டு இருப்பாங்க. சீக்கிரம் சாப்பிடுன்னு குழந்தைக்கு திட்டு விழும். அல்லது யாராவது ஊட்டி விடுறேன்னு சுகாதாரமில்லாத கையோட கொடுத்துடுவாங்க.

இது பர்சனல் ஹைஜீனிக் சம்பந்தப்பட்ட விஷயம். எப்பவும் குழந்தைகள் சாப்பாட்டை மிஸ் செய்யவே கூடாது. வீட்டிலும் தேவையானதை சரியா சாப்பிடுதான்னு பாருங்க. அப்புறம் நகம் .,தலை முடி எல்லாம் அப்போ அப்போ வெட்டி விட்டுருங்க. சில பள்ளிகள்ல இதெல்லாம் பார்க்கிறாங்க. சரியா இல்லாட்டா பனிஷ்மெண்ட் கொடுக்குறாங்க. சுத்தமா இருந்தா நகத்தின் மூலமா அழுக்கும் வயித்துக்குள்ள போகாது. டைபாய்டு மற்றும் வயிற்றுப் போக்கு எனப்படும் டீஹைட்ரேஷனுக்கு இதுதான் காரணம்.

பிள்ளைகள் அணியும் சீருடை சரியா இருக்கா .. அதுனால அதுக்கு ஏதும் இன்கன்வீனியண்ட் இருக்கான்னும் பார்த்துக்குங்க. அது ட்ரெஸ் இறுக்கி வயித்து வலியாலயோ ., எதாலயோ அழும்போது கோபிக்காம மெதுவா என்ன விஷயம்னு விசாரிங்க.. அது போலத்தான் குழந்தையின் தினசரி வகுப்பு எப்பிடி நடக்குது., டீச்சர் நல்லா சொல்லித்தராங்களா., ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் நல்லா பழகுறாங்களான்னு தெரிஞ்சுக்கணும். யாரும் திட்டினாங்களா., அடிச்சாங்களான்னும் கேட்டு தெரிஞ்சுக்கணும்., இப்போ பிள்ளைகள் நர்சர் ரைம்ஸ் சொல்வது போல கேட்ட எல்லா வார்த்தைகளையும் ஒப்பிக்க ஆரம்பிச்சிடும். அதுனால குழந்தைகள் முன்னாடி போடதீங்க. ஸ்கூல்லயும் பசங்க என்னென்ன வர்த்தைகள் பேசுறாங்க.. அதுல குழந்தை என்னென்ன கத்துக்குக்குதுன்னும் கவனிப்பது அவசியம்.

ஸ்கூலுக்கு ஆட்டோ அல்லது ரிக்‌ஷா ஏற்பாடு செய்தால் குழந்தைகளை அடைத்துக் கொண்டு போகாமல் இருக்கிறார்களா எனப் பாருங்கள்.. அல்லது ஸ்கூல் வேன் அல்லது பஸ்ஸாக இருந்தாலும் டிரைவர் .,மற்றும் பொறுப்பாளர் எப்படி நடத்துகிறாகள் குழந்தையை என குழந்தையிடம் கேளுங்கள். குட் டச்., பாட் டச் பற்றியும் சொல்லிக் கொடுங்கள். வேறு யார் எது கொடுத்தாலும் வாங்கி உண்ணக் கூடாது என்று குழந்தையிடம் கண்டிப்பாக சொல்லுங்கள். வாகன ஓட்டிகளின் போன் நம்பர் அல்லது அவர்கள் நிறுவனத்தின் போன் நம்பரை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.. தேவை ஏற்படின் போன் செய்தும் விசாரியுங்கள். குழந்தைக்கு முதலில் அதன் பெயர்., அம்மா அப்பா பெயர் ., வீட்டு முகவரியை சொல்லிக் கொடுங்கள். முடிந்தால் போன் நம்பரையும் சொல்லிக் கொடுத்து சொல்லச் சொல்லலாம்.

அதற்காக எல்லாரையும் எப்போதும் சந்தேகக் கண் கொண்டு பார்க்க வேண்டாம்.. எல்லாரும் நல்லவராகவும் இருக்கக் கூடும்.
பிள்ளைகளுக்குத் தேவையான பாட புத்தகங்களை அட்டை போடவும் அடுக்கி வைக்கவும் பழக்க வேண்டும். ஸ்கூலில் இருந்து வந்தவுடன் எல்லாவற்றையும் அங்கே அங்கே வீசாமல் ஷூ ஸ்டாண்டில் ஷூவையும் ., உடை மாற்றியபின் ட்ரெஸ்ஸையும் சாக்ஸையும் வாஷிங் கூடையிலும் போட சொல்லலாம்.

ப்ளேஸ்கூலில் விடும் சின்னப் பிள்ளைகள் என்றால் சறுக்கு விளையாட்டுகளில் விளையாடும்போது கவனமாக விளையாட சொல்ல வேண்டும். கீழே விழுந்து அடிபடுவது சகஜம்தான் என்றாலும் ., அது பெரிதாகாமல் அவ்வப்போது மருந்து தடவி பார்த்துக் கொள்ள வேண்டும். பிள்ளைகளை ஒருவரை ஒருவர் தள்ளிக் கொள்வது., அடித்துக் கொள்வது என்பது எல்லாம் உங்களுக்கு சொல்லும் படி சொல்ல வேண்டும். உடல் நிலை சரியில்லை என்றால் மாத்திரை எல்லாம் கொடுத்து கட்டாயமாக பள்ளியில் கொண்டு போய் தள்ளாமல் ஒரு சில நாளாவது லீவு போட்டு கூட இருக்க வேண்டும். பின் உடல் ஓரளவு சரியானவுடன் அனுப்பலாம்.

சாப்பாடை மிச்சம் கொண்டு வந்தால் மிரட்ட வேண்டாம். அடுத்த வேளைகளில் கலர்ஃபுல்லாக நியூட்ரிசியசாக செய்து கொடுங்கள். ஒழுங்காக சாப்பிட்டால்., படித்தால்., ஹோம் ஒர்க் செய்தால்., பிடித்த இடங்களுக்கு அழைத்து செல்வதாக சொல்லுங்கள் பிடித்ததை வாங்கித்தருவதாகச் சொல்லுங்கள். சமர்த்தாக செய்வார்கள். நன்கு செய்யும் போது அணைத்து முத்தமிடுங்கள். குழந்தைகளுக்கு அரவணைப்பு முக்கியம்.

வீட்டுக்கு வந்தவுடன் ஹோம் ஒர்க் செய்தால் அவ்வப்போது சிறிது நேரம் கார்டூன்கள் பார்க்க அனுமதி கொடுங்கள்.. வீட்டில் அல்லும் பகலும் கார்டூன்கள் ஓடிக்கொண்டே இராமல் இவ்வாறு டைம் லிமிட்டேஷன்ஸ் இருப்பது நல்லது. எதற்கும் மிரட்டுவது ., அதட்டுவது., கத்துவது என செய்யாமல் மென்மையாக சொல்லிப் புரிய வைத்தால் ஒழுங்காக கேட்பார்கள்.

குழந்தைகள் என்றால் சிறிது சேட்டையும் சொல் பேச்சு கேளாமலும்தான் இருக்கும். நீங்கள் என்ன கூண்டுக் கிளியையா வளர்க்கிறீர்கள்.. அது குழந்தை சாமி குழந்தை... அது ஆட்டம் போடுவதைப் பார்த்து கருப்பண்ண சாமி மாதிரி கோபத்தில் கண்ணை எல்லாம் உருட்டி மிரட்டாதீர்கள். உங்களை அந்த சமயத்தில் கண்ணாடியில் பார்த்தால் உங்களுக்கே பயமாய் இருக்கும் . எப்போதும் புன்னகையும்., சிலசமயம் லேசான கண்டிப்புமே போதும் .

சரி சரி குழந்தை ஸ்கூலுக்கு நேரமாச்சு.. ப்ரிபேர் பண்ணுங்க போங்க.. மறந்துடாம கொஞ்சம் குழந்தைகளுக்குப் பிடித்த ஸ்நாக்ஸையும் வைச்சு அனுப்புங்க.. குட்டி முத்தத்தோட..


டிஸ்கி:- இந்தக் கட்டுரை ஜூன் 2011 இவள் புதியவளில் கவர் ஸ்டோரியாக வெளிவந்துள்ளது.

திங்கள், 18 ஜூலை, 2011

சண்டே ஃபாமிலி ஸ்பெஷல்..







