ஞாயிறு, 30 ஜனவரி, 2011

மீனோடு மீனாக..

நாளோ ., வாரமோ
மீன் தேடி தனியாய்
தூண்டில் வலையும்
சுக்கானும் பிடித்து..

மோட்டாரில் சென்றாலும்
மீன்தான்.. பிடிக்கிறோம்

வரைந்து வைக்கா
எல்லைகோட்டை
தாண்டினோமா
வழி தப்பினோமா

கடலும் குடிசையும்
கரைகாணா சொத்து

அலைகளாய்..
திரும்ப திரும்ப..
கரையேறத் தவித்து
முடியாமல் மூழ்கி..

மனிதர்தானா நாங்களும்
மதிப்பிருக்கா எங்கள் உயிர்க்கும்..

மீன் சுட்டோம்
உங்கள் உணவுக்காய்..
மீனோடு மீனாய் சுடப்படவா
மீண்டும் பிறந்தோம்

தமிழன்தான் நாங்களும்
தமிழர்களே கரம்கோர்ப்பீர்.

குறிப்பு..:-இந்த மனுக்கடிதம் நாட்டின் பிரதமருக்கு..

சனி, 29 ஜனவரி, 2011

கண்ணைக் காப்பாற்றுங்கள்.. ஒரு விழிப்புணர்வு.. டாக்டர் காயத்ரிஸ்ரீகாந்த்..



எண் சாண் உடம்புக்கும் சிரசே பிரதானம் என்பதறிவோம். அதிலும் கண்களே ஒருவர் மற்றவருடன் தொடர்பு கொள்ளும் முக்கிய கருவியாய் இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் கண்ணைக் கண்போல பார்த்துக்கிட்டாதான் யாரையும் டிபெண்ட் பண்ணாம இருக்கலாம்.


சென்னை டி. நகர் துரைசாமி மருத்துவமனையின் கண் அறுவை சிகிச்சை மருத்துவர் (கிட்டத்தட்ட 25,000 பள்ளிக் குழந்தைகளுக்கு பார்வைக் குறைபாடு இருப்பதை இலவச கண் சிகிச்சை முகாம் மூலம் கண்டுபிடித்திருக்கிறார். சென்னையில் FEMTOLASER எனப்படும் BLADELESS அறுவை சிகிச்சை செய்யும் ஒரே பெண் மருத்துவர் இவர். ) திருமதி காயத்ரி ஸ்ரீகாந்த்.. அவர்களிடம் நம் லேடீஸ் ஸ்பெஷல் வாசகியருக்காக கண் பற்றி விழிப்புணர்வுத் தகவல்கள் தந்துதவச் சொல்லிக் கேட்டோம்.


கண் என்பது காமிரா மாதிரி. அதில் ஒரு படம் எடுப்பது போல் பார்க்கிற காட்சிகள் எல்லாம் பதியுது. அதை ப்ராசஸ் பண்ணி எடுப்பது மூளை.. கண் = காமிரா. விழித்திரை ( ரெட்டினா) = படம். மூளை = ப்ராஸசர். இந்த மூன்றில் எது பாதிச்சாலும் கண் ப்ரச்சனைதான். கண்ணில் வரக்கூடிய கோளாறுகளை பிறந்த போது ., பள்ளி செல்லும் பருவம்., அடலசண்ட் பருவம்., 40 வயதுக்கு மேல் என 4 வகையா பிரிக்கலாம்.


1. பிறந்தபோது பொதுவா என்ன பிரச்சனைன்னா கருட பார்வை. , மாறுகண் போன்றவை அதிர்ஷ்டம் என்று இருக்காமல் ஆபரேஷன் செய்து சரி செய்யணும். பிறந்து 2 வாரத்தில் கூட அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கு.


2. பள்ளி செல்லும் பருவம். இப்போ என்ன பிரச்சனைன்னா கிட்டப்பார்வை., தலைவலி., ப்ளாக்போர்டுல என்ன எழுதுறாங்கன்னு சரியா தெரியாம இருக்குறது. சில பசங்க அதுனால டல்லா இருக்கும். சோர்ந்து போய் படுத்துக்கும். சிலது ரொம்பக் குறும்பா இருக்கும். தலைவலின்னா கண்ணுதான் ரெஸ்பான்ஸுன்னு நினைச்சுக்குவாங்க.. காது., மூக்கு., தொண்டை., ப்ரெயின் கூட ப்ரச்சனை இருக்கலாம். ஸ்கூலில் அடிபடுதல்., கிரிக்கெட் பால்., டென்னிஸ் பால்., பென்சில்., இதுல அடிபடுறது அல்லது குத்திக் கொள்வது. , இதுனால கருவிழி (கார்னியா) பாதிக்கும்.


3. அடலஸண்ட் ஏஜில் அதிகமா கம்ப்யூட்டர் ., டி.வி பார்ப்பது காரணம். கண்ணில் தண்ணீர் வந்தா பார்க்கணும். போஸ்சர் கரெக்டா உக்கார்ந்துதான் படிக்கணும். படிக்கும் டேபிள் பின்னாடி லைட் இருக்கணும். விளையாடும்போது sports gargles போடுவது நல்லது. 90% இந்த ப்ரச்சனையை சால்வ் செய்துவிடலாம். யங் அடல்ட்ஸ் காரட்., கீரை மட்டுமல்ல., பாலன்ஸ்ட் டயட் சாப்பிடணும். நல்லா தூங்கணும்., கண்ணுக்கு போதிய ஓய்வு கொடுக்கணும். Heriditary யினால் கூட கண் கோளாறு வரலாம். முன்னோர்கள் யாருக்காவது இருந்திருக்கும். சரியான வேலை., சரியான சாப்பாடு., சரியான ஓய்வு முக்கியம்.


40 வயதுக்குப் பிறகு வருடம் ஒரு முறை கண் பரிசோதனை அவசியம்., சுகர் ., பி. பி. போல.. 40 இல் வரும் பிரச்சனைகள்..


1. வெள்ளெழுத்து எனப்படும் சாளேஸ்வரம். PRESBYOPIA.


2. GLAUCOMA எனப்படும் கண் நீர் அழுத்த நோய். உடலில் ரத்த அழுத்தமிருப்பது போல் கண்ணிலும் ஏற்படும் அழுத்தம் இது. பார்க்காவிட்டால் திடீர்னு நாள் கண்ணே தெரியாம போய்விடும்.


3. CATARACT எனப்படும் புரை., தலைமுடி., தோல் சுருங்குவது., போல் கண்ணில் லென்ஸ் என்னும் உறுப்பு வெள்ளையா சுருங்கின தோல் மாதிரி ஆகிடும். நாளாக ஆக அடர்த்தி அதிகமாகி அருவி வழி பார்ப்பது போல் இருக்கும்.



எல்லாவற்றிற்கும் குணமாக்கும் வழி இருக்கிறது. வயசானா ARMD .. AGE RELATED MACULAR DEGENERATION எனப்படும் கண் கொழுப்புக் கட்டிகள் ஏற்படலாம். அதுக்கும் ட்ரீட்மெண்ட் இருக்கு . எக்ஸ்பென்ஸிவ்தான். இதுக்கு லேசர் பண்ணலாம். ஊசி போடலாம். ஆனா வருடா வருடம் செக்கப் செய்து கொண்டால் தடுக்கலாம்.



லேசர் சிகிச்சை தூரப் பார்வைக் கோளாறுக்கு உண்டு. சாளேஸ்வரத்துக்கு லேசர் சிகிச்சை இல்லை. புரை அறுவை சிகிச்சை., (PHACO) .. , விழித்திரைப் பிரச்சனைகளுக்கு (சர்க்கரை நோய் ) ARMD ., விழித்திரை நீர் கோர்த்தல்., விழித்திரை கிழிதல் (RETINAL DETACHMENT) ., லேசர் சிகிச்சை செய்யலாம். விழித்திரையின் திக்னெஸ் அறுவை சிகிச்சை தாங்கும் அளவு இல்லாவிட்டாலும் அறுவை சிகிச்சை செய்ய இயலாது. கண்ணாடி அல்லது காண்டாக்ட் லென்ஸ் அணிய வேண்டும்.



கண்ணில் வரக்கூடிய மற்ற பிரச்சனைகள் மெட்ராஸ் ஐ எனப்படும் CONJUCTIVITIES. இது வைரஸ் தொற்று. 99.99% தானாகவே சரி ஆகிவிடும். சுத்தமான துணியை வைத்து துடைத்தாலே போதும்.



கருவிழி அல்சர் .. இது மெட்ராஸ் ஐ மாதிரியே கண் சிவக்கும். ஆனால் பார்க்காமல் விட்டால் பார்வை பறிபோய்விடும்.


சர்க்கரை நோய் இருந்தால் ரெட்டினோபதி எனக்கூடிய கண் பிரச்சனை ஏற்படும். விழித்திரையில் கண்களில் அடிக்கடி நீர் கோர்த்தல்., அல்சர்., புரை., இரத்தம் கசிதல்., அடிபடுதல்., விழித்திரை நனைந்து போதல்., இதெல்லாம் உடனடி்யா பார்க்கணும்.



கண்ணில் POLLUTION., DUST., ALLERGY., (TABLETS., FOOD., EXTERNAL.) ., அதிகம் படித்தல்., மற்றும் கிட்டப்பார்வையினால் அரிப்பு ஏற்படலாம். DRY EYES எனப்படும் பிரச்சனை ஏற்படலாம். கண்ணை முக்கியமா தேய்க்கவே கூடாது.



செய்யக் கூடாதது என்னன்னா சொந்த வைத்தியம்., தேங்காய் எண்ணெய்., விளக்கெண்ணெய் ., கோழி ரத்தம்., தாய்ப்பால்., இவற்றை ஊற்றுதல்., அடிக்கடி கண்ணைத் தேய்ப்பது., நீண்டநேரம் கம்ப்யூட்டர் ., டி. வி பார்ப்பது., குப்பை பொல்யூஷன் அதிகம் இருக்கும் இடங்களில் நீண்ட நேரம் இருப்பது., நேராக சூரிய ஒளியைப் பார்ப்பது., குவாலிட்டி ஸ்டாண்டர்ட் இல்லாத டை ( DYE ) போடுவது ., பாட்டி வைத்தியம் செய்வது இதெல்லாம் தவிர்க்கப் படணும்.



காண்டாக்ட் லென்ஸ் தரமுள்ளதா என்று பார்க்கணும். சுத்தம் செய்து அணியணும். பவர் ஏறும் போதெல்லாம் செக்கப் செய்து மாற்றிக் கொள்ளணும். நல்ல பாலன்ஸ்ட் டயட் சாப்பிடணும்... சைவத்தில் கீரை., காரட்., பப்பாளி., பச்சைக் காய்கறி., சத்தான உணவு., பழங்கள்.. அசைவத்தில் மீன் ., கல்லீரல்., முட்டை சாப்பிடலாம். மீன் எண்ணெய்., மீன் மாத்திரை சாப்பிடலாம்.



நம்முடைய கண் நமக்கு மட்டுமில்லாமல் நமக்கு பின் மற்றவர்களுக்கும் பயன்படும். விழித்திரையை எடுத்து மாற்றுவார்கள். பார்வைத்திறன் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சைக்காக நம் நாட்டில் காத்திருக்கும் மக்கள் சில ஆயிரம் இருக்கும். எனவே பக்கத்தில் உள்ள கண் வங்கியில் தானம் செய்ய ஃபார்ம் பில் பண்ணி சைன் செய்து கொடுக்கலாம்., நம் விழியை நம் இறப்புக்குப் பின் தானமாக வழங்குவதாக. இதனால் பலருக்கு பார்வை கிடைக்கும். இறந்தவரின் உறவினர் கூட 6 மணி நேரத்துக்குள் தானம் செய்யலாம். இதனால் முகத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. எனவே நாம் அனைவரும் கண் தானம் அளிப்போம் என உறுதி மொழி எடுப்போம்.



