
சின்னஞ்சிறு பெண் போலே சிற்றாடை இடை உடுத்தி .. இப்படித்தான் இருந்தார் உமா., நான் பார்க்கும் போது. ஆனால் அவருக்குள் ஒரு சிவகங்கைக் குளத்து துர்க்கையும் இருப்பது பின்தான் தெரிந்தது. வெளியே போராடி ஜெயித்தவர்கள் அநேகம். இவர் வெளியில் மட்டுமல்ல.. தன்னுள்ளும் போராடி ஜெயித்த மஹிஷாசுரமர்த்தினி..
உமா சென்னைவாசிதான் என்றாலும் பூர்வீகம் கடலூர். தாயின் கருவறையிலேயே நோய் சுமந்து வெளிவந்தவர் இவர். இதயக் கோளாறு..46 வயது உமா 20 வயதுப் பெண் போல இருக்கிறார். முகம் மலர சிரிப்பும்., அகம் மலர சேவைகளுமாய்.. இந்த நிலையை எட்ட அவர் எடுத்த பகீரதப் ப்ரயத்தனங்கள் எத்தனை எத்தனை ..
ஒரு சகோதரன் ., மூன்று சகோதரிகளுடன் மூத்தவராகப் பிறந்தவர் உமா. இவர் தாய் கங்காவிடம் டாக்டர்கள் இவர் பிறந்தவுடனே சொல்லி விட்டார்கள் இந்தக் குழந்தையின் வாழ்நாள் கம்மி. , மறந்து விடுங்கள் என்று.. மிகவும் வளர்த்தி குறைவாக நோஞ்சானாய்ப் பிறந்த இவருக்கு ஒரு காலகட்டத்தில் தனக்கு இதய வியாதி இருப்பது தெரிகிறது. ஆபரேஷன் கட்டாயம் செய்ய வேண்டிய காலகட்டம் அது. இரண்டு முறை ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்யப் பட்டிருக்கிறது.
முதல் சர்ஜரி 14 வயதில். இவருடன் 6 குழந்தைகளுக்கு ஆபரேஷன் செய்யப்பட்டது. பிழைத்தவர் இவரும் இன்னொருவரும் மட்டுமே. திருமண வாழ்வில் ஈடுபடவே கூடாது என டாக்டர்கள் அறிவுரை செய்து அனுப்பி வைக்கிறார்கள்.
எப்போதும் சுய இரக்கம்., கழிவிரக்கம் சூழ எல்லாருக்கும் நல்ல படிப்பு., நல்ல வாழ்க்கை., எனக்கு மட்டும் ஏனிப்படி என சுய பச்சாதாபம் வாட்ட ., கோபம் வந்து அனைத்திற்கும் கத்துவது., சண்டை போடுவது என வீட்டில் ரணகளம்தான். உடம்பில் ரத்த ஓட்டம் சரியில்லை. பெரிய பெண்ணாக ஆக முடியாது. ஆபரேஷன் செய்தாலும் ஆறு மாதம்தான் தாங்கும் என்று வார்த்தைகள் வேறு இவரை வெருட்ட., மன அழுத்தம் கூடி எப்போதும் சண்டைக் கோழியாகவே ஆகிவிட்டார்.
எல்லாரையும் திட்டுவது., என்னை ஏன் பெற்றாய்.. எல்லாருக்கும் நல்லா கல்யாணம் பண்ணி வை .. என்று அம்மாவிடம் கோபித்துக் கொள்வது., என உடல் வியாதியுடன் மனச்சிக்கலுடன் தாய் தகப்பனுக்கு முள்முடியாய்... உடனே தந்தை .” அவளை பேசாமலிருக்கச் சொல் “ என சத்தம் போடுவது. , தாயார் ,” மகளுக்காக விட்டுக் கொடுங்கள் “ என கெஞ்சுவது என ஒரே போராட்டமான வாழ்க்கை.
தான் ஏன் பிறந்தோம்., எதற்காக வாழ்கிறோம் என சுய பச்சாதாபம். எப்போதும் கத்திக் கொண்டிருந்தாலும் ., ஹார்ட் பேஷண்ட்., என்ன செய்வது என எல்லாரும் மன்னித்து விட்டார்கள்..
