சுயம்பு மூர்த்திகள் கேள்விப்பட்டிருப்பீர்கள். சுயம்புவாய் உருவான பெண்ணைப் பார்த்திருக்கிறீர்களா..? அவர்தான் மோகனா சோமசுந்தரம்.
ஸ்தலங்களுக்குப் பேர்போன தஞ்சை மாவட்டத்தில் காவிரிக் கரையில் மாயவரம் பக்கம் சோழம்பேட்டையில் பிறந்த இவர் தன்னைத்தானே செதுக்கிக் கொண்ட சிற்பம்.
பணம்., ஜாதி., கடவுள்., இவற்றில் நம்பிக்கையற்ற சுயம்பு. பள்ளி சென்று படித்ததே மிக அதிகம் என்று நினைக்கும் குடும்பத்தில் தன்னைக் கல்லூரியில் படிக்க வைக்க தந்தையிடம் திருமணத்திற்காக தாத்தா வழிச் சொத்தில் தனக்குள்ள பங்கைக் கொடுத்து படிக்க வைக்கக் கேட்டவர். இவர் ஒரு பேராசிரியையாக இருந்து ஓய்வு பெற்றவர் என்றால் வியப்பாயிருக்கும்.
ஆணாதிக்கம் நிறைந்த., அடிப்படை வசதிகளற்ற., ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து., கல்லூரிப் படிப்பை முடித்தபின் (எல்லாவற்றிலும் முதல் மாணவியாய்.. பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ராங்க் பெற்றவர்.) டிகிரியை வாங்கச் செல்லக் கூட., வீட்டில் விடவில்லை.
பி.எஸ்ஸி முடித்து., எம்.எஸ்ஸி அண்ணாமலை யுனிவர்சிட்டியில் படித்து கல்லூரியில் உயிரியல்., தாவரவியல் பேராசிரியையாக இருந்து ஓய்வு பெற்றவர். ஆனாலும் ஓய்ந்து விடாதவர். இவர் பணிகள் எண்ணிலடங்கா. திருமண பந்தம் எல்லாருக்கும் சிறப்பாய் இருப்பதில்லை. எல்லா பிரச்சனைகளும் ., சச்சரவுகளும் தாண்டி., பேராசிரியையாய் மட்டுமல்ல.. பல பதவிகளும் வகித்து., பல புத்தகங்களும் வெளியிட்டு இன்று மார்பகப் புற்றுக்கான அறுவை சிகிச்சை நடக்கும் காலகட்டத்தில் கூட., 4 மாதங்கள் குழந்தைகளுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக ட்ரெயினிங் கொடுத்துவிட்டு., பின் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்கிறார்.
காரைக்குடியில் அழகப்பா பல்கலைக்கழகத்தில் 1971 இல் தற்காலிகமாகப் பணி செய்து இருக்கிறார். பின் பழனி ஆண்டவர் கலை பண்பாட்டுக் கல்லூரியில் 1972 இல் டெமான்ஸ்டேட்டராக சேர்ந்து பேராசிரியை., துணைத்தலைவர்., பின் பொறுப்பு முதல்வராக 2006., 2007 இல் பணி செய்து ஓய்வு பெற்றிருக்கிறார். அவர் பணியில் சேரும் போது இது ஆண்கள் கல்லூரியாக இருந்தது, இதில் பணி புரிந்த ஒரே பெண் இவர்.
மேலும் பல கல்லூரிகளில் ஆசிரியர்களுக்கு சரியான ஊதியம் வழங்கப்படாமலும்., ஏன் ஊதியமே., 4., 5 மாதங்களுக்கு வழங்கப்படாமலும் இருந்து வந்தது. இயல்பிலேயே போராளியான மோகனாம்மா ., இதற்காக ( MUTA) மதுரை காமராஜர் பல்கலைக் கழக ஆசிரியர் மன்றம் மூலமாக போராட்டம் நடத்தி பலமுறை சிறைக்கும் சென்று இன்று நடை முறையில் உள்ள நல்ல சம்பளத்தை தங்கள் இயக்கம் மூலம் பெற்றுத் தந்துள்ளார்.
இதன் பயனாக தனியார் கல்லூரிகளில் கூட அரசு உதவியுடன் ( அட்டானாமஸ் தவிர ) நல்ல சம்பளம் கிடைக்கிறது விரிவுரையாளர்களுக்கு. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் என்ற தன்னார்வல அமைப்பில் அரசுப்பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு அறிவியல் விழிப்புணர்வு ஊட்டுவதில் ஈடுபட்டிருக்கிறார். இதில் போனவருடம் மாநில துணைத்தலைவராக இருந்திருக்கிறார்.
இந்த வருடம் தேசியக் குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் மாநிலக் கல்வி ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார். மத்திய அரசின் அறிவியல் தொழில் நுட்பப்பிரிவும்., இதனுடன் இணைந்து 10 லிருந்து 17 வயது வரையான குழந்தைகளிடம் உள்ள ஆய்வு மனப்பான்மையைத் தூண்டி., 3 மாதம் ட்ரெயினிங் கொடுத்து., ஆய்வை சமர்ப்பிக்கச் செய்து., தகுதிக்கு உரிய குழந்தைகள் முதலில் மாவட்ட வாரியாகத் தேர்வாகி., பின் மாநிலம் வாரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு., பின் தேசிய அளவில் கலந்து கொண்டு., தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு குடியரசுத்தலைவரின் கையால் சர்டிஃபிகேட் வழங்கப்படுகிறது. இதற்கு உடல் நிலை சரியில்லாத போதும் 4 மாதங்கள் ட்ரெயினிங் கொடுத்துவிட்டுத்தான் சிகிச்சைக்குச் சென்றிருக்கிறார்.
உழைப்பின் சக்தியின் முன் நோயின் கடுமை எம்மாத்திரம்..? முடியும் என்றால் எதுவும் முடியும் என்பதற்கு இவர் ஒரு எடுத்துக் காட்டு. அறிவியல் இயக்கத்தின் குழந்தைகளுக்கு இந்த வருடத்துக்கான தலைப்பு நமது நிலவளம். இந்த மாநாடு இந்த வருடம் டிசம்பர் 2., 3., 4., தேதிகளில் நடைபெறும் என்றும்., இதில் நோபல் பரிசு பெற்ற ஐவர் கலந்து கொள்கிறார்கள் என்றும் கூறினார். பெண்களுக்கான மருத்துவம்., சின்னக் குழந்தைகளுக்கான மருத்துவம்., கிராமப்புறக் குழந்தைகளுக்கான புத்தக வெளியீடு., படிக்க வேண்டும் என வருபவர்களுக்கு பண உதவி., வானவியல் நோக்குதல்., சொல்லிக் கொடுத்தல் என இவரின் சேவை பரந்துபட்டது.
மகனுக்கு கலப்புத் திருமணம் செய்திருக்கிறார். கிழக்குப் பதிப்பகத்தின் மூலம் அநேக அறிவியல் புத்தகங்கள் வெளியிட்டு இருக்கிறார். சூரியன் எங்கே போச்சு., இமயமலை., பாலைவனங்கள்., அமேசான்., முதலியன.
பாரதி புத்தக நிலையத்தின் மூலம் உடல் உறுப்புக்கள்., எதிர்பாராத கண்டுபிடிப்பு., வேதியல் கதைகள் வெளியாகி இருக்கின்றன.
அறிவியல் இயக்கத்துக்காக நமக்காக ஒரு நிமிடம்., அறிவியல் புனை கதைகள்., போரின் பிடியில் பிஞ்சுகள்., நலம் நம் கையில் ., என்றும் இளமை., வேட்டையாடு., விளையாடு வெளி வந்திருக்கின்றன.
இவர் எழுதிய சமூகநலக் கல்வி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பி. ஏ., பி . எஸ்ஸி படிப்பவர்களுக்கு பாடமாக வைக்கப்பட்டுள்ளது.
கொழுப்புச் சத்துக்களற்று காய்கறி., பழங்கள் மட்டுமே சாப்பிட்டும் காரணமற்று வரும் மார்பகப் புற்று பற்றியும் இவர் நிறையக் கூறினார். முன்பு 50 வயதுக்கு மேல் வந்த புற்று நோய் தற்போது 30 வயதிலும் பெண்களுக்கு வருவதாகவும் அது பற்றிய விழிப்புணர்வு பெண்களுக்கு வரவேண்டும் எனவும் கூறினார்.
எது வந்தால் என்ன ..? சாதிக்க மன உறுதி மட்டும் இருந்தால் போதும் என நினைக்க வைத்த சக்தி மிக்க பெண்மணி மோகனா சோமசுந்தரம் அவர்கள்.
டிஸ்கி..1..:- என்னுடைய இரண்டாவது கட்டுரை மோகனா சோமசுந்தரம் பற்றி போராடி ஜெயித்த பெண்கள் என்ற தலைப்பில் நவம்பர் மாத லேடீஸ் ஸ்பெஷலில் வெளிவந்துள்ளது.
டிஸ்கி ..2...:- என்னுடைய முதல் கட்டுரை தைர்யலெக்ஷ்மி ..ரம்யாதேவி பற்றி