விழியிழந்தோருக்கு விழியாக வாழ்வோம்..




வியாழன், 27 ஜனவரி, 2011

மீண்டும் ஆடிய கால்கள்.. போராடி ஜெயித்த பெண்கள் ( 4 ) ..




பார் மகளே பார்.. திருடாதே பாப்பா திருடாதே.. இந்தப் பாடல்களில் நடித்த குழந்தை நட்சத்திரத்தை ஞாபகம் இருக்கிறதா உங்களுக்கு.. உங்கள் நினைவுகளை ட்யூன் செய்து பாருங்கள்.. சோதனைகள் இல்லாமல் சாதனைகள் இல்லை என்பதற்கு எடுத்துக் காட்டு அவர்தான்.. லக்ஷ்மிராவ்..

மைசூர் ஸ்ரீரங்கப்பட்டிணத்தில் பிறந்த இவரின் தந்தை சங்கீத வித்வான் வி.கே.ராஜேந்திரராவ்.. அம்மா தாராபாய். தன் மகளை பெரிய டான்சராக்க வேண்டுமென்பதே தந்தையின் எண்ணமாய் இருந்தது. ஆனால் மாஸ்டரிடம் கற்றுக் கொள்ளும் அளவு வசதியில்லை. சினிமாவின் பரதநாட்டிய அபிநயங்களைப் பார்த்துக் கற்றுக் கொண்டது.

பெங்களூருவில் வெள்ளிப் பாத்திரக் கடை., துணிக்கடை., கல்யாண வீடு இதிலெல்லாம் இவர் நடனம்தான்.. சங்கீதம் பாட கேள்வி ஞானம் போதும் என்பது போல் இவர் பார்த்தே அறிந்து பழகிக் கொண்டதுதான் முதலில்.. தாளஞானம் அதிகம்., தந்தையின் முயற்சியும் அதிகம். இந்த மாதிரி நடந்த நிகழ்ச்சியில் பார்த்து அசந்து போன ஒருவர் மிக அருமையாக ஆடும் இந்தக் குழந்தையை பண்டரிபாயிடம் அழைத்துச் செல்லுங்கள் என கடிதம் கொடுத்தாராம்.

இவரை நடனமாடச் சொன்ன பண்டரிபாய் வெளியிடத் தயாராய் இருந்த கன்னப் படத்தில் இவருக்காக பர்த்டே செட் போட்டு டான்ஸ் ஆட சொல்லி இணைத்தார்களாம்.. படத்தின் பெயர் ராயர சொசே.. பெரிய இடத்து மருமகள் என்று அர்த்தம்.

ராஜ்குமாரின் முதல் சமூகப் படம். படம் பெரிய வெற்றி அடைந்ததும்., குழந்தை நட்சத்திரமாக பார் மகளே பாரில் சிவாஜி சௌகாருடனும்., திருடாதேயில் எம்ஜிஆருடனும்., எங்கள் குடும்பம் பெரிசுவில் உதயகுமாருடனும்., அமர்தீப் (ஹிந்தி) தேவ் ஆனந்துடனும்., குழந்தைகள் கண்ட குடியரசுவில் ஜாவர் சீதாராமனுடனும் நடித்திருக்கிறார். நாட்டிய நாடகங்களில் ராமாயணம்.. சின்ன ராமராக.. ஃபோக்கில்., தசாவதாரத்தில் முக்கிய ரோல். பத்மினிக்கு ரெகமண்ட் பண்ணப்பட்டவுடன் இவரின் கிராஃப் அதி வேகமாக உயர்ந்து விட்டது. சில படங்களில் இவரே நடனம் அமைத்து நடனம் ஆடி இருக்கிறார். பத்மினியுடன் டெல்லி சென்று நாட்டிய நிக்ழ்ச்சிகள் செய்யும் சந்தர்ப்பமும் கிடைத்தது. எல்லா இடத்திலும் பேரும் புகழும்தான். சாதனையாளர்கள் எங்கிருந்தாலும் கண்டு பிடிக்கப்படுவார்கள். புகழ் பெறுவார்கள்.

அப்போது இவரின் நடனம் கண்டு வியந்த நேருஜி தூங்கிக் கொண்டுருந்த குழந்தையை ஸ்டேஜுக்கு வரச்செய்து காதுகளைப் பிடித்து முயல் குட்டிகளைப் போல் தூக்கிக் கொஞ்சினாராம்.. அப்போது கொடுக்கப்பட்ட அவார்டு பெஸ்ட் சைல்ட் டான்சர் .

சந்திரபாபு இவரின் டான்ஸைப் பார்த்து காலில் விழுந்து கும்பிட்டு நீ மனுஷியே இல்லைம்மா.. என்று சொல்லி பூசணிக்காய் கொண்டு வரச் சொல்லி உடைத்திருக்கிறார். இவ்வளவு சாதனைக்கும் பின்புலம் இரவு பகல் பாராமல் ரிகர்சல்., ஊர் ஊராய் அலைச்சல்., இத்துடன் படிப்பு., நாட்டியப் பயிற்சி வேறு. மாஸ்டர் கோபால கிருஷ்ணனிடம் பயிற்சி.. இவர் வழுவூராரின் சிஷ்யர்.

சிலசமயம் பத்மினி ஷுட்டிங் காரணமாக பயிற்சிக்கு வர இயலாவிட்டால் இவரை ஆடச் சொல்லி சரிபார்த்துக் கொள்வாராம். பத்மா சுப்ரமணியம் ட்ரூப்., டான்ஸ் மாஸ்டர் கோபிகிருஷ்ணா ( ஜனக் ஜனக் பாயல் பஜே) ., ஆஷா பரேக்., ராஜ சுலோச்சனா., லதா ஆகியோருடன் சிறு வயதிலேயே பணி புரிந்திருக்கிறார்.

ஹீராலால்., சோபன் பாபு., சின்னி சம்பத்., தண்டாயுதபாணி பிள்ளை., சின்ன சத்யம் ( குச்சிப்புடி) ., என பயிற்சியும் தொடர்ந்திருக்கிறது. பரத நாட்டியம்., கதக்., கதக்களி., குச்சிப்புடி., ஃபோல்க்., இண்டியன் க்ளாசிக்கல் எல்லாம் தெரியும்.

பத்மினியுடன் அமெரிக்கா செல்ல சந்தர்ப்பம் கிடைத்தது. அங்கு 4 வருடங்கள் வாசம். பல நடன நிகழ்ச்சிகள்., பல்வேறு நாடுகள் என சுற்றி 20 வயதில் இந்தியா திரும்பியபின் ப்ரேம் நசீருடன் கெஸ்ட் ஹவுஸ் ( மலையாளப் படம் )., கிருஷ்ண தேவராயரில் நடன அமைப்பு., பஞ்ச வர்ணக் கிளியில் அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் பாடல்., துட்டே துட்டப்பாவில் ., கதக் மாஸ்டர் கிருஷ்ணகுமாருடன் என 60 ., 70 படங்களில் பணி புரிந்திருக்கிறார்.

இதெல்லாம் திருமணம் நடக்கும் வரை. நான்கு மொழிப் படங்களில் நடித்து பெஸ்ட் சைல்ட் ஆர்ட்டிஸ்ட் என்று ஜனாதிபதி ராஜேந்திரபிரசாத் கையாலும் ., பெஸ்ட் சைல்ட் டான்சர் என்று பிரதமர் நேருவின் கையாலும் அவார்டு வாங்கிய இவர் திருமணத்திற்குப் பிறகு நடிப்பதையே விட்டார். தந்தைக்கும் விருப்பமில்லை. இவரின் கணவருக்கும் விருப்பமில்லைல்

கணவர் உடுப்பியைச் சேர்ந்த பி. கே. நாராயணராவ். நியூ உட்லாண்ட்ஸில் மானேஜர். நல்ல பீக்கில் இருந்தபோது கணவர் அன்புக் கட்டளைப்படி சினிமா., மற்றும் நடனம் இரண்டையும் விட்டார். டான்ஸ் ப்ரோக்ராமும் செய்வதில்லை. மனைவி சம்பாத்தியத்தில் குடும்பம் நடத்துவதா என்ற ஈகோ. கிட்டத்தட்ட 60 டூரிஸ்ட் கார் வைத்திருந்திருக்கிறார். இரண்டு பெண்குழந்தைகள் இவருக்கு. சுபஸ்ரீ., ஜெயஸ்ரீ.

ஜெயஸ்ரீ மானாட மயிலாட சீரியல் நம்பர் ஒன்னில் முதல் பரிசு பெற்றவர். நினைத்துப் பாருங்கள் ஆடிய கால்களை நிறுத்திக் கொள்வது என்பது எவ்வளவு கடினம். கிட்டத்தட்ட 20 வருடங்கள். நடனம்., சினிமா., பயிற்சி எதுவுமில்லாமல் முடங்குவதென்பது பெரிய விஷயம்தான். குடும்பத்துக்காக விட்டுக் கொடுத்தல்., தன் சுயத்தை ஒடுக்கிக் கொள்ளுதல்., இந்தக் காலத்தில் நினைத்துப் பார்க்க முடியுமா..

50 வயது சர்வீசில் நடனப் பின்புலம்., புஷ் அப் இல்லாமல் கற்றது., திருமணத்துக்குப் பின் கணவர்., தந்தை சப்போர்ட் இல்லாமல்., ரெகக்னீஷன் இல்லாமல்., வருத்தமுற்று அமைதியாக இருந்தார். 1996 இல் தான் கணவராகவே இவரிடம் கேட்டாராம். யார் யாரோ ஆடுறாங்க நல்லாவே இல்லை.. நீ ஆடினால் என்ன .. என்று.

ஸ்ரீஸ் நிருத்திய க்ஷேத்திரா என கணவரே பெயர் சூட்டி., இவரை நடனம் கற்றுக் கொடுக்கச் சொல்லி ஊக்குவித்தாராம். 1998 இல் கணவர் இறந்துவிட இரண்டு பெண் குழந்தைகளையும் தனியாக திருமணம் செய்து கொடுத்திருக்கிறார். இன்று ஆர்மி க்வார்ட்டர்ஸில் பத்து பேட்ச்களுக்காவது பயிற்சி கொடுத்திருப்பாராம்.

சிறு வயதிலேயே பல படங்களில் நடித்து விட்டதால் ஹிந்தி., தமிழ்., தெலுங்கு., கன்னடம்., மலையாளம் தெரியும். பல படங்களில் நடன அமைப்பாளராகவும் பணி புரிந்திருக்கிறார். விஜயலெட்சுமியையும் ஆட்டுவித்திருக்கிறார்.

சிவாஜி அவார்டு., எம்ஜிஆர் அவார்டு., நாட்டிய சூடாமணி., நர்த்தன சிரோன்மணி., இண்டியன் கல்சுரல் அகாடமி வழங்கிய நாட்டிய ரத்னா., தமிழக அரசு ( அமைச்சர் மதியழகன்) கொடுத்த நாட்டிய இளவரசி., பாண்டிச்சேர் கவர்ன்மெண்ட் ( அமைச்சர் குபேரன்) கொடுத்த நாட்டிய மாமணி., கர்நாடக அரசு கொடுத்த நாட்டிய பிருந்தா., என விருதுகளாலும்., பரிசுக்கோப்பைகளாலும்., பாராட்டுப் பத்திரங்களாலும் நிரம்பி வழிகிறது இவரின் வீடு. இத்தனை இருந்தும் விசிட்டிங் கார்டில் மிக எளிமையாக பெயர் மட்டும் போட்டு இருக்கிறார்.

