வெள்ளி, 26 நவம்பர், 2010

சுயம்புவாய் உருவான பெண் (2) ... மோகனா சோமசுந்தரம்..

சுயம்பு மூர்த்திகள் கேள்விப்பட்டிருப்பீர்கள். சுயம்புவாய் உருவான பெண்ணைப் பார்த்திருக்கிறீர்களா..? அவர்தான் மோகனா சோமசுந்தரம்.

ஸ்தலங்களுக்குப் பேர்போன தஞ்சை மாவட்டத்தில் காவிரிக் கரையில் மாயவரம் பக்கம் சோழம்பேட்டையில் பிறந்த இவர் தன்னைத்தானே செதுக்கிக் கொண்ட சிற்பம்.

பணம்., ஜாதி., கடவுள்., இவற்றில் நம்பிக்கையற்ற சுயம்பு. பள்ளி சென்று படித்ததே மிக அதிகம் என்று நினைக்கும் குடும்பத்தில் தன்னைக் கல்லூரியில் படிக்க வைக்க தந்தையிடம் திருமணத்திற்காக தாத்தா வழிச் சொத்தில் தனக்குள்ள பங்கைக் கொடுத்து படிக்க வைக்கக் கேட்டவர். இவர் ஒரு பேராசிரியையாக இருந்து ஓய்வு பெற்றவர் என்றால் வியப்பாயிருக்கும்.

ஆணாதிக்கம் நிறைந்த., அடிப்படை வசதிகளற்ற., ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து., கல்லூரிப் படிப்பை முடித்தபின் (எல்லாவற்றிலும் முதல் மாணவியாய்.. பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ராங்க் பெற்றவர்.) டிகிரியை வாங்கச் செல்லக் கூட., வீட்டில் விடவில்லை.

பி.எஸ்ஸி முடித்து., எம்.எஸ்ஸி அண்ணாமலை யுனிவர்சிட்டியில் படித்து கல்லூரியில் உயிரியல்., தாவரவியல் பேராசிரியையாக இருந்து ஓய்வு பெற்றவர். ஆனாலும் ஓய்ந்து விடாதவர். இவர் பணிகள் எண்ணிலடங்கா. திருமண பந்தம் எல்லாருக்கும் சிறப்பாய் இருப்பதில்லை. எல்லா பிரச்சனைகளும் ., சச்சரவுகளும் தாண்டி., பேராசிரியையாய் மட்டுமல்ல.. பல பதவிகளும் வகித்து., பல புத்தகங்களும் வெளியிட்டு இன்று மார்பகப் புற்றுக்கான அறுவை சிகிச்சை நடக்கும் காலகட்டத்தில் கூட., 4 மாதங்கள் குழந்தைகளுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக ட்ரெயினிங் கொடுத்துவிட்டு., பின் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்கிறார்.

காரைக்குடியில் அழகப்பா பல்கலைக்கழகத்தில் 1971 இல் தற்காலிகமாகப் பணி செய்து இருக்கிறார். பின் பழனி ஆண்டவர் கலை பண்பாட்டுக் கல்லூரியில் 1972 இல் டெமான்ஸ்டேட்டராக சேர்ந்து பேராசிரியை., துணைத்தலைவர்., பின் பொறுப்பு முதல்வராக 2006., 2007 இல் பணி செய்து ஓய்வு பெற்றிருக்கிறார். அவர் பணியில் சேரும் போது இது ஆண்கள் கல்லூரியாக இருந்தது, இதில் பணி புரிந்த ஒரே பெண் இவர்.

மேலும் பல கல்லூரிகளில் ஆசிரியர்களுக்கு சரியான ஊதியம் வழங்கப்படாமலும்., ஏன் ஊதியமே., 4., 5 மாதங்களுக்கு வழங்கப்படாமலும் இருந்து வந்தது. இயல்பிலேயே போராளியான மோகனாம்மா ., இதற்காக ( MUTA) மதுரை காமராஜர் பல்கலைக் கழக ஆசிரியர் மன்றம் மூலமாக போராட்டம் நடத்தி பலமுறை சிறைக்கும் சென்று இன்று நடை முறையில் உள்ள நல்ல சம்பளத்தை தங்கள் இயக்கம் மூலம் பெற்றுத் தந்துள்ளார்.

இதன் பயனாக தனியார் கல்லூரிகளில் கூட அரசு உதவியுடன் ( அட்டானாமஸ் தவிர ) நல்ல சம்பளம் கிடைக்கிறது விரிவுரையாளர்களுக்கு. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் என்ற தன்னார்வல அமைப்பில் அரசுப்பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு அறிவியல் விழிப்புணர்வு ஊட்டுவதில் ஈடுபட்டிருக்கிறார். இதில் போனவருடம் மாநில துணைத்தலைவராக இருந்திருக்கிறார்.

இந்த வருடம் தேசியக் குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் மாநிலக் கல்வி ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார். மத்திய அரசின் அறிவியல் தொழில் நுட்பப்பிரிவும்., இதனுடன் இணைந்து 10 லிருந்து 17 வயது வரையான குழந்தைகளிடம் உள்ள ஆய்வு மனப்பான்மையைத் தூண்டி., 3 மாதம் ட்ரெயினிங் கொடுத்து., ஆய்வை சமர்ப்பிக்கச் செய்து., தகுதிக்கு உரிய குழந்தைகள் முதலில் மாவட்ட வாரியாகத் தேர்வாகி., பின் மாநிலம் வாரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு., பின் தேசிய அளவில் கலந்து கொண்டு., தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு குடியரசுத்தலைவரின் கையால் சர்டிஃபிகேட் வழங்கப்படுகிறது. இதற்கு உடல் நிலை சரியில்லாத போதும் 4 மாதங்கள் ட்ரெயினிங் கொடுத்துவிட்டுத்தான் சிகிச்சைக்குச் சென்றிருக்கிறார்.

உழைப்பின் சக்தியின் முன் நோயின் கடுமை எம்மாத்திரம்..? முடியும் என்றால் எதுவும் முடியும் என்பதற்கு இவர் ஒரு எடுத்துக் காட்டு. அறிவியல் இயக்கத்தின் குழந்தைகளுக்கு இந்த வருடத்துக்கான தலைப்பு நமது நிலவளம். இந்த மாநாடு இந்த வருடம் டிசம்பர் 2., 3., 4., தேதிகளில் நடைபெறும் என்றும்., இதில் நோபல் பரிசு பெற்ற ஐவர் கலந்து கொள்கிறார்கள் என்றும் கூறினார். பெண்களுக்கான மருத்துவம்., சின்னக் குழந்தைகளுக்கான மருத்துவம்., கிராமப்புறக் குழந்தைகளுக்கான புத்தக வெளியீடு., படிக்க வேண்டும் என வருபவர்களுக்கு பண உதவி., வானவியல் நோக்குதல்., சொல்லிக் கொடுத்தல் என இவரின் சேவை பரந்துபட்டது.

மகனுக்கு கலப்புத் திருமணம் செய்திருக்கிறார். கிழக்குப் பதிப்பகத்தின் மூலம் அநேக அறிவியல் புத்தகங்கள் வெளியிட்டு இருக்கிறார். சூரியன் எங்கே போச்சு., இமயமலை., பாலைவனங்கள்., அமேசான்., முதலியன.

பாரதி புத்தக நிலையத்தின் மூலம் உடல் உறுப்புக்கள்., எதிர்பாராத கண்டுபிடிப்பு., வேதியல் கதைகள் வெளியாகி இருக்கின்றன.

அறிவியல் இயக்கத்துக்காக நமக்காக ஒரு நிமிடம்., அறிவியல் புனை கதைகள்., போரின் பிடியில் பிஞ்சுகள்., நலம் நம் கையில் ., என்றும் இளமை., வேட்டையாடு., விளையாடு வெளி வந்திருக்கின்றன.

இவர் எழுதிய சமூகநலக் கல்வி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பி. ஏ., பி . எஸ்ஸி படிப்பவர்களுக்கு பாடமாக வைக்கப்பட்டுள்ளது.

கொழுப்புச் சத்துக்களற்று காய்கறி., பழங்கள் மட்டுமே சாப்பிட்டும் காரணமற்று வரும் மார்பகப் புற்று பற்றியும் இவர் நிறையக் கூறினார். முன்பு 50 வயதுக்கு மேல் வந்த புற்று நோய் தற்போது 30 வயதிலும் பெண்களுக்கு வருவதாகவும் அது பற்றிய விழிப்புணர்வு பெண்களுக்கு வரவேண்டும் எனவும் கூறினார்.

எது வந்தால் என்ன ..? சாதிக்க மன உறுதி மட்டும் இருந்தால் போதும் என நினைக்க வைத்த சக்தி மிக்க பெண்மணி மோகனா சோமசுந்தரம் அவர்கள்.

டிஸ்கி..1..:- என்னுடைய இரண்டாவது கட்டுரை மோகனா சோமசுந்தரம் பற்றி போராடி ஜெயித்த பெண்கள் என்ற தலைப்பில் நவம்பர் மாத லேடீஸ் ஸ்பெஷலில் வெளிவந்துள்ளது.
டிஸ்கி ..2...:- என்னுடைய முதல் கட்டுரை தைர்யலெக்ஷ்மி ..ரம்யாதேவி பற்றி

கீதா ஜீவன்.. சமூக நலத்துறையின் ஜீவன்..




கீதா ஜீவன் சமுக நலத்துறை அமைச்சர் என்று சொல்வதை விட அதன் ஜீவன் என்று சொல்லலாம். தி. மு. க வின் மிகப் பெரும் தூணாயிருக்கும் பெரியசாமி அவர்களின் புதல்வி. மாநில அமைச்சர் என்ற பந்தா சிறிதும் இல்லாமல் நமது சகோதரி போல தோற்றத்திலும் எளிமையிலும் கவர்கிறார்.