எதேச்சையா ஒரு ஞாயித்துக் கிழமை அன்னிக்கு சீக்கிரமா முழிப்பு வந்துருச்சு. நமக்கெல்லாம் திங்கக்கிழமை அன்னிக்குத்தானே சூப்பரா தூக்கம் வரும். சரின்னு சீக்கிரமா வேலை எல்லாம் முடிச்சாச்சு.. டிவியில் பார்த்த ப்ரோக்ராமே பார்த்த மாதிரி இருந்துச்சு. கம்ப்யூட்டர் லீவு நாள்ல கிடைக்காது.. சரி என்ன பண்ணலாம் பொழுதே போகலையேன்னு யோசிச்சப்ப எதிர் ப்ளாட்டில் இருந்து சரிகமபதநச னு ஒரு சின்னபிள்ளையோட கணீர் குரலோட பாட்டு கேட்டுச்சு.. அட பூஜா.. பாட்டெல்லாமா பாடுறா. அந்த குட்டீஸ்க்கு மிஞ்சி மிஞ்சிப் போனா 5 வயசு இருக்கும். பிரபல பாடகி மாதிரி அற்புதமா பாடினா.. சமையல் வாசனை வேற அவங்க வீட்டில இருந்து மூக்கை துளைச்சுச்சு.. ஞாயித்துக்கிழமையும் அதுவுமா அவங்க என்ன செய்யிறாங்கண்ணு பார்க்கலாம்னு போனேன்.. அடுத்தவங்க வீட்டுல என்ன செய்யிறாங்கன்னு பார்க்கிறதுன்னா நமக்கெல்லாம் எவ்வளவு சந்தோஷம்..

காலிங் பெல் அடிச்சவுடனே பூஜா உள்ள ஓடிப் போயி.,” அம்மா பாபு அக்கா பிளிசின்னாரு” அப்பிடின்னா.. ( என் தம்பி பாபு நாங்கள் இருந்த வீட்டில் முன்பு இருந்தான். அவன் போன பின்னாடி நாங்கள் வந்து 3 வருடம் கூட ஆச்சு. இருந்தாலும் நான் பூஜாவுக்கு பாபு அக்காதான்..) போய் பூஜா சூப்பரா பாடுறாளேன்னு கேட்டா அவங்க அம்மா கீதா., அவ இப்ப ஸ்லோகம் க்ளாஸ்., பாட்டு க்ளாஸ் எல்லாம் போறான்னு சொன்னாங்க.. அவங்க கிச்சன்ல அடுப்புல ஏதோ ஃப்ரை பண்ணிகிட்டு இருந்தாங்க.. அவங்க கணவர் ரகு அவங்களுக்கு உதவி செய்துகிட்டு இருந்தார். கீதா ப்ரைவேட் கன்சர்ன்ல வேலை பார்க்கிறாங்க. ரகு மாக்ஸ் ந்யூயார்க் லைஃப் இன்சூரன்ஸ்ல வேலை பார்க்கிறார். அவங்க பொண்ணு பூஜா எல் கே ஜி படிக்கிறா.. ரொம்ப சுட்டியான பொண்ணு.

என்னங்க விஷேஷம்.. இன்னிக்கு உங்க வீட்டுல இருந்து நல்ல சமையல் வாசனை அடிக்குது .. என்ன ஸ்பெஷல் அப்பிடின்னு கேட்டேன்.. அவங்க மாமனார் நாகேஸ்வரம் வேலையிலிருந்து ரிட்டையர் ஆகிட்டார். மாமியார் ராதா முதுமை காரணமா கொஞ்சம் நடக்க முடியாம இருக்காங்க.. உடம்பு நல்லா இருந்த வரைக்கும் அவங்கதான் சமைப்பாங்களாம்.

நாளைக்கு ஒரு ஃபங்ஷனுக்கு இங்கே அட்டண்ட் பண்ண இவரு ரிலேஷன்ஸ் வர்றாங்க.. அதுனால இன்னிக்கு சாம்பார் ., ரசம்., பொரியல்னு ஆர்டினரியா பண்ணாம.. கலவை சாதம்., சூப்., ஜீஸ்., கோசுமரி., உசிலி பண்றேன்னாங்க..

டேபிள்ள ஒவ்வொரு ஐட்டமா வந்துகிட்டே இருந்துச்சு. ஆந்திர மாகண்டி குடும்பத்தை சேர்ந்த அவங்க சமையல்ல கொஞ்சம் காரம் அதிகமா இருக்கும். கலர்புல்லா எல்லாத்தையும் பார்த்ததும் ஒவ்வொன்னு பேரா விசாரித்தேன்.முதல்ல கொஞ்சம் தர்பூசணி ஜூஸ் சாப்பிடுங்கன்னு கொடுத்தாங்க .. நல்ல ரோஸ் கலர்ல வெய்யிலுக்கு ஜில்லுன்னு சூப்பரா இருந்துச்சு.. அதுக்குள்ள அவங்க நாத்தனார் அன்னபூர்ணாவும் அவங்க பையன் சித்தார்த்தும் விஜயவாடாவில் இருந்து வந்துட்டாங்க.. ரகுவோட மாமா பையனும் வந்துட்டார்.. எல்லாரும் ஜூஸ் குடித்தோம். வெய்யில் நேரத்துல குளு குளுன்னு இருந்துச்சு. தர்பூசணியும் ஜீனியும் போட்டு ஐஸ்க்யூப் போட்டு மிக்ஸியில் அடித்தாராம்.

ப்ளெயின் ரைஸ்., தால்.,( துவரம்பருப்பு நெய் உப்பு போட்டது ) , டொமாட்டோ சூப் கொண்டு வந்தாங்க.. சூப் எப்பிடி செய்தீங்கன்னு கேட்டேன். தக்காளியை வேகவைச்சு அரைச்சு கார்ன்ஃப்ளோரை பாலில் கரைச்சு கொதிக்க வைச்சு ரெண்டையும் கலந்து உப்பு., மிளகுத்தூள் போட்டேன்னு சொன்னாங்க. சூப்பர் சூப்..

அப்புறம் வெஜிடபிள் சாலட்., காரட்., பீட்ரூட்., தக்காளி., வெள்ளரிக்காய் இதை நறுக்கி உப்பு., மிளகுத்தூள் போட்டு வச்சாங்க.

கும்மிடிக்காய்னு சொல்ற பரங்கிக்காய்ல.. அதாங்க சிகப்பு பூசணி .. அதை வேகவைச்சு மசித்து தயிர்ல உப்பு சேர்த்து கலந்து கடுகு உளுத்தம்பருப்பு தாளிச்சிருந்தாங்க..அலங்காரத்துக்கு கருவேப்பிலை., கொத்துமல்லி தூவி இருந்தாங்க. இந்த கும்மிடிக்காய் சாலட்/தயிர்ப் பச்சடி சூப்பர். வெய்யில் நேரத்துக்கு அமிர்தம்.

ஃப்ரூட் பச்சடின்னு ஒரு ஐட்டம். அதுல எல்லா பழமும் போடலாம். கிடைத்ததை போட்டதாக சொன்னார் கீதா. அதில் வாழைப்பழம்., மாம்பழம்., பன்னீர் திராக்ஷை., பலாச்சுளை எல்லாம் குட்டியா நறுக்கிப்போட்டு வெல்லம் போட்டுக் கலந்து வச்சிருந்தார். இதுவும் சுப்பர் டேஸ்ட் ஃப்ரூட் சாலட் மாதிரி இருந்துச்சு.

அப்பளம் வடகம்., பொறிச்சு., கொஞ்சம் கலவையான தூள் காய்கறியும் கொத்துமல்லியும்., கருவேப்பிலையும் தூவி இருந்தாங்க..

கோசுமறின்னு ஒரு ஐட்டம். பாசிப்பருப்பை ஊறவச்சு அதுல துருவின தேங்காய்., வெள்ளரிக்காய்., மாங்காய்., பச்சைமிளகாய் எல்லாம் போட்டு எலுமிச்சை பிழிந்து., உப்பு போட்டு., கடுகு தாளிச்சிருந்தாங்க.. ஒரு ஸ்பூன் டேஸ்ட் பார்த்தேன் .. செம செம டேஸ்ட்.

பீன்ஸை வேகவைத்து., ஊறவச்சு அரைச்ச கடலைப்பருப்பு போட்டு., எண்ணெயில் கடுகு., பெருங்காயம்., போட்டு கிளறி இருந்தாங்க.. அது பீன்ஸ் பருப்புசிலியாம். அதுக்கு நிறைய எண்ணெய் செலவாகும்னு சொன்னாங்க..

அப்புறம் மூணு சாதம்., 4 ஊறுகாய்.. சொல்லும்போதே நாக்கு ஊறுதுல்ல..