முதல் ஆபரேஷன் டாக்டர் சாலமன் விக்டர் செய்துள்ளார். கவர்ன்மெண்ட் ஹாஸ்பிட்டலில். தந்தை சரியான உதவி இல்லை. ஆசிரியரான அவர் சொல்லாமல் கொள்ளாமல் கிட்டத்தட்ட 4., 5 வருடங்கள் வீட்டை விட்டு சென்று விட்டார். அந்த சமயங்களில் உறவினர்களின் வீட்டில் தங்க நேரிட்டது.
வீட்டில்தான் அம்மாவுடன் சண்டை போடுவதே தவிர உறவினர்கள் வீட்டில் உதவியாக இருப்பது., அவர்கள் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது., பள்ளி கொண்டு விடுவது என ரொம்ப பரோபகாரம்.
சேத்துப் பட்டு மெட்ராஸ் சேவா சதன் ஸ்கூலில் ஹாஸ்டலில் தங்கி தமிழ் மீடியத்தில் ஹிஸ்டரி குருப்பில் ப்ளஸ் டூ வரை படித்த பின் எக்மோர் ஹை ரோடில் சந்தோஷ் ஹாஸ்பிடலில் ரிசப்ஷனிஷ்டாக பணியில் அமர்ந்தார்.
89 இல் இருந்து 95 வரை அங்கே ஏழு வருடம். ஈசிஜி எடுக்க ட்ரைனிங்க் கொடுத்து இருக்கிறார்கள்.. திடீரென ஒரு நாள் பேச்சு மூச்சு இல்லாமல் மயங்கியதும்., இவரின் அம்மா கங்காவை அழைத்து டாக்டர்கள் இன்னொரு சர்ஜரி செய்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருப்பதைக் கூறுகிறார்கள். உங்களுக்கு எத்தனை பிள்ளைகள்.., ஆபரேஷன் செய்தாலும் பிழைப்பது துர்பலம் என சொல்ல இவரின் தாய் கங்கா என்ன செய்வது., விதி வழியே விட்டேன் எனக் கதறினாராம்.
முதலில் ஓபன் ஹார்ட் சர்ஜரி AVR .. AORTIC VALVE REPLACEMENT. இரண்டாவது MVR .. MITRAL VALVE REPLACEMENT. செய்தது டாக்டர் விஜய சங்கர். முதல் முறை ஜீவன் போராடிய போது ரத்தம் கொடுத்தவர் டாக்டர் ஜோசப். இரண்டாவது முறை ஜீவன் போராடியபோது ரத்தம் கொடுத்தது லயோலா காலேஜ் பிள்ளைகள் 4., 5 பேர்.
சென்னையில் ஜி ஹெச்., கடலூர் ஜி ஹெச்., பாண்டிச்சேரி ஜிப்மர்., ராயப்பேட்டை ஜி ஹெச்., ஸ்டான்லி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி என கிட்டத்தட்ட 25 நர்சிங்ஹோமும் ., ஹாஸ்பிட்டல்களும் சென்றிருக்கிறார். கைட் செய்ய ஆளில்லை. தாயார் தகப்பனாருக்கும் ஒன்றும் தெரியவில்லை.
GUILD OF SERVICE இல் LONDON இல் இருந்து ஸ்பான்சர் செய்யும் நிறுவனம் மூலம் உதவி பிறந்தது. 1996 இல் பிஃப்ரவரி 14 இல் ஆபரேஷன் முடிந்து மூன்றாம் நாள்தான் நினைவு வந்தது. மார்ச்சில் டிஸ்சார்ஜ் ஆகி அஷோக் நகரில் உள்ள உறவினர் வீடு வந்தாச்சு. இதய ஆபரேஷன் சக்சஸ்.. பிழைச்சாச்சு. ஆனா என்ன செய்வதுன்னு தெரியலை. புத்தி பேதலித்தது போல் ஆகிவிட்டது. மூளை வேலை செய்வதில்லை .. யாரிடமும் பேசுவது இல்லை. சாப்பிடுவதில்லை. மெண்டலாகிவிட்டாள் என எல்லரும் நி்னைக்க ஆரம்பித்து விட்டார்கள்.
இந்த ஆபரேஷன் போது கவனித்துக் கொண்ட ஸ்டாஃப் நர்ஸ் ஒருவர் தன் சகோதரி பெந்தகொஸ்தே சபையைச் சேர்ந்த சிஸ்டர் ரெஜினாவிடம் இவரின் ஆபரேஷனுக்குப் பிறகு இவரைப் பார்த்துக் கொள்ள அவரிடம் சேர்ப்பிக்கிறார். அவரிடம் சென்று சேர்ந்த பின் அவரின் அன்பான கவனிப்பில் என்ன செய்தாலும் கோபிக்காமல் நேசிக்கும் நேசிப்பில் இவர் கொஞ்சம் கொஞ்சமாக மாறி விட்டார்.