சிலப்பதிகாரம்., கண்ணகி., ராமாயணம்., தசாவதாரம்., மஹிஷாசுரமர்த்தினி., பாரிஜாதம் ஆகிய நாட்டிய நாடகங்கள் நிகழ்த்தியுள்ளார். வெளிநாட்டினர் கூட 2., 3 மாதங்களுக்குள் நாட்டியம் கற்க வருகிறார்கள்.. என குறிப்பிட்ட இவர்., வசதியற்ற திறமையுள்ள பெண்களுக்கும் இலவசமாக சொல்லித் தருவதாகக் கூறினார். வரும் ஜனவரி 5 ஆம் தேதி தக்ஷிணாமூர்த்தி ஹாலில் வள்ளி திருமணம் நாட்டிய நாடகம் நடக்க இருக்கிறது.

நம் திறமைகள் அணையவிடாமல் காத்தால் ஒருநாள் மீண்டும் ஒளிர்வோம் என்பது உண்மைதானே..


செவ்வாய், 25 ஜனவரி, 2011

விவ.. சாயம்.. அதீதம்.. வெறுங்குடுவை.. சிலந்தி..

1. விவ .. சாயம்..************************
சாணி., சருகு.,
வேப்பம் பிண்ணாக்கு.,
மக்கிப் போன தோல்தழை..
மழைபெஞ்சா
மண்ணுழப்பி..

இத்தனையும் விட்டுப்புட்டு
கைநிறைய அள்ள
கலப்புரம் போட்டு.,
மேலே அள்ள
மேலுரம் போட்டு..

பருத்தி வரும்னு
பதறிப் பார்த்தும்.,
கத்திரிக்காய்க்கு
மரபணு மாத்தியுங்
காத்திருந்தா

சாயாத்தண்ணியா
கருத்து வந்தது..
சாயத்தண்ணி..
துவைச்ச நுரையாட்டம்..
பார்த்தீனியம் கூட பட்டுப்போக..

குடிச்சுக் குடல் அழிஞ்சு
புண்ணாகிக் கிடக்கு..
சுரப்புத் தட்டிப்போய்
வெடிச்ச முலைக் காம்பாட்டம்
எனக்குப் பாலூட்டிய பூமி....

===============================

2. அதீதம்..***************

சுயம் என்பது
வெங்காயத்தோலாய்
உள்ளே ஒன்றுமில்லாமல்..

சருகாய்த் தோல் சுற்றி
பளபளப்பாய்..
உரிக்க உரிய கண்ணீர்..

ஏற்றமும் இறக்கமும்
பழக்கமற்று
எதுவாய் அதுவென்று..

இனம் காண விழையாமல்
எதனுள்ளோ ஒளிந்து
அதாகி..

===========================

3. வெறுங்குடுவை....
*************************

நகராத எனக்கும்
எல்லாப் பக்கமும்
நிழல் தொடர்கிறது..

காலியாய் இருப்பதாலேயே
எல்லாவற்றையும்
ஏற்கும் தகுதி இருப்பதாய்..

ஏற்பவை என் உருவம் ஏற்று
கவிழ்த்த பின்
உருவமற்ற ஓவியமாய்..

எதை ஏற்பது என்பது
என்னால் தீர்மானிக்கப் படாமல்..

இறைமையோ ., கயமையோ.,
சமயத்தில் ஏதேதோவும் நிரம்பி..

உள்கிடப்பவற்றை உணர்கிறேன்..
கலப்பதில்லை அவற்றுள் இரண்டற..
எதாயிருந்தாலும் எப்போதும்..

=================================

4. சிலந்தி..
****************

குடியிருப்பு வலை
யாருக்கோ குப்பையாய்..

இரண்டு தளங்களை இணைத்து
கயிற்றுக் கட்டில்..

எச்சில் நூலில்
கால் நெசவில் வீடு..

தேடி வருவது தவிர
தின்பதில்லை எதையும்..

தேடிப்போவதில்லை
எதன் வாழ்வும் கெடுக்க..

வலை வனத்தில் சிக்கின
பூச்சிகளை வேட்டையாடுவதால்..

சீறும் சிங்கமாய் இல்லாமல்..
சிறிய சிலந்திப் பூச்சியாய்..

டிஸ்கி..1.. :- அதீதம் என்ற புதிய இணைய இதழில் விவ.. சாயம் என்ற என்னுடைய கவிதை 15 - 31 ., ஜனவரி 2011 இல் வந்திருக்கிறது .. நன்றி அதீதம்..:))

டிஸ்கி .. 2.. :- விவ.. சாயம் ., அதீதம்., வெறுங்குடுவை., சிலந்தி என்ற நான்கு கவிதைகளும் 11. 1. 2011 கீற்றுவில் வந்திருக்கிறது.. நன்றி கீற்று..:))

டிஸ்கி.. 3..:- சிலந்தி என்ற கவிதை 12 . 1. 2011 உயிரோசையில் வெளிவந்திருக்கிறது .. நன்றி உயிரோசை..:))

திங்கள், 24 ஜனவரி, 2011

ஆதலினால் காதல் செய்வோம்.. கவிதைத் தொகுதி.. எனது பார்வையில்..


பாளையங்கோட்டை என்றால் எனக்கு பள்ளிக்கூட கொஸ்டீன் பேப்பர்தான் ஞாபகம் வரும்.. அவ்வளவு டஃப் ஆக இருக்கும். அந்த ஊரில் இருந்து ஒரு ஆசிரியரின் கவிதைத் தொகுதியைப் படித்தேன்.. ஹிலால் ப்ரஸ்ஸின் சாதிக் அலி வெளியிட்டு உள்ளார்.. மிக அருமையான தொகுப்பு அது ..
நகைச்சுவைத் தென்றல் பொ. ம. ராசமணி என்றால் தெரியாதவரே இருக்க முடியாது நெல்லை மாவட்டத்தில்.. சிறந்த பட்டிமன்ற பேச்சாளர்.. அவர் மகள்தான் நம் அன்பிற்குரிய வலைப்பதிவர் சித்ராசாலமன். தந்தையின் நகைச்சுவை இவருக்கும் கைவந்த கலை..
திரு ராசமணியின் கவிதைத் தொகுதிக்கு தோப்பில் முகம்மது மீரான் முன்னுரை அளித்துள்ளார்.. அதில் இவருடைய கவிதைகள் பற்றி., “இவருடைய மென்மையான வரிகளில் நரம்புக் கம்பிகளில் எறும்பு ஊறும் சத்தத்தின் நாதம் மெல்ல ஒலிக்கக் கேட்கலாம்.,” எனக் கூறியுள்ளார்.
இவரை பேச்சாளராகத் தெரிந்தவர்க்கு இவரின் கவிமுகம் ஆச்சர்யம் அளித்துள்ளது. “இவர் அற்புதமான கவிஞர்., கதைகள் எழுதுபவர்., ஓவியர்., சிறந்த விமர்சகர்., மேடைப் பேச்சாளி., பட்டிமன்றம்., வழக்காடு மன்றத்தில் நடுவராகவும் இருந்திருகிறார். ” என சவேரியார் கல்லூரியைச் சேர்ந்த தமிழ்த்துறைத்தலைவர் சிவசுப்ரமணியமன் குறிப்பிட்டு உள்ளார்.. ” பேச்சு ஆரம்பித்தவுடன் ஐந்து விநாடிகட்குள் கூட்டம் சிரிக்கத் தொடங்கி விட்டால் அங்கே ஐயா நடுவர் என்று பார்க்காமலே கூறி விடலாம். இது ஐயா 1960 களிலேயே எழுதிய கவிதைகளின் தொகுப்பு என்கிறார்..
மகள் சித்ராவோ., தன் தந்தையின் நூலில், தன் உள்ளத்திலிருந்து வந்த எண்ணங்களைப் பகிர்ந்துள்ளார்.. இது தன் அம்மாவுக்கு அப்பா தந்த காதல் பொக்கிஷம் என பெருமிதமாகக் கூறுகிறார். தன் கணவருக்கு காதலுடன் கவிதை எழுதும் வரம் பெற்றதே தன் அப்பாவால்தான் என குறிப்பிட்டுள்ளார்.
அந்தந்த வயதில் அந்தந்த ஆசைகள் வரணும். வந்தால்தான் அவன் நார்மலா இருக்கான்னு அர்த்தம். சின்ன வயசுல மிட்டாய் மேல ஆசை வரணும். இருபது வயசுல பொண்ணு மேல., முப்பது வயசுல குடும்பத்து மேல ஆசை வரணும் என்று சொல்கிறார் ராசமணி அவர்கள்.
தன் அணிந்துரையில்., 1948 இல் சென்னையிலிருந்து வெளிவந்த ” தம்பி” இதழில் சிறுகதைப் போட்டியில் .,” காட்டுச் சிறுவன்” என்ற தலைப்பில் தான் எழுதிய சிறுகதைக்கு முதல் பரிசு கிடைத்ததைக் குறிப்பிட்டு உள்ளார்.. அப்போது அவருக்கு வயது 12 ஆம்.. !!!
இவரது கவிதைகள் மாலை முரசு., நெல்லை முரசு., வேலூர் முரசு., தமிழ்ப்பணி., தமிழன் குரல்., சிவகாசி முரசு., விஜயா., சௌபாக்கியம் ., ஈழநாடு., தினமலர்., நங்கை., குயில்., கவிதை.., கவியமுது., என கிட்டத்தட்ட 14 பத்ரிக்கைகளில்., 63 கவிதைகள் 1960 இல் இருந்து 1973 வரை வெளிவந்துள்ளன. அவற்றின் தொகுப்பே இது.
இனி விமர்சனம்...
காதல் பிறப்பதுண்டு. , இறப்பதில்லை., காதல் கொண்டவர்கள்., காலத்தை வென்றவர்கள் என்கிறார்... உண்மைதான்..
ஒரு சில கவிதைகளில் பெண் குரலாகவும் ஏக்கமாகவும் கூட ஒலிக்கின்றன இக்கவிதைகள். ” எனது வாழ்க்கை மரவேர் நீயத்தான். பிரிவைச் சகியேன்., திரும்பி வாயேன் என்றும்., மறையும் பொருள் தேடி என்னை மறந்து பிரிந்தானே.,” என்றும்.,
காதலி ஊற்றுத்தமிழால் பேசியதால் உள்ளம் தகிப்பதும்., நிலையற்ற வாழ்வை காதலி தன் அன்பாலே நிலைபெறச் செய்வதும்., கீச்சுக் குரலில் அவள் பாட அதைக் கேட்டுச் சொக்குவதும் அருமை..
மின்காந்தச் சிலையென்று நெருங்கிய பெண்., இளைஞரிடம் பேரம் பேசி நிற்பது கண்டு., பேயென ஒதுங்குவதும்., ஒவ்வொன்றாய் விற்ற விதவை கடைசியில் மகனையும்., தன்னையும் பசிக்காக விற்பதும் கொஞ்சம் கோபமும் வருத்தமும் கலந்த கவிதை..
அதே சமயம்., “ பசிக்கே அன்னமிட்டு பாரில் பாவம் தொலைப்பவரே., விரும்பும் விதவை பசி நீவீர் விரும்பித் தீர்ப்பதென்று..? “ என வினவுகிறார்.
மனைவியின் இயல்புகளாக சீறிச் சொன்னாலும் கோபம் அடையாள்., தீயர் அண்டிடக் கண்ணினைக் காட்டாள்., சீரும் . சிதைவும் சேர்ந்தே என்னுடன் தினமும் சுவைக்கும் பெண்ணவள்., நீயின்றி வாழும் வாழ்வனைத்தும் வெறும் நீரில்லாக் குளத்துத் தாமரையாம். , நிறையென்றால் எடையளவு என்பர்- நின் நிலையான கற்பதனின் சிறப்பினையே அறியார் என புகழ்வதும் அழகு..
காமமெனும் பேயினது கரத்தை விட்டு ஓடவும்., ஏமாற்றும் காதலியர் பற்றிய சீற்றமும்., இதயம் திறந்து விடு., ஏனோ போவென்றாய்., என்று காதல் ஏக்கமும்., திரும்பி விடு என பிரிவாற்றாமையும்., பெருகி வழிகிறது. உழைப்பவர்., கற்றவர்க்கெல்லாம் காதலிக்க நேரமில்லை என்றும்., உண்டு கொழுத்த கயவனுக்கு பெண் உலகையே காதலிக்க நேரமுண்டு என்றும் சலிக்கிறார்.
FERRY ME ACROSS THE RIVER என்ற ஆங்கிலப் பாடலையும் தமிழாக்கம் செய்துள்ளார்..
மனைவி கருக்கொண்டதை உள்ளத்தில் எனைக் கொண்டாய். . உதரமதைக் கருக்கொண்டாய்...என்றும்., பந்தம் அவளானாள்..மக்கள் பலரை இனித்தருவாள் ., எந்தன் வாழ்வினுக்கே விளக்காய் என்றும் இலங்கிடுவாள் என்றும்., சந்தோஷம் பகிர்கிறார்..
பணத்திற்காக ஏழைப் பெண்கள் பணக்கார வயோதிகருக்கு வாழ்க்கைப்படும் அவலத்தை ஏழைப் பெண் என்ற தலைப்பில் 13 கவிதைகளாக சோகத்தோடு விவரிக்கிறார்.
நண்பன் காதல் நினைப்பில் விழித்து நொந்ததும்., மாதை வலிய அணைப்பவனை பழித்திட சொல் தேடுவதும்., பெண்ணை வானமாக்கி வர்ணிப்பதும்., பசியோடு இருக்கும் பிச்சைக்காரனைக் கவராத அழகான பெண்ணின் அழகு பற்றியும்., கண்ணில் உள்ள கன்னி என்று அழுகை பற்றியும்., பிறன் மனை நோக்காதிருப்பது பற்றியும்., கற்பில்லாப் பெண்கள் பற்றியும்., உள்ள கவிதைகள் வித்யாசமானவை.
காதலர் இருவர் கருத்தொருமித்தாலும்., திருமணத்துக்குப் பின்பே வாழ்வியல் இன்பம் துய்ப்பது பற்றி வலியுறுத்தும் கவிதைகள் அருமையிலும் அருமை. பெண்களின் அழகு., அன்பு., அணைப்பு., முத்தம்., ஒழுக்கம்., நல்லியல்புகள்., பண்பு., கண்ணீர்., தாய்மை பற்றிய அனைத்துக் கவிதைகளும் அருமை.
அன்பெனும் தெய்வமது குடியிருக்கும் ஆலயந்தான் பெண்மையென அறிந்து கொண்டேன். கண்ணிரண்டும் பூத்து மனம் கலங்கும்வேளை கண்டுவிட்டேன் தாய்மையினை அமைதி கொண்டேன்.. என்றும்.., உடலுக்கு அழிவுண்டு ., உடல் காதல் அழிவதுண்டு என்றும்., உயிருக்கு அழிவில்லை ., உயிர்க்காதல் அழிவதில்லை என்றும் ராசமணி ஐயா அவர்கள் சொன்னதையே வழிமொழிகிறேன்.
மிக அருமையான கவிதைகள்.. கிடைத்தால் படித்துப் பாருங்கள். சிறந்த மனிதராய் வாழ்வதன் மாண்பு பொலிந்தது.
வேண்டுகோளுக்கிணங்கி அனுப்பி வைத்த இந்தக் கவிதைகளின் நாயகி ஃப்ளோரா ராசமணி அவர்களுக்கு நன்றி.
டிஸ்கி:- இந்தக் கட்டுரை 2. 1. 2011 திண்ணையில் வெளிவந்துள்ளது.