முதல்ல தேங்காய் சாதம்.. சாதம் உதிரியா வடிச்சிட்டு., எண்ணெயில் கடுகு., கடலைப்பருப்பு., உளுந்தம் பருப்பு., பச்சை மிளகாய்., கருவேப்பிலை ., கொத்துமல்லி., துருவின தேங்காய்., உப்பு போட்டு சாதத்தைக் கொட்டிக் கிளறினதா சொன்னார். இதுல என்ன ஸ்பெஷல்னா வேகவைத்த பட்டாணியையும் அலங்காரத்துக்காக சேர்த்திருந்தார். கலர்புல் மற்றும் டேஸ்டி. லஞ்ச் பாக்ஸுக்கு கொடுத்தனுப்பலாம்னு குறிச்சுக்கிட்டேன்..

வழக்கமா செய்யிறது போல புளிக்காய்ச்சல் முதல்நாள் செய்து வைச்சிட்டு மறுநாள் சாதத்துல மஞ்சப்பொடி., நல்லெண்ணெய் போட்டு., கடாயில் திரும்ப கடுகு., கருவேப்பிலை.,பச்சை வேர்க்கடலை., சாதத்துல தாளிச்சுக் கொட்டிபுளிக்காய்ச்சலையும் சேர்த்துக் கிளறினதா சொன்னார். அடிஷனல் டேஸ்டுக்கு என்ன காரணம்னு கேட்டப்ப கொஞ்சம் பெருங்காயமும்., வெந்தயமும் வறுத்துப் பொடி பண்ணித்தூவுனதா சொன்னார். பெருமாள் கோயில் புளியோதரை போல இருந்தது.

அடுத்து தயிர்சாதம். சாதத்தில் பால்., தயிர் உப்பு போட்டுக் கலந்து கடுகு., பச்சைமிளகாய் தாளித்திருந்தார். அலங்காரத்துக்கு பன்னீர் திராக்ஷையும்., கருவேப்பிலை., கொத்துமல்லியும் தூவி இருந்தார்.. ரொம்ப டிலைட்ஃபுல்..

முக்கியமான ஐட்டம் அடுத்து நமக்கெல்லாம் பிடிச்ச ஊறுகாய்கள் ஆந்திராவிலிருந்து வந்தவங்கன்னா ஊறுகாய் இல்லாம சாப்பாடா.. வகை வகையா அணிவகுத்து வந்தன ஊறுகாய்கள் . முதல்ல வடுமாங்காய்.. அதை கழுவி காயவைத்து., கடுகுப்பொடி., உப்பு.,மஞ்சள் பொடி., மிளகாய்ப்பொடி கலந்ததா சொன்னார்.

முக்கலு பச்சடி என்று மாங்காயை பல் பல்லாக நறுக்கி எண்ணெய் மிதக்க மிதக்க இன்னொரு ஊறுகாய். மிளகாய்ப் பொடி., உப்பு மஞ்சள் பொடி போட்டு நிறைய எண்ணெயில் கடுகு தாளித்து சேர்த்ததாக சொன்னார்.

ஆவக்காய் ஊறுகாய் .. ரொம்ப அட்டகாசம்.. மினுமினுவென்று இருந்தது. பெரிய பெரிய துண்டாகவெட்டிய மாங்காய்களை கொட்டை நீக்கி கழுவி காயவைத்து ., மிளகாய்ப்பொடி., உப்பு., கடுகுப்பொடி., நிறைய எண்ணெய்., உரித்த பூண்டு., கொத்துகடலை போட்டதாக சொன்னார்..

மிக முக்கியமான ஊறுகாய்.. கோங்குரா சட்னி என்று அதன் பெயர்.. ஃபேமசான ஊறுகாய். அது புளிச்ச கீரையில் இருந்து செய்யப்படுகிறது. புளிச்ச கீரைப்பச்சடின்னும் சொல்றாங்க. . புளிச்ச கீரை ரெண்டு கைப்பிடியை ஆய்ந்துகழுவி ., எண்ணெயில் வதக்கி வைக்கணும். பிறகு இன்னொரு வாணலியில் இரண்டு கைப்பிடி மிளகாய்., ரெண்டு டேபிள் ஸ்பூன் தனியா. கட்டிப் பெருங்காயம் பெரிய துண்டு., எல்லாம் வறுத்து ., உப்பும் புளிச்ச கீரையும் சேர்த்து மிக்ஸியில் அரைத்து., பின் கடாயில் நிறைய எண்ணெய் காயவைத்து கடுகு தாளிச்சு இந்த ஊறுகாயில் சேர்ப்பார்களாம். செம காரம் மற்றும் விறுவிறுப்பு..

எல்லா டேஸ்டும் எப்பிடிக் கரெக்டா சொல்றேன்னு பார்க்கிறீங்களா.. எல்லாத்திலயும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டுப் பார்த்தாச்சுல்ல.. ஞாயித்துக் கிழமையும் அதுவுமா இவ்வளவும் நல்ல நியுட்ரிஷியசோடவும்., ஹெல்த்தியாகவும்., அருமையாகவும் சமைத்து அழகா டேபிள்ல அடுக்கி வைச்சுக்கிட்டு இருந்தாங்க கீதாவும் ., ரகுவும். அவங்கள பாராட்டிட்டு கிளம்புனா எல்லாத்தையும் கொஞ்சம் கொஞ்சம் பவுல்களில் வைத்து கொடுத்தார் கீதா. வீட்டுக்குக் கொண்டு வந்து எங்க லஞ்சோட சேர்த்து சாப்பிட்டோம்.. நீங்க என்ன செய்தீங்கன்னா கேட்டீட்ங்க.. ப்ளெயின் ரைஸ் வச்சோம்க. வீட்டுல உறை வச்ச தயிர் இருந்துச்சு.. அப்ப நீங்க சமைக்கலியான்னு கேட்டா ஆமாங்க ஆமாம் சமைக்கலை. அவங்க கொடுத்த ஊறுகாய் பச்சடி ., சாலட் வச்சு சாப்பிட்டோம்.. அட.. இது கூட நல்லா இருக்கேங்கிறீங்களா.. ஆமாங்க யாராவது சமைச்சு கொடுத்தா எதுவானாலும் நல்லா இருக்குதுதான்..:))



டிஸ்கி:- இந்தக் கட்டுரை ஜூன் 2011 ., இவள் புதியவளில் வெளிவந்துள்ளது.:)

வெள்ளி, 15 ஜூலை, 2011

சாமியும் சும்மா சாமியும்..(சும்மாவுக்குப் பிறந்தநாள்)

சாமி..:-
***************

நீ உலவும் இடத்தில் உலவி
உண்டக்கட்டி உண்டு
ஓரமாய் உறங்குகிறேன்.
தாவாங்கட்டை தாடிசூழ
தலைசுமந்த சடைமுடியுடன்.
உன்னைக் காண
வழிமோதி வருவோர்க்கு
தீவட்டி பிடிக்கிறேன்
வழி விடுமாறு.
தோள்களில் தாங்கி
பல்லாக்கு சுமக்கிறேன்
தாங்கு கம்புகளிலிலிருந்து
தோளுக்கு மாறும்போது
எலும்புவழி புகுவாய்..
இனம் புரியாக் குளிராய்..
இன்ப நடுக்கமாய்..
நீ.. என் சாமி..

**************************

சும்மா சாமி:-
***************
நீ என்னைச் சுமக்கிறாய்.
நான் உன்னைச் சுமக்கிறேன்.
சமயத்தில் ஓடிப் பிடித்தும்.
ஒளிந்து பிடித்தும்
இளமையாகிறோம்.
நீ வாசிக்கப்பட வேண்டும்.,
நேசிக்கப்பட வேண்டும்.,
என்பதே என் வேண்டுதல்.
கூகுளாண்டவர் கோயிலில்
உனக்கென்றும் தனிச் சன்னிதி.
தினம் ஒரு இடுகையே
என் தீபாராதனை.
கோஷ்ட தேவதைகளில்
என் ப்ரதம ப்லாக் தேவதையே
சும்மா உனைப் பணிந்தேன்.
உள்ளும் புறமும் உணர்ந்தேன்.
சும்மா இருப்பதே சுகம் எனச்
சுற்றிய என்னை
சும்மாவோடு இருப்பதையே
சொர்க்கம் ஆக்கினாய்..
முதல் வருடத்தை
எட்டுமுன்னே
பத்ரிக்கை பிரபஞ்சத்தின்
கதவுகளைத் திறப்பித்தாய்.
இரண்டாம் வருடத்தில்
இருக்கை அளித்தாய்..
என் மன உறுதித் தேவதையே
மூன்றாம் ஆண்டில் கால் பதிக்கும்
சும்மாவே.. சிகரம் தொட்டு நீ வாழி..
இன்னும் பலப் பல ஆண்டு...
சக பதிவர்களின் ஆசியோடும்
வாசிப்பவர்கள் ஆதரவோடும்..:)