எதிர்பார்க்கவில்லை இப்படி ஒரு சந்திப்பை., இவ்வளவு எளிதாய் ஒரு அமைச்சரை பக்கத்தில் சந்திக்க இயலும் என. கிரிஜாம்மாவுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். அவர்கள் ஏற்பாடு செய்திருந்த நவராத்திரி அங்காடியில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் ஒரு கருத்தரங்க்ம் நடைபெற்றது. அதில் சுய உதவிக் குழுப் பெண்கள் எதிர் கொள்ளும் சமூகப் பிரச்சனைகள் என்ற தலைப்பில் பேச கிரிஜாம்மா எனக்கு ஒரு வாய்ப்பு அளித்தார்கள்.

எக்ஸ்னோரா தலைவி திருமதி சுலோசனாவின் வேண்டுகோளுக்கிணங்க கிரிஜாம்மா ஏற்பாடு செய்திருந்த நவராத்திரி அங்காடியில் ( கிரிஜாம்மா அமைச்சரை போனில் இவ்விழாவுக்கு வரும்படி அழைத்திருந்தார்களாம். ) வருகை புரிந்த அமைச்சரைப் பார்த்து வியந்தோம். முதல் ஆச்சர்யம் அது. ஏனெனில் அமைச்சர் வந்துவிட்டார் என்றால் எல்லா இடங்களிலும் இடம் பெறும் பந்தா என்னவென்று அறிவோம். ஆனால் வந்த சுவடே தெரியாமல் அங்காடியில் இருந்த பெண்களோடு பேசியபடி மிக எளிமையாக வந்தார்.

அனைவரும் பேசும்போதும் மிக அழகாய்ப் புன்னகைத்தபடி ஆமோதித்து கவனித்தார். உயர்ந்த நிலையில் இருக்கும் சிலரிடம் மட்டுமே காணக்கூடிய குணம் இது.

எல்லாவற்றையும் கவனித்து உள்வாங்கிக் கொண்டார். இரண்டாவது ஆச்சர்யம் இது.

மூன்றாவது அவரின் பணிகள்.. தொழுநோயாளிகளுக்கு., ரேஷன் கடை ஊழியர்களுக்கு., விதவைப் பெண்களுக்கு., அங்கன்வாடி ஊழியர்களுக்கு., என அவர் புரிந்துள்ள சேவை எண்ணில் அடங்கா.. சமூகத்தின் ஆணி வேரான பிரச்சனைகளை எளிதாய்க் கையாளும்., எளியோருக்கும் எளியோரான அமைச்சர் கீதா ஜீவனிடம் இத்துறையைக் கொடுத்தது தி மு க அரசுக்கும் பெருமைக்குரிய செயல்.
நான்காவதுதான் மிகச் சிறப்பு . அவரின் பேச்சுத்திறன். மகா கவியின் வாக்குகள் ஒவ்வொன்றாய் நிறைவேறி வருவதைக் குறிப்பிட்டார்.” பட்டங்கள் ஆள்வதும் ., சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்தவந்தோம்.,” என்று அவர் சொன்னது நிறைவேறி உள்ளது இன்று.

இன்று படிப்பறிவில்லாத பெண்களைக் காண்பது அரிது. என்றும் மேலும் ”எட்டுமறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காண் என்று கும்மியடி ” என்று மகாகவி சொன்னதுபோல் பெண்கள் எல்லாத்துறையிலும் முன்னேறி வருகிறார்கள். அவரின் வாக்கு எல்லாம் சத்திய வாக்குப் போல பலித்து வருகிறது என அமைச்சர் கூறினார்கள்.

அமைச்சரின் பேச்சுத்திறன் தி மு க உயர்மட்டத்தாலேயே கவனித்துப் பாராட்டப்பட்ட ஒன்று. அடிப்படையில் எம். எஸ். சி ., பி. எட்., பட்டதாரியான் இவர் மூன்று பள்ளிகளையும் நிர்வகித்து வருகிறார். பள்ளி நிர்வாகி., பஞ்சாயத்துத் தலைவர்., அமைச்சர் என்று எந்தப் பதவியில் இருந்தாலும் சிறப்பாகப் பணி புரிவது இவரின் வழக்கம்.

இரண்டு நாட்கள் சென்னையிலும் ., ஐந்து நாட்கள் தொகுதியிலும் பம்பரமாகப் பணிபுரிந்து வருகிறார். கிடைத்த இரண்டு நாட்களிலும் கட்சிப் பணிகளை முடித்துவிட்டு நமது கருத்தரங்கைத் தலைமை தாங்க நேரம் ஒதுக்கி இருந்தார்.

கிரிஜாம்மாவின் நிகழ்ச்சிகளைப் பொதிகையில் பார்த்திருப்பதாகக் கூறினார். இவரின் எளிமை ஒன்றே இவரின் எல்லாப் பெருமைகளுக்கும் காரணம். அமைச்சர் என்பவர் பொதுமக்கள் அணுகக் கூடியவராய் இருத்தல் வேண்டும் . அந்த வகையில் இவர் எளிதில் அணுகக் கூடியவராய் இருக்கிறார். இதே இவரின் சிறப்புக்களுக்கும் காரணம். இன்னும் சிறப்புக்கள் பல அடைய லேடீஸ் ஸ்பெஷல் சார்பாக வாழ்த்துக்கள்..

டிஸ்கி..1..:- இந்தக் கட்டுரை லேடீஸ் ஸ்பெஷல் இதழுக்காக எழுதப்பட்டது.. நவம்பர் மாத லேடீஸ் ஸ்பெஷலில் 48., 49 ஆம் பக்கங்களில் வெளிவந்துள்ளது.
டிஸ்கி .. 2.. :- நமது மண்., நமது பாரம்பரியம் என்ற விருது கொடுத்த தம்பி சௌந்தருக்கு நன்றி..

வியாழன், 25 நவம்பர், 2010

ப்ரக்ஞை..

இருப்புத் துருவும்
எண்ணங்களூடே
பயணத்தில்...
இருப்பற்றுக் கிடப்பது...
எதாகவாவது..

யாதுமாய்.., அற்றதாய்..,
செவிப்பறையில்
சத்தமற்ற சத்தம்..
கண்ணுள் ஒளியற்ற ஒளி..
நாசியும்., நாவும்., மெய்யுமாய்..
வெளியற்ற வெளி..

யானெதற்கு...
இறையெதற்கு.,
இருப்பெதற்கு.,
உணவெதற்கு..

சலிப்புற்றுக் கவிழ்தலில்
சகலமும் நின்று
ஞானமுற்றதாய்
ப்ரம்மையில்..

பிரக்ஞையற்ற
நிகழ்வெளியில்...
வெளி., உள்ளில் துழாவி..
எல்லையற்ற அதாகி...

ஆவியடங்கி
அதைச் சேரத் துடிக்கும்
அதற்ற அதுவாகி

உயிர்க்க உண்ணும் யானாகி.,
உயிர்த்து உறையும் நானாகி.,
பிழையுற்றுக் குறையுற்றுக்
கிடக்கும் ப்ரக்ஞை...

டிஸ்கி :- இந்தக் கவிதை நவம்பர் 21., 2010 திண்ணையில் வெளிவந்துள்ளது..

புதன், 24 நவம்பர், 2010

அன்ன பட்சி..

பேசத்துவங்குமுன்னே
முடிவுக்கு வந்து விடுகின்றன..
நம் உரையாடல்கள்...

கடலுக்குள் மூழ்கிய கப்பல்களாய்
ஒரு கனவுக்குள் ஆழ்கிறது
உன் கண்கள்..

அவ்வப்போது கலங்கரை
விளக்காய் என் கண்
தேடியலைந்து..

புன்னகைக் கையெழுத்தோடு
பூங்கொத்தாய் என்னைத்தர..
பூக்கும் இதழ் கிள்ளும்
பிள்ளை விளையாட்டில் நீ...

மொக்காய் இருந்த
வார்த்தைப் பூக்கள்
நாம் பேசியபின்
போதவிழத் தொடங்கி..
பூக்காட்டுக்குள் நாம்..

இழுத்துச் செருகின
திரைச்சீலையாய்..
இறுகிக் கிடந்த இமைகள்
உன் வருகைக் காற்றில் படபடத்து..

வெட்கத்தில் தாழத் தொங்குகின்றன
திரைகளைப் போல இமைகள்..
திரும்ப அடங்கி..

என்னன்னவோ எழுதினேன்
உன்னைச் சந்திக்குமுன்..
பின் உன்னை மட்டும் எழுதினேன்..
உன் அல்லதையும் நல்லதாக்கி
அருந்தும் அன்னபட்சி நான்..

டிஸ்கி:- இந்தக் கவிதை நவம்பர் 21., 2010 திண்ணையில் வெளிவந்துள்ளது..

டிஸ்கி:- எங்கள் அன்பிற்குரிய சகுந்தலா மாமிக்கு இன்று 60 வது பிறந்தநாள்..
யுனைடட் ஸ்டேட்ஸில் இருக்கும் அவர்களின் ஆசீர்வாதம் வேண்டி வணங்குகிறேன்.. வாழ்க வளமுடன் ., நலமுடன்..:))

திங்கள், 22 நவம்பர், 2010

மந்திரப் புன்னகை.. எனது பார்வையில்.

மந்திரப் புன்னகை.. நல்ல மர்மம் கொண்ட புன்னகைதான்... புதிதாக ஹீரோவாயிருக்கும் கரு. பழனியப்பனுக்கு.. நல்ல திராவிட நிறம் கொண்ட வெகு இயல்பான ஹீரோ.. நிச்சயம் இந்தக் கதையில் இவரால்தான் சிறப்பாக செய்ய முடியும்.. என்ன., இவர் வசனம் போல பேச்சுத்தான் பலமும்... சொற்ப இடங்களில் பலகீனமும்.