ஞாயிறு, 23 ஜனவரி, 2011

4 கவிதைகள்.. திண்ணை.. கீற்றுவில்..

1. வற்றின கேள்விகள்..
**********************************

மீன் சுவாசக்குமிழ் வெடிக்கும்
குளத்தைப் பார்க்கும்போதெல்லாம்
குதிக்கட்டுமா என்பான்..

மாடியில் அறுந்த கொடிக்கயிறு பற்றி
கட்டைச்சுவர் எட்டிப்பார்க்கும் போதும்
கால் நீட்டி இதே கேள்வி..

உயிரணுக்கள் வற்றின பருவத்தில்
ஒரு அமாவாசை இரவில்
ஓடுகள் நெகிழ்ந்த உத்தரத்தில்

ஓய்ந்த கேள்வியோடும் சுவாசத்தோடும்
ஒற்றைக் கயிற்றில் ஆடிக்கொண்டு
அவன் மனநோயின் வெளிப்பாடாய்..

அறியாமலோ இயலாமலோ
போய்விட்டான் அவன் மனைவிக்கு
மறுமணம் ஆகுமென..

===================================

2. சின்னப் பயல்..:-
***************************

கோடி பெறும் வீட்டில்
லட்சம் பெறும் மாடர்ன் ஆர்ட்..

சுவர் முழுக்க
செலவில்லாமல்
சின்னப்பயலின் கிறுக்கல்கள்..
வாங்கிய சேட்டை அடி சுமந்து..

அணைப்புக்கு ஏங்கி
விரிந்த கைகளுடன்
மிக்கி மவுசோ.,
டொனால்ட் டக்கோ..
க்ரேயானில்..

அணைக்க விரும்பி
சுவற்று பொம்மைகளை
கைகோர்த்துப் பிடித்தேன்..
வளர்ந்துவிட்ட சின்னப்பயலை நினைத்து..

=======================================

3. நன்றி நைதல்..
 ***********************

புகை படிந்த கண்களுக்கு
நடனக்காரியின் அசைவை
ஒத்திருந்தது அவளின்
நன்றி நவிலல்..

புரணிக்காரர்களின்
வெறுப்புக்குரியதாயிருந்தது
அந்த ஏற்றமும் நன்றியும்..

அவலற்ற பொழுதுகளில்
பொறாமை நாவுகள்
அவளையும் அதையும்
இடித்துப் பிழிந்து
விரசம் ருசித்தன..

எவ்வளவு நைத்தும்
திரும்ப வந்தது
அவளது நன்றி.. எதாலும்
நையாத புன்னகையோடு..

=============================

4. புலிகளோடு......
*************************

வீட்டுப் பிராணி..
புகுந்தது வனம் என்பதறியாமல்..
புகுந்த கணம் இருட்டுக்குள்..

மினுமினுங்கும் கூர்கண்களோடு
வரிகளும்., வட்டங்களும்
சிலிர்க்கும் புலிகள்..

வனம் வந்த நாள் தொட்டு
அவை அங்கேயே வளர்ந்து வாழ்ந்து..
கம்பீரப் பாய்ச்சலோடு..

புதுவனம் புகுந்த அது
புலியைப் போல இருந்தாலும்..
சீறவோ பாயவோ தெரியாமல்..

கற்றுக் கொள்ளக் கூடும்..
புலிகளோடு புழங்குவதும்.,
வேட்டையாடுவதும்..
வனம் அதிரடிப்பதும்..

டிஸ்கி . 1 ..:- வற்றின கேள்விகள்., சின்னப் பயல்., நன்றி நைதல்.. இந்த மூன்று கவிதைகளும் 4. 1 . 2011 கீற்றுவில் வெளிவந்திருக்கின்றன.. நன்றி கீற்று..:))

டிஸ்கி ..2..:- வற்றின கேள்விகள்., சின்னப் பயல்., நன்றி நைதல்., புலிகளோடு., இந்த நான்கு கவிதைகளும் 9. 1 . 2011 திண்ணையில் வெளிவந்திருக்கின்றன.. நன்றி திண்ணை..

வெள்ளி, 21 ஜனவரி, 2011

சங்கமம் பற்றிய எனது கருத்து கலைஞர் தொலைக்காட்சி செய்தியில்..




கலைஞர் தொலைக்காட்சியில் சங்கமம் பற்றிய எனது கருத்து செய்திகளில் வந்த போது டிஷ்ஷில் எங்கள் தொடர்பில் அதை பார்க்க இயலவில்லை.. எனவே என் சகோதரன் செல்லில் செய்தியை சேகரித்து கணினிக்கு அனுப்பினார்.. அதை என் பையன் யூட்யூபில் பதிந்து இருக்கி்றான்..

ஸ்பீச் என்று பயந்துவிட வேண்டாம் மக்காஸ்.. என்னோட கருத்துக்கள் சும்மா 20 செகண்ட் வருது ..ஸ்பீச் என்று சும்மா அவசரத் தலைப்பிட்டிருக்கிறது.. :))

முன்னேற்பாடு இல்லாமல், தயாரிப்பு இல்லாமல் ., பதட்டத்தோடு பல்லை இறுக்கியபடி ..ஒரு கருத்து..:)) பிண்ணணியில் தொலைக்காட்சி பார்த்த தம்பி மனைவி தம்பியின் கமெண்ட்ஸ்களோடு.. நீங்களும் என்சாய் மக்காஸ்.. :))

வியாழன், 20 ஜனவரி, 2011

ஒளிதல்., பழசு., மாமிசக் கடை..

1. ஒளிதல்..
***************

எதிர் வீட்டு புஜ்ஜு
முந்தானை மூடி முட்டாச்சு..

பக்கத்து வீட்டு பாப்பு
திரைச்சீலையில் ஒளிந்து பிடித்து..

ரெண்டும் சென்ற பின்
முந்தானையும் திரையும்
ஒளிய இடமில்லாமல்..
==============================

2. பழசு..:-
***********

காலம் துவைக்கும்
கிழமைத் துணிகள்..
உரிந்து விழுந்தும்
சாயம் போகாமல்..
அதே முகப்பு..
அதே பட்டாலை..
அதே ஆல்வீடு..
அதே சுவற்றலமாரி..
அதே கண்ணாடி..
ஆற்றிலொரு கால்..
சேற்றிலொரு கால்..
விளையாட்டாய் நரை..
ஐஸ்பால்., டப்பாவாய்
முதுகிலடிக்காமல்
முகத்தில் அடித்தது
சுருக்கங்களுடன்
அவுட்டான நானாய்..

==========================

3. மாமிசக் கடை ..:-
*****************************

முதிர் ஆடுகள் சில..
இளங்கோழிகள் பல..
அபூர்வமாய்
புறாவும் ., முயலும்.,

எலியும்., பூனையும்.,
காகமும்., உடும்பும் கூட
உணவாகும் நரர்க்கு..

ரத்தம் தெறிக்க
வெட்டுப்படவே
சுயமற்றுப் பிறந்த
அப்பிராணிகள்..

சகதித் துணுக்காய்த்
தேய்த்தும் சத்தம்
அடங்காத
பூட்ஸும் துப்பாக்கியும்..

வெட்டப்படுவதும்.,
விற்கப்படுவதும்.,
சந்தைப் பொருளாவதும் குறித்து
ஏதும் செய்ய இயலாமல்..

டிஸ்கி:- ஒளிதல்., பழசு., மாமிசக் கடை இந்த மூன்று கவிதைகளும் ஜனவரி 2 ., 2011 திண்ணையில் வெளிவந்துள்ளன..