டிஸ்கி:- இரண்டு ஆண்டுகள் முடிந்து மூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சும்மாவுக்கு சும்மா உங்க ஆசிகளை அள்ளி வழங்குங்க மக்காஸ்.:)

புதன், 13 ஜூலை, 2011

இருப்பு..பூவரசியில்

இருப்பு..:-
***************

மலைகளில்., விளம்பர
பெயிண்ட் அடித்தல்.,
பாறைகளில் ., பீச் மணலில்
முகங்களை வடித்தல்.,
மரங்களிலும் ., பேருந்துகளிலும்
பெயர்களைச் செதுக்குதல்.,
சரித்திரச் சின்னங்களில்
கையெழுத்துப் பொரித்தல்.,
வானொலிப்பாடல்களுக்கு
பத்ரிக்கைகளுக்கு கடிதம் எழுதுதல்
தொலைக்காட்சி பாடல்களூடே
பெயரோடு மெசேஜ் அனுப்புதல்.,
ரயில் கழிவறைகளில் கூட
கிறுக்கி வைத்தல் என
மனித சமூகம்
பிரகடனப்படுத்திக்
கொண்டே இருக்கிறது..
கல்வெட்டிலோ., காற்றிலோ.,
தன்னின் இருப்பை..


டிஸ்கி:- இந்தக் கவிதை ஜூன் 16 , 2011 பூவரசியில் வெளிவந்துள்ளது.

செவ்வாய், 12 ஜூலை, 2011

பலூன்கள்... பூவரசியில்..

பலூன்கள்..
**********************

காற்றூதி விரிவாக்கி
கடற்கரையில் விளையாடவும்

நெஞ்சடைக்கும்
குருதியோட்டம் சீராக்கவும்

கலவி முடிந்து
விந்து பிடிக்கும் பையாகவும்

கார் விபத்தில்
உயிர் காக்கும் மெய்யாகவும்..


டிஸ்கி:- இந்தக் கவிதை 28. மே 2011 பூவரசியில் தேனு கவிதைகள் என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது.

திங்கள், 11 ஜூலை, 2011

நம்பிக்கை.. பூவரசியில்

நம்பிக்கை..
**********************

விளைந்த புற்றுக்கள்
முளைவிட்ட நாகங்களோடு..

எங்கேயோ உரமடித்தால்
எங்கேயோ விளையுமென்று

எதுவும் கைவரப் பெறாதபோது
யாரோ உருவாக்கிய நம்பிக்கையில்

காலசர்ப்ப தோஷத்தில்
நீரூற்றி பாலூற்றி முட்டையிட்டு..

டிஸ்கி:- 28 மே., 2011 பூவரசியில் தேனுகவிதைகள் என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது. நன்றி பூவரசி.:)

வெள்ளி, 8 ஜூலை, 2011

குழந்தைமை.....




குழந்தைமை..
**********************

”வ வா . வெ. வில் பாடு.. “..

“வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாய்ங்களா..”..

புறநகர் செல்லும் மின்சார ரயிலில் குட்டியாய் நாலு பெண்கள்..



இந்த ஜன்னலில் இரண்டு .. அந்த ஜன்னலில் இரண்டு..

”பாட்டுக்குப் பாட்டு..” பாடிக்கொண்டு..

அம்மாக்களும் குழந்தைகளுமாய் ஏதோ திருமணம் முடிந்து திரும்பிக் கொண்டிருக்க வேண்டும்..

”காட்டாம வந்திருக்கு.. டா வில் பாடு ..” என ஒரு அனார்கலி சுடிதார் போட்ட பெண் சொல்லியது.. துப்பட்டாவை தலையைச் சுற்றி வளைப்பதும்., கழுத்தைச் சுற்றி இழுப்பதுமாய் ஒரே குறும்பு.. இந்த ஜன்னலில் இருந்த இன்னொரு பெண்ணிடம் கேட்டது..

இந்தப் பக்கம் காக்ரா சோளி அணிந்த குழந்தை ஒன்று டாடி என்று அப்பாவையும் அம்மாவையும் காட்டியது..

உடனே ,” டாடி மம்மி வீட்டில் இல்லை.. விளையாட யாரும் இல்லை..” என அனார்கலி சூடிதார் போட்ட பெண் பாடியதும் அதன் அம்மா பட்டென்று வாயில் அடித்தாள்..

” என்ன பாட்டு பாடுறே நீயி ..” என்று.

அதுவரை கலகலப்பாக போய்க் கொண்டிருந்த இடம் இறுக்கமானது.. எல்லாம் ஒன்றை ஒன்று பயத்துடன் பார்த்தன.. அடிவாங்கிய பெண் அதிர்ந்தது .. ட்ரெயினில் எல்லாரையும் ஒரு முறை பார்த்தது.. கண்ணீர் தளும்பும் கண்களோடு குனிந்து துப்பட்டாவில் முகத்தை மூடி விசும்பியது..

எதிர் சீட்டில் இருந்த குழந்தை அதை ஆதரவாய் அதன் முதுகில் தட்டியது.. வயல்வெளிகளில் எக்ஸ்ப்ரஸ் வேகத்தில் ரயில் பாய்ந்து சென்று கொண்டிருந்தது.. எல்லாரும் அவரவர் இருக்கைகளில் எங்கோ பார்த்தபடி இருந்தார்கள்.. அடுத்த ஸ்டேஷன் வந்ததும் தள்ளியடித்து இறங்கினார்கள்.. முண்டியடித்து மக்கள் ஏறினார்கள்..

சிறிதுநேரம் கழித்து அடித்த பெண்ணின் அம்மா ஏதோ எடுத்து எல்லா குழந்தைகளுக்கும் தின்னக் கொடுத்தாள்.. அடி வாங்கிய குழந்தை வாங்க மறுத்து முகம் திருப்பி ஜன்னலில் இருளை வெறித்தது.. சரி போ என சொல்லி அவளே வாயில் போட்டுக் கொண்டாள்..

வருத்தம் கப்பிய முகத்தோடு திரும்ப குனிந்து கொண்டது குழந்தை..

தண்ணீர் குடித்து விட்டு திரும்ப குழந்தைகள் பாட ஆரம்பித்தார்கள்.. நாலைந்து பாட்டுக்கள் போய் இருக்கும்.. அடிவாங்கிய குழந்தையும் அழைத்தார்கள். மறுத்த அது சிறிது நேரத்தில் ஆவலாய் கவனிக்க ஆரம்பித்தது..

” த தா தீ யில் பாடு” என ஒன்று சொல்ல இது குறுக்கே புகுந்து “தீ தீ தீ.. ஜெகஜ்ஜோதி ஜோதி ஜோதி “ என பாடியது..

அதன் ஜிமிக்கிகளும் கண்ணீர் உறைந்து காய்ந்த கன்னங்களும் ட்ரெயினின் ஓட்டத்தில் விலகிச் சென்ற நியானில் பட்டு சிகப்பாய் ஜொலித்தது . அதன் அம்மா லேசாக குழந்தையின் கன்னத்தைப் பிடித்து கொஞ்சினாள். புடவையில் அதன் மூக்கை துடைத்தாள்.. அவள் கையில் குழந்தை சாய்ந்து கொண்டது..குழந்தைகள் எப்போதும் குழந்தைகள்தான்.. சட்டென்று மன்னிக்கவும் மறக்கவும் முடிகிறது அவர்களால்.

வீட்டுக்கு வந்த பின்.. தோசை ஊற்றி சாப்பிடலாம் என ஊற்ற ஆரம்பித்தபோது தன்னையறியாமல் .,”வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாய்ங்களா.. ”என பாடல் வாயில் வந்த போது குழந்தையானதாய் மெல்லிய புன்முறுவலும் பூத்துக் கிடந்தது..


டிஸ்கி:- இந்தக் கதை ஜனவரி 30., 2011 திண்ணையில் வெளிவந்துள்ளது.:)

வியாழன், 7 ஜூலை, 2011

அவர் பெயர் பழநி....

எங்காவது ஊருணியிலோ
கம்மாய்க் கரையிலோ
கண்டிருக்கலாம்,
கேள்விக்கு்றியாய் வளைந்து
கருத்து துவைக்கும் உருவத்தை..

வெளுத்து வெளுத்து
வெள்ளாவிப் பானையில்
வெந்தது போக..
உவர்மண்ணோடு உவர்மண்ணாய்
வெடித்த கைகளும் கால்களும்.