பார்த்திபன் கனவு படைத்த பழனியப்பன்தானா இது என்ற எண்ணம் கூட முதலில் வந்தது.. ஆனால் இது வேறு களம்.. வேறு ஆட்டம்.. மனச்சிதைவு.. ஆனால் இப்படி கண்டிநியுவஸாக ஒரு ஹோட்டலின் மேல் மாடிவரை செல்வதும் பார்ப்பதும் முடியுமா என்ன..?

முதல் கொஞ்ச சீன்கள் கலாசார அதிர்ச்சியாய் இருந்தது.. அழகிய தவறு என்று புத்தக அட்டை வேறு சிம்பாலிக்காக.. அடுத்து அவரின் வசனங்கள் ...பேனாக்கத்தி போல கூர்மை.. சேரன் படம் போல என ஒரே வார்த்தையில் சொல்ல முடியாது.. ஏனெனில் சேரன் படங்களில் இரட்டை அர்த்த வசனங்கள் கிடையாது.. சேரனைப் போல நல்லதைத் தர நினைக்கும் ஒரு ஹீரோ., இந்த வசனங்களைத் தவிர்த்திருக்கலாம்.. ஆனால் நிறைய இடங்களில் ஆண்கள் கைதட்டி ரசிக்கிறார்கள்..

ஹீரோவின் மனநிலை பாதிப்பு... பாதிப் படம் முடியும் போதுதான் தெரிய வருகிறது.. தன் தந்தையிடம் அவர் பேசும் காட்சிகள் எல்லாம் தத்ரூபம்.. நிஜமாய் இருப்பது போல்.. காதலியைக் கொல்லும் இடங்களில் கூட ரத்தச் சகதி தெறிப்பது போல் இருக்கிறது நமக்கு..

”தாய்மை என்பது தகுதி இல்லை அது ஒரு நிலைமைதான்” என்ற பாலகுமாரனின் பச்சை வயல் மனது ஞாபகம் வந்தது கதாநாயகன் கதிரின் பேச்சில்..


தண்ணியடிப்பதும்., பெண்களிடம் செல்வதும் ., இயல்பான ஒருவன் தனக்கு வரும் மனைவி மட்டும் குற்றமற்றவளாக இருக்க வேண்டும் என நினைக்கிறான்.. எல்லா ஆண்களின் மனோபாவமும் இது.. இதற்கு டாக்டர் சொல்லும் வசனம்.. “ஏன் நீ செய்யலாம்.. அவ செய்யக் கூடாதா..”

கைது செய்யப்பட்டு வேனில் செல்லும் போது போலீஸ்காரரிடம் புகைக்க சிகரெட் கேட்கும் காட்சியில் மனிதர்கள் பழக்கங்களுக்கு எவ்வளவு அடிமை ஆகி இருக்கிறார்கள் என உணர்த்துகிறார்..


முழுக்க முழுக்க கதிரின் ஆதிக்கம் படம் முழுவதும்.. சந்தானம்., மகேஸ்வரி., மீனாட்சி., ரிஷி ., தம்பி ராமையா எல்லாரும் மிகவும் இயல்பாக நடிக்கிறார்கள்.. கரு. பழனியப்பனை விட மீனாட்சி வசனம் பேசுவதும் நடிப்பதும் வெகு இயல்பு.. புடவையை விட மாடர்ன் உடைகளில் க்ளாமராக இருக்கிறார்..மீனாட்சி..

இந்திரா பிக்சர்ஸின் படம்., வித்யா சாகர் இசை ., ராம்நாத் ரெட்டியின் காமிரா., அறிவுமதி., யுகபாரதியின் பாடல்கள் அருமை..

வசனம் பாஸ்கர் சக்தி.. குங்குமத்தில் இவரின் கதைகள் படித்த ஞாபகம். அந்த பாஸ்கர் சக்தி இவர்தானா .. தெரியவில்லை..

என்னைக் கவர்ந்த வசனங்கள்..

காரணமே இல்லாம பார்க்க வர்றது., பேசணும்னு நினைக்கிறது இதுக்கு பேர்
காதல்..

என்னை ஆண்டவன் தப்பா படைச்சிட்டான் .. மேனுஃபாக்சரிங் டிஃபெக்ட்..

எந்தப் புருஷனும் தன் மனைவிகிட்ட தினமும் சோறு நல்லா இருக்கு., இட்லி நல்லா இருக்கு., ரசம் நல்லா இருக்குன்னு பாராட்டிக்கிட்டு இருக்க மாட்டான்..

உங்க அம்மா ஏன் பிரிஞ்சு போனாங்கன்னு உனக்கு எப்பிடித் தெரியலையோ.. அது மாதிரித்தான் எனக்கும் நான் ஏன் இன்னும் உன் கூட ஒட்டிக்கிட்டு இருக்கேன்னு தெரியல..

கொடுமையைத் தாங்க முடியாதவங்க இருக்கலாம்.. கோபத்தைத் தாங்க முடியாதவங்க இருக்கலாம்.. அநியாயத்தைத் தாங்க முடியாதவங்க இருக்கலாம்.. ஆனா அன்பைத் தாங்க முடியாதவங்க இருக்க முடியுமா.. ஆனா உன்னால என் அன்பைத் தாங்க முடியல.. அதான் பிரிஞ்சு போறே. அதுனாலதான் காதலிக்கிறேன்..

அப்புறம் முக்கியமான விஷயம் இந்தப் படத்தில் எங்கள் முகப் புத்தகத் தோழர்., எல்லாராலும் ஜாமூன் என்று செல்லமாக அழைக்கப் படும் ( குலோப் ஜாமூன் விளம்பரத்தில் நடித்ததால் இந்தப் பேரு..) நிதிஷ் குமார்.... இதில் கார் வாங்க வரும் வாடிக்கையாளராக நடித்திருக்கிறார்.. மிக அருமையான மனிதர்.. ஆனால் படத்தில் ஜொள்ளு பார்ட்டியாக கதா பாத்திரம்.. அதிலும் கலக்கிட்டார் நிதிஷ்.. நிதிஷ் வாழ்த்துக்கள்....

நேற்று நானும் என் கணவரும் அம்பாவில் பி.வி.ஆர் ஆடி 1 இல் மந்திரப் புன்னகையில் நிதிஷ் நடித்திருக்கிறார் என்பதே தெரியாமல் பார்க்கச் சென்றோம்.. பார்த்தவுடன் அவரின் புன்னகை எங்கள் இருவருக்கும் தொற்றிக் கொண்டது.. இன்னும் நிறையப் படங்கள் வெளிவர வாழ்த்துக்கள் நண்பரே..

கரு. பழனியப்பன் நல்ல படம் .. எழுத்தின் வசியம் அருமை.. பெரிய நிறுவனங்களே விளம்பரங்களை நம்பி இருக்கும் நிலையில் தியேட்டரில் பெரும் பகுதி உங்கள் வசனங்களுக்காகவே ரசிக்கிறார்கள்.. உங்களிடம் படைப்பாக்க நெருப்பு இருக்கிறது .. கொஞ்சம் கவனமாக உபயோகப் படுத்துங்கள்.. வாழ்த்துக்கள்..

வெள்ளி, 19 நவம்பர், 2010

மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்..