செவ்வாய், 18 ஜனவரி, 2011

என் பெயர் பெண்.. சென்னை சங்கமம் கவிதை..



தமிழ் அன்பருக்கும்.,
தமிழ் அன்பர்களுக்கும்
நண்பர்களுக்கும் வணக்கங்கள்..

* ஆதி மூர்க்கம் விலா
கொய்து செய்த
பாதி மூர்க்கம் நான்..

* இன்றும் இருக்கும்
சாதிச் சண்டையில்
சமரசப் பெண்சாதி நான்..

* ஈழம்., ஈராக்.,
ஈரான்., ஆஃப்கனில்
இழுக்குப்பட்டவள் நான்..

* ரத்தம் கக்கும்
யுத்தம் வெறுக்கும்
ஜான்சிராணியும் நான்..

* கபால மாலை
சுமந்து வருந்தும்
பூமித்துர்க்கையும் நான்..

* சிதைக்கச் சிதைக்கப்
பொறுக்காமல் வெடிக்கும்
பூகம்பம்., சுனாமியும் நான்..

* மதத்தின் பெயரால்
(திரு)மணத்தின் பெயரால்
பச்சைகுத்தப்பட்டவள் நான்..

* இனம்., மொழியற்று
இரண்டற்றுக் கிடக்கும்
இன்றைய யுவதியும் நான்..

* சம்பந்தமற்று
சிறையுற்று வாடும்
சின்னப் பெண்ணும் நான்..

* பிரதமர் ., ஜனாதிபதியாய்
கருணை மனு நிர்ணயிக்கும்
பெருமைப்பெண்ணும் நான்..

* எழுத்துப் பரம்பரை
சங்கப் பலகையின்
காக்கைப்பாடினியும் நான்..

* எல்லா சிறையையும்
யோகாவால் மாற்றிய
கிரண் பேடியும் நான்.

* முயலகன் கூட
நிலவறையில் அடக்கிய
கருவறைச் சட்டம் நான்..

* காற்றில் ஏறி
விண்ணையும் சாடிய
கல்பனா சாவ்லாவும் நான்..

* போகப்பொருளாய்
கடத்திய பீஷ்மனை
வீழ்த்திய அம்பை நான்..

* மேரி க்யூரி.,
மேதா பட்கர்.,
மகாஸ்வேததேவியும் நான்..

* என்னுள்ளே என்னை
மலர்த்திக் கொண்ட
மௌனப்பூவும் நான்..

* அனைத்தையும் அணைத்து
அன்பால் நனைக்கும்
அடிமைப் பெண்ணும் நான்..

* கள்ளிப் பாலையும்
கருவை முள்ளையும்
கடந்து வந்தவள் நான்..

* முப்பத்து மூன்றே
முடிவாய்க் கொடுத்தாலும்
முக்காலம் ஜெயிப்பவள் நான்..

* இல்லத்துள் அடைபட்டு
உள்ளங்களால் வெளிவந்த
ஆங்சான் சூயியும் நான்..

* சங்கமத்தின் வழி
கருத்தினைப் பகிரும்
கனியின் மொழியும் நான்.

* நல்லதும் நன்மையும்
நிரம்பிக் கிடக்கும்
நாளையப் பெண்ணும் நான்..

* ஒளிவட்டம் சூடாமல்
உயர்வாய் உயரும்
உலகின் எதிர்காலம் நான்..

தமிழ்மொழி கங்கை..
எங்கள் கவிமொழி யமுனை..
கனிமொழி சரஸ்வதி..

கவிதை முக்கூடலில்
சங்கமிக்க வந்த அனைவருக்கும்
நன்றியும் வாழ்த்தும்..


ஈரோடு தமிழன்பன் அவர்கள் முன்னிலையில்., கலாப்ரியா தலைமையில்., அமைப்பாளர் இளையபாரதி., சங்கமத்தில் சபையேற வாய்ப்பளித்த கனிமொழி., ஞானக்கூத்தன்., கயல் தினகரன்., ஆண்டாள் பிரியதர்ஷிணி., ஜெயலெக்ஷ்மி ஆகியோர் முன்னிலையில் திங்களன்று தேவநேயப் பாவாணர் அரங்கில் நடைபெற்ற கவிதைச் சங்கமத்தில் வாசிக்கப்பட்ட எனது கவிதை..


வாழ்க.. தமிழ்..
வளர்க அதன் புகழ்..
வரும் ஆண்டுகளிலும் இன்னும் பலரை சிறப்படைய வைக்கட்டும் சங்கமம்..!!!

திங்கள், 17 ஜனவரி, 2011

சென்னை சங்கமம்..


கனிவான பேச்சு..

நன்றி தமிழ் கவிதைச் சங்கமத்தின் வழி எங்களை ஊக்குவிக்கும் கனிமொழி., எங்கள் பெயரை முன்மொழிந்த பத்மா..:))


கற்றறிந்தவர் சபையில் நானும்..


கலைஞர் டி வியில் சங்கமம் பற்றிய என்னுடைய கருத்து .. செய்திகளில் ஒலிபரப்பாகிறது .. பாருங்க மக்காஸ்..:))

நன்றி என்னை வாழ்த்தி ஆசீர்வதித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும்..:))

புதன், 12 ஜனவரி, 2011

ஜனவரி பொங்கல் லேடீஸ் ஸ்பெஷலில் ராமலெக்ஷ்மி., கோமதி., புவனேஸ்வரி., லக்ஷ்மி ராவ்., டாக்டர் காயத்ரி ,அமைதிச்சாரல்., ருக்கு அம்மா மற்றும் நான்..:))


பொங்கல் சிறப்பிதழில் ராமலெக்ஷ்மியின் இரண்டு படைப்புக்கள் வெளியாகி இருக்கின்றன. பெண்ணுக்கு பேதம் வேண்டாம்.., மற்றும் செல்வக் களஞ்சியங்கள்.. வாழ்த்துக்கள் லெக்ஷ்மி..

இந்த மாத ப்லாகர் கோமதி அரசு.. மார்கழி மாதம் கோலத்திற்கு உகந்த மாதம்.. அவங்களோட கோலங்கள் பற்றிய வித்யாசமான பதிவு படிச்சு பாருங்க.. வாழ்த்துக்கள் கோமதி..

புவனா ராமநாதன்.. சிறுகதைகள் அருமையா இருக்கு .. தோழமையின் நல்ல உணர்வுகள் பரவுது .. அருமையான கதை பயணம்.. புவனா..தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்..

போராடி ஜெயித்த பெண்கள் (4) . இதில் லக்ஷ்மி ராவ் அவர்களின் மீண்டும் ஆடிய கால்கள் .. என்னுடைய கட்டுரையாய்.. வாழ்த்துக்கள் லெக்ஷ்மி அக்கா..

டாக்டர் காயத்ரி ஸ்ரீகாந்த அவர்களிடம் கண் நோய்கள்., பராமரிப்பு ., பற்றிய என்னுடைய பேட்டிக் கட்டுரை கண்ணைக் காப்பாற்றுங்கள்.. வாழ்த்துக்கள் காயத்ரி..

ருக்கு அம்மாவின் பொங்கல் பரிசு திருக்குறள் கதை.. ..வழக்கம் போல் அருமை..வாழ்த்துக்கள் அம்மா..

அமைதிச் சாரல் சாந்தி மாரியப்பனின் பொங்கல் மகிழ்ச்சி சிறுகதையும் அருமை.. ஒரு பலியை தடுத்த மகிழ்ச்சி நமக்கும் இந்த சிறுகதையை படித்தபின் ஏற்படுகிறது.. வாழ்த்துக்கள் சாந்தி..
அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள் பா.. தொடர்ந்து எழுதுங்கள்.. வெளியாகிறதோ இல்லையோ தொடர்ந்து அனுப்புங்கள்.. பூக்கள் யாருக்காகவும் பூப்பதில்லை.. அவை தமக்காகவே பூக்கின்றன.. தன் மணத்தை தானே நுகர்ந்து அனுபவித்து வாழ்ந்து செல்கின்றன.. எனவே நீங்களும் எழுத்துப் பூக்களை மலரச் செய்யுங்கள்.. யாருக்காகவும் அல்ல நம்மை நாமே புதுப்பித்துக் கொள்ள..அன்புடன் தேனம்மை லெக்ஷ்மணன்..

செவ்வாய், 11 ஜனவரி, 2011

ரசாய(வ)னம்..2011..

சபீனா சாம்பலில் பலா..
குளியல் சோப்பு நீரில் கொய்யா..
ப்ரிஸ்க் கரைசலில் முருங்கை..
ஆலாவில் சந்தனமுல்லை..
எம் எல் எம்மில் செம்பருத்தி..
சொட்டு நீலத்தில் ஜாதிமல்லி..

ரசாயனப் பாதுகாப்பு
என் வனத்தில்..

பாலிதீன் பலா தின்னும் யானை..
கண்ணாடி பைகள் ., சீசாக்கள்.,
பூத்திருக்கும் மலை..
அணுவை பிளக்க
ஆள்துளையிட்டு
ரசாயனக் கூடம்..

வனம் பாதுகாக்கும் ரசாயனம்..

டிஸ்கி :- ரசாய( வனம்) என்ற தலைப்பில் இந்தக் கவிதை 03.01.2011 உயிரோசையில் வெளிவந்துள்ளது.. நன்றி உயிரோசை..:-))

சனி, 8 ஜனவரி, 2011

நீர்க்குமிழ்கள்.. இதய பலூன்..

1. நீர்க்குமிழ்கள்..:-*************************

அப்பாவுக்கு நான்கு
அம்மாவுக்கு மூன்று
அரசில் முப்பத்து மூன்று...

எல்லாம் சமரசம்..
உரத்துப் பேசவும்..
உள்ள(த்)தை எழுதவும்..

குமிழ்களின் வாழ்நாள்
ஒன்றோடொன்று
மோதும் வரை...

காற்று அனுமதிக்கும் வரை..
வெளிப்பொருள் உறுத்தும் வரை..

ஒப்பீட்டுச் சுதந்திரம்..
ஒவ்வாத கருத்துக்களோடு..
வரையப்பட்ட விட்டம்..

கட்டியமாடாய்.,
கயிற்றோடு சுற்றி..
கட்டவிழ்க்க முடியாத
கட்டுக்களோடு..
========================================

2. இதய பலூன்..:-
*************************

என் இதய பலூனைப்
பிடித்தலைகிறாய்..

உயரப் பறக்க விழையுமதைக்
கைப்பிடிக்குள் அடக்கி..

பட்டத்தைப் போல்
பிடித்திழுத்துக் கொண்டு..

கேளிக்கைகள்., போட்டிகள்.,
கூச்சல்கள் முடித்து..

ஓரமாய்ப் போட்டுவிட்டு
ஓய்ந்து உறங்குகிறாய்..

உன்னைத் தாலாட்டும்
விசிறிக் காற்றில்
தடுமாறி விழுந்து..

உன் கேசக் குழலாய்
தத்தித் தத்திச் சுருங்கியவாறே
ஒரு மூலையில் நான்..

உன் ரேகை படர்ந்த
லாலிபாப்பின்
முத்தப் பிசுக்கோடு..

டிஸ்கி:- நீர்க்குமிழ்கள்., இதய பலூன் இந்த இரண்டு கவிதைகளும் டிசம்பர் 27., 2010 திண்ணையில் வெளிவந்துள்ளன... நன்றி திண்ணை..:))

காகித ஓடத்தில் சங்கமத்துக்கு..

”புத்தாண்டு வாழ்த்துக்கள்” என்ற குரலில் எனக்கு நெருக்கமான ஒரு வாஞ்சை.. நல்ல விஷயம் சொன்னார் என் அன்பிற்குரிய., நம் அனைவரின் அன்பிற்கும் உரிய பத்மா.. ( padma reaches மற்றும் காகித ஓடம் என இரண்டு வலைத்தளங்களின்வாசி ...!! )..