சமைந்த தீட்டெடுத்து
பூரம் கழிக்க நின்று
ஓலைக் கொட்டான்களில்
சோறும் பலகாரமும்..

நீல மாத்துக் கட்டி
பிள்ளைக்கு மாராயம் சொல்லி
சிகப்பு மாத்து விரித்து..

தலைமுறையெல்லாம்
தலையெடுத்தபோதும்
இவரின் கரங்களில்
வர்ணங்களை அலசும்
வர்ணமற்ற வாழ்வு..

கிணற்றடியில் உக்கார்ந்து
கற்றுக் கொண்டது
கொசுவிப் போட்டுக்
கொய்ய கொய்யத்
துவைக்கும் அழகும்
மடிப்பு மடிப்பாய்
பெட்டி போடும் நறுக்கும்..

ஆடிமாச குடிவண்ணார் கூலி
மாசக்கூலியாய் மாறிய பின்னும்
குடித்துக் குடல் கெடுத்து..

பஸ் பயணத்தில்.. காய்ந்த நதிகளில்
பட்டையாய் விரிந்து கண்பறிக்கும்
வெள்ளுடுப்புகளைப் பார்க்கும்போதெல்லாம்

பழநி அண்ணனின் வெள்ளை கண்ணுள் வர..
வறண்ட கம்மாய் ஊத்தாய் கசியும்
ரெண்டு சொட்டு கண்ணீர்..

(குறிப்பு. திருமணத்தில் நீல மாத்து கட்டுவார்கள். பிள்ளைப் பெற்றவுடன் தடுக்கில் நின்று நடு வீட்டில் மாராயம் சொல்லுவார்கள். இறப்பில் சிகப்பு மாத்து் விரிப்பார்கள்..

மாத்து- துணி
மாராயம் - அறிவித்தல்..)

டிஸ்கி:- இந்தக் கவிதை 2.15. 2011 கீற்றுவில் வெளிவந்துள்ளது. :)

புதன், 6 ஜூலை, 2011

சும்மா.. உங்கள எல்லாம் நினைச்சு கவிதை அருவி...:)

அன்புடன் மணிகண்டன்
அன்போடு உங்களை.

என் சிநேகிதனே
உன் செல்ல நாய்க்குட்டி நான்.

சைவக் கொத்துப் பரோட்டாவும்
கொத்துப் பரோட்டாவும்
சும்மா உண்டு.,

கொஞ்சம் வெட்டிப் பேச்சும் பேசும்
வெட்டிப் புள்ள நான்.

அகநாழிகையில்
கசிகிறது மௌனம்.

சிவாஜி சிறகுகளணிந்து
சுயம் தேடும் பறவை.

விடிவெள்ளியில்
வானம்பாடியாய்..
வெள்ளி நிலா.

நிலா அது வானத்தின் மேலே.
வண்ணத்துப் பூச்சியாய்.

கனவு பட்டறையில்
தமிழ் உதயம்.

பலா பட்டறையில்
ருத்ரனின் பார்வை

அது ஒரு கனாக் காலம்
வானம் வெளித்தபின்னும்.

காகித ஓடத்தில்
பரிசல்காரன்.
ரிஷபன்
ராகவன்
கோபால்

ஹுசைனம்மா
கடல்புறா

காதல் தோப்பில்
காட்சிப் பிழை

சிறிய பறவையின்
சிதறல்கள்.

நதியானவள்
நதியில் விழுந்த இலையாய்
நவீன விருட்சமாய்

சாமக் கோடங்கியின்
சமையல் அட்டகாசங்கள்

நினைவில் நின்றவை
பகோடா பேப்பர்கள்.

இது நம்ம ஏரியா
தமிழா தமிழா
திசை காட்டி
தினம் ஒரு பக்கம் எழுது
தமிழ் வாசி

நெஞ்சினிலே
பாட்டி சொல்லும் கதைகளும்
மனசிலே
பாமரன் பக்கங்களும்.

பித்தனின் வாக்கும்
பார்த்ததும் படித்ததும்
பின்னோக்கி
புதிய வார்ப்பு


தீதும் நன்றும் பிறர்தர வாரா
சக்தி கொடு
சங்கவி

சாதுமிரண்டால்
தமாசு

அமிர்தம் சூர்யா
சத்ரியனுடன்
அரும்பாவூரில்
வந்தே மாதரம்.

அது சரி
பழமைபேசியாய்
கல கலவென
என் எண்ணும் எழுத்தும்
சொல்லத்தான் நினைக்கிறேன்
கண்மணி.

ஒண்ணுமில்லை.. சும்மா
புதுகைத்தென்றல்

ஜூலைக் காற்றில்
கருவேலநிழலில்
செல்வா ஸ்பீக்கிங்

வசுமதியின் கருத்தோட்டங்கள்
தேன்கூடு

அட்ரா சக்க
ஜோக்கிரி
கும்மாச்சி

நான் ரசித்த சில
மூன்றாம் பிறை
மொழியும் நிலமும்.

நறும்புனலா
நீரோடையா
வலைச்சரமா நம் உறவு.

ஆரண்ய நிவாசத்தில்
தேவியர் இல்லம்

சாளரத்தில்
சந்தன முல்லை

வேடந்தாங்கலில்
கவிதை வீதி



அம்மையப்பனும்
புலவனும்
நேசனும்
வசந்தனும்
அகசூலாய்
ஜீவ ஒளியாய்
வீடு திரும்பி..

வலைமனையில்
தியாவின்பேனா

சந்த்ருவின் பக்கங்களில்
என்றும் வாசகன்
உண்மைத் தமிழன்.

புரட்சிப் பெண்
நெஞ்சினிலே
துளித்துளி
கவிதைகள்
.
என் கனவில் தென்பட்டது
அந்தமான் தமிழோசை

அம்மா அப்பா
அறிதலில் காதல்

இதயப் பூக்களை
அள்ளிவிட்டான்.

பனித்துளி
க- விதை

யவ்வனம் ஒரு
முத்துச்சரம்.
முத்துச் சிதறல்..

மயில் ராவணனின்
மனவிழி

பூங்குன்றனின்
மனவிலாசம்

மின்மினியின் சிந்தனைகள்
முனியப்பன் பக்கங்கள்

முகிலனின் பிதற்றல்கள்
மழைக்காலத் தவளைகள்

வேர்களைத் தேடி
வேலன்
வேல் கண்ணன்

ஸ்ரீவில்லிப் புத்தூரிலிருந்து
மௌனராகங்கள்

சும்மாவின் அம்மாவும்
சும்மாவின் மாமாவும்
எல்லாப் புகழும் இறைவனுக்கே

அன்புடன் ஆனந்தி.
அன்புடன் நான்.

டிஸ்கி :- விட்டுப் போனவுங்க சண்டைக்கு வராதீங்க மக்காஸ். அவசரமா இதை எழுதியதால் இருக்கும். அடுத்து எழுதும்போது சேர்த்துருவேன்..:)

செவ்வாய், 5 ஜூலை, 2011

எங்கே அது..?

எங்கே அது..?
*************************

கொஞ்சம் படபடப்பாய் இருந்தது..

இந்த நேரத்தில் .. என்ன செய்ய..

சீக்கிரம் சீக்கிரம் .. .. உடனடியாய் ..

எல்லாரும் நல்லா தூங்கிக் கொண்டிருக்க மெல்ல எழுந்தாள்..

சத்தம் கேட்டு கணவர் விழித்து விடாதிருக்க வேண்டும்..

பிள்ளைகள் இன்னொரு ரூமில்.. சத்தம் கேட்டு திடீரென்று எழுந்து வந்தால் அர்த்த ராத்திரியில் என்ன செய்கிறாய் என்று அனைவரும் கோபித்துக் கொள்வார்கள்..

திட்டு என்ன புதுசா.. நினைத்ததை நினைத்தவுடன் செய்து முடிக்க வேண்டும்..

எங்கே அது.. மறதி வந்தது போல் இருந்தது..

பூனை நடையில் சென்று மேஜையை துழாவினாள்..

சை.. அவசரத்துக்குக் கிடைக்காது..

இந்த மாதிரி சமயத்துக்காகவே எல்லா இடத்திலும் போட்டு வைப்பாள்..

எங்கே காணமல் போனது..

யார்தான் எடுப்பார்களோ..

சாமி ஷெல்ஃபின் விளக்கில் தென்பட்டது .. அட அது இல்லை..

டீப்பாயில் நிறைய பேப்பர்கள் இருந்தது.. அதன் பக்கம் இருக்கலாம்.

அப்பாடா .. ஒன்று கிடைத்து விட்டது..

அடச் சே.. என்ன இது ஒன்றுமில்லாமல் காலியாய் இருக்கு..