திரு பாலு சத்யா என்ற எழுத்தாளரின் மார்ட்டின் லூதர் கிங் பற்றிய ஒரு நூல் ,” கறுப்பு வெள்ளை” என்ற பெயரில் வெளிவந்துள்ளது.. சென்ற வாரம் காந்தி கல்வி நிலையத்தில் திரு வெங்கட்ராமனால் புத்தகம் பற்றிய விமர்சனம் நடைபெற்றது.. ( வாரம் தோறும் ஒரு புத்தகம் விமர்சிக்கப் படுகிறது.) அதில் எனக்கு ஏற்பட்ட எண்ணங்களைத் தொகுத்துள்ளேன்.. ( The Sources Gandhism in Martin Luther King Junior) என்ற புத்தகமும் படிக்கக் கிடைத்தது.. மேலும் பல வலைத்தளங்களும் அறிய உதவின.
நாற்பது வருடங்களுக்குமுன் ஒரு வெள்ளையரல்லாதவரை அமெரிக்க அதிபராக நினைத்திருக்க முடியாது.. இன்று அது சாத்யமாகி இருக்கிறது. மக்களின் எண்ணங்களில் நல்ல மாற்றங்கள்.. முக்கியமானது நிறம் என்பது மனிதர்களின் தரத்தை நிர்ணயிப்பதல்ல என்பது..
அவதார புருஷர்கள் பிறப்பதும்... அவர்கள் வாழும் காலமும் குறைவுதான்.. ஆனால் அவர்கள் ஏற்படுத்திச் சென்ற விளைவுகள் என்றென்றும் நீடித்திருக்கக் கூடியன.. நிற வேற்றுமை இன்றும் கொடிகட்டிப் பிறக்கும் காலகட்டத்தில்.., 1929 இல் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் பிறந்த காலகட்டத்தில்., கறுப்பின மக்கள் கொத்தடிமைகளாக நடத்தப்பட்டதன்
வலியோடு தொடங்குகிறது புத்தகம்..
அடிமைகள் விற்பனைக்கு என்ற பெயரில் நீக்ரோக்கள் அடிமைப்படுத்தப்பட்டு மொட்டையடித்துப் பச்சை குத்தி., திடகாத்திரமானவர்கள்தானா என அறிய அவர்களைக் குத்திப் பார்த்து., கிள்ளிப் பார்த்து., எலும்புகளை தட்டிப் பார்த்து., வாங்கப் பட்டிருக்கிறார்கள்..
அடிமை முறை ஆதரிக்க சட்டமே இருந்தது.. தப்பியோடும் அடிமைகளைப் பிடித்துக் கொடுப்போருக்கு பரிசும் வழங்கப்பட்டது.. அடிமைகளிடன் நன்கு உழைப்பை வாங்கிக் கொண்டு உப்பு கலந்த பொரியும்., குதிரைகளுக்குக் கொடுக்கும் கொள்ளும் உணவாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. கேட்கும் போதே ரத்தம் கொதிக்கிறது அல்லவா..
இந்த சூழ்நிலையில் மார்ட்டின் லூதர் கிங் அட்லாண்டாவில் பிறந்தார். தந்தை மத போதகராயிருந்ததால் அன்பு என்ற நல்ல பண்பு போதிக்கப் பட்டது. அவரின் சிறுவயதில் நடந்த மூன்று நிகழ்வுகள் அவரை வெள்ளையரை வெறுப்பது என்ற முடிவுக்குத் தள்ளுகின்றன. ஆனால் பெற்றோரின் போதனையோ அனைவரையும் நேசிப்பது..
வெள்ளையர் படிக்கும் பள்ளிகளில் கறுப்பின மக்களுக்கு அனுமதி இல்லை.. அரசாங்கம் வெள்ளையின மக்களுக்காக அதிகம் செலவு செய்தது. கறுப்பின சிறார்கள் தினமும் பலமணி நேரம் பயணம் செய்து பள்ளி சென்று படிக்க வேண்டும். கறுப்பின மக்களுக்கு ஹோட்டல்களில் அனுமதி இல்லை. பஸ்களில் கூட முதல் நான்கு இருக்கைகளில் வெள்ளையர்தான் அமரவேண்டும். என்ன கொடுமை இது.
பாதிரியாராகவும்., ஆசிரியராகவும் பணியாற்றிய இவர் மஹாத்மாவின் அஹிம்சை வழி முறைப் போராட்டம் பற்றி படிக்க நேருகிறது. ஒரு முறை பேச்சுப் போட்டியில் , “ நீக்ரோவும் அரசாங்கமும் “, என்ற தலைப்பில் பேச நின்றுகொண்டே பயணம் செய்ய வேண்டி இருந்தது. டிசம்பர் 1955 இல் பஸ் புறக்கணிப்புப் போராட்டக் குழுவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் படுகிறார்.
மாண்ட்கோமெரி., அலாபாமாவில் நீக்ரோக்கள் பஸ்ஸின் முன்னிருக்கையில் அமர தடை செய்யப் படுவது குறித்து காந்திய முறையில் எதிர்த்து., பஸ்ஸை புறக்கணித்து ஏறத்தாழ 381 நாட்கள் போராட்டம் நடைபெற்றது.. அதை ஆதரித்த ஜூலியட் மோர்கன் என்ற வெள்ளைப் பெண்மணி அடைந்த துயருக்கு அளவில்லை. அந்த அளவு இன வெறியும் நிறவெறியும் தலை விரித்து ஆடிக்கொண்டிருந்தது. தற்கொலை செய்யுமளவு அவரைத் தூண்டியது. இத்தனைக்கும் காரணம் காந்தைய முறையிலான அஹிம்சைப் போராட்டத்தை ஆதரித்து அவர் பத்ரிக்கைக்கு எழுதிய ஒரு கடிதம்.
நாம் வன்முறையில் ஈடுபடக்கூடாது. நம் எதிரிகளை நேசிக்க வேண்டும். நாம் நேசிக்கிறோம் என்பது நம் எதிரிகளுக்குத் தெரிய வேண்டும். இதுவே இந்த சமயங்களில் மார்ட்டினின் வார்த்தைகளாய் இருந்தன. தினமும் அரசாங்கம் பலரைக் கைது செய்து சிறையில் அடைத்தது. அப்போது மார்ட்டின் சொன்னது., “ ஒரு போதும் வெறுப்புக் காட்டாதீர்கள். தொடர்ந்து நாம் கைது செய்யப் பட்டாலும்., வன்முறைக்கு உட்பட்டாலும்., அன்பு என்னும் ஆயுதத்தையே உபயோகியுங்கள். நாம் நம்மை வெறுப்பவர்களையும் நேசிக்கவும்., புரிந்துகொள்ளவும் வேண்டும்.
ஒரு முறை சர்ச்சில் இருந்தபோது அவருக்கு.,” மார்ட்டின் நீதிக்காக எழுந்து நில். உரிமைக்காக எழுந்துநில். நான் உன்னுடன் இறுதிவரை இருப்பேன்..”, என்ற குரல் கேட்டது. அவருக்கு இரண்டு மூன்று முறை வெடிகுண்டு மிரட்டல்., போனில் மிரட்டல்., மனநிலை பாதித்த பெண் பேனாக்கத்தியால் குத்த முயன்றது., என பல தொந்தரவுகள் வந்த போதும்., ஆயுதமேந்திய காவலர்களை வைத்துக் கொள்ள மறுத்துவிட்டார். அஹிம்சை ஒன்றே ஜெயிக்கும் என்ற ஆழ்ந்த நம்பிக்கை அவர் மனதில் வேரூன்றி இருந்தது.
பஸ் போராட்டம் முடிவுக்கு வந்து ரோசா பார்க் என்ற பெண்மணி முன்னிருக்கையில் அமர., ஒரு நீக்ரோ ட்ரைவரால் பஸ் இயக்கப்பட்டு., போராட்டம் முடிவுக்கு வந்தது. இது பெரிய சாதனை. அடிமையாக வாழ்ந்தவருக்குத்தான் அதன் சுதந்திரமும் புரியும்.
கொள்கைகளால் மட்டுமே ஈர்க்கப்பட்டு காந்தியை நேரில் கண்டிராத மார்ட்டின் ஒரு முறை இந்தியாவுக்கு வந்திருக்கிறார். ராஜேந்திர ப்ரசாத்., ஜெயப்ரகாஷ் நாராயண் ., போன்ற தலைவர்களையும் காந்தி ஆஸ்ரமத்தையும் பார்த்துச் சென்றிருக்கிறார். நம் மக்களைப் பார்த்தவுடன் தன் மக்களைப் போலவே சகோதரர்களாக உணர்ந்திருக்கிறார். நல்ல எண்ணங்களுக்குத்தான் எவ்வளவு வலிமை. அவை நினைக்கப்படும்போதே விதைக்கப்படுகின்றன.
"OUR STRUGGLE"., " MY TRIP TO THE LAND OF GANDHI "., "PILGRIMAGE TO NONVIOLENCE"., " WALK FOR FREEDOM"., " FACING THE CHALLENGE OF NEW AGE " ., " NON VIOLENCE AND RACIAL JUSTICE"., " STRIDE TOWARDS FREEDOM"., " SHOWDOWN FOR NON VIOLENCE"., " THE QUEST FOR PEACE AND JUSTICE"., இவை மார்ட்டின் லூதர் கிங்கின் நூல்கள்..
வன்முறைக்குத் தீர்வு வன்முறையாகிவிடாது என தீர்மானமாக எண்ணினார் மார்ட்டின். இந்தியா வந்து சென்றபின் வாரம் ஒருமுறையாவது மௌனவிரதம் இருப்பது என்பதை கடைபிடித்திருக்கிறார். வாழ்க்கை முழுமைக்குமான அஹிம்சைப் போராட்டத்தின் பலனாக இவரின் 35 ஆவது வயதிலேயே உலக சமாதானத்துக்காக நோபல் பரி்சு வழங்கப்பட்டது. 1964 டிசம்பர் 10 ஆம் தேதி இவர் ஆற்றிய உரை ., “ I HAVE A DREAM "., உலகின் சிறந்த பேச்சுக்களில் ஆறாம் இடத்தில் இருக்கிறது. அதில் எல்லா மக்களும் ஒன்றாகக் கைகோர்த்து உலவும் கனவும் தனக்கிருப்பதாகக் குறிப்பிட்டு இருக்கிறார். அன்பால் வெல்வது என்பதை நாம் இவரின் வாழ்வு முழுமைக்கும் காணலாம்.
இவரின் நோபல் பரிசு உரை கூட இவர் .”ஆயுதேந்தாத உண்மை., நிபந்தனையற்ற அன்பு ” என்று நேர்மறை எண்ணங்களை ஏற்றும் பேச்சாகவே இருக்கிறது. வியட்னாம் வாரையும் இவர் ஆதரிக்கவில்லை.
வாளெடுத்தவன் வாளால் சாவான். ஆனால் அன்பெனும் ஆயுதமேந்திய மார்ட்டின் ,”ரே” என்பவரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. ஏப்ரல் நான்காம் தேதி துப்புரவுத் தொழிலாளிகளின் ஊதிய உயர்வுக்காக நடந்த தொழிற்சங்க கூட்டத்தில் கலந்துகொண்டு ., ”FIGHTERS FOR RIGHT " ., என்ற தலைப்பில் உரை நிகழ்த்தியபின் இவரின் மரணம் நிகழ்ந்தது.
நாற்பது வயதுவரை வாழ்ந்த மார்ட்டின்., விவேகானந்தர்., ஆதிசங்கரர்., ஜீசஸ் போல ஒரு அவதார புருஷர்., அன்பையே தன் ஆயுதமாகக் கொண்ட மார்ட்டின் கடைசிவரை தன் நிலைப்பாட்டிலேயே வாழ்ந்து சென்றார். புண்ணியர்கள் புதைக்கப் படுவதில்லை.. விதைக்கப் படுகிறார்கள்.

புதன், 17 நவம்பர், 2010

அந்த முன்னிரவு...



ஐப்பசி அடைமழை..
கப்பல்விடத் தோதாய்.!
அடித்தடித்து வீசும் காற்று..
ஆடியது வாசலில் வேம்பு..
ஆடுபுலி ஆட்டம்
அண்ணா சொன்னான்..
வேரோடு கோரத்தலையசைத்த
பனை தென்னை பார்த்து..
திருமலை தரிசனம்
தேடிச் சென்ற தந்தை
வரவில்லை இன்னும்..
விடிந்தால் தீபாவளி..
வழக்கம் போலில்லை
இந்த முன்னிரவு..
ரயில் வெடியும் ., பூச்சட்டியும்
ஏரோப்ளேனும் இருந்தும்
அப்பா இல்லாமல்....
கூதலில் ஓடுகள் கூட
நடுங்கின சேர்ந்து..
சூறைக்காற்றில் சிதர்காய் போல்
பெயர்ந்து விழுந்தது வேம்பு
வீட்டின் எதிர்த்திசை பார்த்து.!
துணிகளில் மஞ்சள்
வெடிகளின் வாசம்..
மின்சார வெளிச்சம்..
அப்பாவின் பேச்சு இல்லாமல்..
மண்ணெண்ணெய் விளக்கில்
கசந்தன இனிப்புகள்..
வெடித்தது முறுக்கு..
வாட்டமுற்ற அம்மாவாய்..
பதட்டத்தில்., இருட்டில்.,
நிழலெல்லாம் பேய் போல் ஆடி
கெட்ட சொப்பனத்தில்
வேர்த்து விழித்து...
விடிந்தது ஒரு வழியாய்..
வெள்ளத்தில் நீந்தி
பெட்டியற்று வந்தார் அப்பா
வெள்ளைச் சிரிப்போடு..
ஓடிச் சென்று
ஆரத் தழுவினோம்..
அப்பா நீங்கள்தான்
எங்கள் தீப ஒளி....!!!
டிஸ்கி :- இந்தக் கவிதை நவம்பர் மாத தேவதை இதழில் வெளிவந்துள்ளது.. தேவதைக்கு நன்றி..

திங்கள், 15 நவம்பர், 2010

நவம்பர் மாத லேடீஸ் ஸ்பெஷலில் மோகனா சோமசுந்தரம்., சித்ரா சாலமன்., ருக்மணி அம்மா., மனோ சாமிநாதன்., மற்றும் நான்...

மிக அருமையான ., எளிமையான ஒரு சந்திப்பு நிகழ்ந்தது நவராத்திரி அங்காடியில்.. எந்தவித ஆர்ப்பாட்டமும் பந்தாவும் இல்லாமல் ஒரு அமைச்சரை நீங்கள் சந்திக்க இயலுமா.. மிக நெருங்கிய தோழி போன்ற அழகிய புன்னகையுடன் வந்த சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன்தான் அவர்கள்.. அசந்து விட்டோம் அனைவரும்.. அவரின் பேச்சுத்திறனும் அபாரம்..
வாழ்க.. வளர்க அவரின் சமூகப் பணி..

முகப் புத்தகத்தில் முதிர்ந்த அறிவுடைய ஒரு தோழியை சந்தித்தேன்.. அவரின் பின் எவ்வளவு பெரிய சாதனைக் கதை.. சொல்லில் வடிக்க இயலாது அவரின் போராட்டம்.. படித்துப் பாருங்கள் சுயம்புவாய் உருவான பெண்ணின் கதையை..

நம்ம சித்ராவின் தீபாவளி பற்றிய பகிர்வு.. தனி மரங்களின் தீபாவளி ..வழக்கம் போல அம்மணி கலக்கிட்டாங்க.. என்ன பலகாரம் பண்ணாங்க என்பது மட்டும் சர்ப்ரைஸ்.. ஹாலோவீன்ஸ் டே பதிவு ஒண்ணு அனுப்புங்க மேடம்..(ஹிஹிஹி) .. பரங்கிக்காய் ஜூஸ் பத்தின ரெசிப்பியோட..:))

நம்ம ருக்மணி அம்மாவோட திருக்குறள் கதைகள்.. பி்ள்ளைகளுக்கு பள்ளியில் நீதிபோதனை வகுப்பு இருப்பதில்லை இப்பவெல்லாம்.. அதுனால பெட் டைம் ஸ்டோரிஸா இது எல்லாம் படிச்சுக் காண்பிங்க..மென்மையான அறிவுரையோட இருக்கு ..

இந்த மாத ப்லாக்கர் மனோ சாமிநாதன்.. நம்ம எல்லாருக்கும் அறிமுகமானவங்கதான்.. புறப்படு பெண்ணே புவியசைக்க என்ற தலைப்பில் அவங்களோட பகிர்வு அருமை..

சமூக நலத்துறையின் ஜீவன் கீதா ஜீவன் என்ற தலைப்பில் என்னோட கட்டுரை ஒண்ணு வந்திருக்கு.. அதையும் படிச்சுப் பார்த்து கருத்து சொல்லுங்க மக்காஸ்.

சனி, 13 நவம்பர், 2010

லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலரில் புதுகைத்தென்றல்., ருக்மணி அம்மா., கார்த்திக்., மரா., ராமலெக்ஷ்மி., தினேஷ்குமார்., தமிழ் உதயம்., கோபி ராமமூர்த்தி..

ஐப்பசியில் தீபாவளி ...அடைமழை.. பட்டாசு., பட்சணம்., புது உடை எல்லாம்.. இந்த வருடம் ரொம்ப ஸ்பெஷல்.. நிறைய ப்லாக்கர்களின் படைப்புக்கள் .. லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலரிலும்., நவம்பர் மாத இதழிலும்.. அவசரத்தில் தீபாவளி மலரில் என்னுடையது விட்டுப் போய்விட்டது .. அதற்கென்ன மக்காஸ்.. பொங்கல் இதழில் எழுதுவோம்.. நவம்பர் மாத லேடீஸ் ஸ்பெஷல் இதழிலும்., திண்ணையிலும் தேவதையிலும் வந்திருக்கிறது..
இது நம்ம புதுகைத்தென்றல் ஸ்பெஷல்.. திரும்பி வந்த அம்பு ..நல்ல நச் சிறுகதை.. வாழ்த்துக்கள் கலா ஸ்ரீராம்..:))

இது நம்ம ருக்மணி அம்மாவின் கட்டுரை.. மத்வரின் கதை.. திரும்பி நின்ற நாயகனாய்.. மிக அருமை அம்மா..:)) வாழ்த்துக்கள்..

நம்ம கார்த்திக் லெக்ஷ்மி நரசிம்மன் கவிதை இது.. திண்ணையிலும் மனிதர் வெளுத்துக் கட்டுறார்.. கார்த்திகை என்ற கவிதை.. வாழ்த்துக்கள் கார்த்திக்..

மராவின் கவிதை இது.. மகாப் பெரியவாள் பற்றியது.. கருணையின் வடிவே..
வாழ்த்துக்கள் மரா..
நம்ம ராமலெக்ஷ்மி ராஜன் சும்மாவே கலக்குவாங்க.. மிக அருமையான கதை மற்றும் படங்களுக்குச் சொந்தக்காரர்.. அவங்களோட பொட்டலம் கதை அருமை.. வாழ்த்துக்கள் ராமலெக்ஷ்மி..

தினேஷ்குமார் மோகன்தாஸோட கவிதை.. மாதங்களில் காதலி.. வித்யாசமான தலைப்பில் அருமையான கவிதை .. வாழ்த்துக்கள் தினேஷ்..

முக்கியமான விஷயம் போன பகிர்வுல விட்டுப் போச்சு.. நம்ம தமிழ் உதயம் அவர்களோட கதை வெளியான விபரம் எனக்கு இப்போ புத்தகம் கைக்குக் கிடைத்த பின்தான் தெரிந்தது.. தமிழ் உதயத்தின் மிகச் சிறப்பான கதை இது .. யோகி என்ற பெயரில் விட்டு விடுதலையாகி என்ற கதை எழுதி இருக்கார்.. வாழ்த்துக்கள் தமிழ் உதயம்..

கோபி ராமமூர்த்தியின் பிடிவாதம் கதையும் வெளியாகி இருக்கு.. மிக அருமையான கதை.. லண்டன் ஆர். கோபி என்ற பெயரில்..
வாழ்த்துக்கள் கோபி..
அப்புறம் முக்கியமான விஷயம் மக்காஸ்.. விட்டுப் போன பகிர்வுகள் எல்லாம் இந்த இதழில்தான் விட்டுப் போய் இருக்கு.. இனி அடுத்த இதழ்களிலும் வெளிவரலாம்.. எனவே உங்க பகிர்வுகளை அனுப்பிக்கிட்டே இருங்க.. ஒருமுறை வராட்டா என்னன்னா.. அந்த படைப்பு முழுமையா இல்லைனு அர்த்தம்.. அடுத்தமுறை அது நம்மை செப்பனிட உதவும்.. எனவே முயற்சி செய்துக்கிட்டே இருங்க.. வெல்வீங்க.. அனைவருக்குமான வாழ்த்துக்களும் அன்பும்..

வெள்ளி, 12 நவம்பர், 2010

வெளிச்சம்..

கோவையில் ஈச்சனாரி பிள்ளையார் கோயில் தாண்டியது.. கை அனிச்சைச் செயலாய் வணங்கியது..அம்மாவும் அப்பாவும் காத்திருப்பார்கள்..மெல்ல வீசிய காற்றில் பவளமல்லி வாசம்..தூங்கும் கணவரின் தோளில் சாய்ந்தாள்.. அம்மாவின் ஆயாவும் வந்து இருக்கிறார்களாம்.. பேத்தி மகளின் தலை தீபாவளிக்கு.. தலைமுறை தாண்டிய உறவுகள்..

ஜூன் மாதம் திருமணம். அடுத்த ஐந்து மாதங்களில் தீபாவளி. தாய்வீடு செல்லும் மகிழ்ச்சியோடு புகுந்த வீட்டினரை விட்டுச் செல்லும் சிறிய பிரிவுத்துயரும் இருந்தது. மாமியார் தாய்க்கும் மேலே அன்பு செலுத்துவதாலோ என்னவோ..

எப்போது எழுந்தாலும் எழுந்து கொள்ளும் முன்னரே மாமியார் எழுந்து சுறுசுறுப்பாய் வேலை செய்வது ஆச்சர்யம்தான் அவளுக்கு. எத்தனையோ முறை மு்யன்று விட்டாள். இந்த விஷயத்தில் மட்டும் வெல்ல முடியவில்லை. காபியைக் கலந்து கையில் கொடுக்கும் அன்பு வேறு. தன் பிள்ளைகளைப் போல நடத்துவதும்., எதையும் செய் என்று சொல்லாததுமான வித்யாசமான மாமியார்தான்.

மாமியார் சொல்லவில்லை என்பதால் எதுவும் செய்யாமலும் இருப்பதில்லை. அவளும் நன்கு சமைப்பாள். சில சமயம் கடலை எண்ணெய்க்குப் பதில் நல்லெண்ணையில் பூரி சுட்டது., வெறுமே வறுத்த உளுந்தமாவை கோதுமை மாவு என நினைத்து சப்பாத்திக்குப் பிசைந்து பின் அதை மச்சினன்கள் உதவியோடு முறுக்குக் கட்டையை ஆளுக்கு ஒரு பக்கம் முக்கி முக்கி முறுக்குப் பிழிந்தது என சிலதும் இருக்கு. ஊரிலிருந்து வந்த மாமியார் ஏன் இப்பிடிச் செய்தாய் என ஒரு வார்த்தை கூட கேட்பதில்லை.

பின் நன்கு சமைக்கக் கற்று மூன்று ஃப்ளேவர்களில் ஐஸ்க்ரீமும்., கட்லெட்டும்., சமோசாவும்., போட்டுக் கொடுத்து அனைவரின் பாராட்டையும் வாங்கி இருக்கிறாள். மச்சினன்கள்., நாத்தனார்தான் இந்த விஷயத்தில் சாப்பிட்டு ஊக்குவித்தவர்கள்.. கணவர் இதில் எதுவும் தலையிடுவதில்லை.

காலையில் மாமனார் எழுந்ததும் சிவ பூஜை செய்வார். ஒரு தாம்பாளத்தில் சிவன்., நந்தி., அம்பாள்., கோஷ்ட தெய்வங்கள் எல்லாம் பிரதிஷ்டை செய்து., பாலாபிஷேகம் செய்வார். கடைசியில் சங்காபிஷேகமும் நடக்கும். 108 சூடம் ஏற்றுவது., எல்லா தெய்வங்களின் பேரையும் கோலத்தில் எழுதி வணங்குவது., காக்கைக்குச் சோறிட்டபின் சனிக்கிழமைகளில் உண்பது., சாமி பாடல்களையும்., ஸ்தோத்திரங்களையும் சொல்வது என வீடே பக்தி மணத்தில்தான் மிதக்கும்.

இருந்தும் .” ஏம்மா ஷார்ட்ஹாண்ட் படிச்சே இல்லையா.. அதை முடிச்சு பரிட்சை எழுது. எம் ஏவை செகண்ட் இயரை கம்ப்ளீட் பண்ணு..” என ஊக்குவித்துக் கொண்டே இருப்பார். ஹ்ம்ம் சொல்ல இருக்கு ஏராளமா..

முதல் முதல் வீட்டுக்கு டிவியை கணவர் வாங்கி வந்ததும்., ஃப்ரிட்ஜ் வந்ததும் மாமியார் முகத்தில் அவ்வளவு சந்தோஷம்.

எப்போது ஊர் வந்தது எனத் தெரியவில்லை. விடிந்து இருந்தது. முதல் தீபாவளி என்பதால் ஒரே கும்மாளம்தான். மச்சினன்கள் மூவரும் மாப்பிள்ளையோடு வெடி வெடித்து ., புதுசு உடுத்தி., சினிமா பார்த்து ., அரட்டை அடித்து அமர்க்களப் படுத்தினார்கள்.

அம்மா., ஆயா., பாட்டி அனைவருக்கும் ஆச்சர்யம்தான். அவளுக்கு மாமியாரைப் பற்றிச் சொல்ல அநேகம் இருந்தது. ., அவர்கள் காது புளிக்கும் வரை புகழ் பாடிக் கொண்டிருந்தாள்...
*************************************************************

பல வருடம் ஆகி விட்டது. இந்த வருடம் தீபாவளி.. எப்படிப் பிள்ளைகளை வளர்த்தோம் என்றே தெரியவில்லை. கல்லூரிக்கு வந்துவிட்டான் சின்னவன்.. பெரியவன் வேலைக்கு சென்று கொண்டு இருக்கிறான்.

தம்பிகள் திருமணம் முடிந்து குழந்தை குட்டிகளோடு குடும்பஸ்தர்களாகி விட்டார்கள். நிறைய மாற்றம் வாழ்விலும். பிஸினஸ் செய்து நொடித்து மீண்டது.. பல ஊர்களுக்கும் ட்ரான்ஸ்ஃபர் நிமித்தம் சென்றது.. கற்றுக் கொடுத்த பையன்கள் பெரிய மனுஷன்களாகி அம்மாவுக்கு கணனி சொல்லித் தருவது என..

தோழிகளின் மகள்களுக்குத் திருமணமாகிக் கொண்டிருந்தது.. சிலர் பாட்டிகளாகவும் ஆகிவிட்டார்கள்.. சென்ற வாரம் ஒரு தோழி சொன்னாள்., " அம்மாவா அன்பு செலுத்துறது கஷ்டம் இல்லைடி.. மாமியார் அம்மா மாதிரி அன்பு செலுத்துறது ரொம்பக் கஷ்டம் என்று... என் மாமியாருக்கு நான் என்றால் ரொம்பப் பிடிக்கும்.. என் மருமகளையும் எனக்குப் பிடிக்குது... ஆனா சிலது சொல்லாம இருக்க முடியல.. சொன்னா பேசமாட்டேங்குறா.. கஷ்டமாருக்கு.. தப்பை சொல்லவே கூடாதுங்குறாங்களா இவங்க..

கேட்டேன்.” ஏண்டி.. நீ கல்யாணமான புதுசில எல்லாம் கரெக்ட்டாதான் செய்தியா.,” என்று.. “ என் பையன் .. எனக்குத் தெரியும். அவனுக்கு இதுதான் பிடிக்கும் என்று நீ நினைக்கிறாய்.. ஆனா அவங்க அம்மா., கத்துக் கொடுத்தது வேறு முறையில் இருக்கலாம்... விட்டுத்தான் பாரேன்.. ஒன்றிரண்டைக் கெடுக்கட்டும்.. பின் தானே கற்றுக் கொள்வாள்...” என்று.. ” நாமெல்லாம் டிகிரி படித்தும் என்ன வேலைக்கா போனோம்.. வீட்டில் இருந்தோம்.. எல்லாம் ஆர அமரக் கற்றுக் கொண்டோம்.. வேலைக்குப் போற அவ செய்து கொடுக்க நினைக்கிறதை அப்படியே விடு.. செய்து பழகட்டும்.. உன்னிடம் ஆலோசனை கேட்டா மட்டும் சொல்லு ..” என்றேன்..

ஆச்சு எனக்கும் ரெண்டு பசங்க் இருக்காங்க.. திருமணம் ஆகும்வரை எனக்கு அவர்கள் மீது இருக்கும் உரிமையை விட்டுக் கொடுக்கத்தான் வேண்டும்.. அவர்கள் வாழ்க்கையை அவர்கள் வாழ வேண்டும். அதற்கு நானும் என் மாமியார் போல குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்க கொளல்.. என இருக்க வேண்டும் என முடிவு செய்தேன்..

தீபாவளி பலகாரம் எல்லாம் செய்யணும்.. பசங்க ஹாஸ்டலில் இருந்து வர்றாங்க.. நண்பர்கள் கூட்டத்தோட கொட்டமடிக்க.. விடியத் துவங்கி இருந்தது.. வெளிச்சத்தில் எல்லாம் பளிச்சென்று இருந்தது மனசைப் போல..

டிஸ்கி :- இது நவம்பர் 7., 2010 திண்ணையில் தீபாவளி சிறுகதையாக வந்திருக்கிறது..

புதன், 10 நவம்பர், 2010

நம்பிக்கை..

திரையரங்கோ., கோயிலோ.,
முன்னேற்பாடுகளுடன்
பெரும்பாடாய்..
திட்டமிட்டேதான் நடக்கிறது..
சந்திக்கச் செல்வதற்கான முஸ்தீபும்.,
பழகிப் போன இதே போன்றதான
ஏமாற்றமும்..

விருந்து மண்டபமோ.,
பிறந்தநாள் விழாவோ.,
புகைப்படச் சிரிப்புக்களில்
இல்லாத தன்னை உணர்ந்து
கரைந்து போவதாய்க் கனக்கிறது..

கல்யாணக் கூடமோ.,
சாலையோரப் பூங்காவோ.,
கழுத்து வலிக்க கண்ணை
நெருடிக்கொண்டே இருக்கிறது..
வாயிற்கதவுகளும்.,
விளக்குக் கம்பங்களும்..

தேடுதலின் முடிவில்
கல் இடறிக் கட்டைவிரல்
ரத்தம் அறிவிக்கிறது..
ஏதோ ஒன்றைத் தேடுதலில்
தன்னைத் தொலைத்தது..

இற்று விழும் போதெல்லாம்
சுற்றி வரச் செய்கிறது..
சுற்றும் பூமியைப் போல்
அற்றுப் போகாததான நம்பிக்கையும்..

டிஸ்கி :- இந்தக் கவிதை நவம்பர் 7., 2010 திண்ணையில் வெளிவந்துள்ளது..

ஞாயிறு, 7 நவம்பர், 2010

சுய உதவிக் குழுக்கள் ( மகளிர்) எதிர் கொள்ளும் சமூகப் பிரச்சனைகள்...











தீஞ்சுவைப் பாலெடுத்து நறுஞ்சுவைத் தேன் கலந்து பழச்சாறும் ஊற்றிக் கொடுத்தாலும் புளிக்குதென்பேன்.. தமிழ்த்தாயிடம் மதலை நான் தாய்ப்பால் குடித்து வளர்ந்த காரணத்தால்.. அன்னையவள் பரிவு கொண்டு என்னை வளர்த்த காரணத்தால்.. தமிழ் அன்னைக்குக் குழந்தையின் வணக்கங்கள்..


நாத விந்துவால் உருவாகி நிற்கும் இந்த உலகு ஜீவனுள்ள கீதங்களால் நிரம்பி இருப்பதால்.. அந்த ஜீவனை .. சக்தியை தன்னகத்தே கொண்ட சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவனுக்கு வணக்கங்கள்.. அன்றாடம் பத்ரிக்கைகளிலும்., கூகுளிலும் இவரின் பணிகளை., அங்கன்வாழி ஊழியருக்கு சலுகை., ரேஷன் கடை ஊழியருக்கு ஓய்வூதியம்., சத்துணவு ஊழியருக்கு மருத்துவ வசதி., ஆதரவற்ற.. ஏழை., அனாதை பெண்களுக்கும்., விதவைகளுக்கும் அரசாங்கத்தின் உதவி கிடைக்கச் செய்தல்., என பரந்துபட்ட பணிக்குச் சொந்தக்காரரான அமைச்சரின் பணிகள் அறிகிறேன்..

அவற்றில் ஒன்று சுய உதவிக் குழுப் பெண்களுக்கும் உரிய சலுகைகள் கிடைக்கச் செய்வது.. அனைத்திற்கும் பாராட்டுக்கள்..


ஒரு கல்லைச் செதுக்கி சிற்பம் செய்வது போல் என்னைச் செதுக்கி நான் இங்கே நிற்கக் காரணமாய் இருக்கும் கிரிஜாம்மாவுக்கு வணக்கங்கள். எக்ஸ்னோரா தலைவர் சுலோசனா ராமசேஷனுக்கும்., ராஜத்துக்கும் அவையோருக்கும் என் வணக்கங்கள்..


பொதுவாக பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என மூன்றைக் குறிப்பிட விரும்புகிறேன்...


முதலில் தன்னைக் கடந்து வெளிவருதல்..


இரண்டாவது சுற்றி இருப்பவர்கள் என்ன நினைப்பார்கள் என நினைத்து தன் திறமைகளை முடக்கி இருத்தல்..


மூன்றாவது தொழிற்சார்ந்த பிரச்சனைகள்..


தனிமனிதரும் சமூகம் சார்ந்தவர்தானே..தான் ஒரு தொழிலைச் செய்ய வேண்டும் என தன் முனைப்போடு இருத்தல்.. சிறப்பாக செய்ய இயலும் என எண்ணுதல்., தன் குடும்பத்தினரின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி அடைய வேண்டி தொழில் செய்ய செல்லும் போது., அவர்களுக்கு அதை சரியான முறையில் தெளிவு படுத்துதல்., எல்லாம் முக்கியம்.


குழந்தைகள் படிப்பு செலவு வேண்டியோ., அன்றாடம் கணவன் வருமானம் போதாமல் குடும்பம் நடத்த வேண்டியோ., செயல்படும் போது., குழந்தைகளைத் தானே பராமரிக்கப் பழக்குதல்., குடும்பத்திற்காக தான் உழைப்பதை குழந்தைகள் உணரும்படிச் செய்தல்., வியாபாரநிமித்தம் சிலகாலம் ( 10., 15 நாட்கள்) குடும்பத்தை விட்டு செல்ல வேண்டிய சூழ்நிலையை எதிர்கொள்ளுதல்., உடல் உபாதைகளோடு புதிய சூழலில் இருத்தல்., என குடும்பத்திற்காக ஏற்கும் சிரமம் நிறைய..


தன்னிடம் நம்பிக்கை வைத்து தன் குடும்பத்திற்கு புரியச் செய்து வெளிவருதல் அவசியம்...


இரண்டாவதாக அக்கம் பக்கம் இருப்பவர்கள் ஏதும் சொல்வார்களோ .. நேரம் கெட்ட நேரத்தில் செல்ல வேண்டி இருந்தால் என தயங்குதல் ஒரு பின்னடைவை ஏற்படுத்தும்.. நாம் சரியானவற்றை சரியான முறையில் செய்யும் போது அடுத்தவரின் விருப்பு வெறுப்புக்கு இடம் கொடுக்க வேண்டியதில்லை.. நாமும் ., நம்மைப் போன்றோரும் கலந்ததுதானே சமூகமும்.. நாம் சரியானவற்றைச் செய்யும்போது அங்கே அவதூறுகளுக்கு இடம் இல்லாமல் போகிறது..


மூன்றாவதுதான் முக்கியம்.. இதில் தொழில் தொடங்க கடனுதவி கேட்டு வங்கிகளை அணுக வேண்டி வரும்.. அதற்கு சிலரிடம் அனுமதிக் கையெழுத்து வாங்க வேண்டியதிருக்கும்.. மேலும் தொழில் தொடர்பாக பலரிடம் பழக வேண்டியிருக்கும்... இந்தச் சூழலில் அனைவரும் நல்லவரென்று கருத இயலாது.. அந்தச் சமயங்களில் இவர்கள் தெளிவாக இருந்தால்., அதாவது லஞ்சம் கொடுக்காமலும்., பாலியல் தொந்தரவுக்கு சம்மதிக்காமலும்., நேர்மையான வழியிலேயே எல்லாவற்றையும் பெறுவது என உறுதியாக இருந்தால் ஜெயிக்கலாம்..


வியாபாரம் செய்யப் போகும் இடத்திகும் வீடு வீடாக சென்று கான்வாஸ் செய்யும் இடங்களில் கூட எரிச்சலான பதில்களும்., சரியில்லாத மனிதர்களையும் சந்திக்க நேரும்.. எல்லாவற்றிலும் சகிப்புத்தன்மையும் ., பத்திரமாக மீண்டு வரும் தன்மையும் வேண்டும்..


வருமானம் இல்லாத காலகட்டங்களில் கந்து வட்டிக்கு கடன் வாங்காமல்., கடனுக்குள் வீழ்ந்து விடாமல்., சமாளிக்கத் தெரிய வேண்டும்..


கணவன் குடிகாரனாயிராத பட்சத்தில் இது நிகழாது,..மேலும் ஒரு சுய உதவிக் குழுத் தலைவியிடம் பேசிக் கொண்டிருந்த போது சொன்னார்.. நாம் இடம் கொடுத்தால்தான் நம்மை ஆண்கள் எதற்கும் அணுகுவார்கள் என்று.. நாம் சரியாக இருந்தால் நம் நிலையிலேயே நமக்கான இடத்திலேயே நீடித்து இருக்கலாம் என்று..


உண்மைதான் .. சமூகம் என்பது நாம் அடங்கிய குழுதானே.. எனவே நாம் எந்த இடத்தைத் தேர்ந்தெடுக்கிறோமோ அந்த இடம் கிடைக்கும்..


டிஸ்கி : - இந்தக் கட்டுரை நவம்பர் ., 1., 2010 திண்ணையில் வெளிவந்துள்ளது,,

வியாழன், 4 நவம்பர், 2010

திண்ணைகள் வைத்த வீடு...

வலப்புறமும் இடப்புறமும்
திண்ணைகள் வைத்து
சிமெண்ட்டால் இழைத்த வீடு..

முதுகு சாய மேடும்
விளக்கு வைக்க மாடமும்
வாசலில் த்வாரபாலகராய்..

தி ஜ ர., லா ச ரா கதைகள்.,
மன்னார்குடியின் ஒற்றைத்தெரு.,
இரண்டாம் தெரு., இரண்டாம்தெரு.,
மூன்றாம் தெரு எல்லாவற்றிலும்

வெற்றிலைக் காவியும்.,
பன்னீர்ப் புகையிலையும்.,
கும்மோணம் டிகிரி காப்பியும்.,

சீட்டுக் கட்டுக்களும்.,
வார்த்தை வண்டல்களும்.,
உதப்பல்களும் நிறைந்து.,

வயதான பெற்றோராய்
வெளிறிப்போய் சில.,

பால்கிண்ணம் பொலிந்து
கதை கேட்கும் சிறாராய் சில.,

யௌவனக் கவர்ச்சியில்
வண்ணமடித்து சில.,

வெறுமையான மடியாய்
வெள்ளையடித்து சில..

திண்ணைகள் பால்கனிகளாய்.,
ஆளோடிகள் வராண்டாக்களாய்..,
காமிரா உள் கம்ப்யூட்டர் ரூமாய்..
கொல்லைகள் காணாமல் போய்..

காற்றை.,வெய்யிலை, இருளை.,
கவலையில்லாமல் கிடந்து
கதைத்துக் களிக்கும் இடமாய்..
கம்பி போட்ட திண்ணை..