மிகச் சமீபமாக இவரது இடுகைகள் சில என்னை உலுக்கும் அளவு வலிமையான படைப்புகளாய் இருக்கின்றன.. ஆடியின் முன்னும் பின்னுமாய் தானாய் தன்னோடு போராட்டம்.. முடிவுறாமல்.. மிக அருமையான வித்யாசமான படைப்புக்கள்.. ( கிறிஸ்துமஸ் தாத்தா கவிதையும் ) ..

முதலாளி வேலை செய்வோருக்கு விசேஷ நாட்களில் துணிகள் வாங்கித் தரலாம். நான் கேள்வியே படாத செயலாக இவரின் உதவியாளர் இவருக்கு பதில் அன்பாக புடவை வாங்கித் தந்துள்ளார்.. அந்த அளவு அன்புச் சுரங்கம் பத்மா..

வலைத்தள நட்புக்கள் எல்லோரையும் முன்னெடுத்துச் செல்வனவாக ., ஆரோக்கியமானதாக இருக்கிறது.. சமீபகாலமாக நான் அதை அதிகம் உணர்கிறேன்..

அவரை சங்கமத்தில் கவிதை சொல்ல அழைத்து இருக்கிறார்கள்.. அந்த சங்கமத்தில் என்னையும் இணைத்துக் கொள்ள விரும்புவதாக சொன்னார் பத்மா. புத்தாண்டின் இன்ப அதிர்ச்சி... இன்னும் சில வலைப்பதிவர்களும் லிஸ்டில் உண்டு.. உறுதிப் படுத்தப்பட்டபின் எழுதுகிறேன்..

சென்னை சங்கமத்தில் ஜனவரி 18 அன்று கிட்டத்தட்ட 100 கவிஞர்கள் கவிதை வாசிக்கப் போகிறார்கள்.. தேவநேயப் பாவாணர் அரங்கில். பத்மா எங்கள் பெயரையும் முன் மொழிந்ததால் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தில் இருந்து உமா ஷக்தி அவர்கள் தொலைபேசி மூலம் கலந்து கொள்வதை உறுதிப் படுத்திக் கொண்டார்கள்..

”தாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையம்” என அனைவரையும் இணைத்துச் செல்லும் பத்மாவின் அன்பின் முன் என்ன சொல்ல.. நெகிழ்ந்து போய்க் கிடக்கிறோம். நன்றி பத்மா... !! இந்த ஒற்றைச்சொல் போதாதுதான் என்றாலும் அதை உபயோகிப்பது தவிர ஒன்றும் தெரியவில்லை ..

உங்கள் அனைவரின் அன்போடும் ஆசியோடும் நாங்கள் சிறப்பாக கவிதை சொல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வலைத்தள மக்களுக்காக ஒரு வலிமையான இடம் கிடைக்க வேண்டும்.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.. !!

வியாழன், 6 ஜனவரி, 2011

கானாமிர்தம்..

கரையேறி மீன் விளையாடும் காவிரி நாடு.. எங்கள் உறையூரின் காவலனே நீ வாழிய நீடு.. ” ., ”நூறாண்டு காலம் வாழ்க.. நோய் நொடியில்லாமல் வளர்க.. ஊராண்ட மன்னர் புகழ் போலே உலகாண்ட தமிழர் போலே.”, என்று புகழ் பாடும் தமிழ்ப் பாடல்கள் எனக்குப் பிடித்தம்..

கர்ணனில் ”மஞ்சள் பூசி., மலர்கள் சூடி .,” என வரும் தாய்மை பொலிந்த பாடல் எப்போது பார்த்தாலும் இனிக்கும்.. ”முத்தான முத்தல்லவோ..”, மண்ணில் வந்த நிலவே என் மடியில் பூத்த மலரே.. ” ., ”ராஜா சின்ன ராஜா., பூந்தளிரே சின்ன நிலவே உன்னை நெஞ்சில் ஏந்திக் கொள்ள ஏங்கும் தாயின் உள்ளம்.. காக்கும் தெய்வம் உன்னை..” ., " அழகிய கண்ணே .. உறவுகள் நீயே.. நீ எங்கே., இனி நான் அங்கே.. என் சேயல்ல தாய் நீ.....,” ” அத்தை மடி மெத்தையடி.. ஆடி விளையாடம்மா.. “ என்ற பாடல்கள் நெஞ்சில் நிறைந்தவை.. அதன் சிகரமான பாட்டு இது..

அம்மா உந்தன் நெற்றிப் பொட்டாய் மாற மாட்டேனா.. அழகொளியாய் நெற்றி வானில் மினுங்க மாட்டேனா.. ”

தனிமை.. காதல் கலந்த பாடல்கள் எப்போதும் பிடிக்கும்.. ”உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருவன்.. என்னை நான் கொடுத்தேன் என் ஆலயத்தின் இறைவன்.. “ மாலையில் யாரோ மனதோடு பேச..” "ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது..” "சின்னக் குயில் பாடும் பாட்டுக் கேக்குதா.." "அன்னக்கிளி உன்னத் தேடுதே.." "அடி அம்மாடி ஒரு சின்னப் பொண்ணு அவ ஆசை வச்சா அவ நெஞ்சுக்குள்ள அது என்னாச்சு சம்மதம் வந்தாச்சு.. .. ".. ” என் வானிலே ஒரே வெண்ணிலா.. ” “ புல்வெளி புல்வெளி தன்னில் பனித்துளி பனித்துளி வந்து தூங்குது தூங்குது பாரம்மா.. உன்னையே உன்னையே என் மனம் எண்ணியே எண்ணியே தினம் தினம் ஏங்குது ஏங்குது பாரம்மா..”

காதல் பாடலில் எப்போது கேட்டாலும் இனிப்பது ., “ ஜல்., ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி.. சல சல சலவெனச் சாலையிலே செல்.. செல் .. செல்லுங்கள் காளைகளே .. சேர்ந்திட வேண்டும் இரவுக்குள்ளே.. அவன் தான் திருடன் என்றிருந்தேன்.. அவனை நானும் திருடிக் கொண்டேன். முதல் முதல் திருடும் காரணத்தால் முழுசாய் திருட மறந்துவிட்டேன்.. ”
மலரே மலரே உல்லாசம் உன்னைத்தான் சந்தித்தாள் .. உள்ளம் ஓர் வெள்ளைத்தாள்.. இதயம் எழுதும் கவிதை நீ.. ” " உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்.. உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்.. “ .. ”பார்த்த ஞாபகம் இல்லையோ.. அந்த நீல நதிக்கரை ஓரம் நீ நின்றிருந்தாய் அந்தி நேரம்.. நாம் வாழ்ந்திருந்தோம் பல காலம்.. “ இவையும் பிடித்தவை..

“லவ் பேர்ட்ஸ்.. லவ் பேர்ட்ஸ்.. தக்கதிமிதா..” என சரோஜா தேவி பாடும் போதும் ., ”தேடினேன் வந்தது .. நாடினேன் தந்தது..” என கே ஆர் விஜயா பாடும் போதும் மயங்காமல் இருக்க முடியுமா.. ”காற்றே என் வாசல் வந்தாய்.. மெதுவாகக் கதவு திறந்தாய்.. காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்..” என ஜோதிகாவும்., “ மனம் விரும்புதே உன்னை உன்னை,, நினைத்தாலும் சுகம் தானடா நெஞ்சில் உன் முகம் தானடா.. என் பேரும் மறந்தேனடா .. உன் பேரும் தெரியாதடா..” என சிம்ரனும் ஆடும் போது சொக்காமல் இருக்க முடியுமா..

எனக்கு மிகப் பிடித்த இந்தப் பாடல் சிவாஜியும் தேவிகாவும்.. தேவிகா பாடும் போது சிவாஜியின் எக்ஸ்ப்ரஷன்ஸ் அருமையா இருக்கும்.. தனிமையும் இழுத்துச் செல்லும் காதலும் பொங்கி வரும் அன்புமாய்.. தீராக்காதல்தானே அமரத்துவம் வாய்ந்தது..

”அழகே வா அருகே வா.. அழகே வா தலைவா வா..”

ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன் .. அருள் மொழி கூறும் பறவைகள் மொழி கேட்டேன் .. உன் இறைவன் அவனே அவனே எனப் பாடும் மொழி கேட்டேன்.. உன் தலைவன் அவனே அவனே எனத் தாயின் குரல் கேட்டேன்..”

சொந்தம் வந்தது வந்தது வந்தது.. அந்த சுகமே மச்சான் தந்தது.. சொர்க்கம் வந்தது வந்தது.. அதைச் சொன்னால் என் மனம் துள்ளுது.. மாசங்கள் போனாலும் வருஷங்கள் ஆனாலும் பாசங்கள் போகாது மாமா.. கண்ணேண்ணு கொஞ்ச வேண்டாம்.. கிளியேன்னு கெஞ்ச வேண்டாம் கண்ணாலே பாடம் சொல்லு போதும்.. நீ வாழும் வீட்டுக்குள்ளே நீ போடும் கோட்டுக்குள்ளே நீங்காம இந்தப் பொண்ணு வாழும்.. பூப்போன்ற தேகம் தொட்டு சோப்பாலே தேய்ச்சு விட்டு நீராட்ட நீயும் ஒரு சேய்தான்.. வாய்யான்னு ஒன்ன கொஞ்சி வாயார உண்ணச் சொல்லி சோறூட்ட நானும் ஒரு தாய்தான்.... வாழ்ந்தாலும் எந்தன் மூச்சு உன்னோடுதான் உன்னோடுதான்.. போனாலும் உன்னை விட்டு பூவோடுதான் பொட்டோடுதான்.. வாழ்வோம் மாமா வா.. ” இந்தப் பாடல்களை எல்லாம் எங்கள் சரஸ் மாமி பாடக் கேட்ட வேண்டும்.. காதுகள் பெற்றதன் இன்பம் உணரலாம்..

எனக்குப் பிடித்த பாடல்கள் தொடர் பதிவெழுத அழைத்த ஸாதிகாவுக்கு நன்றி.. நானே மறந்திருந்த பல பாடல்களை பாடிப் பார்த்துக் கொண்டேன்.. பாத்ரூம் சிங்கர் பா.. :)) .. பத்து எழுத சொன்னீங்க.. பலதும் எழுதிட்டேன்.. யூ டியூபில் தேடினேன் சிலது கிடைச்சுச்சு., சிலது கிடைக்கலை.. எனவே பாடல் வரிகள் மட்டும்.... நன்றி மக்காஸ் என் பாட்டும்., பாவமும் படிச்சதுக்கு..:))

மிக்க நன்றி பாலராஜன் கீதாவுக்கு.. இந்த பாடல்களின் லிங்கை எல்லாம் எனக்கு மெயிலில் கோப்பாக அனுப்பித் தந்தமைக்கு.. இப்போதுதான் முழுமையுற்றது போல் இருக்கு..

திரு ரமேஷ்.. நீங்கள் கேட்ட அம்மா பாடலும் இங்கே லிங்க் கொடுத்து இருக்கிறேன்.. டவுன்லோட் செய்து கொள்ளலாம்.. நன்றி பாலராஜன் கீதா..:))
http://music.cooltoad.com/music/song.php?id=426290&PHPSESSID=2e8c4ed71b791e366f5f385ad5db5617
http://music.cooltoad.com/music/download.php?id=426290&PHPSESSID=2e8c4ed71b791e366f5f385ad5db5617

புதன், 5 ஜனவரி, 2011

பிழைத்த சிலிர்ப்பு..வெளியுலக உயிர்மூச்சு., ஓவியங்கள்..

1. பிழைத்த சிலிர்ப்பு:-
*****************************

வெனிஷியன் ப்ளைண்டுகளின் பின்
நீர்த்தாவரங்கள்.. பனிச் சிகரங்கள்..

ட்ராலி சுமந்த தெர்மாஸ்களோடு
படுக்கை விரிப்புக்கள் தினம்..

அறை மணத்திகள் தொடர்ந்து
ஜெர்ம்களற்ற சாவ்லான் தரைகள்..

லிக்விட் சோப்புகளால் உடல் துடைத்து
பீட்டாடையீன் வாசத்தோடு..

ஆபரேஷன் தழும்புகள்
பூரான் தடிப்பாய்..

ஆண்டி பயாடிக்குகள் சுமந்து
கை துளைத்த ஊசி ஓட்டையை

கடைசியாய்த் திறக்கும் போது
பஞ்சிட்டும் குளிர்கிறது..

பிழைத்த சிலிர்ப்பிலும்
பில்லின் அதிர்விலும்..
================================

2. வெளியுலக உயிர்மூச்சு..
********************************

சிகிச்சைக்கு உட்பட்டவர்களின்
நோவுகள் எல்லாம்
காத்திருப்பவர் முகத்தில்
ரேகைகளாய்ப் படிந்து ..

நந்தவன கூட்டமாய்..
பிக்னிக் ஸ்பாட்டாய்
கேட்டது கிடைக்கும் ஷாப்பிங் மாலாய்..
ஒவ்வொரு பெரிய ஆஸ்பத்ரிகளும்..

உடல் துடைக்கும் ட்ராலி
உருட்டுபவளின் கரத்தில்
ஓராயிரம் உடல்களின்
நோவுத் துகள்கள்..

கழுவிக் கரைத்தும் போகாமல்
துப்புரவுப் பெண் வீட்டிலும்
அவளின் மருந்து வாடை
கைக்கவசம் அணிந்தும்..

சோர்வுறுவார்களா..
தூங்குவார்களா எனத் தெரியாத
ஷோகேஸ் பொம்மை
சிரிப்பில் மருத்துவர்கள்..

இருபத்திநாலு மணி நேரமும்
எரிகிற விளக்குகளில்
எல்லா கிருமிகளும்., அழுகைகளும்
துக்கங்களும் படிந்து..

மனைவிக்காகக் காத்து
மாதக்கணக்கில் தாத்தா எழுதும்
குறுக்கெழுத்துப் புதிர் ...
கோமாவாய் முடிவுறாமல்..

எப்போதோ நிமிர்ந்து
பார்க்கும் போது வந்து சென்ற
எல்லாரும்., எப்போதும்
பார்ப்பவராய் முறுவலித்து..

எங்கோ வெளியேறும்
திணறல் மூச்சு..
ஏதோ ஒரு கர்ப்பத்தின்
வெளியுலக உயிர்மூச்சாய்..

=================================

3. ஓவியங்கள்..
*****************
அவசியமா.. அலங்காரமா..
விலையுயர் சட்டங்களில்
விநோத ஓவியங்கள்..
உயிர்த் திரவ
பாண்டேஜுகளுடன் உலவும்
என்னை நிகர்த்து..

விரிந்த கிளைகளூடே
கூர்மூக்கு இறக்கைப் பறவை..
இரட்டைக் குணாதிசயமான
முன் பின்னாக
உருவேறிய நானாய்..

நீர்ச்சொட்டு இல்லா
பிரபஞ்சப் பசுமை பருகி.,
ஊசிகளும் தையல்களும்
குறுக்கு நெடுக்காக்கிக் கிழித்த
கோட்டோவியமாய் நான்..

இனம் தெரியா
நிறப் பூவிலிருந்து விழுந்த
தேன் சொட்டொன்று
என் கைப்பக்க ஐவி ட்யூப்பில் சிதறி...
கண் திறக்கும் போதெல்லாம்
இதய பலூனை இயக்கி..
உயிர்ப்பிக்கச் செய்து..

டிஸ்கி :- பிழைத்த சிலிர்ப்பு., வெளியுலக உயிர்மூச்சு., ஓவியங்கள் இந்த மூன்று கவிதைகளும் டிசம்பர் 27. 2010 திண்ணையில் வெளிவந்துள்ளது..

செவ்வாய், 4 ஜனவரி, 2011

நாஞ்சிலார்... விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்...







ரஷ்யன் கல்சுரல் சென்டரில் நாஞ்சிலாருக்கு விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பாக பாராட்டுவிழா நடத்தப்பட்டது.. புத்தாண்டின் மிகச் சிறந்த ஆரம்பமாக., கோலாகலமாக இருந்தது ..

எஸ்.ரா., பாரதிமணி., பாலுமகேந்திரா., ராஜேந்திர சோழன்., கண்மணி குணசேகரன்., ஞாநி., ஜெயமோகன்., சிறில் அலெக்ஸ்., ஆகியோர் அமைந்த பெரும் சபை அது.. அமைப்பாளர் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் அரங்கசாமி.

நெஞ்சிலிருந்து வந்த வார்த்தைகளை நிறைவாய் வழங்கி., மிக நெகிழ்வாய் இருந்தது அரங்கு.. சிறில் அலெக்ஸின் அறிமுக உரை அருமை.. விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் ராஜகோபால் நாஞ்சிலார் குறித்து ., அவர் படைப்பு குறித்து அருமையான பேசினார்..

சுல்தான் அவர்கள் நாஞ்சிலாரின் நூல்களை கணனியேற்றம் செய்து வருகிறார்கள். அவரை நாஞ்சிலார் கௌரவித்தார்.. ஜே. டி . குரூஸ் நாஞ்சிலாருக்கு சால்வை போர்த்தினார்.. நாஞ்சிலாரின் கான் காசிப் நூலை பாலு மகேந்திரா வெளியிட பாரதி மணி பெற்றுக் கொண்டார்.

பாராட்டு கேக்க எனக்கு பிடிக்கும்.. என்னை அண்ணாச்சி என்பார் நாஞ்சிலார்.. எனவே நிறைய பாராட்டுங்கள் .. நான் கேட்டுக்கொண்டே இருக்கிறேன் என சுருக்கமாக சுவையாக பேசினார் பாரதிமணி ஐயா..

எஸ்ரா.. நாஞ்சிலாரின் மரபு சார்ந்த படைப்புகள் குறித்து பேசினார். எந்த ஊரில் இருந்தாலும் தன் நாஞ்சில் நாட்டை நினைவு கூறும் படைப்புக்களை படைப்பது பற்றியும்., இருக்கும் ஊரின் மரபுகள் பற்றியும்., கூர்மையான அங்கதத்தில் முடியும் அவர் கதைகள் குறித்தும் சுவாரசியமாய் பகிர்ந்தார்..

பாலு மகேந்திரா தன்னுடைய கதை நேரத்தில் மிக முக்கியமான அருமையான படைப்பாளிகளின் படைப்பை தன் மொழியான சினிமாவுக்கு மாற்றும் போது இரண்டு படைப்பாளிகளின் படைப்புக்கும் (எழுத்து ., சினிமா) க்ளாஷ் நேர்ந்துவிடக்கூடாது என்பதாலேயே அவற்றைத் தேர்ந்தெடுக்கவில்லையென கூறினார்.. முதலில் தான் ஒரு பசி மிகுந்த வாசிப்பாளன் எனக் கூறினார்..

ராஜேந்திர சோழன் பேசும் போது., அவர் நாஞ்சில் நாட்டுக்கு மட்டுமல்ல., தமிழ்நாட்டுக்கும் பெருமை தேடித்தந்தவர் என கூறினார்.. இந்த விருது கொடுத்ததன் மூலம் பெருமை பெற்றது எழுத்தாளர் அல்ல .. சாகித்ய அகாதெமியே எனக் கூறினார். நாஞ்சிலாரின் காலத்தில் எழுதியவர்கள் தொடர்ந்து எழுதவில்லை தான் உட்பட.. வெவ்வேறு விழைவுகளில் பிரிந்து விட்டதால் என சொன்ன ராஜேந்திர சோழன் .., எந்தக் காலத்திலும் விடாமல் தொடர்ந்து எழுதியதாலேயே நாஞ்சிலார் இந்த விருதைப் பெற்றார் என கூறினார்.

மிக முக்கியமான விஷயமாக இந்த விழாவினை முன் வைத்து மருத்துவர் விநாயக் சென்னின் விடுதலை குறித்தான கோரிக்கையை முன்வைத்தார் ராஜேந்திர சோழன்..

ஞாநி பேசும் போது இந்த விருதுகளின் பிண்ணனியில் உள்ள சர்ச்சைகள் பற்றியும் ., வழங்கப்படும் விதம் பற்றியும் குறிப்பிட்டார்.. யானை கையில் மாலை கொடுத்து அது யார் கழுத்தில் போடுகிறதோ அவரே ராஜா என தேர்ந்தெடுப்பது குறித்து சொன்ன அவர் சில சமயம் அது குரங்கு கையில் போய் அதுவே பூவெல்லாம் பிய்த்துத் தின்கிறது எனவும் பேசினார்.

இந்த வருடம் மிகச் சரியான ஒருவருக்குத்தான் பூமாலை விழுந்திருக்கிறது என சொன்னார்.. எல்லா விருதுகளை விடவும் இந்த விருதுக்கு மதிப்பு மிக அதிகம் என கூறினார்.. மக்களின் பிரநிதியான ஒரு அரசாங்கம் மிகச் சிறந்த இலக்கியம் படைத்த படைப்பாளியை கௌரவிக்கும் மிக அரிய விருது இது என கூறினார்..

கண்மணி குணசேகரன்.. மிகச் சிறப்பாக அதிரடியாக பேசினார்.. மூன்று கவிதைத் தொகுதிகள்., பல கதைத் தொகுதிகள்., பல நாவல்கள் என வெளியிட்டுள்ள இவரின் பேச்சில் முந்திரிக் காட்டின் மண் மணம் அதிகம்.. புளிய மரம் எதையும் வளரவிடாது.. ஆனால் முந்திரிக்காடு எல்லாவற்றையும் அரவணைத்துச் செல்லும் என கூறினார். மிகச் சிறந்த படைப்பாளியாக அறியப் பெறும் இவர் அடுத்த சாகித்ய அகாதெமி விருது பெறவேண்டும் என்ற விருப்பம் அனைவர் பேச்சிலும் வெளிப்பட்டது.

இவ்வாறு விருது பெற்றவர்களுக்கு அரசு தனது சார்பாய் இலவச பேருந்து பயணம்., ரயில் பயணம்., வீடு தருதல் போன்றவை செய்யலாம்.. மேலும் சட்ட சபையில் ஒரு உரை நிகழ்த்த அழைக்கலாம் என குறிப்பிட்டார்.. விருதுத் தொகையையும் அதிகப்படுத்திக் கொடுக்கவேண்டும் என கூறினார்..

ஜெயமோகன் பேசும் போது நாஞ்சிலாரின் கதைகளில் ., பகிர்வுகளில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் சில உணர்வுகளைக் குறிப்பிட்டார்.. ஒரு விருந்தில் அமர்ந்திருப்பவர் ., முக்கியமான ஒரு விருந்தாளி வந்ததால் எழுப்பிவிடப்பட அந்த உணர்வோடே வருத்தமாக வீட்டிற்கு சாப்பிடாமல் செல்வதான தனது முதல் கதையிலிருந்து இன்று வரை இன்னொரு உலகம் இருக்கிறது .,ஒரு நிறைவடையாத உணர்வு என்பதான ஒன்று.. அந்த உணர்வு அவருடைய எல்லாக் கதைகளிலும் தொடர்ந்து வருகிறது என கூறினார்.. அவருடைய மெல்லிய அங்கதம்., கசப்பும் கோபமும் கலந்த மொழி நடை., கும்ப முனி வாயிலாக அவர் காட்டும் யதார்த்த உலகம் ., பேச்சு வழக்கு., உணவு குறித்தான அவரது பரந்து விரிந்த அனுபவமும் பார்வையும் என ஜெயமோகன் ஒரு மிகச் சிறந்த எழுத்தாளராயிருந்தும் மனம் விட்டு நாஞ்சிலாரைப் பாராட்டினார்.. சக எழுத்தாளனை பாரபட்சமின்றி புகழ்வதும் . , ஒன்றி இருப்பதும் வியப்பானதுதான்..

நாஞ்சிலார் தனது ஏற்புரையில் தன்னைவிட தகுதியான பலர் இருக்கிறார்கள் என குறிப்பிட்டார்.. தன்னைத் தானே வியத்தலும் இலமே என்பதனை நான் கண்டேன்.. எவ்வளவு பெரிய படைப்பாளிகள்.. இவர்கள் எல்லாம்.. தன்னை விட வயதில் முதிர்ந்த படைப்பாளிகளான ஆ. மாதவன்., மற்றும் தன்னை விட வயது குறைந்த படைப்பாளியான கண்மணி குணசேகரன் எல்லாருமே பெறத் தகுதியானவர் என குறிப்பிட்டார். இன்னும் பலர் இருந்தும் தனக்கு கிடைத்திருக்கிறது என அவையடக்கத்தோடு குறிப்பிட்டார். பல மொழியாக்கங்கள்., திரைப்படமான கதை., கவிதைத் தொகுதிகள்., கட்டுரைத் தொகுதிகள்., நாவல்கள்., என சொல்லிக் கொண்டே செல்லலாம்.. எளிமை., யதார்த்தம்., என்பதே இவரின் பகிர்வுகளின் சிறப்பு.. இவ்வளவு சிறப்பிருந்தும் எல்லோரோடும் எளிமையாகப் பழகுகிறார் என்பதும்., அணுக்கத்திற்கும்., இந்தப் பேரன்பிற்கும் உரியவராயிருக்கிறார் என்பதும் பெருஞ்சிறப்பு..

நேற்றைய விழா அரங்கம் நிரம்பி., நின்றுகொண்டே நிறையப் பேர் கலந்து கொண்டார்கள்.. சட்டசபைக்கு நிகராக அழகான ரஷ்யன் கல்சுரல் சென்டரின் அரங்கும் ., பெரும் எழுத்தாளர்களும்., இயக்குநர்களும் ( மணிரத்னம் வந்திருந்தார்) ., படைப்பாளிகளும்., பதிப்பகத்தாரும்., வலைப்பதிவர்களும் கலந்துகொண்டு குடும்பத்தின் மூத்தவரின் ஆண்டு நிறைவை நிறைவாகக் கொண்டாடுவதன் ஒத்திசைவோடு நிகழ்ந்தது விழா..

தமிழ்நதி ராஜேந்திரன்., சுகா., அண்ணா கண்ணன்., மதுமிதா., உஷா ராமச்சந்திரன்., நிர்மலா., சுகா., கிழக்குப் பதிப்பகம் பத்ரி ., உண்மைத் தமிழன் ஆகியோரை சந்தித்தேன். மொத்தத்தில் இன்று ஆரம்பிக்கப் போகும் புத்தகத் திருவிழாவின் முன்னோட்டமாக இருந்தது அது . நண்பர்கள் கூடி இழுத்த தேரோட்டம் அது.. ஊரே தாம்புக் கயிற்றைப் பிடித்து நிலை வரை இருந்து கொண்டு சேர்த்தது..

கடைசி வரை இருந்து., விழா முடிந்தும்., பிரமிப்பாய் ஒருவரோடு ஒருவர் அளவளாவிக் கொண்டிருந்து விட்டு வீடு திரும்பியதும் நினைத்துக் கொண்டேன்.. எப்பேர்ப்பட்ட கூட்டத்தில் இருந்து விட்டு வந்திருக்கிறாய் நீ.. அடுத்த வருடமாவது புத்தகத் திருவிழாவுக்குள் ஒரு கவிதை புத்தகம் வெளியிட்டு விட வேண்டும் என.. .. என்னைப் போல சிறிய வலைத்தளவாசிகளுக்கும் இந்த மாதிரி படைப்பாளிகளும் ., அவர் பெறும் விருதுகளும்., அவர்க்காக அன்போடு நண்பர்கள் நடத்தும் விழாக்களும் க்ரியா ஊக்கிகளாய் இருக்கின்றன.. வாழ்க நாஞ்சில் நாடன்., வாழ்க ஜெயமோகன் .. வாழ்க நட்பூ.. வாழ்க விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்..!!!

ஞாயிறு, 2 ஜனவரி, 2011

எலுமிச்சை விளக்கு..

துர்க்கை சன்னதி
செவ்வாய் ராகுகாலம்
திருமணம் கைகூடிவர
தாமரைத் திரியிட்டு
எலுமிச்சை விளக்கு..

எலும்பு தெரிய
குறைந்த உடையில்
பூனை நடையில்
விளம்பர அழகிகள்
எலுமிச்சை விளக்கில்..

டிஸ்கி :- இந்த கவிதை 28. 10 . 2010 உயிரோசையில் வெளிவந்துள்ளது.. நன்றி உயிர்மை..:))

சனி, 1 ஜனவரி, 2011

புத்தாண்டு வாழ்த்துக்கள்.. ஸ்பெஷல் லேடீஸ் அண்ட் ஜெண்ட்ஸ்..

அன்புத் தோழமைகளுக்கு.,

சென்ற 2010 ஆம் வருடம் மிக இனிமையாக இருந்தது.. அந்த இனிப்பின் குவளையிலேயே 2011 ம் அருந்த ஆசை.. பேராசையா தெரியவில்லை.. முடிந்தவரை முயற்சிப்போம்..

முகப்புத்தகத்தின் வழி கிட்டத்தட்ட 2000 நட்புக்கள்.. சில மாதங்களாக புதிதாக யாரையும் சேர்க்கவுமில்லை., விலக்கவுமில்லை.. தொடர்கிறது நட்பின் இழை.. தொடரட்டும்.. 2010 வருடம் என் பிறந்த நாளை எல்லோரின் வாழ்த்தோடும் ஆசியோடும் சிறப்பாக ஒரு வாரம் கொண்டாடினேன்.. அம்மு.,கயல், வாணி., மஞ்சு .,சித்ரா., ஆனந்தி., மயிலு., லல்லி., வெற்றி., செல்வா., அன்பு., பாபு., ஸ்ரீஜி., மற்றும் நண்பர்களுக்கு நன்றி..

முதன்முதல் A SLUM NO MORE என்ற தலைப்பில் என் கட்டுரை யூத்ஃபுல் விகடனில் வெளிவந்தது . அதைப் படித்த லேடீஸ் ஸ்பெஷலின் ஆசிரியை கிரிஜாம்மா தன் புத்தகத்தில் பணியாற்ற அழைத்தார்.

வித்யா பாஸ்கர் ( நமக்கெல்லாம் விதூஷ்)., மேனகா சத்யா ( சஷிகா)., வாணி., ருக்மணி அம்மா., சித்ரா நாகப்பன்., என் மதிப்பிற்குரிய அம்மா எம். ஏ. சுசீலா., ஜெயா நல்லப்பன்., துளசி கோபால்., ஹேமா., ரம்யா தேவி., ராமலெக்ஷ்மி., புதுகைத்தென்றல்., மோகனா சோமசுந்தரம்., சித்ரா சாலமன்., மனோ சாமிநாதன்., புவனேஷ்வரி ராமநாதன்., உமா ஹெப்சிபா., லெக்ஷ்மி ராவ்., டாக்டர் வேல்ராணி., டாக்டர் காயத்ரி ஸ்ரீகாந்த்., ஆகிய 20 பேர் பற்றியும் அவர்தம் படைப்புகளும்., என்னுடையதும் இடம் பெற்றது லேடீஸ் ஸ்பெஷலில்.. ஸ்பெஷல் லேடீஸ்.. !

கார்த்திக்., மரா., தினேஷ் குமார்., ரமேஷ் ( தமிழ் உதயம்)., கோபி ராமமூர்த்தி., இவர்கள் ஐவரும் லேடீஸ் ஸ்பெஷலில் ஸ்பெஷல் இடம் கிடைத்த ஜெண்ட்ஸ்.. !

ப்ளாகர்கள் அறிமுகம்., என்னுடைய இரண்டு கவிதைகள்.,அம்மா அருமை அம்மா என்ற தலைப்பில் கட்டுரை., யங் லேடீஸ் கவிதைப் போட்டி., பாதுகாப்பான முதலீடு சில ஆலோசனைகள்., காசு மழை., திருக்குறள் கதைகள்., தீபாவளி சிறப்பு படைப்புக்கள்., போராடி ஜெயித்த பெண்கள்., மருத்துவ விழிப்புணர்வுக் கட்டுரைகள்., ஆகியவை இடம்பெற்றது..

என்னை ஊக்குவிக்கும் புதிய “ழ” ., இளமை விகடன்., லேடீஸ் ஸ்பெஷல்., தேவதை., வல்லினம்., திண்ணை., கழுகு., ஊடகம்., கீற்று., உயிர்மை ஆகியவற்றுக்கு நன்றி..

என்னைப் பற்றி இடுகையிட்ட செல்வகுமார்., சீனா சார்., வெற்றி., ராமு மாமா., என் அம்மா., தேவா., சரவண கார்த்திகேயன்., ஊடகம் ஜாஃபர் அனைவருக்கும் நன்றி..

தொடர் பதிவு கொடுத்த தமிழ்மகன்., ஸாதிகா., விதூஷ்., தமிழ் உதயம்., மணிகண்டன்., விஜய் ஆகியோருக்கு நன்றி..

விருது கொடுத்து ஊக்குவித்த மேனகா., சுஸ்ரி., அக்பர்., ஜெய்லானி., அஹமத் இர்ஷாத்., விஜய்., திவ்யா ஹரி., சசி குமார்., சைவ கொத்து பரோட்டா., ஸாதிகா., ஆனந்தி., ஆசியா உமர்., ஸ்டார்ஜன்., சௌந்தர்., கார்த்திக் லக்ஷ்மி நரசிம்மன் அனைவருக்கும் நன்றி..

252 ஃபாலோயர்ஸ்க்கும்., தமிழ் மணம் ., தமிழிஷில் ஓட்டுப் போட்டு ஊக்குவிப்பவர்களுக்கும் ., கருத்துரை இடும் அனைவருக்கும் நன்றி ..

தேனூஸ் ரெசிப்பீஸ் என்ற என்னுடைய இன்னொரு வலைத்தளத்தையும் படித்து ஊக்குவிக்கும் 17 ஃபேஸ் புக் ஃபாலோயர்ஸுக்கும்., 42 ஃபாலோயர்ஸுக்கும்., கருத்துரை., மற்றும் தமிழ் மணத்தில் ஓட்டளிப்பவர்க்கும் நன்றி..

சகோ வேடியப்பனுக்கும் டிஸ்கவரி புக் பேலஸுக்கும் நன்றி.

ஜெயா நல்லப்பனுக்கும் ., கீதா இளங்கோவனுக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்..!

மென்மேலும் உயரவும்., கனவுகள் மெய்ப்படவும்., எண்ணியதெய்தவும் எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள் மக்காஸ்.. !!