அடடா .. கிச்சன் லைட்டை போடாமல் வேலை ஆகாதோ..

எல்லா பெட்ரூமின் கதவையும் சாத்தியபின் கிச்சன் லைட்டை போட்டாள்..

அப்பாடா கிடைத்து விட்டது மளிகை லிஸ்ட் எழுத வைத்திருந்த இன்னொன்று..


விருவிருவென்று டேபிள் பக்கம் வந்து பேப்பரில் எழுதத் துவங்கினாள்..

தூக்கம் வராமல் மனதில் சிக்கிக் கொண்டிருந்த கவிதையை..

” ஆதி மூர்க்கம் விலா கொய்து செய்த பாதிமூர்க்கம் நான்.. “

மூச்சு சந்தோஷமாய் வெளிவந்தது..

அட ஆரம்பமே நல்லா வருது.. என்று முத்தம் கொடுத்தாள் பால்பாயிண்ட் பேனாவுக்கு..

டிஸ்கி ;- இந்தச் சிறுகதை ஜனவரி 17., 2011 திண்ணையில் வெளிவந்துள்ளது. :))

திங்கள், 4 ஜூலை, 2011

வாக்குமூல மொழி...

வாக்கு மூல மொழி..
****************************

யார் மொழிய
நினைத்ததெல்லாம்
நீ மொழிந்தாய்..?

நீ மொழிய
நினைத்ததை
யார் மொழிவார்..?

மொழிவதெல்லாம்
உன் மொழிதானா
அறிய விருப்பம்..

நதிமூலம் ரிஷிமூலமாய்
உன் மொழிமூலம்
வாக்கு மூலம்
வாய் மொழியாய்..

அறியத்தராமலே
வழக்கொழிந்த
மொழியாகிப் போனாயே..


டிஸ்கி:- இந்தக் கவிதை 21 ., பிஃப்ரவரி ., 2011 உயிரோசையில் வெளிவந்துள்ளது. :)

சனி, 2 ஜூலை, 2011

கிரஹலெக்ஷ்மி பெண்கள் சுய உதவிக் குழு.





சென்னையில் இருக்கும் ஒரு சுய உதவிக் குழுவை ஷேர் ஆட்டோவில் செல்லும் போது சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. கிட்டத்தட்ட 11 பேர் இருந்தார்கள்..ஒரே மாதிரி டிசைன்., கலர் உள்ள புடவை உடுத்தி இருந்தார்கள் அவர்களின் முக மலர்ச்சியும் பேச்சும் மிக அழகாக இருந்தது. அவர்களிடம் பேச்சு கொடுத்த போது தங்கள் மாதாந்திரக் கூட்டத்துக்காக செல்வதாக சொன்னார்கள்..

மாம்பலத்தில் இருக்கும் அவர்கள் மாதம் ஒரு முறை தி. நகரில் சந்திக்கிறார்கள். இந்தக் குழுவின் பெயர் கிரஹலெட்சுமி., இதன் தலைவி பெயர் ப்ரியா. கிட்டத்தட்ட 20 பேர் சேர்ந்து ஆரம்பித்த குழு இது. தற்போது 14 பேர் இருக்கிறார்கள். மார்ச் 2009 இல் ஆரம்பிக்கப்பட்ட குழு இது

இவர்களின் NGO வின் பெயர் சரஸ்வதி . இவர்தான் இவர்கள் தொழில் செய்ய உதவியவர். வெஸ்ட்னோரா என்ற அமைப்பு மூலம் வங்கியில் அக்கவுண்ட் ஓபன் செய்து 4 மாதத்தில் லோன் கிடைக்கப் பெற்றது.

கவர்ன்மெண்ட் மூலம் இல்லை. இது தனிப்பட்ட முறையில் உருவான குழு. இப்போது கவர்ன்மெண்ட் அப்ரூவலுக்காக காத்து இருக்கிறார்கள். சுமார் ஒரு லட்சம் லோன் வாங்கி கட்டி முடித்து தற்போது இரண்டாவது முறையாக லோன் வாங்கப் போகிறார்கள்.

மாதம் 100 ரூபாய் வீதம் எல்லா மெம்பரும் பாங்கில் சேவிங்க்ஸ் அக்கவுண்டில் கட்டி வருகிறார்கள். 4 மாதம் 5 மாதம் ஆனவுடன் ஒரு லட்சம் லோன் சாங்ஷன் ஆனது. 20 பேரும் ஆளுக்கு 5000 வீதம் பிரித்து எடுத்து அவரவரும் ஒர் தொழிலில் முதலீடு செய்து தற்போது லோனை கட்டி முடிக்கப் போகிறார்கள்..

பொதுவாக பூவியாபாரம்., பழம்., ஊதுபத்தி., வடகம்., வத்தல் போட்டு விற்றல்., மளிகைக் கடை., புடவை வியாபாரம் கேட்டரிங்., தையலை தைத்து விற்றல்., ஆகிய தொழில்களில் ஈடுபட்டு இருக்கிறார்கள். 5000 ரூபாய்க்குள் என்ன வியாபாரம் செய்ய முடியுமோ அதில் முதலீடு செய்து அதில் வரும் வருமானத்தில் வீட்டு செலவுக்கும் ஈடு கொடுத்து வட்டி அசலும் கட்டி வருகிறார்கள்.


ஐஓபி யில் இரண்டு பேர் பேரில் அக்கவுண்ட் ஓபன் செய்து அதில் பிரதி மாதம் 10 ஆம் தேதி வட்டியும் அசலும் சேர்த்து கட்டி வருகிறார்கள்.

மாதம் 8,827 ரூபாய் கட்ட வேண்டும் . தற்போது 14 மெம்பர்கள் இருப்பதால் ( மற்றவர்கள் தொடர முடியாமல் விலகி சென்று விட்டார்கள் ). ரூபாய் 445 வீதம் 12 மாதம் 2 % வட்டியில் திரும்பிக் கட்டி வருகிறார்கள்.


குழுவாய் இருப்பதால் வங்கியில் லோன் கிடைக்கிறது. தமது பணத்தையும் கொஞ்சம் மாதம் சேர்த்தபின்னேதான் பணம் கிடைக்கிறது, குழுவாய் இருப்பதால் திரும்பக் கட்டுவதும் ஈஸியாய் இருக்கிறது. வெளியே வாங்கினால் 10 பைசா வட்டி. அதனால் பெண்கள் சுய உதவிக் குழுவில் பணம் வங்கியில் கடன் வாங்கி் தொழில் செய்தால்., குடும்பத்துக்கு., அவசரதேவைகளுக்கும்., வியாபாரத்துக்கும்., சில சமயம் குழந்தைகள் படிப்பு செலவுக்கும் உதவியாக இருப்பதால் வங்கியில் வாங்கும் பணத்தை பெண்கள் பொறுப்பெடுத்து திரும்பக் கட்டி விடுகிறார்கள். சுய உதவிக் குழுக்கள் இவ்வாறு சரியாக செயல்படுவதால் வங்கிகளும் அவர்களுக்கு லோனாக பணத்தை வழங்குகின்றன.

கவர்மெண்டில் கிடைக்கும் மானிய சலுகைக்காக கவர்ன்மெண்டுக்கு அப்ளை செய்து உள்ளார்கள்.

இவர்களே மாதம் ஒரு குறிப்பிட்ட தொகை சேமிப்பதால் (சுமார் 100 ரூபாய் ஒரு மெம்பர் ) அதுவே இப்போது 29,000 ரூபாயாக உள்ளது. அதையே மெம்பர்களுக்கும் உள் கடனாக வழங்குகிறார்கள். அதில் 2, 000., 3, 000 கடன் வாங்கி மாதம் 400 அல்லது 500 ரூபாய் வீதம் 5., 6 மாதங்களில் திரும்பச் செலுத்தி விடுகிறார்கள்.. இது அவசரத்தேவைகளுக்கு உதவுகிறது.

தொழிலில் இன்னும் அதிகம் இன்வெஸ்ட் செய்ய., உடல் நலமில்லாவிட்டால்., குழந்தைகள் படிப்பு செலவு., அல்லது வீட்டில் ஒரு நல்ல காரியத்துக்கு., இந்தப் பணம் உதவுகிறது. மெம்பர்கள் தங்கள் சேமிப்பு என்பதால் கரெக்டாக திரும்ப செலுத்தி விடுகிறார்கள்.

அடுத்த லோன் ரூபாய் 2 லட்சத்துக்காக அப்ளை செய்து உள்ளார்கள். சாங்ஷன் ஆனால்இன்னும் அதிகத்தொகையில் தொழிலை விரிவு படுத்தும் எண்ணத்தோடு இருக்கிறார்கள்.