எனக்கு மட்டும் ஏனிப்படி என்ற கேள்விகள் மனதைக் குடைய அவரிடம் கேட்கும் போதெல்லாம் கடவுள் தேவை இல்லாமல் யாரையும் படைப்பதில்லை என்ற அவரின் அறிவுரையும், வேத புத்தகத்தைக் கொடுத்துப் படிக்கச் செய்வதுமாய் உறுதுணையாய் இருந்திருக்கிறார். அங்கே அவருக்கு நர்சிங் செய்யப் பயிற்றுவிக்கப் பட்டிருக்கிறது. தன் உடல் நலக் குறைவோடு ஏறக்குறைய 10 முதாட்டிகளுக்கு சேவை செய்துள்ளார். பத்துப் பேரும் படுத்த படுக்கையில். அவர்களுக்குக் குளிப்பாட்டுதல் ., உடை அணிவித்தல்., உணவூட்டுதல்., பாட் மாற்றுதல்., தன் நினைவற்றவர்களுக்கு உடல் துடைத்து பாடி ஸோர் வராமல் பவுடர் போடுதல்., மருந்து கொடுத்தல்., என .. இதில் சிலர் கோபித்துக் கொள்வார்கள் . சிலருக்கு சாப்பிட்டதே மறந்து விடும். சாப்பிட்டு பத்து நிமிஷத்தில் சாப்பாடு தரவில்லை என சத்தம் போடுவார்கள்..
எல்லாருடனும் பழகி பக்குவப்பட்டு ., கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் வந்தது. சிஸ்டர் ரெஜினாவின் அன்புதான் அனைத்திற்கும் காரணம் . ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல்., தெரசா போல் சேவை செய்து இருக்கிறார். தனக்கு உடல் நலமில்லாத நிலையிலும். ரெஜினா சிஸ்டர் சம்பளம் கிடைத்தாலும் நீ 4 பேருக்கு சேவை செய்கிறாய் . உன்னால் இத்தனை பேருக்கு உபயோகம் இருக்கிறது பார்.. நீ இருப்பது இறைவனின் விருப்பம். தன் சாட்சியாக அவர் உன்னை வைத்திருக்கிறார். நல்ல வார்த்தை பேசு., கனிவாக பேசு., புன்னகையோடு இரு., சுய இரக்கம் தவிர் என அட்வைஸ் செய்து இருக்கிறார்.
இன்றைக்கு எங்கு வேண்டுமானாலும் செல்லும் அளவு தைரியம்., கிட்டத்தட்ட 15 வருடமாக மருந்து இல்லாம ஜெபம்தான். தான் சுய மீட்சி அடைந்ததாகக் கூறுகிறார். இறையன்பால் ஈர்க்கப்பட்டு உமா., உமாஹெப்சிபா ஆனார். ஹெப்சிபா என்றால் தேவனுடைய மகள் என்று அர்த்தம்.
நிஜமான தேவதையாக இன்று வாழும் இவர் இன்னொரு வீட்டில் கான்சருக்கு ஆபரேஷன் செய்து தற்போது குணமாகி விட்ட ரூபி ஜார்ஜ் அவர்களின் உதவியாளராக 2008 இல் இருந்து பணிபுரிகிறார். அவரு்க்காக., மற்றும் அனைவருக்காகவும் ஜெபித்துக் கொண்டு ..
ஓரளவு வங்கி சேமிப்பு செய்யும் அளவு பொருளாதாரமும் உயர்ந்து விட்டது . போனமாதம் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு ரொம்பத் தீவிரமாகி விட்டது. உடை எல்லாம் மஞ்சளாகும் அளவு. ஜெபத்தின் மூலமும் கீழா நெல்லியை அருந்தியும் குணமடைந்ததாகக் கூறுகிறார். தனக்கு கடவுள் கொடுத்திருப்பது புதிய இதயம்., புதிய ஜீவிதம் எனக் கூறுகிறார். முகமும் அகமும் மலர.
இன்று அந்த துர்க்கை சாந்த சொரூபிணியாய் .. ப்ரகாசமாய்., ஒரு தீபத்திலிருந்து பல தீபங்களை ஒளிரச் செய்தவளாய்.. வாழ்க வளமுடன்.. நலமுடன்..