விடியலில் பள்ளியெழுச்சியும்.,
பன்னீராய் தெளித்துக் கோலமும்.,
மாலையில் ருத்ரமும் சமகமும்.,
இரவில் பவளமல்லி வாசமும் கலந்து.,

திண்ணைகள் தேடிச் சென்றேன்...
இளைப்பாற எங்கும் இல்லை..
கிளையில்லா பறவையாய்..
பறந்து பறந்து பற்றினேன் திண்ணையை..

ஒய்வெடுக்க அல்ல.,
ஓய்ந்து அமர அல்ல.,
உழைப்பை .. என் உருவாக்கத்தை
உலகெல்லாம் அறியச் செய்ய...

திண்ணையில் கவிகள்.,
கதைகள்., கட்டுரைகள்.,
இயற்றமிழ் இயற்றும்
அனைவரையும் எடுத்தியம்பும்

வாழ்க திண்ணை.. வளர்க திண்ணை..
அனைவரின் வாழ்விலும் ஒளியேற்றும்
எங்கள் அன்பு சால் திண்ணைக்கு
தீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள்..!!!

டிஸ்கி 1 :- இந்த என்னுடைய தீபாவளி வாழ்த்துக் கவிதை 1.11.2010 திண்ணையில் வெளிவந்துள்ளது ..வலைத்தளவாசிகள் அனைவருக்கும் என் அன்பு தீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள்..!!!

டிஸ்கி 2 :- லேடீஸ் ஸ்பெஷல் நவம்பர் மாத இதழில்., தனி மரங்களின் தீபாவளி என்ற கட்டுரை -- சித்ரா சாலமன்., புறப்படு பெண்ணே புவியசைக்க.. -- இந்த மாத ப்லாகர் அறிமுகம் .. மனோ சாமிநாதன்., மாறிய மனம்., - ருக்மணி அம்மாவின் திருக்குறள் கதை.. சுயம்புவார் உருவான பெண்.. என்ற தலைப்பில் மோகனா சோமசுந்தரம் அவர்கள் பற்றிய என்னுடைய கட்டுரை..( போராடி ஜெயித்த கதைகள்)., சமூக நலத்துறையின் ஜீவன் என்ற தலைப்பில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பற்றிய என்னுடைய கட்டுரை வெளி வந்திருக்கு..

டிஸ்கி 3 :- லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலரில் புதுகைத்தென்றலின் ( கலாஸ்ரீராம் ., ஐதராபாத்) கதை -- திரும்பி வந்த அம்பு ., திரும்பி நின்ற நாயகன் -- ருக்மணி சேஷசாயி., கார்த்திகை (கவிதை) - கார்த்திக் லெக்ஷ்மி நரசிம்மன்., கருணையின் வடிவே - மரா., பொட்டலம் (சிறுகதை) -- ராமலெக்ஷ்மி., மாதங்களில் காதலி -- தினேஷ்குமார் மோகன்தாஸ்.,
கோபி ராமமூர்த்தியின் சிறுகதை (லண்டன் ஆர்.கோபி)- வெளிவந்துள்ளது

திங்கள், 1 நவம்பர், 2010

தைர்ய லெக்ஷ்மி... (1) .. ரம்யா தேவி..



ஃபீனிக்ஸ் பறவை பார்த்து இருக்கிறீர்களா..? தன் சாம்பலில் இருந்தே திரும்பத் திரும்ப உயிர்த்தெழும் ஃபீனிக்ஸைப் பார்க்க வேண்டும் என்றால் ரம்யா தேவியைப் பார்க்கலாம்... இரும்பு மனுஷி., மலை அரக்கி என்றெல்லாம் தன் நண்பர்களால் செல்லமாக அழைக்கப் பெறும் ரம்யா என்றைக்கும் சந்தோஷப் பந்து..


இன்றைக்கு ஒரு சிங்கப்பூர் பேஸ்டு கம்பெனியில்., சாஃப்ட்வேர் டிவிஷனில் ப்ராஜெக்ட் மானேஜராக இருக்கிறார். இதன் பின்னே நெடிய உழைப்பு இருக்கிறது. அசாதாரணமான உழைப்பு. பெண்கள் முன்னேற்றம் என்பது இப்போதும் கடினமாக இருக்கக் கூடிய சூழலில் தன் உபாதைகளையும் மீறி மீண்டெழுந்து புதிய பரிமாணங்களில் பரிணமிக்கிறார்.
அவருக்குப் பதி்மூன்று வயதாயிருக்கும்போது ஏற்பட்ட ஒரு நெருப்புக் காயம் கிட்டத்தட்ட 42 ப்ளாஸ்டிக் சர்ஜரிகளுக்குப் பிறகு சரியாகி இருக்கிறது. இளமை தொடங்கும் வயது . பெண்மையின் ஆர்வமும் ஆசைகளும் துளிர் விடத் தொடங்கும் பருவம். எல்லாம் முடிந்துவிட்டது எனச் சோர்ந்துபோய்விடாமல்., முடங்கிப் போய்விடாமல்., போராடி ஜெயித்து தன்னை மீட்டுக் கொண்ட பெண் இவர்.
முதல் பதினைந்து சர்ஜரிகளும் உயிர் காக்க செய்த சர்ஜரிகள். ”லைஃப் சேவிங்...” மிச்சமெல்லாம் அதன் தொடர் சிகிச்சைகள். கடைசி சிகிச்சை கடந்த டிசம்பரில்தான் முடிந்திருக்கிறது. UG., PG., M.C.A., படித்து இருக்கிறார். மிகச் சிறந்த ஐக்யூ உள்ள குழந்தையாய் இருந்ததால் இரண்டு முறை பள்ளியில் டபிள் ப்ரமோஷன் கிடைத்து இருக்கிறது. ஆறாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பிற்கும்., டென்த்திலிருந்து ப்ளஸ் டூவிற்கும். யூஜி முடித்தபின் கம்பெனியில் சேர்ந்து வேலை பார்த்துக் கொண்டே தொடர்ந்தும் இருக்கிறார்.

ப்ளாஸ்டிக் சர்ஜரிகளும் மற்ற செலவும் ஹாஸ்டலில் தங்கி தன் சம்பாத்தியத்திலேயே செய்து கொண்டிருக்கிறார். ஹாஸ்டலில் இவருக்கு கிடைத்த அற்புத நட்பு அரசு அலுவலகத்தில் வேலை பார்க்கும் செல்வி என்ற காயத்ரி. சில நல்ல நட்புக்கள் வாழ்வு முழுமைக்கும் தொடரும் உறவுகளாய் இருப்பது உண்மை.. இவருக்கான சிகிச்சை செலவு எல்லாம் இவரின் அத்யந்தத் தோழி தன் சம்பாத்தியத்திலும் செய்து இருக்கிறார். சிறு வயதில் நம்முள் உண்டாகும் நல்ல குணங்கள் என்றென்றும் எந்த சூழ்நிலையிலும் நம்முடன்தான் இருக்கும். சிறு வயதிலேயே பக்கத்தில் உள்ள முதியோர் இல்லங்களுக்கு சென்று உதவுவது இவருக்கு மிகப் பிடித்தமான ஒன்று. அது இன்றும் தொடர்கிறது. அது எத்தகைய இன்பமயமானது என்பதை இவரின் எழுத்துக்களில் படிக்கும்போது உணரமுடிகிறது.

இவரின் தோழியும் இவரும் இவர்களின் தாயார்களுடன் ஒன்றாக வசித்துப் பின் இவர்களின் தாயார்களின் காலத்துக்குப் பிறகும் தொடர்ந்து நிறைய சேவை செய்து வருகிறார்கள். முதியோர் இல்லங்களுக்குச் சென்று உதவுவது., இளம் வயதில் வாழ்வைத் தொலைத்த பெண்களுடன் பேசி பெற்றோருடன் சேர்த்து வைப்பது., எய்ட்ஸால் பாதிக்கப்பட்டுப் பிறக்கும் கைக்குழந்தைகளுக்கு சேவை செய்வது., என நீளுகிறது இவரின் சேவைப் பட்டியல்.. மிக முக்கியமாக ஒன்று சொல்ல வேண்டும். கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதால் கேள்விக்குறியான எதிர்காலத்தோடு இருப்பவர்களை எல்லாம் ஆச்சர்யக்குறியாக்கும் முயற்சியில் சில மாணாக்கர்களைத் தேர்ந்தெடுத்து தனது சம்பாத்தியத்தில் கிட்டத்தட்ட 60 சதவிகிதத்தைச் செலவழித்து தனது நேரடி கண்காணிப்பிலேயே படிக்க வைக்கிறார்கள். ஹைதையில் பிறந்து புதுகையில் பள்ளிப் படிப்பு ., சென்னையில் கல்லூரி படிப்பு முடித்து தற்போது நல்ல பணியில் இருக்கும் ரம்யா வாழ்க்கையைத் தொலைத்த ., வாழ்வில் ஏமாந்த ., வாழ்க்கையை வாழ பயப்படும் ஒரு பிரிவிற்காக (பெண்களுக்காக) வலைத்தளத்திலும் எழுதி வருகிறார். மிகத் தன்னம்பிக்கையூட்டும் கட்டுரைகள். இன்னும் முதியோர்கள்., ஆதரவு அற்றவர்கள்., குழந்தைகள் எல்லாருக்கும் ஒரே இடத்தில் ஷெல்டர் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இயன்றவர்களின் உதவியையும் ஏற்றுக் கொள்கிறார். நல்லபடி எல்லாம் அமைந்து இவரின் சேவைகள் பலருக்கும் கிடைக்க வாழ்த்துக்கள்.
email:- ramya3122@gmail.com
ph:- 99419 13286.
டிஸ்கி:- ரம்யா பற்றிய என்னுடைய இந்தக் கட்டுரை அக்டோபர் மாத லேடீஸ் ஸ்பெஷல் இதழில் வெளிவந்துள்ளது .