பெண்கள் தங்கள் சுய தேவைகளையும் வீட்டுத்தேவைகளையும் அடுத்தவர் கையை எதிர்பார்க்காமல் உழைத்து பணம் சம்பாதித்து தன் குடும்பத்தையும் குழந்தைகளின் செலவுகளையும் கவனித்துக் கொள்வதால் தன்னிறைவான புன்னகையோடு காணப்படுகிறார்கள்..

மாதம் ஒரு முறை ஒரு இடத்தில் கூடி கணக்கு வழக்குகளை பார்க்கிறார்கள். பணம் கட்ட வேண்டியவர்கள் கட்டுகிறார்கள் .

இவர்களை ஒருங்கிணைத்தவர் NGO சரஸ்வதி மேடம் என பெருமையும் சந்தோஷமும் பொங்க சொன்னார் இந்தக் குழுவின் தலைவி பிரியா. கிட்டத்தட்ட 30 குழுக்களின் ஒருங்கிணைப்பளராக இருக்கிறார் சரஸ்வதி. இப்படி ஒருங்கிணைப்பளரின் கண்காணிப்பிலேயே வங்கி உதவிகளும் லோன்களும் வழங்கப் பெறுகின்றன. ”சரஸ்வதி மாமிக்கு இரண்டு பையன்கள். மிக வசதியானவர்கள் எங்களுக்கு உதவி செய்யணும்னு தேவை இல்ல.. ஆனா ஒரு சமூக சேவையா இதை செய்து வர்றாங்க.,” என சந்தோஷமும் நன்றியும் பொங்க சொன்னார் கிரஹலெட்சுமியின் தலைவி பிரியா..

NGO ப்ரோகிராமில் மகளிர் தினத்தன்று நேரு உள் விளையாட்டு அரங்கில் மு.க.ஸ்டாலின் கையால் முதல் லோன் வழங்கப்பட்டதாம். இந்தக் குழு தனியாக உருவாகி லோன் அப்ளை செய்துள்ளார்கள். ஆனால் அது ஸ்டாலின் மூலமாக வழங்கப் பட்டது ஆனால் இதற்கும் அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என பிரியா சொன்னார்.

கிரஹலெக்ஷ்மிகள் இன்னும் உயர்ந்து தங்கள் குடும்பத்தையும் உயர்த்த வாழ்த்தி விடைபெற்றோம்..

டிஸ்கி:- இந்தக் கட்டுரை ஜூன் 2011 இவள் புதியவள் இதழில் வாழ்க்கை வசப்பட உழைப்பே மூலதனம் என்ற தலைப்பில் கோதை என்ற பெயரில் ( படம் : ஹனி) வெளியாகியுள்ளது.

வெள்ளி, 1 ஜூலை, 2011

பெண் ஆட்டோ ஓட்டுநர் இன்று சிஐடியூவின் மாநிலக்குழு உறுப்பினர். போராடி ஜெயித்த பெண்கள். (10)

ஒரு சாதாரண குடும்பத்தலைவியாய் ப்ளஸ்டூ படித்துவிட்டுப் பின் ஆட்டோ ஓட்டும் ஒரு பெண் இன்று CITU வின் மாநிலக்குழு உறுப்பினர். வேறு பெண் ஆட்டோ ஓட்டுனர்களும் உள்ள சங்கத்தில் எப்படி அடைய முடிந்தது இந்த உயரம்.? அவரையே கேட்டோம்.. சென்னை கே கே நகரில் ஐயப்பன் கோயிலருகில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டை சேர்ந்த பெண் ஆட்டோ ஓட்டுனர் சாந்தி. 46 வயதான இவர் எம் ஜி ஆர் நகரைச் சேர்ந்தவர்.

தந்தை பெயர் ஆறுமுகம்., தாய் பெயர் சியாமளா.. ஒரு தம்பி மற்றும் தங்கை உண்டு.. பூர்வீகம் சிதம்பரம் என்றாலும் இவர்கள் மூவரும் பிறந்தது சென்னை எக்மோர் மெடர்னிடி ஹாஸ்பிட்டல். அப்பாவுக்கு நூல் வியாபாரம். வியாபாரம் நன்கு செழித்த வரை கான்வென்டில் (சித்ரா நர்சரி ஸ்கூல்) படித்த இவர் மூன்றாம் வகுப்பில் ஃபீஸ் கட்ட வசதி இல்லாமல் நெசப்பாக்கம் கவர்ன்மெண்ட் ஸ்கூலில் 5 வது வரையும்., விருகம்பாக்கம் அரசுப்பள்ளியில் பத்தாவது வரையும்., பில்லர் பெண்கள் ஹைஸ்கூலில் ப்ளஸ் டூ வரையும் படித்திருக்கிறார்.

டைப்ரைட்டிங் இங்கிலீஷ்., தமிழ் இரண்டிலும் லோயர் ., ஹையர் இரண்டிலும் பாஸ் செய்திருக்கிறார். ஷார்ட் ஹேண்டில் லோயர் படித்து பாதியில் நிறுத்தியதால் எக்ஸாம் எழுத முடியவில்லை.

பேப்பர் விளம்பரம் பார்த்து ஸ்லம் கிளியரன்ஸ் போர்டு( குடிசை மாற்று வாரியம்) மூலம் டேட்டா எண்ட்ரி ஆபரேஷன் கோர்ஸ் பயிற்சி பெற்றார். 1985 இல் ஸ்டைஃபண்ட் கொடுத்து இரண்டு மாதம் பயிற்சியும் கிடைத்தது .

தி நகர் விவேக் அண்ட் கோவில் இண்டர்வியூவில் தேர்ச்சி பெற்று வேலைக்கு சேர்ந்தார் . 600 ரூபாய் சம்பளம். மெயின் கவுண்டரில் அரை செகண்டுக்கு ஒரு முறை காஷ் பில்லிங் செக்‌ஷனில் பரபரப்பாய் வேலை இருக்கும். 6 மாதத்துக்கு பிறகு வெளியே வந்து இன்னொரு கம்பெனியில் சேல்ஸ் ரெப்பாக வேலை. ஹால்மார்க் காப்பர் பாட்டம் பாத்திரங்களுக்கு கம்பெனியின் டெமான்ஸ்டரேட்டராக பணி., வி ஜி பி., திருநின்றவூர் என பல ஷோரூம்களில் பொருளை டெமான்ஸ்ட்ரேட் செய்ய வேண்டும்.

அப்போது தயாளனை பார்த்து காதல் மலர திருமணம் செய்து கொண்டனர் பெற்றோர் ஆசீர்வாதத்தோடு. அவர் டர்னராக இருக்கிறார். ITA வில் முதல் வகுப்பில் தேறியவர். ஈக்காடுதாங்கலில் ப்ரைவேட் கம்பெனியில் வேலை செய்கிறார். ஒரு பெண் ஒரு பையன் . பெண் பிளஸ்டூ படிக்கிறாள்

MEPZ ( MADRAS EXPORTS PROCESSING ZONE) இல் சூபர்வைசராக வேலை பார்த்தபோது யூனியன் ஸ்ட்ரைக்கினால் கம்பெனி இழுத்து மூடப்பட்டது.அடுத்து பல்லாவரம் எக்ஸ்போர்ட் கம்பெனியில் வேலை செய்த போது ரெண்டாவது குழந்தை ( பையன் ) பிறந்தான்.

ஒருவர் வருமானம் போதாத சூழலில் 98 இல் ஒரு வேலைக்குச் செல்லும் பெண் தன் பிள்ளைகளை தன்னுடைய (டூவீலர்) வண்டியில் அப்புசாலி தெருவில் இருந்து ஜிஆர்டி பள்ளியில் விடுமாறும் பெட்ரோல் போட்டு சம்பளம் தந்து விடுவதாக கூறியதும் வாழ்வில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது..

இதேபோல் நிறைய பேர் பெண்கள் ஆட்டோ ஓட்டுகிறார்களே.. நீயும் ஓட்டலாம் என அனைவரும் கூற தன் தம்பியின் நண்பன் முருகனின் உதவியுடன் ஆட்டோ ஓட்ட லைசன்ஸுக்கு அப்ளை செய்தார். பப்ளிக் சர்வீஸ் வெஹிக்கிள் என்பதால் பாட்ஜ் வேண்டும். எனவே ட்ரைவிங்க் ஸ்கூலில் சேர்ந்து கார் ஓட்டப் பயிற்சி எடுத்துக் கொண்டார். 2003 இல் ஆட்டோ பாட்ஜ் வாங்கினார்.

ஆட்டோ வாங்க TIC., THATCO., PMRY. (PRIME MINISTER ROZKAR YOJANA ) ., போன்ற அரசு நிறுவனங்கள் லோன் வழங்குகின்றன. இதில் TIC ஸ்டேட் கவர்ன்மெண்ட் நிறுவனம்., THATCO எஸ்சி எஸ்டிக்கு மட்டுமே லோன் வழங்கும் நிறுவனம்., PMRY பிரதம மந்திரியின் வேலைவாய்ப்புத்திட்ட நிறுவனம்.

ஆட்டோவுக்கான ப்ரொஸீடிங் ஆர்டர் வந்தால்தான் ஆட்டோவுக்கு லோன் சாங்ஷன் செய்ய முடியும் என TIC சொல்லிவிட., தாட்கோ எஸ்சி எஸ்டிக்கு மட்டும்தான் லோன் கொடுப்போம் என சொல்ல பின்பு ப்ரைமினிஸ்டர் ரோஜ்கார் யோஜனா மூலம் ஃபார்ம் பில்லப் செய்து நோட்டரி பப்ளிக் மூலம் அஃபிடவிட் வாங்கி., ஆட்டோ கொட்டேஷன் எல்லாம் வைத்து அனுப்பினார்.

200 ஆட்டோவுக்குத்தான் PMRY இல் அனுமதி உண்டு எனவே பர்மிட் இல்லாத வண்டி லோட் ஆட்டோ கொட்டேஷனுக்கு பாங்க் மேனேஜர் மூலம் அனுமதி வாங்கி ப்ரோசீடிங் ஆர்டர் இல்லாமல் ஃபார்வேர்டு செய்து டிடி ரெடி ஆகிவிட்டது.

ஜாயிண்ட் ட்ரான்ஸ்போர்ட் கமிஷனர் அவர்களுக்கு தனி விங் ஆர்டி ஓ ஆஃபீசில் இயங்கி வந்தது .அதில் ரீஜனல் ஜாயிண்ட் டைரக்டரைப் பார்க்க லெட்டர் கொடுத்து விட்டார்.. சாந்தியிடம் ஒரு பழக்கம் .. வேலை செய்யும் அலுவலர்களைப் பார்ப்பதில்லை.. மேலதிகாரிகளை நேரடியாக சந்தித்து தன் கோரிக்கைகளை எப்போதும் முன் வைப்பார்.. அது எளிதில் கிடைத்துவிடும். பத்துப் பைசா லஞ்சம் கொடுக்காமல் இந்த ஆட்டோவிற்கான அனைத்து வேலைகளையும் செய்துள்ளார்.. அப்போது ஆட்டோவிற்கான ஓட்டுனர் உரிமம் பெறவே வெளி மார்க்கெட்டில் 70,000., 80,000 கட்ட வேண்டிய நிலை. 2004 ஆம் ஆண்டு இறுதி ஓட்டுனர் உரிமம் எல்லாம் எண்ட் பர்மிட் க்ளோஸ் பண்ண நிலைமை. இதுக்காக எக்ஸ்ட்ரா பெர்மிட்., ஸ்பெஷல் பர்மிட் இஷ்யூ ஆச்சு.

2005 ஜனவரி 10ஆம் தேதி லக்ஷ்மிஆட்டோ மொபைல்ஸில் வங்கி செக் கொடுத்து ( 87,550 ரூபாய்) வங்கி 75,000 ரூபாயும் நம் முன் பணம் 15 ஆயிரமும் சேர்த்து செக்காகத்தான் கொடுக்கும் .அதைக் கொடுத்து புது வண்டி வாங்கியாயிற்று..

புது வண்டி என்றால் எலும்புக் கூடுமாதிரிதான் இருக்கும். எல்லா பகுதிகளையும் வாங்கி நாம்தான் அசம்பிள் செய்து கொள்ள வேண்டும். மிச்சம் எல்லாம் சேர்த்து 1 லட்ச ரூபாய் செலவு செய்து தனித்தனி மெக்கானிக் ஷெட்டுகளில் சேர்த்து., டாப் அடித்து., டிங்கரிங் செய்து ., பெயிண்ட் அடித்து தனித்தனி லேபர் செலவு. பின்பு நம்பருக்கு தனியாய் ஆர்டிசி ஆஃபீஸ் சென்று லெட்டர் ஆர்ட்ஸ் செய்து கொண்டார்.

தம்பியின் நண்பர் முருகன்தான் தன் சொந்த சகோதரிபோல் எல்லா இடத்துக்கும் துணை வந்து எல்லாம் செய்து கொடுத்தது, இன்றும் மதிப்பும் மரியாதையும் கொண்டு பழகும் சகோதரர்களில் அவர் முக்கியமானவர். 4 மாதம் வெளி ஆட்களிடம் வாடகைக்கு ஓட்டக் கொடுத்து (உரிமையாளருக்கு தினம் 100 ரூபாய் கொடுத்து விடவேண்டும் ) வண்டி சரியில்லாமல் போனதால் இவரே தொடர்ந்து ஓட்ட ஆரம்பித்து விட்டார்.

இரண்டு நாள் கணவர் துணையுடன் இரவில் 11 மணிக்கு மேல் ஓட்டிப் பார்த்தது பின் இப்போது தி நகர்., ராமாவரம்., அஷோக் நகர்., சாஸ்திரி பவன்., என எல்லா இடமும் ஓட்டுகிறார். அப்போது யூனியனில் இருந்தவர்கள் நண்பர்களானார்கள்.. அதனால் இன்சூரன்ஸ்., ஊழியர் நல வாரியம்., எல்லாவற்றிலும் அடிப்படை உறுப்பினராக சேர்ந்து உறுப்பினர் கார்டு வாங்கினார். ஆட்டோ சங்கத்தில் அடிப்படை உறுப்பினரானார்.

இப்போது தென்சென்னை ஆட்டோ சம்மேளனத்தின் தமிழ்நாடு ஆட்டோ சம்மேளனக் குழு உறுப்பினர். தென்சென்னையில் மட்டும் 10000 பேர் உறுப்பினர் இருக்கிறார்கள்.

முதலில் 2006 இல் திருவன்மியூரில் நடந்த மாவட்ட மாநாட்டில் துணைச் செயலாளர் ஆனார். அப்போதுதான் முதன் முதலில் மாவட்ட நிர்வாகி ஆகிறார். 2008., 2011 இல் மாவட்ட துணைத்தலைவர். 2008 இல் திண்டுக்கல்லில் நடைபெற்ற ஆட்டோ சங்க மாநில மாநாட்டில் சம்மேளனக் குழு உறுப்பினராக சேர்ந்து செயல்பட்டார். 2010 ஜனவரியில் CITU மாநில மாநாட்டில் கடலூரில் இவர் மாநிலக் குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சி ஐ டி யு ( இந்திய தொழிற்சங்கம்) என்பது கிட்டத்தட்ட 70 ., 80 சங்கங்களை உள்ளடக்கியது., ஆட்டோ., கட்டுமானம்., சலவை., துறைமுகம் ., போக்குவரத்து என. சி ஐ டி யூ என்பது இடதுசாரிகள் வழிகாட்டுதலில் நடக்கும் சங்கம். தோழர் ., காமரேட் என ஒருவரை ஒருவர் அழைத்துக் கொள்ளும் பண்பு இந்த தொழிற்சங்கத்தில் முக்கியம்.

சி ஐ டி யூ மாநிலக் குழு உறுப்பினர் என்பதால் பொது இடங்களில் ஏதும் இடையூறு ஏற்பட்டால் மொத்தப் பேரும் திரண்டு விடுவார்கள். 4 மாதத்துக்கு ஒரு முறை சி ஐ டி யூ கூடும் போது அதில் இவர் கலந்து கொள்வார்.

8 மணி நேர வேலை., 8 மணி நேர ஓய்வு., 8 மணி நேர உறக்கம் .. இதுவே சி ஐ டி யூ வலியுறுத்தும் தாரக மந்திரம். இப்படி ஒரு சாதாரண குடும்பத்தலைவியாக இருந்து அனைத்து விஷயங்களிலும் பொறுப்பெடுத்து செயல்பட்டதால் பெண் ஆட்டோ ஓட்டுநர்களிலேயே இவர் இவ்வளவு உயரத்தை எட்ட முடிந்தது. போராட்டம் என்பது வெற்றிக்கனியை அடையத்தானே.. வாழ்த்துவோம் சாந்தியை அவர் தன்னம்பிக்கைக்கும் அவர் பெற்றுள்ள பதவிகளுக்கும்.

டிஸ்கி:- இந்தக் கட்டுரை 2011 மே மாத லேடீஸ் ஸ்பெஷலில் போராடி ஜெயித்த பெண்கள் என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது.